Tuesday, May 31, 2022

திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும் - பாகம் 2

 

 திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும்  - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம் 


பாடல் 


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_31.html


(pl click the above link to continue reading)


நன்றிக்கு  = நன்மைக்கு 


வித்தாகும் = விதையாகும் 


நல்லொழுக்கம் = நல்ல ஒழுக்கம் 


தீயொழுக்கம் = தீய ஒழுக்கம் 


என்றும் இடும்பை தரும் = எப்போதும் துன்பத்தைத் தரும். 


இதில், நன்றிக்கு வித்தாகும் என்ற தொடரில் வித்து (விதை) எப்படி பலவாக பிரிந்து பலன் தருமோ அது போல நல்ல ஒழுக்கமும் பலன் தரும் என்ற இடத்தில் முந்தைய பதிவை நிறுத்தி இருந்தோம். 


எப்படி என்று பார்ப்போம். 


வீட்டில் ஒரு பிள்ளை தினம் தோறும் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் படிக்கிறான். அது அவனது ஒழுக்கம். அதனால் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல வேலை கிடைக்கிறது. 


அது அவனுக்கு கிடைத்த பலன். நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றால் அவன் பிள்ளைகளுக்கு அது உதவும் அல்லவா? அவன் பேரப் பிள்ளைகளுக்கு உதவும் அல்லவா? 


அவன் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறானோ அது நன்றாக வளரும். அதில் முதலீடு செய்தவர்கள் பலன் பெறுவார்கள். 


அந்த நிறுவனம் வளரும் போது அங்கு வேலை செய்யும் மறவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். அவர்களும், அவர்கள் பிள்ளைகளும் பலன் பெறுவார்கள். 


மேலும், நிறுவனம் வளரும் போது மேலும் பலருக்கு வேலை கிடைக்கும். 


மேலும், அந்த நிறுவனம் ஈட்டும் இலாபத்தில் அரசுக்கு வருமான வரி, விற்பனை வரி கிடைக்கும். அந்தப் பணம் ஏழைகளுக்கு பல விதங்களில் பயன் படும் அல்லவா?


ஒரு ஒழுக்கம். ஒருவனிடம் இருந்தால் அதன் பலன் எப்படி பல்கி பெருகுகிறது என்று கவனிக்க வேண்டும். 


சரி, நல்ல ஒழுக்கம் இப்படி பெருகுகிறது என்றால் தீய ஒழுக்கமும் அப்படித் தான் பெருகும். ஒருவன் ஒரு தீமை செய்கிறான் என்றால் அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் குடும்பம், சுற்றம், நட்பு என்று எல்லோரையும் பாதிக்கும். 


ஒரு தவறுதானே என்று நாம் நினைக்கலாம். முதலில் அப்படித்தான் ஆரம்பிக்கும். பின் பழக்கமாகிவிடும். அதுவே ஒழுக்கமாகிவிடும். பின் தீராத துன்பத்தைத் தரும். 


இராவணன் செய்த ஒரு ஒழுக்கக் குறைவான செயல் அவன் மட்டிலுமா நின்றது? அரக்கர் குலத்தையே வேர் அறுத்தது அல்லவா? அதோடு போயிற்றா, இன்று வரை அவனை ஒழுக்கம் குறைந்தவனாகத் தான் நாம் நினைக்கிறோம். ஒரு நாளும் அந்தப் பழி போகாது. 


இதில் பரிமேலழகர் ஒரு நுட்பம் செய்கிறார். 


"என்றும் இடும்பைத் தரும்" என்பதில் உள்ள "என்றும்" என்ற சொல்லைப் பிடித்துக் கொள்கிறார். 


என்றும் என்றால் எதுவரையில் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, இந்த பிறவி மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகள் தோறும் தொடரும் என்கிறார். 


சற்றே விரித்துப் பார்ப்போம். 


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து என்பது வள்ளுவம். .


ஒரு பிறவியில் கற்ற கல்வி, ஏழு பிறவிக்கு தொடரும் என்பது கருத்து. அது போல, ஒரு பிறவியில் கொண்ட தீய ஒழுக்கம், "எப்போதும்" துன்பத்தைத் தரும். 


நரகத்தில் கிடந்து அல்லல்  பட வேண்டி வரும். 


மறு பிறப்பில் துன்பம் வந்து சேரும். 


அது மட்டும் அல்ல, தீய ஒழுக்கம் உள்ளவனை அவன் காலத்துக்குப் பின்னும் மக்கள் ஏசிக் கொண்டே இருப்பார்கள். 


கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனை இன்றும் நாம் நிந்திக்கிறோம் அல்லவா?  என்றும் இடும்பை தந்து கொண்டு இருக்கிறது அல்லவா?


கட்டபொம்மன் என்றோ இறந்து விட்டான். இன்றும் அவன் பெயரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது. அவன் பெயரைச் சொல்லி, இறங்குங்கள் என்று தான் சொல்கிறார்கள். இன்றும் கருவுற்ற தாய்மார்கள் அவன் தூக்கில் இடப்பட்ட இடத்துக்குச் சென்று, அங்குள்ள மண்ணை ஒரு சிட்டிகை வாயில் போட்டுக் கொள்கிறார்கள். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை கட்டபொம்மன் மாதிரி வீரனாக பிறக்க வேண்டும் என்ற ஆசையில். 


இன்றும் புகழ் சேர்கிறது அல்லவா? 


என்றும் என்பதற்கு "இம்மைக்கும், மறுமைக்கும்" என்று பொருள் சொல்கிறார் பரிமேலழகர். 


தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும். .


நல்லொழுக்கம் என்றும் நன்மை தரும். 


வித்து, என்றும் என்ற இரண்டு வார்த்தைககளில் எவ்வளவு அர்த்தங்களை பொதித்து வைத்து இருக்கிறார் வள்ளுவர். 



Monday, May 30, 2022

யாப்பிலக்கணம் - எதுகை, மோனை

 யாப்பிலக்கணம் - எதுகை, மோனை 


ஒரு புலவருக்கு எது கை தவறினாலும் எதுகை தவறக் கூடாது என்பார்கள். 


எதுகை என்றால் என்ன?


ஒரு பாடலில் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி வந்தால் அது எதுகை. 


சில உதாரணங்கள் பார்ப்போம்:


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


என்ற அபிராமி அந்தாதியில் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_30.html


(pl click the above link to continue  reading)


உதிக்கின்ற, மதிக்கின்ற, துதிக்கின்ற, விதிக்கின்ற 


என்று ஒவ்வொரு அடியிலும் முதல் சீரில் இரண்டாவது எழுத்து 'தி' என்று வருகிறது அல்லவா, அது எதுகை. 


ஒவ்வொரு அடியிலும் அது வருவதால், அது 'அடி எதுகை' எனப்படும். 


ஒவ்வொரு சீரிலும் வந்தால் அது சீர் எதுகை எனப்படும். அதில் பல வகை இருக்கிறது. 


முதல் சீர் மற்றும் இரண்டாம் சீர்

முதல் சீர் ம் மற்றும் மூன்றாம் சீர்

முதல் மற்றும் நான்கு 


என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பேர் இருக்கிறது. 


ஒரு பாடலில் ஒவ்வொரு சீரிலும் எதுகை வந்தால் அது முற்றெதுகை எனப்படும். 


மாறாக, இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல், மற்ற எழுத்துகள் ஒன்றி வந்தால் அதற்கு மோனை என்று பெயர். அது முதல் எழுத்தாக இருக்கலாம், மூன்றாம் எழுத்தாக இருக்கலாம்...எந்த எழுத்தாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


உதாரணமாக 


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக


இதில் கற்க, கசடற, கற்பவை, கற்றபின் என்ற சீர்களில் 'க' என்ற முதல் எழுத்து ஒன்றி வருகிறது. எனவே அது மோனை. 


எதுகையைப் போலவே இதிலும் அடி மோனை, சீர் மோனை என்று உண்டு. 


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை


என்ற பாடலில் து என்ற முதல் எழுத்து ஒன்றி வருவதால் அது மோனை, 'ப்' என்ற இரண்டாவது எழுத்து ஒன்றி வருவதால் அது எதுகை. 


இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தாலும், முதல் எழுத்து அளவோடு இருக்க வேண்டும். 


உதாரணமாக


ஆட்டம் 

பாட்டம் 


என்று வந்தால் அது எதுகை. 


