Wednesday, October 30, 2019

கம்ப இராமாயணம் - அவாவும் தோளினாய்

கம்ப இராமாயணம் - அவாவும் தோளினாய் 


இலக்கியம் என்றால் எப்பப் பார்த்தாலும் அறம் , நீதி, முறை, உபதேசம் என்று சொல்லிக் கொண்டு இருப்பதுதானா என்று ஒரு சலிப்பு வரலாம். எனவே இடை இடையே சொற்சுவை, பொருட்சுவை உள்ள பாடலைகளையும் அமைத்து இலக்கியம் அமைத்து இருக்கிறார்கள். நோக்கம் வார்த்தை விளையாட்டு, உவமை நயம் போன்றவை இல்லை. இருந்தாலும், நேரே தத்துவங்களை சொல்லிக் கொண்டு போனால் கொஞ்சம் அலுப்புத் தட்டத்தான் செய்யும்.

கம்பனில் உவமைகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு நயமான உவமைகள். நினைத்துப் பார்த்தால் இதழோரம் ஒரு புன்னகை ஓடும்.

தாடகையைப் பற்றி விஸ்வாமித்ரனிடம் இராமன் கேட்கிறான்.

அவளைப் பற்றிச் சொல்ல வந்த முனிவன், இராமனுக்கு ஒரு அடை மொழி தருகிறான்.

அடடா...என்ன ஒரு கற்பனை என்று நாம் இரசிக்கும்படியான ஒரு கற்பனை.

"ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!"

இராமனின் தோள்களைப் பார்த்தால், ஆண்களுக்குக் கூட ஆசை வருமாம். அடடா நாம் ஒரு பெண்ணாய் பிறக்கவில்லையே...இந்தத் தோள்களை அணைத்து இன்பம் பெற என்று ஆண்கள் ஆசைப் படும் அளவுக்கு அழகான தோள்களாம்.

பாடல்


‘சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே


பொருள்

‘சூடக = கையில் அணியும் வளையல்

அரவு = பாம்பு. மலைப் பாம்பை கையில் வளையல் போல் அணிந்து இருப்பாள்.

உறழ்  = சுழலும்

சூலக் கையினள்; = சூலத்தைக் கையில் கொண்டவள்

காடு உறை வாழ்க்கையள்; = எப்போதும் காட்டிலேயே வாழ்பவள்

கண்ணின் காண்பரேல். = கண்ணால் கண்டால்

ஆடவர் = ஆண்கள்

பெண்மையை  = பெண்மையை

அவாவும் தோளினாய்!- = விரும்பும் தோள்களை கொண்டவனே

‘’தாடகை’’ என்பது = தாடகை என்பது

அச் சழக்கி நாமமே; = அந்தக் கொடியவளின் பெயர் ஆகும்

இராமனின் தோள்கள் மலை போல இருந்தன, விம்மி இருந்தன, வீரமாக இருந்தன, என்றெல்லாம் சொல்லலாம். அப்படிச் சொல்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

இராமனுக்கு அப்படி இருக்கிறது. வேறு யாராவது ஒருவருக்கும் அப்படி இருக்கலாமே, அல்லது அதை விட சிறப்பாக இருக்கலாமே என்ற கேள்வி வரும்.

"ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் "

என்று சொல்லிவிட்டால், எல்லா ஆடவர்களும் அதில் வந்து விடுவார்கள்.

இதற்கு மேல் ஒரு அழகான தோள் இல்லை என்று ஆகிவிடும்.

கம்பனின் சொல் ஆட்சி, கற்பனை நயம் எப்படி இருக்கிறது?

இவற்றை எல்லாம் படிக்கும் போது, நம்மை அறியாமலேயே நம் பேச்சும், எழுத்தும்  மேன்மை அடையும். புதுப் பொலிவு உண்டாகும்.

மனம் மென்மைப் படும்.

படுகிறதா இல்லையா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_30.html

1 comment:

  1. உண்மை. இலக்கியம் மனதை மேன்மை படுத்துகிறது. (தூய்மை, வாய்மை, அடக்கம்,பணிவு இலவச இனைப்பாக.). நல்ல கருத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கக் கொடுப்பதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete