Friday, October 11, 2019

திருக்குறள் - செயற்கரிய செய்வார்

திருக்குறள் - செயற்கரிய செய்வார் 


ஆங்கிலத்தில் எவ்வளவோ சுய முன்னேற்றத்திற்கான (self help) புத்தகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் காசு போட்டு வாங்கி படித்துவிட்டு, அடடா, எப்படி எழுதி இருக்கிறார்கள். தமிழில் அப்படி ஏதாவது இருக்கிறதா. எப்பப் பாரு, அறம் , கடவுள், அரச துதி, காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சிலருக்குத் தோன்றலாம்.

அது சரி அல்ல. திருக்குறள் ஒன்றில் இருந்து ஓராயிரம் சுய முன்னேற்ற புத்தகங்கள் எழுதலாம்.

நம் பெருமை நமக்குத் தெரியாமல், நேற்று அடித்த மழையில் இன்று முளைத்த காளான்களை பெரிது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருக்கிறது ஆயிரம் ஆயிரம் ஆல மரங்கள்.

நம்மை உறுதியாக வாழ்வில் மிக உயரமான இடங்களுக்கு எடுத்துச் செல்ல திருக்குறள் ஒன்று போதும்.

முழு திருக்குறள் கூடத் தேவை இல்லை. ஒரு குறள் போதும். அதைப் பிடித்துக் கொண்டு வாழ்வில் கடை பிடித்தால், எதையும் சாதிக்க முடியும்.

ஏதோ தமிழ் என் தாய் மொழி என்பதால் கூறவில்லை.

படித்துப் பார்த்து விட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அப்படி நம்மை முன்னேற்றக் கூடிய குறள்களில் , ஒன்று...


பாடல்


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர
செயற்கரிய செய்கலா தார்.



பொருள்

செயற்கரிய = செய்வதற்கு அரிய செயல்களை

செய்வார் = செய்வார்கள்

பெரியர் = பெரியவர்கள்

சிறியர் = சிறியவர்கள்

செயற்கரிய = செய்வதற்கு அரிய செயல்களை

செய்கலா தார். = செய்ய மாட்டார்கள்


செய்வதற்கு   கடினமான செயல்களை பெரியவர்கள் செய்வார்கள். அந்த மாதிரி காரியங்களை சிறியவர்கள் செய்ய மாட்டார்கள்.

இந்த குறளுக்கு இவ்வளவு build up தேவையா என்று நீங்கள் நினைக்கலாம். இதெல்லாம் நாங்க பள்ளிக் கூடத்திலேயே படித்தது தான். இதில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரையை விரித்துச் சொன்னால், அதுவே ஒரு புத்தமாக போடலாம்.

அவர், யோகம், ஞானம், வீடு பேறு என்று போகிறார். அதை விட்டு விடுவோம். (அதை பின்னொரு நாளில் சிந்திப்போம்).

நடை முறையில், எது சாத்தியம் என்று பார்ப்போம். எப்படி இந்த குறள் நம்மை உயர்த்தும், நாம் விரும்பியதை விட அதிகம் அடைய உதவி செய்யும் என்று பார்க்கலாம்.

பொதுவாகவே, பெரிய விஷயங்களை சொன்னால், நம்மவர்கள் "நல்லாத்தான் இருக்கு , ஆனால், நம்மால் முடியாது" என்று மூட்டை கட்டி வைத்து விடுவார்கள்.

சின்னதாகவும் இருக்க வேண்டும், பெரிய பலன்களையும் தர வேண்டும். அதுதானே நமக்கு வேண்டியது.

எப்படி இந்த குறள் அதற்கு வழி செய்கிறது என்று பார்ப்போம்.

ஒரு சில உதாரணங்களை பார்த்தால் புரியும்.

ஒரு நாளில் நமக்கு செய்ய வேண்டிய செயல்கள் பல இருக்கும். அதில் சில கடினமான செயல்களாக இருக்கும். சில எளிமையாக இருக்கும்.

ஒரு மாணவனை எடுத்துக் கொள்வோம்.

ஒரு நாளைக்கு 50 பக்கம் படிக்க வேண்டும், வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டும், நண்பர்களோடு அரட்டை அடிக்க வேண்டும், whatsapp இல் chat செய்ய வேண்டும்,  facebook பூராவும் பார்த்து தீர வேண்டும், என்று இப்படி பல காரியங்கள்  செய்ய வேண்டி இருக்கும்.

இதில் முதலில் சொன்னது 50 பக்கம் படிக்க வேண்டும். அது கடினமான செய்ய. மற்றவை எல்லாம் எளிய செயல்கள்.

அந்த 50 பக்கத்தை படித்து முடிப்பவன், பின்னாளில் பெரிய ஆளாவான். "பெரியர் " என்று சொல்கிறோமே அப்படி ஆவான். இப்படி வீடியோ கேம்ஸ், வாட்ஸாப்ப் என்று   பொழுதை செலவழிப்பவன் என்ன ஆவான் என்று உங்களுக்குத் தெரியும்.

ஒரு நாள் 50 பக்கம் படித்து விட்டால் போதுமா ?