ஆட்டம்

பட்டம்

என்று வந்தால் அது எதுகை இல்லை. 


ஒலியின் இனிமை குறைகிறது அல்லவா?


கூட்டம்,  வாட்டம் - எதுகை

கூட்டம், வட்டம் - எதுகை இல்லை 



எதுகை மோனை வரும் போது பாடலுக்கு ஒரு இசை நயம் வரும். கீழே உள்ள பாடலை படித்துப் பாருங்கள். ஒரு தாள இலயம் தெரிகிறது அல்லவா?




பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,

அஞ்சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.



ஒரே எழுத்து தான் இருக்க வேண்டும் என்று இல்லை. 


ஒரு எழுத்துக்கு இன எழுத்தும் எதுகை மோனையாக வரலாம். 


அது என்ன இன எழுத்து என்று அடுத்த பதிவில் காணலாம். 


அதுவரை, நீங்கள் இரசித்த எதுகை மோனை உள்ள பாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே. சுவாரசியமாக இருக்கும். 


சேர்ந்து படிப்போமே....அதுவும் ஒரு சுகம்தான். 


திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும் - பாகம் 1

 திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும்  - பாகம் 1 


ஒரு சொல்லில் ஓராயிரம் அர்த்தம் கொண்டு வரும் கலை வள்ளுவருக்கே உரியது.  எப்படித்தான் அந்த சொல் வந்து விழுகிறதோ அந்த இடத்தில் என்று பிரமிப்பை ஏற்படுத்தும். 


அப்படி ஒரு சொல்லைக் கொண்ட குறள் தான் நாம் இன்று பார்க்கப் போவது. 


"நன்மைக்கு வித்தாகும் நல்ல ஒழுக்கம். தீய ஒழுக்கம் என்றும் துன்பத்தைத் தரும்."


இது தான் மேலோட்டமான கருத்து. ஆழமான பல செய்திகள் உண்டு. 


பாடல் 


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_30.html



(pl click the above link to continue reading)


நன்றிக்கு  = நன்மைக்கு 


வித்தாகும் = விதையாகும் 


நல்லொழுக்கம் = நல்ல ஒழுக்கம் 


தீயொழுக்கம் = தீய ஒழுக்கம் 


என்றும் இடும்பை தரும் = எப்போதும் துன்பத்தைத் தரும். 


படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்று. 


முயற்சிக்கிறேன். 


முதலில், அது என்ன தீய ஒழுக்கம்? ஒழுக்கத்தில் நல்ல ஒழுக்கம் , தீய ஒழுக்கம் என்று இருக்கிறதா? அப்படி என்றால் என்ன?  


ஒழுக்கம் என்றால் ஒழுகுவது. எதையும் முறையாக கடைபிடிப்பது ஒழுக்கம். அது நல்ல விடயமா அல்லது தீய விடயமா என்பது வேறு செய்தி. உதாரணமாக, காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி முகம் , கை கால் கழுவி பின் தான் காப்பி குடிப்பேன் என்பது ஒரு ஒழுக்கம். இல்லை, படுக்கையிலேயே காப்பி குடிப்பேன். அப்புறம் தான் பல் துலக்குவேன் என்பது இன்னொரு ஒழுக்கம். என்ன ஆனாலும் சரி, காப்பி குடிக்காமல் படுக்கையை விட்டு எழுந்திரிப்பது இல்லை என்று இருந்தால் அதுவும் ஒரு ஒழுக்கம் தான். முறையாக, தவறாமல் செய்வதால் அதுவும் ஒரு ஒழுக்கம் தான். 


நல்ல ஒழுக்கமா, தீய ஒழுக்கமா என்பது வேறு விடயம். 


காப்பி குடிப்பதே ஒரு தீமை என்று சொல்பவர்களுக்கும் இருக்கிறார்கள். அதில் என்ன குளித்துவிட்டு குடிப்பது, குளிக்கும் முன் குடிப்பது  என்று வாதம் செய்யலாம் அல்லவா? 


எனவே முறையாகச் செய்யும் எதுவும் ஒழுக்கம் தான். 


இரண்டாவது, நன்மைக்கு வித்தாகும் நல்லொழுக்கம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? நல்ல ஒழுக்கம் இல்லாவிட்டால் நன்மை விளையாது. நன்மை விளையாவிட்டால்? தீமை விளையும் என்று அர்த்தம். 


மூன்றாவது, நான் முன் சொன்ன ஒரு வார்த்தை. ஒரு சொல். அது "வித்து" என்ற சொல். வித்து என்றால் விதை. 


நன்மைக்கு விதை நல்ல ஒழுக்கம். 


விதை என்று ஏன் சொல்ல வேண்டும்? 


விதையில் இருந்து செடி வரும், மரமாக வளரும், கிளை பரப்பி, நிழல் தந்து, காய், கனி என்று மிகுந்த பலன்களைத் தரும்.  அதுவும் எப்படி? ஏதோ ஒருவருடம் நிழல், காய், கனி எல்லாம் தந்துவிட்டு நின்று விடாது. ஒவ்வொரு வருடமும் தரும் அல்லவா? அதன் ஆயுள் உள்ள வரை அதில் இருந்து நமக்கு நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும். 


சற்று பொறுங்கள், ஆயுள் உள்ள வரை மட்டுமா? 


அந்த மரத்தில் இருந்து வரும் கனியின் உள்ளே விதை இருக்கும். அந்த விதை முளைத்து இன்னும் பல மரங்கள் வரும். அந்த மரங்களில் இருந்து எவ்வளவு பலன்கள் கிடைக்கும். 


என்றோ போட்ட ஒரு விதை எவ்வளவு காலத்துக்கு எவ்வளவு பலன் தருகிறது. 


அது மட்டுமா?


ஒரு விதை, ஒரு மரமாக ஆகிறது. 


ஒரு மரம், பல்லாயிரக் கணக்கான பழங்களை தருகிறது. அவற்றில் இருந்து எவ்வளவு விதைகள் வருகின்றன? அவை அனைத்தும் மரமானால் எவ்வளவு பலன் கிடைக்கும்? 


அது மட்டும் அல்ல. விதை வளர்ந்து விதை நட்டவனுக்கு மட்டுமா பலன் தருகிறது?


மரத்தில் எத்தனையோ பறவைகள் கூடு கட்டுகின்றன. தேனீக்கள் கூட கூடு கட்டலாம். 


மரம், மண் அரிப்பை தடுக்கிறது. அதனால பல நன்மைகள். 


மரம், மழையை கொண்டு வருகிறது. அதனால் எவ்வளவு நன்மைகள். 


இப்படி கணக்கு சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு விதையில் இருந்து எவ்வளவு நன்மை? எவ்வளவு காலத்துக்கு நன்மை.


மரத்தின் கிளையை அறுத்து பெட்டி செய்யலாம், பீரோ செய்யலாம். அது எத்தனை காலம் வரும். மரம் இறந்த பின்னும், அதன் பலன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


அது போல ஒரு நல்ல ஒழுக்கம் இருந்தால், அது ஒரு விதை போல இருந்து பல நன்மைகள் செய்யும். 


உதாரணமாக .....



(பதிவு சற்றே நீண்டு விட்டதால், இதை அடுத்த பாகத்தில் தொடர்வோம்)


Sunday, May 29, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 4

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 4


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


)


அசோகவனத்தை அடைந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுவதை நாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


அனுமன் தன்னைப் பற்றி  மேலே சொன்ன மூன்று பாடல்களில் சீதையிடம் சொல்லி முடிக்கிறான். 


இப்போது சீதை அனுமன் சொன்னதை எல்லாம் கேட்டு மனதில் நினைக்கிறாள். இன்னும் வாய் திறந்து பேசவில்லை. 


என்ன நினைக்கிறாள் ?


"இவனைப் பார்த்தால் அரக்கன் மாதிரி இல்லை. தன் ஐந்து புலன்களையும் வென்று நல் நெறியில் நிற்கும் ஒரு யோகி போல இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஒருவேளை ஏதோ ஒரு தேவனாக இருக்க வேண்டும். அவன் உணர்வுகள் நல்லவையாக இருக்கின்றன. அவன் பேச்சில் ஒரு தூய்மை இருக்கிறது. குற்றம் அற்றவனாகத் தெரிகிறான்...." என்று. 



