Thursday, October 24, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - தவம் செய்யும் கொள்கை அற்றேன்

இராமானுசர் நூற்றந்தாதி - தவம் செய்யும் கொள்கை அற்றேன் 


தினமும் மூணு வேளை குளிக்கிறேன், நாலு வேளை பூஜை பண்ணுகிறேன், நாளும் கிழமையும் என்றால் உடலை வருத்தி தவம் செய்கிறேன், வருடம் தவறாமல் திருத்தல யாத்திரை செய்கிறேன், மொட்டை போட்டுக் கொள்கிறேன், வெளியே ஒரு காப்பி கூட குடிப்பதில்லை, ஆச்சாரம், அனுஷ்டானம் என்று அத்தனையும் கடைபிடிக்கிறேன் ....

என்று சிலர் பெருமையாகச் சொல்வார்கள். ஏதோ இதை எல்லாம் செய்தால் நேரே இறைவனடி சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில்.

அமுதனார் சொல்கிறார்

"உடலை வருத்தி செய்யும் தவங்களை விட்டு விட்டேன். குலசேகர பெருமாளின் பாசுரங்களை படிக்கும் பெரியவர்களின் பாதங்களை துதிக்கும் இராமானுஜரை நான் பற்றிக் கொண்டேன். அவர் என்னை விட்டு விட மாட்டார்"  என்கிறார்.

பாடல்


கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன்சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.


பொருள்


கதிக்குப் = நல்ல கதிக்கு செல்ல வேண்டுமே என்று

பதறி = பதட்டம் கொண்டு

வெங் கானமும் = கொடிய காடும்

கல்லும் = மலையும்

கடலுமெல்லாம் = கடலும் எல்லாம்

கொதிக்கத் = கொதிக்கும்படி

தவம் செய்யும் = தவம் செய்யும்


கொள்கையற் றேன் = கொள்கையை விட்டு விட்டேன்

கொல்லி காவலன் = குலசேகர ஆழ்வார்

சொல் = சொற்கள்

பதிக்கும் = பதிந்து கிடக்கும்

கலைக்கவி  = கலை நின்றாய்ந்த கவிதைகள்

பாடும் = பாடுகின்ற

பெரியவர் பாதங்களே = பெரியவர்களின் பாதங்களை

துதிக்கும் = வணங்கும்

பரமன் = பெரியவன்

இராமா னுசன் = இராமானுசன்

என்னை  = என்னை

சோர்விலனே. = சோர்வுடைய விட மாட்டார்

பக்தியிலே இரண்டு விதம் சொல்வார்கள்.

குரங்கு மாதிரி, பூனை மாதிரி என்று இரண்டு விதம்.

பூனை, தன் குட்டியை தானே தூக்கிக் கொண்டு திரியும்.

குரங்கு அப்படி அல்ல. குட்டி குரங்கு தாயை இறுக்க பற்றிக் கொள்ளும். தாய் குரங்கு அங்கும் இங்கும் தாவும்.  விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டியது குட்டியின் பாடு.

இராமானுசன் என்னை சோர்விலனே என்றால் பூனை மாதிரி பக்தி. அவர் கிட்ட போய்விட்டால் போதும்.  அவர் நம்மை தூக்கிக் கொண்டு சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பித்து விடுவார்.  அப்புறம் அவர் பாடு அது என்கிறார்  அமுதனார்.

தாய்தான் , தந்தையை அடையாளம் காட்டுகிறாள்.

தந்தைதான், குருவை அடையாளம் காட்டுகிறார்.

குரு , நமக்கு தெய்வத்தை அடையாளம் காட்டுவார் என்பது நமது நம்பிக்கை.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது முறை.

குருவிடம் போய் சேர்ந்து விட வேண்டும். அவர் கொண்டு போய் சரியான இடத்தில்  சேர்த்து விடுவார்.

இதற்கு நடுவில் இந்த  ஆச்சாரம், அனுஷ்டானம், பூஜை, புனஸ்காரம், விரதம், தவம்  எல்லாம் தேவையே இல்லை என்கிறார்.

நாமா கேட்போம்?

நமக்கு எவ்வளவு தெரியும். இத்தனை நாளாய் செய்து வந்த முறைகளை விட முடியுமா என்ன?

பாசுரம் ஒரு பக்கம் வாசித்து, 'அடடா என்னம்மா பாடியிருக்கிறார்" என்று சொல்லிக் கொண்டே நம்ம  வேலையை பார்க்க வேண்டியதுதான்.

நாளை மீண்டும் சந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_24.html

1 comment:

  1. சரணாகதி அடைவது எளிமை உங்கள் பாடல் விளக்கத்தை போல. அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.

    ReplyDelete