போதாது. அடுத்த நாள் வரும். அன்று செய்ய வேண்டிய காரியங்களை பட்டியல் போட வேண்டும். அதில் உள்ள கடினமான காரியத்தை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் செய்து கொண்டே போனால்?

சரி, ஒரு குடும்பத் தலைவியை எடுத்துக் கொள்வோம்.

அவள் செய்ய வேண்டிய வேலைகள் என்று பட்டியல் போடலாம், சமைக்க வேண்டும்,  துணி துவைக்க வேண்டும், வீட்டை பராமரிக்க வேண்டும், காலையில்  உடற் பயிற்சி செய்ய வேண்டும், பணத்தை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும்,  தனக்கும் கணவனுக்கும் உடல் நிலை பற்றி ஆண்டு சோதனை செய்ய   வேண்டும்...என்று இப்படி பல இருக்கும்.

இதில் எளிதான காரியம் என்பது, சமைப்பது, காய் நறுக்குவது, துணிகளை மடித்து வைப்பது,  டிவியில் சீரியல் பார்ப்பது போன்றவை.

கடினமான செயல்கள், உடற் பயிற்சி செய்வது, மருத்துவ பரிசோதனைக்கு செல்வது, பணத்தை சரியான படி முதலீடு செய்வது போன்றவை.

இதில் பெரும்பாலான இல்லத்து அரசிகள் செய்வது என்ன என்று நாம் சிந்தித்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், நாம் செய்யும் செயல்  அரிய செயலா அல்லது எளிய செயலா என்று சிந்திக்க வேண்டும்.

பெரிய காரியங்களை செய்து பழக வேண்டும். உயர்ந்த காரியங்களை செய்து பழக வேண்டும்.

இன்றைக்கு என்ன முக்கியமான காரியம் செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

நாளைக்கு என்ன முக்கியமான காரியம் செய்யலாம் என்று சிந்தித்து செய்ய பட்டால்,  வாழ்வில் முக்கியமான, சிறப்பான, உயர்ந்த, செயல்களை மட்டுமே செய்து கொண்டு   இருப்போம். அப்படி ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருந்தால் , முன்னேற்றம் வருமா இல்லையா ?

இன்றே ஒரு பட்டியல் போடுங்கள்...உங்களுக்கு முக்கியமான காரியங்கள், சிறந்தவை,  உயர்வானவை என்று ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள்....

- 20 கிலோ எடையை குறைப்பது
- முனைவர் (doctorate , phD ) பட்டம் பெற முயற்சி செய்வது
- இப்போது இருக்கும் வேலையை விட இரண்டு மடங்கு சம்பளம் தரும் வேலையை தேடுவது
- இந்த வருடம் தேர்வில் தங்கப் பதக்கம் வாங்குவது
-  25 புத்தகங்கள் வாசிப்பது
- ஒரு புது மொழியை கற்றுக் கொள்ளுவது
- இசை கற்றுக் கொள்ளுவது
- ஒரு புது நாட்டுக்குப் போய் வருவது
- புது வித சமையல் கற்றுக் கொள்ளுவது

இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் . பட்டியல் போடுங்கள்.

அவற்றை செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

இது செய்து அலுத்து, சோர்வு வரும் நேரத்தில் மற்றவற்றை செய்யுங்கள்.

நேற்று நீங்கள் செய்த காரியங்கள் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அதில் எத்தனை காரியங்கள்   சிறப்பானவை, உயர்ந்தவை, கடினமானவை, 'அரிய செயல்கள்" என்று.

போன வாரம், போன மாதம், போன வருடம் ?

பெரும்பாலான நேரத்தை எளிய செயல்களை செய்வதிலேயே செலவிட்டு விடுகிறோம்.

எளிய செயல்களை செய்தால், பலன் மட்டும் பெரிதாக இருக்குமா ?

கையளவு நிலத்தில் விதைத்து விட்டு, கடலளவு அறுவடை செய்ய வேண்டும் நினைத்தால் எப்படி முடியும் ?

பெரும் பலன்கள் வேண்டும் என்றால், பெரும் முயற்சி தேவை அல்லவா?

அவ்வளவு முயற்சியையும் ஒரே நாளில் செய்ய முடியாது.

ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சம் செய்து கொண்டே வந்தால், நாளடைவில் அது பெரும் பலனைத் தரும்.

இப்போது சொல்லுங்கள். இது எந்த அளவுக்கு வாழ்க்கைக்கு துணை செய்யும் குறள் என்று.

எங்கே, ஒரு பேப்பரும் பேனாவையும் எடுங்கள் பார்ப்போம்....எழுதுங்கள்  பெரிய காரியங்கள், முக்கியமான காரியங்களை .  அந்த பட்டியல் செய்வது இன்றைய பெரிய காரியமாக இருக்கட்டும்.

உடனே தொடங்கி விடுங்கள்.

வானம் எட்டும் தூரம்தான்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_11.html

2 comments:

  1. எளிமையாக புரியும்படி விளக்கி உள்ளீர்கள்.பயனுள்ள பதிவு

    ReplyDelete
  2. நல்ல பொருள் பொதிந்த உரை. நன்றி.

    ReplyDelete