பாடல் 


என்று அவன் இறைஞ்ச நோக்கி,

    இரக்கமும் முனிவும் எய்தி,

‘நின்றவன் நிருதன் அல்லன் :

    நெறி நின்று பொறிகள் ஐந்தும்

வென்றவன் : அல்லன் ஆகில்,

    விண்ணவன் ஆதல் வேண்டும் :

நன்று உணர்வு : உரையும் தூயன் :

    நவை இலன்போலும்! ‘என்னா.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


(pl click the above link to continue reading) 


என்று அவன் இறைஞ்ச = அவ்வாறு எல்லாம் அவன் (அனுமன்) பணிவோடு சொல்லி நிற்க 


நோக்கி = அவனை நோக்கி 


இரக்கமும் = கருணையும் 


முனிவும் = கோபமும் (ஏன் என்று கீழே விரிவாக காண்போம்) 


எய்தி = அடைந்து 


நின்றவன் = இங்கே நிற்பவன் 


நிருதன் அல்லன்  = அரக்கன் அல்லன் 


நெறி நின்று = நல்ல வழிகளில் நின்று 


பொறிகள் ஐந்தும் = ஐந்து புலன்களையும் 


வென்றவன் = வென்றவன் 


அல்லன் ஆகில், = அப்படி இல்லாவிட்டால் 


விண்ணவன் ஆதல் வேண்டும் : = வானில் உள்ள தேவனாக வேண்டும் 


நன்று உணர்வு  = அவன் உணர்வுகள் நல்லவையாக இருக்கின்றன 


உரையும் தூயன்  = அவன் பேச்சும் தூய்மையாக இருக்கிறது 


நவை இலன்போலும்! ‘என்னா. = குற்றமற்றவன் போலத் தெரிகிறான் என்று எண்ணினாள் 


"இரக்கமும், முனிவும் எய்தினள்"...இரக்கம் சரி. கோபம் ஏன் வர வேண்டும்?


சில சமயம் நமக்கு வேண்டியவர்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில் மாட்டிக் கொண்டால் நமக்கு அவர்கள் மேல் இரக்கம் வரும், அதே சமயத்தில் கோபமும் வரும்..."என்னத்துக்குப் போய் அந்த வேலையை செஞ்சு இப்படி சிக்கலில் மாட்ட வேண்டும். ...இதெல்லாம் தேவையா...சொன்னா கேக்குறது இல்லை" என்று அவர்கள் மேல் கோபப் பட்டு இருக்கிறோமா இல்லையா? 


வீட்டில் ஏதோ ஒரு பொருள் உயரத்தில் இருக்கிறது.  'அதை கொஞ்சம் எடுத்துத் தாங்க' என்று மனைவி கணவனிடம் சொல்கிறாள். அவன் ஏதோ வேலை மும்முரத்தில் இருக்கிறான். "வர்றேன்" அப்படின்னு பதில் மட்டும் வருது. மனைவிக்கு அவசரம். அவளே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு மேலே உள்ள பொருளை எடுக்க முயல்கிறாள். பொருள் கொஞ்சம் பளுவானது. நிலை தடுமாறி கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு லேசாக வீங்கிக் கொள்கிறது. 


கணவன் சத்தம் கேட்டு ஓடி வருகிறான். 


"அடி பட்டு கிடக்கும் அவளை தூக்கி விடுகிறான். அடி பட்ட இடத்தை தேய்த்து விடுகிறான். "வலிக்குதா, இரத்தம் வருதா" என்று  விசாரிக்கிறான். அதுவரை அன்பு. "நான் தான் வர்றேன்னு சொல்றேன்ல...அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு" என்று அவளை கோபிக்கவும் செய்கிறான். 


இது நடப்பது தானே? 


அன்பும், கோபமும் ஒன்றாக வரும். மனித மனம் விசித்திரமானது. ஏன் என்று காரணம் கேட்கக் கூடாது. ஒரே சமயத்தில் பல்வேறு உணர்சிகள்எழுவது இயற்கை. 


பெருமையும், பொறாமையும் ஒன்றாக வருவது இல்லையா? 


சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். 


சீதை அனுமனைப் பற்றி என்னவெல்லாம் நினைக்கிறாள்?


- அரக்கன் இல்லை 

- தேவன் 

- புலன்களை வென்றவன் 

- நல் வழியில் நிற்பவன் 

- நல்ல உணர்வுகளை உடையவன் 

- தூய சொற்களை உடையவன் 


இதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரிந்தது?  அவள் அனுமனை முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது. பின் எப்படி முடிவு செய்தல் ?


அவன் பேச்சின் மூலம். அனுமனின் மூன்றே மூன்று பாடல்கள் மூலம் அவனின் உயர்வை அவள் அறிந்து கொள்கிறாள். 


இது சீதையிடம் மட்டும் அல்ல. அனுமனை முதன் முதலில் கண்டு சிறிது பேசிய பின் இராமனும் சொல்வான் "யார் கொல்லோ இச் சொல்வின் செல்வன்" என்று. 



பேச்சு ஒருவனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்று நாம் புரிந்து கொள்ள உதவும் பாடல்கள். 


நாம் பேசும் பேச்சு நம் மதிப்பை பல மடங்கு உயர்த்தும். 


பேச்சு சும்மா வந்து விடாது. பேச்சு என்பது ஏதோ அடுக்கு மொழியில் பேசுவது அல்ல. 


தூய்மையான பேச்சு. அது  எப்படி வரும் ?  


புலன்களை வென்று, நல் வழியில் நடந்தால், உள்ளம் தூய்மையாகி, உயர்ந்த சொற்கள் வெளி வரும். அது நம்மை தேவர்களாக உயரச் செய்யும் 


நல்ல சொற்கள் வரவில்லை என்றால், உள்ளம் தூய்மையாக இல்லை என்று அர்த்தம்.  உள்ளம் தூய்மையாக இல்லை என்றால் புலன்கள் நல்ல வழியில் செல்லவில்லை என்று அர்த்தம். அவை நல்ல வழியில் செல்லாமல் இருக்கக் காரணம், அவற்றை நாம் வென்று அடக்கவில்லை என்று காரணம். 


எவ்வளவு பெரிய உயர்ந்த விடயத்தை கம்பன் எவ்வளவு தெளிவாக சொல்கிறான். 



இலக்கியம் படிப்பதால் வரும் இன்னொரு நன்மை. நம்மை உயர்த்த இலக்கியங்கள் துணை செய்யும். 


நல்ல கதை. இனிமையான பாடல்கள். அதோடு கூட உயர்ந்த கருத்துக்கள். 


இலக்கியம் சுகமானது. 


"நீ இப்படிச் செய் என்றால் யார்க்கும் பிடிக்காது". இப்படி எல்லாம் செய்ததால் அனுமன் உயர்ந்தான் என்று சொல்லி, அப்படியே விட்டு விட்டால், நாமும் அப்படிச் செய்தால் என்ன என்ற எண்ணம் வரும்.. நம்மை அறியாமலேயே அது நம்மை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும். 

Saturday, May 28, 2022

திருக்குறள் - எய்தாப் பழி

திருக்குறள் - எய்தாப் பழி


பணம் சேர்த்தால் பணம் இருக்கும். சேர்க்காவிட்டால் இருக்காது. அவ்வளவுதானே?


நிறைய படித்தால் கல்வி அறிவு வளரும். படிக்காவிட்டால் வளராது. அதற்கு மேல் அதில் ஒரு சிக்கலும் இல்லை. 


உழைத்தால் உயரலாம். உழைக்காவிட்டால் உயர முடியாது. 


ஆனால்ஒழுக்கம் அப்படிப் பட்டது அல்ல. ஒழுக்கமாக இருந்தால் உயர்வு வரும். ஒழுக்கமாக இல்லாவிட்டால் உயர்வு வராது. அப்படித்தானே நினைப்போம். 


அது தவறு என்கிறார். 


எனக்கு உயர்வு வேண்டாம் என்றால் ஒழுக்கத்தைக் கடைபிடிக்காமல் இருந்து விடலாமா? உயர்வு வராது. அவ்வளவுதானே என்றால் இல்லை. அதற்கும் மேலே இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 


அது என்ன? 


