Wednesday, October 16, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலை

இராமானுசர் நூற்றந்தாதி - செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலை


நமது புலன்கள் எப்போதும் வெளியே செல்லும் இயல்பு உடையன. வெளியில் உள்ளதை பார்க்கும், நுகரும், கேட்கும்...இப்படி எங்கே எது இருக்கிறது என்று அலையும்.

நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும், நல்ல படம் எங்கே ஓடும் என்று ஆசை கொண்டு நம்மை விரட்டும்.

இப்படி நாளும் ஓடும் புலன்களை பிடித்து நிறுத்த முடியுமா என்றால், அதுவும் கடினம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை அடக்க முயற்சி செய்கிறோமோ, அவ்வளக்கவ்வளவு அது திமிறிக் கொண்டு ஓடும்.

பின் என்ன தான் செய்வது ? எப்படி புலன்களை வெற்றி கொள்வது?

நம் முன்னவர்கள் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்து சொன்னார்கள்.

ஓடுவது புலன்களுக்கு இயல்பு. ஓடட்டும். ஆனால், அது எங்கே ஓட வேண்டும் என்று நாம் முடிவு செய்து கொண்டு அதை அங்கே அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். அது நிற்காது. ஆனால், அதை நாம் விரும்பிய திசையில் செலுத்த முடியும்.

வழிபாடு என்ற ஒன்றை கண்டு பிடித்தார்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ,  வழிபாடு என்பது மனதை நல் வழி படுத்த வந்த ஒரு முறை என்று எடுத்துக் கொள்ளுங்கள். இறைவனைத் தான் வழிபட வேண்டும் என்று இல்லை. இயற்கையை வழிபடுங்கள், உங்கள் பெற்றோரை வழி படுங்கள், ஆசிரியரை வழி படுங்கள்...வழிபாடு மனதை நல்வழி திருப்பப் பயன்படும்.

வழிபடும் போது, மனம், வாக்கு, உடல் (காயம்) இந்த மூன்றும் ஒன்று பட வேண்டும்.  வாய் பாட்டுக்கு பாசுரத்தை சொல்லிக் கொண்டிருக்கும், மனம்  வேறு எதையோ  நினைத்துக் கொண்டிருக்கும், கை இன்னொன்றை செய்து கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு.

திரிகரண சுத்தி என்று சொல்லுவார்கள். மனம், வாக்கு , காயம் என்ற உடல் மூன்றும்  ஒரு புள்ளியில் இலயிக்க வேண்டும்.

இறைவனை வழிப்படு என்றால் சிக்கல். ஆளாளாளுக்கு ஒரு கடவுள் வைத்து இருக்கிறார்கள்.  எந்தக் கடவுளை வழிபடுவது. எல்லாக் கடவுளும் ஒன்றா. நம்ம கடவுள்  மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் இல்லையா? என்றெல்லாம் தோன்றும்.

எனவேதான், குருவை, ஆச்சாரியனை வழிபடுதல் என்று வைத்தார்கள். அவர் நமக்கு  இறைவனை காட்டித் தருவார் என்று  நம்பினார்கள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்,

"துளசியுடன் கூடிய பூ மாலையும், தமிழ் பா மாலையும் பாடிய தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருவடிகளை மனதில் கொண்ட இராமானுஜரின் திருவடிகளே எனக்குத் துணை" என்று.

பாடல்

செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.

பொருள்

செய்யும் = செய்கின்ற

பசுந் = பசுமையான

துளபத் = துழாய்

தொழில் = எழிலான , அழகான

மாலையும் = மாலையும்

செந்தமிழில் = செம்மையான தமிழில்

பெய்யும் = பொழியும்

மறைத்தமிழ் மாலையும்  = வேதங்களின் சாரமான பா மாலையும்

பேராத  = நீங்காத

சீரரங்கத் தையன்= ஸ்ரீரங்கத்து ஐயன்

கழற் = திருவடிகள்

கணியம் = அணியும், மனதில் தரித்துக் கொள்ளும்

பரன் = தொண்டரடிப் பொடி ஆழ்வார்

தாளன்றி  = திருவடிகள் தவிர

ஆதரியா = மற்றவற்றை ஆதரிக்காத, வணங்காத

மெய்யன் = உண்மையானவன்

இராமா னுசன் = இராமானுசன்

சர ணே = பாதங்களே

கதி = வழி

வேறெனக்கே. = வேறு எதுவும் இல்லை

பூ மாலை, கையால் , உடலால் செய்யும் பூஜை

பா மாலை , மனதால், வாக்கால் செய்யும் பூஜை

அப்படி மூன்றும் ஒன்றுபட்ட தொண்டரடிப் பொடியின் பாதங்களை பற்றிக் கொண்ட இராமானுஜரின் பாதங்களே எனக்குத் துணை என்கிறார்.

கொஞ்சும் தமிழ். தேனாய் தித்திக்கும் தமிழ்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_16.html

1 comment:

  1. அடியார்க்கு அடியார் தாள்களை பற்றியே நாமும் கடைத்தேறலாமே .

    ReplyDelete