Sunday, October 13, 2019

சகலகலாவல்லி மாலை - ஒரு காலமும் சிதையாமை நல்கும்

சகலகலாவல்லி மாலை - ஒரு காலமும் சிதையாமை நல்கும்


ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராய் இருந்த ஒருவர், பின்னொரு காலத்தில் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடலாம்.

அரசர்கள், ஆண்டியான கதைகள் ஏராளம்.

ஆனால், ஒரு காலத்தில் பெரிய அறிவாளியாக இருந்த ஒருவன் பின்னொரு காலத்தில் முட்டாளாக முடியாது.

"பாவம் ஒரு காலத்தில் Phd பட்டம் பெற்றவர்..இப்ப வெறும் sslc ஆகி விட்டார்" என்று இதுவரை நாம் யாரும் சொல்லக் கேட்டது இல்லை.

அறிவு, ஒருமுறை பெற்று விட்டால், அது நம்மை விட்டு போவது இல்லை. ஒரு காலத்திலும் அது சிதையாது.

செல்வம் சிதைந்து விடலாம். தொழில் தொடங்கினால், நட்டம் வந்து சேரலாம். அதனால் போட்ட முதலையும் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டி வரலாம். எவ்வளவோ பெரிய தொழில் அதிபர்கள், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள்.

பங்கு சந்தையில் முதலீடு செய்தால், பங்கு சந்தை சரிந்து போட்ட பணம் எல்லாம் போய் விடலாம்.

இன்றைய நிலையில் வங்கிகளில் போட்ட பணம் கூட பத்திரமாக இருக்குமா என்று தெரியவில்லை.

யாராவது தாங்கள் பெற்ற கல்வி காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி இருக்கிறார்களா?

குமா குருபரர் கூறுகிறார்

"சொல் திறமையும், பொறுமையுடன் கவனித்து பெறும் அறிவும் தந்து , கவி இயற்றும் நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய். இலக்குமியின் அருள் கூட (பொருள்) ஒரு காலத்தில் சிதைந்து போகலாம், ஆனால் நீ தரும் அறிவு என்ற செல்வம் ஒரு காலமும் சிதையாது, சகலகலாவல்லியே" என்று சரஸ்வதியை போற்றி பாடுகிறார்.


பாடல்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சீர் பிரித்த பின்

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

பொருள்

சொல் விற்பனமும் = சொற்களை கையாள்வதில் திறமையும்

அவதானமும் = கவனமும்

கவி சொல்ல வல்ல = கவிதை சொல்ல வல்ல

நல் வித்தையும் = நல்ல வித்தையும்

தந்து = தந்து

அடிமை கொள்வாய் = என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொள்வாய்

நளின = அழகிய

ஆசனம் சேர் = ஆசனத்தில் இருக்கும் (செந்தாமரையில் இருக்கும்)

செல்விக்கு = செல்வத்துக்கு அதிபதியான இலக்குமிக்கு

அரிது = அரியதானது

என்று = என்று

ஒரு காலமும் சிதையாமை நல்கும் = ஒரு காலத்திலும் சிதையாமை நல்கும்

கல்விப்= கல்வி என்ற

பெரும் = பெரிய

செல்வப் பேறே  = செல்வதை பெரும் பேற்றை தருபவளே

சகலகலாவல்லியே = சகலகலாவல்லியே

சிதையாத செல்வத்தை தருவது இலக்குமிக்கு கடினம். செல்வம் சிதைந்தே தீரும்.

கல்வி அப்படி அல்ல.

எனவே தான், நம் கலாச்சாரத்தில் கல்விக்கு முதலிடம் தந்தார்கள்.

பணக்காரனை விட ஒரு கல்வியாளனுக்கு இந்த சமுதாயம் அதிக முக்கியத்துவம்  தந்தது, தருகிறது.


வெண் தாமரையில் இருக்கும் அவளை நாடுங்கள். சிதையாத கல்விச் செல்வம்  பெற்றிடுங்கள்.

வாழ்த்துக்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_13.html

1 comment:

  1. பொருள் சிதையலாம், கல்வி சிதையாது என்பது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. நன்றி.

    ReplyDelete