பாடல் 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_28.html


(Please click the above link to continue reading)


ஒழுக்கத்தின் = ஒழுக்கமாய் இருப்பதால் 


எய்துவர் = அடைவர் 


மேன்மை = உயர்வு 


இழுக்கத்தின் = ஒழுக்கம் இன்றி இருப்பதால் 


எய்துவர் = அடைவர் 


எய்தாப் பழி = அடைய முடியாத அடையக் கூடாத பழிகளை 


மிக அற்புதமான குறள்.


ஒருவன் எப்படி உயர்வு அடைய முடியும்? நிறைய படித்து, பட்டங்கள் பெற்று, நிறைய பணம் சம்பாதித்து, சாதனைகள் செய்து, புகழ் அடைந்து உயர்வு அடைய முடியுமா என்றால் இல்லை என்கிறார். 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை. ஒழுக்கம் தான் உயர்வைத் தரும். 


சரி, ஒழுக்கம் இல்லாவிட்டால் மேன்மை அடைய முடியாது. அவ்வளவுதானே என்றால் இல்லை. 


'இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி' என்கிறார். 


அது என்ன எய்தாப் பழி?


ஒரு ஊரிலே ஒரு திருடன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு மூன்று முறை திருடி சிறை சென்று வந்தவன். அவனுக்கு திருடன் என்ற பெயர் வந்து விட்டது. புகழ் இல்லை. மேன்மை இல்லை. 


பின்னொரு நாள், அந்த ஊரில் ஒரு திருட்டு நடந்து விட்டது. இந்தத் திருடன் திருடவில்லை. வேறு யாரோ செய்த திருட்டு. ஊர் மக்கள் இந்தத் திருடனை பிடித்து விசாரிக்கிறார்கள். அவன் தான் திருடவில்லை என்று சத்யம் செய்கிறான். யார் நம்புவார்கள்..."நீ திருட்டுப் பயதாண்டா...இதுக்கு முன்னாடி திருடிட்டு சிறைக்கு சென்றவன் தான...இத மட்டும் நீ செய்யலேன்னுசொன்னா நாங்க நம்பிருவோமா?...இவனை எல்லாம் இப்படி விசாரிக்கக் கூடாது, கட்டி வச்சு நல்லா அடி குடுத்தா உண்மை தான வெளிய வரும்" என்று ஊர் அவனை கட்டி வைத்து துன்புறுத்தும். அல்லது காவலர்கள் செய்வார்கள். 


ஒரு முறை ஒருவன் ஒழுக்கம் தவறினால், பின்னால் அவன் செய்யாத பழியை எல்லாம் ஏற்க வேண்டி வரும். 


எய்தாப் பழி - செய்யாத பழி, ஏற்க வேண்டியில்லாத பழி. ஒழுக்கம் தவறினால் செய்யாத குற்றத்துக்கு எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.


இந்த எய்தாப் பழி இருக்கிறதே, அது ஒரு மிகப் பெரிய பழி. 


ஒருவன் ஒரு பெரிய தவறை செய்துவிட்டு சிறை சென்று விடுதலையாகி வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். 


உலகம் அவனை நல்லவன் என்று ஏற்றுக் கொள்ளுமா?  தண்டனைதான் முடிந்து விட்டதே. குற்றத்துக்கும் தண்டனைக்கும் சரியாப் போச்சு என்று யாரும் நினைப்பது இல்லை. வாழ் நாள் எல்லாம் அந்தப் பழியை அவன் சுமந்து திரிய வேண்டும். "..அதோ போகிறானே அவன் பெரிய கொலைகாரன்,fraud, அயோக்கியன் ...அவன் கிட்ட கொஞ்சம் எச்சரிகையாக இரு" என்று தான் உலகம் அவனை தள்ளி வைத்து தண்டிக்கும். அவன் இப்போது ஒரு குற்றமும் செய்யவில்லை. இருந்தும், பழி ஏற்று தண்டனை அனுபவிக்கிறான். 


ஒரு கொலை செய்து தண்டனை பெற்று மீண்டு வந்தவனுக்கு யாராவது வேலை கொடுப்பார்களா? வாழ்நாள் பூராவும் அவன் தன் குற்றத்தை மறைத்து, மறைந்து திரிய வேண்டி வரும். எப்போதாவது உண்மை வெளியே வந்தால், அவன் வெறுத்து ஒதுக்கப்படுவான். 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

இழுக்கத்தின் எய்தார் அது 


என்று குறள் சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.  


எய்தாப் பழி என்று சொல்லி இருக்கிறார். 


எவ்வளவு ஆழமான ஒரு சொல். எவ்வளவு ஆபாத்தான ஒன்று. 


ஒழுக்கக் குறைவால் மேன்மை அடையாதது மட்டும் அல்ல, செய்யாத பழி எல்லாம் வந்து சேரும்.


எனவே,ஒழுங்கா ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துச் சொல்கிறார். 


நாம் இதை கடை பிடிப்பதோடு நின்று விடாமல், நம்மைச் சார்தவர்களுக்கும் எடுத்துச் சொல்லுவோம். அவர்களும் பயன் பெறட்டுமே.






Friday, May 27, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


)


அசோகவனத்தை அடைந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுவதை நாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


சீதைக்கு சந்தேகம் தீர்ந்து இருக்காது.  இது உண்மையிலயே இராம தூதனா அல்லது அரக்கர்களின் மாயையா என்ற சந்தேகம் அவளுக்குள் இருக்கத்தான் செய்யும். 


திடீரென்று அசொகவனதுக்குள் ஒரு குரங்கு வந்து குதித்து 'நான் இராம தூதன்' என்றால் சந்தேகம் வருமா வராதா? 


இதை அறிந்த அனுமன் மேலும் சொல்கிறான் 


" சந்தேகம் வேண்டாம். என்னிடம் நான் இராம தூதன் என்று நிரூபணம் செய்ய அடையாளங்கள் உள்ளது. மேலும், உண்மை உணர்த்த வேண்டி இராமன் சொன்ன செய்திகளும் என்னிடம் இருக்கிறது. அவற்றை உங்களுக்கு உள்ளங் கை நெல்லிக் கனி போல் காட்டுகிறேன். நெய் விளக்கு போல புனிதமானவளே, வேறு எதையும் நினைக்க வேண்டாம்"என்கிறான்.


பாடல் 


‘ஐயுறல்! உளது அடையாளம் : ஆரியன்

மெய்யுற உணர்த்திய உரையும் வேறு உள;

கை உறு நெல்லி அம் கனியில் காண்டியால்!

நெயுறு விளக்கு அனாய்! நினையல் வேறு! ‘என்றான்.


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


(pl click the above link to continue reading) 


‘ஐயுறல்! = சந்தேகம் வேண்டாம் 


உளது அடையாளம் = நான் இராம தூதன் என்று அடையாளம் காட்ட என்னிடம் சில நிரூபணங்கள் உள்ளன 


ஆரியன் = இராமன் 


மெய்யுற உணர்த்திய = உண்மையை அறிந்து கொள்ள 


உரையும் வேறு உள = செய்திகளும் இருக்கிறது 


கை உறு = உள்ளங் கையில் உள்ள 


நெல்லி அம் கனியில்  = நெல்லிக் கனி போல 


காண்டியால்! = நீ கண்டு கொள்ளலாம் 


நெயுறு விளக்கு அனாய்! = நெய் விளக்கு போல புனிதமானவளே 


 நினையல் வேறு! ‘என்றான். = வேறு எதையும் நினைக்க வேண்டாம் என்றான் 



அவளுக்கு சந்தேகம் இருக்கும் என்று அனுமன் கணிக்கிறான். 


அந்த சந்தேகம் போக என்ன சொல்ல வேண்டுமோ அதை அறிந்து சொல்கிறான். 


இராமன் அனுப்பிய அடையாளப் பொருள்கள் இருக்கிறது என்கிறான். 


ஒரு வேளை இராமனுக்குத் தெரியாமல் இவன் அந்தப் பொருள்களை களவாடி வந்திருப்பானோ என்ற சந்தேகம் சீதைக்கு வரலாம் என்று எண்ணி அடுத்ததாக ஒன்றைச் சொல்கிறான். 


"இராமன் சொல்லி அனுப்பிய செய்தியும் இருக்கிறது" என்கிறான். இராமன் சொன்ன செய்திகளை வைத்து இவன் இராம தூதன் என்று முடிவு செய்து கொள்ள முடியும் அல்லவா? அந்தச் செய்திகளை இராமன் மற்றும் சீதை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை சொல்லி அனுப்புகிறான் இராமன். 


இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்துவோம். 


அந்தக் காலத்தில் புகைப் படம் இல்லை. தொலைபேசி இல்லை. 


எனவே, இராமன் தனக்கும் சீதைக்கும் மட்டும் தெரிந்த சில விடயங்களை சொல்லி அனுப்புகிறான்.  அந்தரங்கமான விடயங்கள். வேறு வழி இல்லை. இதை படித்த சில பேர், "ஆஹா பார்த்தீர்களா இராமன் எவ்வளவு காம வயப் பட்டவன், நாகரீகம் இல்லாமல் அந்தரங்க விடயங்களை, இன்னொரு ஆண் மகனிடம் சொல்லி அனுப்புகிறானே...இதுவா பண்பாடு" என்று இராமனையும், கம்பனையும் விமர்சினம் செய்ய முற்படுகிறார்கள். 


கம்பனுக்கு, இராமன் பிள்ளை மாதிரி. அவ்வளவு பாசம் அவன் மேல். கம்பன் ஒருகாலும் இராமனின் பெருமையை குறைக்கும் செயலை செய்யமாட்டான் என்று நம்பலாம். 


மீண்டும் பாடலுக்கு வருவோம். 


சீதை இன்னும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


எல்லாம் அனுமனே ஊகம் செய்து அவள் மனதில் நம்பிக்கையும், ஒரு தெம்பும், அமைதியும்  வரும் வகையில் பேசுகிறான். 


இப்படிப் பேசிப் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும். 


பயனுள்ள பேச்சு. நம்பிக்கை தரும் பேச்சு. ஆதரவும், அமைதியும் தரும் பேச்சு. உற்சாகம் ஊட்டும் பேச்சு. 


இவற்றை எல்லாம் ஊன்றிப் படித்ததால் நம்மை அறியாமலேயே நம் பேச்சுத் திறன் வளரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 











Thursday, May 26, 2022

திருக்குறள் - ஒழுக்கத்தின் ஒல்கார்

 திருக்குறள் -  ஒழுக்கத்தின் ஒல்கார்


ஏன் நிறைய பேர் ஒழுக்கத்தை கடை பிடிப்பது இல்லை?


அதற்கு முன், ஒழுக்கம் என்றால் ஏதோ பூஜை செய்வது, ஒழுங்காக கடைமைகளை செய்வது, பிற பெண்களை ஏறெடுத்து பார்க்காமல் இருப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. 


தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிரீர்களா ? அதுவும் ஒரு ஒழுக்கம் தான். நேரம் தவறாமல் எதையும் செய்வீர்களா? அதுவும் ஒழுக்கம் தான். வேளா வேளைக்கு சாப்பிடுகிறீர்களா? அதுவும் ஒரு ஒழுக்கம் தான். 


எதையும் முறையாகச் செய்தால், அது ஒழுக்கம். எதையும் என்பதை உயர்ந்தவர்களிடம் இருந்து பெற்றதை என்று கொள்ள வேண்டும். 


இருந்தும், ஏன் பெரும்பாலோனோர் ஒழுக்கத்தை கடை பிடிப்பது இல்லை? 


ஏன் என்றால் அது கடினமாக இருக்கிறது என்பதால். 


சுலபமாக இருந்தால் எல்லோரும் செய்து விட மாட்டார்களா?


தினம்தோறும் ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்வது என்பது ஒரு ஒழுக்கம்.  


எவ்வளவு கடினமான வேலை. எனவே செய்வது இல்லை. 


அப்புறம் எப்படி ஒழுக்கத்தை கடை பிடிப்பது. வள்ளுவர் மிக எளிமையான வழி ஒன்றைச் சொல்லித் தருகிறார். 


கடினமாக இருக்கிறது என்று தானே ஒழுக்கத்தை கை விடுகிறாய். கடினமான எதையும் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. அப்படித்தானே. நல்லது, ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் இருப்பது என்பது ஒழுக்கத்தை கடைப் பிடிப்பதை விட கடினமானது. 


இப்போது என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார். .


பாடல் 


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_26.html


(pl click the above link to continue reading)


ஒழுக்கத்தின் = ஒழுக்கத்தை கடை பிடிப்பதில் இருந்து 


ஒல்கார்  = விலக மாட்டார், தளர மாட்டார் 


உரவோர் = உறுதி உள்ளவர்கள் 


இழுக்கத்தின் = ஒழுக்கம் தவறுவதால் வரும்


ஏதம் = குற்றம் 


படுபாக்கு = உண்டாவதை 


அறிந்து = தெரிந்து 


சாலையில் ஒரு ஒழுக்கம் இல்லாமல் கண்டபடி வண்டி ஓட்டினால் சிறிது நேரம் இன்பமாக இருக்கும். ஆனால், விபத்து நேர்ந்து விட்டால் எவ்வளவு பெரிய துன்பம்? அதை அறிந்து, நாம் ஒழுங்காக வண்டி ஓட்டுக்கிறோம் அல்லவா? 


இங்கே ஒழுக்கம் தவறுவதால் வரும் தீமை தெரிகிறது. 


இன்னொருவன் மனைவியை கொண்டு வந்து அவளை அடையலாம் என்ற இன்ப நாட்ட்டத்தால் , பின்னால் வரப் போகும் தீமையை இராவணன் அறிந்தான் இல்லை. தெரிந்து இருந்தால் ஒழுக்கம் தவறி இருப்பானா? பெற்ற பிள்ளையை பறி கொடுத்து, தலை இல்லாத அவன் உடலை கட்டிக் கொண்டு அழ வேண்டி இருக்கும் என்று உணராததால், அவன் அந்தத் தவறைச் செய்தான். 


ஒழுக்கமாக இருப்பது கடினம் என்றால், ஒழுக்கம் இல்லாமல் இருப்பது அதை விட கடினம். அப்படி என்றால் எதைத் தேர்ந்து எடுப்பது? 


காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வேர்க்க விறுவிறுக்க நடக்கும் ஒழுக்கம் கடினம்தான். பின்னாளில் முட்டி வலி வந்து நடக்க முடியாமல், எழுந்திருக்க முடியாமல், படுத்த படுக்கையாக இருக்கும் துன்பம் எவ்வளவு பெரியது?  கழிவறைக்கு செல்லக் கூட ஒருவர் துணை வேண்டும் என்ற அவலம் தேவையா? அதை நினைக்கும் போது இப்போது "ஒழுங்காக"  உடற் பயிற்சி செய்யத் தோன்றும் அல்லவா.


புகை பிடிக்காமல் இருப்பது கடினம்தான். புகை பிடித்து புற்று நோய் வந்தால்? 


ஒழுக்கத்தின் மேன்மை மட்டும் சொல்லவில்லை வள்ளுவர். அதை எப்படி கடைபிடிப்பது என்றும் சொல்லித் தருகிறார். 


யார் எவ்வளவு அக்கறையாக நமக்குச் சொல்லித் தருவார்கள்?


இப்படி ஒரு பாட்டன் நமக்கு கிடைக்க நாம் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். ?






Wednesday, May 25, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 2

 

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 2 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

)

 இனித் தொடர்வோம். 


இராம அவதாரம் நிகழ்வதற்கு முன் என்ன நடந்தது? எப்படி இராம அவதாரம் நிகழ்ந்தது, ஏன் அது நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?


ஒரு நாள், தசரதன் அவருடைய குல குருவான வசிட்டரை அணுகி, "குருவே, உங்களுடைய துணையால் அறுபதினாயிரம் ஆண்டுகள் பகைவர்களை அடக்கி இந்த உலகை காப்பாற்றி வந்து விட்டேன். ஒரு குறையும் இல்லை. ஆனால், எனக்குப் பின்னால் இந்த அரசை, இந்த குடிகளை யார் காப்பாற்றப் போகிறார்களோ என்ற மனதில் கவலையாக இருக்கிறது" என்றான். 


அதுதான் இராம அவதாரத்துக்கு போட்ட பிள்ளையார் சுழி. 


எனக்குப் பின் என் மகன் ஆள வேண்டும். எனக்கு மகன் இல்லை. இனி இந்த அரசை யார் ஆளப் போகிறார்களோ என்ற கவலையாக இருக்கிறது என்கிறான். 


