Thursday, October 3, 2019

பெரிய புராணம் - ஆறு சுவை, நாலு விதம்

பெரிய புராணம் - ஆறு சுவை, நாலு விதம் 


விருந்தாளி தூரத்தில் வரும்போதே அவருக்கு இன்முகம் காட்டி, அவர் அருகில் வரும்போது இனிய சொல் கூறி வரவேற்க வேண்டும் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

சேக்கிழார் சொல்லுகிறார்

"அவர்களை அன்போது வீட்டுக்குள் அழைத்துச்  சென்று, அவர்களுக்கு ஆசனம் அளித்து, அவர்கள் கால்களை சுத்தம் செய்து, அவர்களுக்கு அர்ச்சனை செய்து, நாலு விதமான உணவும், ஆறு வித சுவையில் அவர்கள் விரும்பும்படி விருந்தளிக்க வேண்டும்"

பாடல்

கொண்டு வந்து மனைப்பு குந்து குலாவு பாதம்  விளக்கியே
மண்டு காதலி னாத னத்திடை வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினிலொப்பிலா
வண்டர் நாயகர் தொண்டரிச்சையி லமுது செய்யவளித்துளார்.

பொருள்


கொண்டு வந்து = விருந்தினர்களை கொண்டு வந்து

மனைப்பு குந்து = வீட்டிற்குள் அழைத்து வந்து

குலாவு = விளங்கும்

பாதம் = பாதம்

விளக்கியே = சுத்தம் செய்து , கழுவி

மண்டு காதலினா (ல்) = மிகுந்து வரும் காதலினால்

தனத்திடை வைத்த  ருச்சனை  = ஆசனத்தில் இருத்தி அர்ச்சனை

செய்தபின் =  செய்த பின்

உண்டி = சாப்பாடு

நாலு விதத்தி லாறு சுவைத் = நாலு விதத்தில் ஆறு சுவையில்

திறத்தினில் = திறமையாக செய்து

ஒப்பிலா = ஒப்புவமை இல்லாத

வண்டர் நாயகர் =  வலிமை மிக்க சிவ பெருமானின்

தொண்டர் = தொண்டர்கள்

இச்சையி ல் = விருப்பப்படி

அமுது = உணவு

செய்யவளித்துளார். = செய்யும் படி அளித்து உள்ளார்



அது என்ன நாலு விதம், ஆறு சுவை ?

நாம் உண்ணும் உணவை நான்கு விதமாக பிரிக்கலாம்.

உண்ணுபவை, தின்னுபவை , நக்குபவை, பருகுபவை என்று நான்காக பிரிக்கலாம்.

உண்ணுதல் என்றால் சோறு, காய் கறி போன்ற மென்மையான உணவுகளை சாப்பிடுவது.

தின்னுதல் என்றால் முறுக்கு, சீடை, தட்டை போன்ற கடினமான பொருட்களை சாப்பிடுவது. முறுக்கு தின்றான் என்று சொல்ல வேண்டும். முறுக்கு உண்டான் என்று சொல்லக் கூடாது.

நக்குதல் என்றால் பாயசம், தேன், பஞ்சாமிருதம் போன்றவற்றை சாப்பிடுவது. இவற்றை நக்கித்தான் சாப்பிட வேண்டும்.

பருகுபவை என்றால் மோர், பால், பழ இரசம், காப்பி, டீ போன்றவற்றை உட்கொள்வது.

காப்பி சாப்பிட்டுவிட்டு போங்கள் என்று சொல்லக் கூடாது.

இது நாலுவிதமான உணவு.

ஆறு சுவை?

தமிழிலே ஒரு பழ மொழி உண்டு.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று.

அதற்காக அல்வாவில் உப்பு போட முடியுமா? உப்பு இல்லை என்பதால் லட்டை குப்பையில் கொட்ட முடியுமா?

உப்பு என்று சொன்னாலே சுவை என்று அர்த்தம்.

சுவை இல்லாத பண்டம் குப்பையிலே என்று பொருள்.

ஆறு சுவைகளை பாருங்கள்.



புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு

புளி + உப்பு
இனி+ உப்பு
கை + உப்பு
கார்(அம்) + உப்பு
துவர் +  உப்பு
உவர் + உப்பு

என்று எல்லா சுவையும் உப்பிலேயே முடியும்.  உப்பு என்றால் சுவை.

நான்கு விதமான உணவு, ஆறு விதமான சுவையில்...மொத்தம் 24 வகையான உணவு. (6 x 4)

"மண்டு காதலினால்  "

ஏதோ சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது என்று கடனே என்று செய்யவில்லையாம். மனதில் எழும் காதலினால் செய்தாராம். எதையும் மனம் ஒப்பி, அன்போடு செய்ய வேண்டும். .


"தொண்டரிச்சையி லமுது செய்யவளித்துளார்."

விருந்தினருக்கு, அவர்கள் விரும்பும்படி உணவு அளிக்க வேண்டும். சில பேர்  சாப்பிட உட்கார்ந்த உடன்   "கை கழுவி விட்டு வாருங்கள்" என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லக் கூடாது. விருந்தினர் விரும்பினால் கழுவட்டும். இல்லை என்றால் விட்டு விட வேண்டும்.  விருந்தினரை சங்கடப் படுத்தக் கூடாது.

சில பேர் விருந்து உபசரிக்கிறேன் பேர்வழி என்று அளவுக்கு அதிகமாக உணவை பரிமாறி விடுவார்கள்.  அப்படிச் செய்யக் கூடாது. அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ , அவ்வளவு சாப்பிட அவர்களை அனுமதிக்க வேண்டும்.

இதெல்லாம் விருந்து உபசரிக்கும் முறை.

இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

பெரிய புராணம் படிப்பது, ஏதோ சில பக்திமான்கள் கதை படிக்க அல்ல. நம் கலாச்சாரம்,  பக்தி, இலக்கியம், பண்பாடு, சமயம் , தமிழ் எல்லாம் படிக்கலாம் அதில்.

முழுவதையும் இந்த பிளாகில் கொண்டுவருவது என்பது முடியாத காரியம்.

மூலத்தை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_3.html

4 comments:

  1. சேக்கிழார் காலத்திலேயே நடை முறையில் உள்ளபழகாக்க வழக்கங்கள் தெளிவாக தெரிகிறது.அந்த சிறிய பாடலில் விருந்தோம்பலை பற்றிய எல்லா விவரமும் படைக்கும் உணவு பற்றிய நுணுக்கங்களையும் துல்லியமாக எழுதியுள்ளார்.உங்கள் விளக்கம் அற்புதம்.

    ReplyDelete
  2. நல்ல கருத்து.அருமையான விளக்கம்.

    ReplyDelete
  3. இந்த ஆறு வித சுவைகள் என்ன என்று பொருள் புரியவில்லையே. உதாரணம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. அருமையான விளக்கம்

    ReplyDelete