Saturday, October 12, 2019

திருக்குறள் - மருந்து

திருக்குறள் - மருந்து


மருந்து என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். பத்து குறள். பிரமிக்க வைக்கும் ஆராய்ச்சி. ஒரு புத்தகமே எழுதலாம். அந்த அளவுக்கு மிக மிக ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார். குறள் அவ்வளவு ஆழம் என்றால், அதற்கு பரிமேலழகர் எழுதிய உரை அதை விடச் சிறப்பு.

அந்த அதிகாரத்தில் ஒரு குறள். மருந்து என்றால் என்ன என்பதற்கு வள்ளுவர் சொல்லும் விளக்கம்.

நம்மிடம் கேட்டால் என்ன சொல்வோம் ? மருந்து என்றால் மாத்திரை, ஊசி, என்று மருந்தின் வகைகளைப் பற்றிச் சொல்வோம்.

வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

பாடல்


உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

பொருள்

உற்றவன் = நோய் உற்றவன்  (நோயாளி)

தீர்ப்பான் = நோய் தீர்ப்பவன் (மருத்துவர்)

மருந்து = மருந்து

உழைச் செல்வான் = உடன் செல்வான்

என்று = என்று

அப்பால் = அவைகளே

நாற் கூற்றே  = நாலுமே

மருந்து. = மருந்து எனப்படுவது

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரையை சற்று விரித்துப் பார்ப்போம்.


நோயாளி, மருத்துவன், மருந்து, உடன் செல்வான் என்ற நான்கு கூறுகளை கொண்டது  மருந்து.

இதில் முதல் மூன்று நமக்குத் தெரிகிறது.

அது என்ன உடன் செல்வான்?

நோயாளியை கவனித்துக் கொள்பவன். அதாவது செவிலியர் (nurse ), உடன் இருப்பவர் (attendant ), சுத்தம் செய்பவர் (ward boy ), போன்றோர். இவர்கள் இல்லாமல்  மருந்து இ ல்லை. மருத்துவர் மருந்தை எழுதி தந்து விட்டுப் போவார். அதை வேளா வேலைக்கு கொடுக்க ஒரு nurse அல்லது உடன் இருப்பவர் முக்கியம் என்கிறார் வள்ளுவர்.

இதில் "அப்பால்" என்பதற்கு இந்த நான்கிற்கும் ஒவ்வொரு தன்மை, சிறப்பு இருக்கிறது.

நோயாளி என்பவன் யார்? அவனுடைய தகுதிகள் என்ன?

முதலில் பொருளடைமை - நோயாளிக்கு முதலில் பொருள் இருக்க வேண்டும். இல்லை என்றால் நோயை குணப்படுத்திக் கொள்ள முடியாது. சொந்த காசு இருக்க வேண்டும், அல்லது காப்பீட்டு தொகை (insurance ) இருக்க வேண்டும்.

இரண்டாவது, மருத்துவர் சொன்ன படி கேட்டு அதன் படி செய்வது. இன்னின்ன மாத்திரையை இன்னின்னன் நேரத்தில் சாப்பிட வேண்டும், இந்த விதமான டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால், அதன் படி ஒழுங்காக செய்ய வேண்டும்.

மூன்றாவது, மருத்துவத்தின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல். மருத்துவம் எல்லா காலத்தும் சுகமாக இருக்காது. ஊசி குத்துவது, அறுவை சிகிச்சை செய்வது, கட்டு போட்டு இருப்பது போன்ற வலிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

நான்காவது, நோயின் நிலையை உணர்ந்து கொள்ளும் அறிவு இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், தன் உடம்பு, தன் வலி, என்று தன்னுடைய நோயின் தன்மையை நோயாளி அறிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.

சரி, இது நோயாளியின் நான்கு அம்சங்கள்.

"நோய் தீர்ப்பான்" என்று சொன்னாரே, அந்த மருத்துவரின் குணம் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்றால், ஆம். அதற்கு நாலு சொல்லி இருக்கிறார்.


முதலாவது, நோய் கண்டு அச்சப் படாமல் இருத்தல். ஒரு மருத்துவன், நோயை கண்டு அஞ்சக் கூடாது. அது எவ்வளவு பெரிய கொடூரமான நோயாக இருந்தாலும், அதை எதிர்த்து போராடும் துணிவு இருக்க வேண்டும்.

இரண்டாவது, தன்னுடைய ஆசிரியர்களை வழிபட்டு (குருவருள்) அடைந்த கல்வியையும், அதனால் பெற்ற அறிவையும் பயன் படுத்தும் ஆற்றல்.

மூன்றாவது, அனுபவம். மருத்துவனுக்கு அனுபவ அறிவு முக்கியம். எவ்வளவுதான் படித்து இருந்தாலும், அனுபவ அறிவும் ரொம்ப முக்கியம்.

நான்காவது, மன , மொழி, மெய் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது, நோயாளியின் இயலாமையை பயன் படுத்தி தவறான வழியில் பொருள் சேர்க்கக் கூடாது. இன்று வேண்டாத டெஸ்ட் கள் செய்ய வைக்கிறார்கள், வேண்டாத அறுவை சிகிச்சை செய்ய வைக்கிறார்கள். பணம் வேண்டும் என்று.  தெரியாத நோயாளி என்றால் உடல் உறுப்புகளை கூட திருடி விற்று விடுகிறார்கள்.

மருந்து பற்றி நான்கு சிறப்பு அம்சங்களை கூறுகிறார்:

முதலாவது, பல பிணிகளுக்கு ஏற்றவாறு இருத்தல். ஒரே மாத்திரை , சளி , காய்ச்சல், தலை வலி , மூக்கடைப்பு என்று எல்லாம் போய் விட வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாத்திரை சாப்பிட முடியாது. கூடாது.

இரண்டாவது, சக்தி வாய்ந்த மருந்தாக இருக்க வேண்டும். சீக்கிரம் நோயயை குணப்படுத்த வேண்டும்.

மூன்றாவது, எளிதாக கிடைக்க வேண்டும். ஏதோ புலிப்பாலில் கரைத்து கொடுக்க வேண்டும் என்பது மாதிரி, கடினமான மருந்தாக இருக்கக் கூடாது.

நான்காவது, ஒரு உறுப்பில் வந்த துன்பம் தீர்க்க மருந்து கொண்டால், அது இன்னொரு உறுப்பை பாதிக்கக் கூடாது.


அடுத்தது, நோயாளியுடன் இருப்பவர் பற்றி கூறுகிறார்.

முதலாவது, அவனுக்கு நோயாளியிடம் அன்பு இருக்க வேண்டும். மால ஜலம் சுத்தம் செய்ய வேண்டும், எச்சி வடியும், வாய் நாறும், இவற்றை எல்லா பொறுத்துக் கொள்ள மனதில் அன்பு வேண்டும்.

இரண்டாவது, மன , மொழி , மெய் தூய்மையாக இருத்தல். நோயாளி இறந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கக் கூடாது.

மூன்றாவது, மருத்துவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செயல் படுத்தும் மன வலிமையையும், திறமையும். "இராத்திரி மருந்து கொடுக்கச் சொன்னார், தூங்கிட்டேன்" என்று சொல்லக் கூடாது.

நான்காவது, அறிவுடைமை. அதாவது, சூழ் நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுதல்.


யோசித்துப் பாருங்கள். ஒரு குறளுக்குள் எவ்வளவு விஷயம் என்று. நினைத்துப் பார்க்க முடியுமா?

இன்றைக்கும் சரியாக இருக்கிறது அல்லவா?

நாம் நோயாளியாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்.


நாம், நோயாளிக்கு துணையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

நாம், மருத்துவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

என்று தெளிவாகக் கூறுகிறார்.

இது ஒரு குறள். இப்படி இன்னும் 9 குறள்கள் இருக்கின்றன.

எப்படியாவது தேடி பிடித்து படித்து விடுங்கள்.

நோயற்ற வாழ்வு வாழலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_12.html

1 comment:

  1. முதலில் முற்றும் புரியவில்லை.நல்ல விளக்கம்..

    ReplyDelete