பாடல்  


‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற

உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;

பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html


(pl click the above link to continue reading)


‘அறுபதினாயிரம் ஆண்டு  = அறுபதினாயிரம் ஆண்டுகள் 


மாண்டு உற = மாட்சி பெற 


உறு பகை ஒடுக்கி = பெரிய பகைவர்களை அடக்கி 


 இவ் உலகை = இந்த உலகத்தை 


ஓம்பினேன் = காப்பாற்றினேன், அரசாண்டேன் 


பிறிது ஒரு குறை இலை = வேறு ஒரு குறையும் இல்லை 


என் பின் = என் காலத்திற்கு பிறகு 


வையகம்  = இந்த உலகம் 


மறுகுறும் = கலக்கம் அடையும் 


என்பது = என்று 


ஓர் மறுக்கம் உண்டு = ஒரு கலக்கம், கவலை எனக்கு இருக்கிறது 


அரோ. = அசைச் சொல் 


தனக்கு பிள்ளை இல்லையே என்று அவன் வருந்தவில்லை. அப்படி என்றால் அறுபதினாயிரம் ஆண்டுகள் கவலைப் பட்டுக் கொண்டே தான் இருந்திருக்க வேண்டும். இத்தனை வருடம் கழித்து ஏன் கவலைப் பட வேண்டும்? இத்தனை வருடம் பிள்ளை இல்லாமல் இருந்தாகி விட்டது. இனியும் அப்படியே இருந்து விடலாம்தானே. 


அவன் கவலை பிள்ளை இல்லையே என்பது அல்ல. 


தனக்குப் பின் இந்த அரசு, மக்கள் என்ன அவார்களோ என்ற கவலை. 


ஒரு நல்ல தலைவன் தனக்கு பின் என்ன நடக்கப் போகிறது என்று கவலைப் படுவான். 


வீடாக இருக்கட்டும், நிறுவனமாக இருக்கட்டும், நாடாக இருக்கட்டும்...தான் போன பின் அது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையான தலைவன். எனக்குப் பிறகு எக்கேடும் கேட்டு போகட்டும் என்று நினைப்பவன் நல்ல தலைவன் இல்லை. 


காப்பிய போக்கோடு கம்பன் சொல்லித் தரும் நல்ல குணங்கள். 


இராமன் பிறந்தான், இராவணன் அழிந்தான் என்பது கதை. அதை கதையாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உயர்ந்த கருத்துகளையும் நாம் பெற்றுக் கொண்டால் இரட்டிப்பு நன்மை நமக்கு. 


படிக்கிற காலத்தில், Succession Planning, என்று ஒரு தத்துவம் சொல்லித் தந்தார்கள். ஒரு நிறுவனம் தடையின்றி நடக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு பதவிக்கும், அதில் உள்ளவர் ஏதோ ஒரு காரணத்தால் விலக நேர்ந்தால் அந்த இடத்துக்கு யார் வர வேண்டும் என்று தீர்மானம் செய்து அடுத்த நபரை தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். 


அடடா மேற்கிந்திய சிந்தனை எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். 


அவர்களுக்கு எவ்வளவோ காலத்துக்கு முன் நம்மவர்கள் அவற்றை சிந்தித்து, அதை கதை வடிவில் தந்தும் இருக்கிறார்கள். .


அதை எல்லாம் படிக்க நமக்கு நேரம் இல்லாமல் போய் விட்டது. 


படிப்போம். 





Tuesday, May 24, 2022

திருக்குறள் - ஆக்கமும் உயர்வும்

 திருக்குறள் - ஆக்கமும் உயர்வும் 


ஒரு அறத்தை சொல்ல நினைக்கும் வள்ளுவர் சில சமயம் அதற்கு உதரணாமாக இன்னொரு அறத்தை சொல்லுவார்.


ஏற்கனவே சொற்சிக்கனம். இதில் ஒரு குறளுக்குள் இரண்டு அறம் சொல்லுவது என்பது எவ்வளவு கடினமான செயல் என்று நினைத்துப் பாருங்கள். 


வள்ளுவரால் மட்டுமே முடிந்த ஒன்று. 


ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை. இது தான் வள்ளுவர் சொல்ல நினைத்த செய்தி. அதற்கு எதை உதாரணமாகச் சொல்லலாம் என்று யோசிக்கிறார். ஒரு காலத்திலும் ஒழுக்கம் குறைந்தவனுக்கு உயர்வு வராது. அது போல என்றுமே நடக்காத ஒன்றை உதாரணமாகச் சொல்ல வேண்டும். .


எப்படி சூரியன் மேற்கில் உதிக்காதோ அது போல ஒழுக்கம் உடையவனுக்கு உயர்வு என்பது கிடையாது என்று சொல்லி இருக்கலாம். 


சூரியன் மேற்கில் உதிப்பது, தண்ணீர் மேல் நடப்பது என்பதெல்லாம் ஒரு பெரிய உதாரணமா என்று நினைத்த வள்ளுவர் மிக அற்புதமான ஒரு உதாரணம் தருகிறார். 


பொறாமை கொண்டவனுக்கு ஆக்கம் எப்படி இல்லையோ, அது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை என்று சொல்லி முடிக்கிறார். 


பாடல் 


அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_24.html


(please click the above link to continue reading)


அழுக்காறு  = பொறாமை 


உடையான்கண் = இருப்பவனிடம் 


ஆக்கம்போன்று = எப்படி ஆக்கம் இருக்குமோ 


இல்லை = இருக்காது 


ஒழுக்கம் இலான்கண் உயர்வு. = ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு 


பொறாமை கூடாது என்பதையும் சொல்லியாச்சு, ஒழுக்கம் குறையக் கூடாது என்பதையும் சொல்லி ஆகிவிட்டது. 


இதில் பல நுணுக்கமான விடயங்கள் இருக்கின்றன:


முதலாவது, பொறாமை உள்ளவனிடம் ஆக்கம் இருக்காது என்று சொல்வதன் மூலம், ஆக்கம் இருக்க வேண்டும் என்றால் பொறாமை இருக்கக் கூடாது என்பது தெரிகிறது. பொறாமை முன்னேற விடாது. நம் செல்வத்தை, நம் ஆக்கத்தை கண்டு மகிழ்ச்சி அடைவது, அதை மீளும் எப்படி பெருக்குவது என்பதை விட்டு விட்டு மற்றவன் செல்வம் கண்டு மனதுக்குள் புழுங்கிக் கொண்டே இருந்தால் எப்படி முன்னேற்றம் வரும். 


பொறாமை கொண்டவன், மற்றவன் செல்வத்தை, அவன் புகழை அழிக்க நினைப்பான். அதற்காக தன் பொருளையும், நேரத்தையும் செலவழிப்பான்.  அதில் சிக்கல்கள் வரலாம். இருப்பதும் போய் விடும். ஆக்கம் எங்கிருந்து வரும்?


இரண்டாவது, பொறாமை இல்லாவிட்டால் ஆக்கம் வரும் என்பது மறைமுகமாக நமக்குத் தெரிகிறது. 


மூன்றாவது, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது என்று சொன்னால், ஒழுக்கம் உள்ளவனிடம்? உயர்வு இருக்கும் என்பது தெரிகிறது அல்லவா?


நான்காவது, சரி ஒழுக்கமாக இருக்கிறேன். எனக்கு உயர்வு வருமா என்றால், ஒழுக்கமாக இருந்தால் மட்டும் போதாது, பொறாமை இருக்கக் கூடாது.  ஒழுக்கமாக இருந்தால் உயர்வு வரலாம், ஆனால் செல்வம் வர வேண்டும் என்றால் பொறாமையை விட்டு விட வேண்டும். 


ஐந்தாவது, சரி, பொறாமை இல்லாமல் இருக்கிறேன். எனக்கு உயர்வு வருமா என்றால். வராது. ஒரு கொள்ளைக் காரன் எவ்வளவுதான் தான் சொத்து சேர்த்தாலும், அவனை யார் மதிக்கப் போகிறார்கள்? அயோக்கிய பயல் என்றுதான் திட்டுவார்கள். 


ஆறாவது, இப்போது இரண்டையும் சேர்ப்போம். ஒழுக்கமாகவும் இருந்து,  பொறாமையும் இல்லாமல் இருந்தால்? செல்வமும் பெருகும், உயர்வும் வரும். 


