Friday, October 18, 2019

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 


ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஏகப்பட்ட செல்வம். எல்லாவற்றையும் பல இரும்பு பெட்டிகளில் போட்டு அவனுக்கு சொந்தமான பல இடங்களில் மறைவாக புதைத்து வைத்து இருந்தான். அந்த பெட்டிகளின் சாவியை அவனுடைய மகனிடம் கொடுத்து "மகனே நான் இதுவரை சேர்த்த செல்வங்களை எல்லாம் பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்து இருக்கிறேன். அந்தப் பெட்டிகளின் சாவிகள் இவை. பத்திரமாக வைத்துக் கொள் . எனக்குப் பின்னால் அவை அனைத்தும் உனக்குத்தான்" என்று கூறினான்.

மகனும் சாவியை வாங்கிக் கொண்டான். பெட்டிகள் எங்கே இருக்கிறது அந்தத் தந்தை மகனிடம் சொன்னான். அவன் சரியாக மனதில் வாங்கிக் கொள்ளவில்லை. சரி, அப்பறம் இன்னொரு நாள் கேட்டு சரியாக எழுதி வைத்துக் கொள்வோம் என்று இருந்து விட்டான்.  விதியின் விளையாட்டு. தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார்.

மகனிடம் சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்த சாவிகள் எந்த பூட்டைத் திறக்கும் என்று அவனுக்குத் தெரியாது. பூட்டு தெரியாது. ஆனால், சாவி இருக்கிறது.

அவன் , அவனுடைய  மகனிடம் "மகனே, உன் தாத்தா பெரிய ஆள். நிறைய சம்பாதித்தார். அவற்றை எல்லாம் பல பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்தார். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை.  நீ தான் அவற்றின் வாரிசு. சில பெட்டிகளின் இடம் எனக்குத் தெரியும். மற்றவை மறந்து  போய் விட்டது. நீ கண்டு பிடித்துக் கொள். ஆனால், அவற்றில் பல விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கின்றன" என்று கூறி தன் மகனிடம் அந்த சாவிகளைக் கொடுத்தான்.

இப்படி தலை முறை தலை முறையாக அந்த சாவிக் கொத்து கை மாறிக் கொண்டே வந்தது.

பல தலைமுறைகளுக்குப் பின், தற்போதைய வாரிசுகள் "எங்க முன்னோர்கள்  பெரிய செல்வந்தர்கள். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்தார்கள். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை " என்று அந்த சாவிக் கொத்தை  கையில் ஸ்டைலாக சுத்திக் கொண்டு திரிகிறார்கள். பெட்டிகள் எங்கே இருக்கிறது என்று தெரியாது.

அது போலத்தான்  பலர் இன்று இருக்கிறார்கள்.

கோவில், பூஜை, நாள், கிழமை, உடம்பில் பல விதமாக கோடுகள் போட்டுக் கொள்வது, பல விதமாக உடை  அணிந்து கொள்வது, சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது  என்று பல வித காரியங்களை செய்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் தெரியாது. முன்னோர்கள் செய்தார்கள். அவர்கள் மடையர்களா என்று  கேட்கிறார்கள். முன்னோர்கள் செய்ததற்கு காரணம் இருக்கலாம். நீ ஏன் செய்கிறாய் என்றால் தெரியாது.

இந்த சடங்களுகளின் பின்னால் காரணம் இருக்கலாம். ஆனால் அது என்ன என்று தெரியாது.

சாவி இருக்கிறது. பூட்டு எங்கே என்று தெரியாது.

குறியீடுகள் முக்கியமாக போய் விட்டது. சாவியே செல்வம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விரதம் என்றால் அது எதை சாதிக்க முற்படுகிறது என்று தெரிய வேண்டும்.

விளக்கு ஏற்றுகிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வேண்டும். .

ஏன் செவ்வாய், வெள்ளி பூஜைக்கு உகந்த நாள்? ஏன் மார்கழி உயர்ந்த மாதம்,  ஏன் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்,  ஏன் கோவிலுக்குப் போக வேண்டும் ?

கையில் சாவியை சுழற்றிக் கொண்டு திரிகிறார்கள். என்ன சொல்வது.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

குறிகளை, குறியீடுகளை தாண்டிச் செல்ல வேண்டும். அதுவே இறுதி அல்ல.  அது எதைக் குறிக்கிறதோ  அதை நோக்கிச் செல்ல வேண்டும்.

சாவியை எடுத்துக் கொண்டு போய் , பெட்டியை திறந்து செல்வங்களை எடுத்து அனுபவிக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


அறிவு இல்லாமல் போகலாம். அறியாமை எப்படி இல்லாமல் போகும்?

செய்கின்ற செயல்களின் அர்த்தங்களை கண்டு பிடியுங்கள். சாவி முக்கியம் அல்ல.  செல்வம் முக்கியம்.

தேடுங்கள். காரணம் இல்லாமல் காரியம் செய்யக் கூடாது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_18.html

1 comment:

  1. நீ எழுதிய கதை மிக நன்றாக இருக்கிறது. அந்தக் கதை இந்தப் பாடலுக்கு முழுவதும் பொருத்தமா என்று தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் சிந்திக்கிறேன்.

    ReplyDelete