Tuesday, October 1, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - காரிய வன்மை

இராமானுஜர் நூற்றந்தாதி  - காரிய வன்மை 


திருவரங்கத்து அமுதனார், இராமானுஜர் மேல் உள்ள பக்தியால் அந்தாதி பாடினார். நாம் ஏன் அதைப் படிக்க வேண்டும்? படித்து என்ன ஆகப் போகிறது. சரி, அவருக்கு அவர் மேல் பக்தி இருத்தது என்று வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். அதற்கு எதற்கு 100 பாடலைப் படிக்க வேண்டும். ஒரு வரியில் சொன்னால் போதாதா?

அது ஒரு கேள்வி.

அது ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒருவருடைய வழியைப் பின் பற்றுகிறோம் என்றால், நாம் எப்படி இருக்க வேண்டும்? யாருடைய வழியைப் பின் பற்றுகிறோமோ அவர் சொன்ன மாதிரி, செய்த மாதிரி நாமும் இருக்க வேண்டும் அல்லவா?

காந்தியை நான் பின்  பற்றுகிறேன் என்றால், நானும் அகிம்ஸையை கடைபிடிக்க வேண்டும் அல்லவா. மூன்று வேளையும் மாமிசம் தின்று கொண்டு, அடி தடியில் இறங்கிக் கொண்டு, காந்தியவாதி என்று சொன்னால் எப்படி இருக்கும் ?

இராமனுஜரை பின்பற்றுகிறேன் என்றால் என்ன அர்த்தம்?  சும்மா அவர் பெயரை சொல்லிக்கொண்டு திரிவது, எந்த பிரச்சனை வந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார் என்று அவர் மேல் எல்லாவற்றையும் போட்டு விடுவது, அவரை வணங்குவது என்பதெலாம் அல்ல.

பின் என்னதான் செய்ய வேண்டும்?

இராமனுஜரின் அடியார்கள் காரியங்களை செய்து முடிப்பதில் வல்லவர்களாய் இருப்பார்கள். சும்மா பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்கிறார்.

பாடல்


சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழாலளித்த
பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத்
தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம்
காரிய வண்மை, என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே.

பொருள்


சீரிய = சிறந்த

நான்மறைச் = நான்கு வேதங்கள்

செம்பொருள் = அவற்றில் உள்ள உயர்ந்த கருத்துகளை

செந்தமி ழாலளித்த = செந்தமிழால் அளித்த

பாரிய லும் = இந்த உலகில்

புகழ்ப் = புகழ் பெற்ற

பாண்பெரு மாள் = திருப்பாணாழ்வார்

சர ணாம் = பாதங்கள் என்ற

பதுமத் = தாமரை

தாரியல் = மலர்களை

சென்னி = தலையில்

இராமா னுசன்றனைச் = இராமானுஜரை

சார்ந்தவர்தம் = சேர்ந்தவர்கள்

காரிய வண்மை = காரியம் செய்து முடிப்பதில் உள்ள வல்லமையை

என்னால் = என்னால்

சொல்லொ ணா = சொல்ல முடியாது

இக்  கடலிடத்தே = இந்த கடல் போல பெரிய உலகத்திலே


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பக்தி என்பது சும்மா ஏதோ பூஜை செய்வது, தூப தீபம் காட்டுவது, விரதம் இருப்பது என்று.

சும்மா பொழுது போக்குவது அல்ல. எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று சோம்பேறியாக இருப்பது அல்ல பக்தி.


பக்தி என்பது செயல் சார்ந்தது.

காரிய வண்மை வேண்டும்.

செயல் ஊக்கம் வேண்டும். நல்லது செய்ய வேண்டும்.

இராமானுஜர் என்ன செய்தார்? எல்லோரும் வைகுண்டம் போக வேண்டும் பாடுபட்டார். அது காரிய வன்மை.

சும்மா மடத்தை கட்டிவைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டு இருக்கவில்லை.

இராமானுஜரின் பக்தர்கள் என்றால், காரிய வண்மை இருக்க வேண்டும்.

அந்த கரிய வண்மை எல்லாம் இல்லை என்றால் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post.html

3 comments:

  1. நல்ல விளக்கம். நன்றி

    ReplyDelete
  2. மிக அருமையான விளக்கம், பெரும்பாலோர் பக்தி என்பதை சரியாக புரியாமல் சோம்பேறியாக இருப்பவர்க்கு இது சரியான வழிகாட்டுதல்.

    ReplyDelete
  3. அப்படி இராமானுசர் என்ன வீரியமான காரியத்தில் ஈடுபட்டார் என்று தெரியவில்லையே!

    ReplyDelete