ஏழாவது, பரிமேலழகர் ஒரு நுணுக்கமான உரை சொல்கிறார். அழுக்காறாமை என்ற அதிகாரத்தில், கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும், உண்பதுவும் இன்றிக் கெடும் என்று சொல்லி இருக்கிறார். பின்னால் வருகிறது அது. பொறாமை கொண்டவன் சுற்றத்தார் உண்ண உணவு இன்றி, உடுக்க உடை இன்றி துன்பப் படுவார்கள் என்கிறார். உணவு இல்லாவிட்டால் கூட சகித்துக் கொள்ளலாம். உடை இல்லாமல் எப்படி இருப்பது? 


அழுக்காறை உதாரணமாகச் சொன்னதால், ஒழுக்கம் குறைந்தவன் சுற்றத்துக்கும் உயர்வு இல்லை என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


யோசித்துப் பார்ப்போம்.  ஒருவன் அலுவலகத்தில் கையூட்டு (இலஞ்சம்) பெற்று விடுகிறான். அல்லது ஒரு பெரிய தவறை செய்து விடுகிறான். சிறை தண்டனை கிடைக்கிறது. அது அவன் பிள்ளைகளை பாதிக்குமா இல்லையா? அவன் உடன் பிறப்புகளை பாதிக்குமா இல்லையா? அவன் சகோதரி திருமணத்துக்கு பெண் பார்க்க வருகிறார்கள். அண்ணன் கொலை செய்து விட்டு அல்லது அப்பா கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கிறார் என்றால் பெண்ணை எடுப்பார்களா? அந்தப் பெண்ணின் வாழ்வு பாதிக்கப்படும் அல்லவா?


எனவே, ஒருவன் ஒழுக்கக் குறைவாக நடந்தால், அது அவனை மட்டும் அல்ல, அவன் சுற்றத்தையும் பாதிக்கும் என்கிறார். 


எவ்வளவு ஆழமான குறள்.


மனதுக்குள் ஒரு முறை வள்ளுவருக்கும், பரிமேலழகருக்கும் நன்றி சொல்வோம். 





Monday, May 23, 2022

யாப்பிலக்கணம் - ஒரு அறிமுகம்

யாப்பிலக்கணம் - ஒரு அறிமுகம் 


கடந்த ஐந்து வருடங்களாக இந்த பதிவை எழுதி வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் இருந்து எனக்குப் பிடித்த பாடல்களை பகிர்ந்து வருகிறேன். 


பாடல்கள் என்று சொல்லும் போது, அந்தப் பாடல்களுக்கு பின்னால் ஒரு இலக்கணம் இருக்கிறது. 


ஐயோ, இலக்கணமா என்று பயப்படத் தேவையில்லை. தமிழ் இலக்கணம் என்பது மிக மிக சுகமானது, சுவையானது, சுவாரசியமானது. 


அட,இது இப்படியா என்று உங்கள் முகத்தில் ஒரு புன்னகை வரவழைக்கும்.


நாம் இலக்கணத்தை சூத்திரம், நூற்பா என்று அணுகாமல், வேறு விதமாக அணுகுவோம். 


தமிழ் பாடல்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது?  பாடல்கள் படிக்க சுகமாக இருக்கின்றன. ஆனால், மனதில் நிற்க மாட்டேன் என்கிறது. எப்படி அதை மனதில் நிறுத்துவது?


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_23.html


(pl click the above link to continue reading)


உதாரணமாக 


சொற்றுணை வேதியன்   சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி   பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர்   கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது   நமச்சி வாயவே. 


என்ற தேவார பாடலை எப்படி மனதில் இருத்திக் கொள்வது?


எப்படி என்று பார்ப்போம். 


நான்கு வரிகளிலும் உள்ள முதல் வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.


சொற்றுணை

பொற்றுணைத்

கற்றுணைப் 

நற்றுணை


இரண்டாவது எழுத்து 'ற்' என்று எல்லா வரியிலும் வரும். முதல் வரியில் முதல் சொல் தெரிந்தால் போதும், மற்ற வரிகளில் உள்ள முதல் சொல் எப்படி இருக்கும் என்று தெரியும். 


அது மட்டும் அல்ல, எந்த வரியில் முதல் சொல் தெரிந்தாலும் போதும், மற்ற வரிகளின் முதல் சொல் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 


அது மட்டும் போதுமா? அதை வைத்துக் கொண்டு எப்படி ஞாபகம் வைக்க முடியும்?


ஒவ்வொரு வரியிலும் முதல் சொல்லின் முதல் எழுத்தையும், மூன்றாம் எழுத்தின் முதல் எழுத்தையும் பாருங்கள் 


சொற்றுணை            -    சோதி 

பொற்றுணைத்            பொருந்தக் 

கற்றுணைப்            -     கடலிற் 

நற்றுணை                -     நமச்சி 

 

சொ - சோ 

பொ - பொ 

க - க 

ந - ந 


ஒத்து வருகிறதா?


சரி, இது மட்டும் போதுமா?


ஒவ்வொரு வரியையும் பாருங்கள். சரியாக நாலு வார்த்தைதான் இருக்கும்.  அதை சீர் என்று சொல்லுவார்கள். 


வரியை, அடி என்று சொல்லுவார்கள். 


நான்கு அடி, அடிக்கு நாலு சீர். 


இது ஒரு கட்டமைப்பு. 


இதில் மட்டும் தான் அப்படியா? எல்லா பாடல்களும் அப்படித்தான் இருக்குமா?


ஒரு பிரபந்த பாடலைப் பார்ப்போம். 


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை

பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்

ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.


ஒவ்வொரு அடியிலும், முதல் சீரின் இரண்டாவது எழுத்தைப் பாருங்கள் 


ஊர்

பார் 

கார்

ஆர் 


என்று வரும். 


முதல் சீரையும், மூன்றாவது சீரையும் பாருங்கள். அவற்றின் முதல் எழுத்துகள் என்ன?


ஊரில்லேன் - உறவு (ஊ, உ)

பாரில் - பற்றினேன் (பா, ப)

காரொளி - கண்ணனே (கா, க)

ஆரிடர் - அரங்கமா (ஆ, அ)


இங்கே ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள். ஒரு சின்ன மாற்றம். 


ஆனால், ஒரு அடியில் ஐந்து சீர் என்றால் எல்லா அடியிலும் ஐந்து சீர் இருக்க வேண்டும்.  ஒன்றில் ஐந்து, இன்னொன்றில் எட்டு, மூன்றாவது அடியில் மூணு சீர் என்றெல்லாம் இருக்காது. 


இப்படி ஒரு ஒழுங்கு முறை இருக்கிறது. 


இதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர். 


யாக்குதல் என்றால் கட்டுதல். ஒரு பாடலை எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லும் இலக்கணம். 


இந்த உடம்புக்கு யாக்கை என்று பெயர்? கை, கால், மூக்கு என்று வைத்து கட்டப்பட்டதால் இது யாக்கை. அப்படி கட்டப்பட்ட இந்த உடல் ஒரு நாள் சரிந்து விழும் என்பதால் சரீரம். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒரு செய்யுளை எப்படி கட்டுவது? எதை எல்லாம் வைத்து கட்டுவது? 


இதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். 


யாப்பிலக்கணம் தெரிந்து கொண்டால், கவிதையின் சுவை பன்மடங்கு கூடும். 


இசை ஞானம் எதுவும் இல்லாமலும் இசையை இரசிக்க முடியும். .


ஆனால், இராகம், தாளம், சுருதி, பாவம், சங்கதி, இலயம் என்று எல்லாம் தெரிந்தால் அதே இசையை நாம் இன்னும் பலமடங்கு இரசிக்க முடியும் அல்லவா?


கஷ்டம் இல்லமால் சுகமாக யாப்பிலக்கணம் படிப்போமா?



கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 1

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 1 


(இதன் முன்னுரையை கீழே உள்ள பதிவில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html


)


திரைப்படத்தில் கதாநாயகன் முதன் முதலாக அறிமுகப் படுத்தப் படும் போது, நேரே அவன் முகத்தை காட்டி விடுவது இல்லை. 


அவன் காலைக் காட்டி, அவன் வரும் காரைக் காட்டி, அவனுக்கு மற்றவர்கள் செய்யும் மரியாதைகளை காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆர்வத்தை உண்டாக்கி, ,பின் கடைசியில் காட்டுவார்கள். அதை ஆங்கிலத்தில் curtain raiser என்று சொல்லுவார்கள். 


வரப்போது சாதாரண கதாநாயகன் அல்ல. அந்த ஆதிமூலமே அவதரிக்கப் போகிறது. அந்தப் பெருமாளே அவதரிக்கப் போகிறார் என்றால் எவ்வளவு விரிவாக அதைச் சொல்ல வேண்டும் ! 


நமக்கு கதையில் இராமன் திருமாலின் அவதாரம் என்று எப்படி தெரியும்? யார் சொன்னார்கள்? இராமனே சொன்னானா "நான் திருமாலின் அவதாரம்" என்று?  


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html


(pl click the above link to continue reading)



ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத்திலும் கம்பன் சொல்கிறான் அந்த பரப்ரம்மமே நேரில் வந்தது என்று. அது கவிக் கூற்று. வேறு யார் சொன்னார்கள்? தசரதன்? கௌசலை? வசிட்டர்? 


இராம அவதாரம் எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது என்ற குறிப்புகள் எங்கே இருக்கிறது? அதில் என்ன சொல்லி இருக்கிறது? 


இராமன் பிறப்பதற்கு முன் என்ன நடந்தது? 


இது பற்றி இராம காதை என்ன கூறுகிறது?


அங்கிருந்து கதையை ஆரம்பிப்போம். 





Sunday, May 22, 2022

திருக்குறள் - பிறப்பு ஒழுக்கம்

 திருக்குறள் - பிறப்பு ஒழுக்கம் 


ஒரு பெரிய பதவியில் உள்ள ஒருவர் தவறான காரியத்தை செய்தால், "இவ்வளவு பெரிய பதவியில், பொறுப்பில் உள்ள ஒருவர்,இந்த மாதிரி கீழ்த்தரமான காரியத்தை" செய்யலாமா என்று உலகம் அதிர்ச்சி அடையும். 


அதற்காக, சிறிய பதவியில் உள்ளவர்கள் தவறு செய்யலாம் என்று அர்த்தம் அல்ல. அவருக்குச் சொன்னதுதான் எல்லாருக்கும். 


இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


இனி குறளுக்குள் செல்வோம். 


பாடல் 


மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_50.html


(pl click the above link to continue reading)



மறப்பினும் = மறந்து விட்டால் கூட 


ஓத்துக் கொளல்ஆகும் = மீண்டும் படித்துக் கொள்ள முடியும் 


பார்ப்பான் = அந்தணன் 


பிறப்பு= பிறப்பினால் உள்ள சிறப்பு 


ஒழுக்கம் குன்றக் கெடும் = அவன் ஒழுக்கம் குறைந்தால அது கெட்டு விடும் 


ஓத்து என்றால் ஓதுதல். மீண்டும் மீண்டும் சொல்லுவதின் மூலம் அறிந்து கொள்வது. ஓதுவார் என்பவர் தினம் தினம் பாடல்களை பாடுபவர் என்று அர்த்தம். 


அந்தணர்கள் வேதங்களை உச்சாடணம் செய்து செய்து மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள். 


ஒரு வேளை அப்படி தினம் தினம் ஓதிய பின்னும் மறந்து விட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்.  வேலை காரணமாகவோ, அல்லது வேறு ஏதோ காரணத்தாலோ ஓதுவதை மறந்து, வேலையில் மூழ்கி மறந்து விட்டால், மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். 


ஆனால், ஒழுக்கக் குறைவாக ஏதேனும் செய்து விட்டால், பின்னால் ஒழுக்கமாக இருந்தாலும், அதைச் சரி செய்யவே முடியாது. அவன் தன் குலத்தில் இருந்து தாழ்ந்தவனாகவே கருதப் படுவான். 


உதாரணமாக, ஒரு கோவிலில் இறைவனுக்கு பூஜை, கைங்கர்யம் செய்யும் ஒரு அந்தணர் மாலை வேளையில் ஒரு மது அருந்தும் கடையில் மது அருந்தி, புலால் உண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை அந்த ஊரில் நாலு பேர் பார்க்கிறார்கள். மற்றவர்களிடம் சொல்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். ஊர் ஏற்றுக் கொள்ளுமா? அவரை அந்த இறை காரியங்களை செய்ய மக்கள் அனுமதிப்பார்களா? 


அவர் அந்த தகுதியை இழப்பார் அல்லவா?


ஒரு வேளை இறைவனுக்கு சொல்லும் மந்திரத்தை அவர் மறந்து போனால், படித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் தவறினால் சரி செய்து கொள்ள முடியாது. 


அது என்ன அந்தணர்களுக்கு மட்டும் சொல்லி இருக்கிறார் என்றால் 


"சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்."


என்கிறார் பரிமேலழகர். 


நீதிபதியே தவறு செய்யலாமா என்று கேட்பதில் மற்றவர்களும் தவறு செய்யக் கூடாது என்பது அடங்கி இருக்கிறது. 


எனவே, ஒழுக்கத்தை ஒரு போதும் தவற விடக் கூடாது. விட்டால் பின் ஒரு காலத்திலும் அதை சரி செய்ய முடியாது. 



கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3


(இதன் முந்தைய பதிவுகளை  கீழ் காணும் வலை தளங்களில்  காணலாம். 

பாகம் 1 - https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html)


பாகம் 2 - https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். )


மேலே தொடர்வோம் 


அனுமன், சீதையிடம் "உங்களைத் தேட உலகமெல்லாம் இராமன் ஆட்களை அனுப்பி இருக்கிறான். நான் செய்த தவம், தங்களை காணும் பேறு பெற்றேன்" என்று கூறினான் என்பதை முந்தைய பதிவில் கண்டோம். 


இனி, 


அடுத்து சீதையின் மனதில் என்ன சந்தேகம் வரும் என்று அனுமன் யோசிக்கிறான். "இராமன் ஏன் வரவில்லை" என்று அவள் மனதில் ஒரு ஐயம் வரலாம் என்று நினைத்து, அவள் கேட்காமலேயே பதில் சொல்கிறான். 


"அரக்கர்கள் ஒரு செய்தியையும் வெளியே வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். எனவே, நீங்கள் இங்கே சிறை இருப்பது இராமனுக்குத் தெரிய வரவில்லை. அது தான் காரணமே அன்றி வேறு ஒன்றும் இல்லை " என்கிறான். 



பாடல் 


ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்

ஆண்தகை அறிந்திலன் : அதற்குக் காரணம்

வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு

மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ?



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3.html



(pl click the above link to continue reading)


ஈண்டு = இங்கு 


நீ  = நீங்கள் 


இருந்ததை = இருப்பதை 


இடரின் வைகுறும் = துன்பதில் வருந்தும் 


ஆண்தகை = ஆண்களில் சிறந்தவனான இராமன் 


அறிந்திலன் = அறியவில்லை 


அதற்குக் காரணம் = அதற்கு காரணம் 


வேண்டுமே? = தெரிய வேண்டுமா? 


அரக்கர் = அரக்கர்கள் 


தம் = தங்களுடைய 


வருக்கம் = இனம் 


வேரொடு = அடியோடு 


மாண்டில = இறந்து படவில்லை 


ஈது அலால் = அதைத் தவிர 


மாறு வேறு உண்டோ? = வேறு மாற்றுக் கருத்து இல்லை 


உலகில் நடக்கும் சம்பவங்களுக்கு நாமே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு கவலைப் படுகிறோம். 


உதாரணமாக, கணவன் வேலையில் இருந்து கொஞ்ச நாட்களாகவே தாமதமாக வீட்டுக்கு வருகிறான். 


இது ஒரு நிகழ்வு. 


மனைவி என்ன நினைக்கிறாள் ? "இவன் வேறு எங்கோ போகிறான். என் மீது அன்பு இல்லை. எனக்கு துரோகம் செய்கிறான்" என்று. இப்படி நினைத்துக் கொண்டு, அதை அவனிடம் நேரே கேட்க்கும் தைரியம் இல்லாமல் மனதுக்குள் வைத்துப் புளுங்குகிறாள். அவன் நடவடிக்கைகளை உன்னித்து பார்க்கத் தலைப்படுகிறாள். 


நேரில் அவனிடமே கேட்டு விட்டால் ஒரு நொடியில் இந்த சந்தேகம் தீர்ந்து விடும். 


அது போல, 


இராமன் வரவில்லை. அது ஒரு நிகழ்வு. சீதை என்ன நினைக்கலாம் ?


"இராமனுக்கு என் மேல் அன்பு இல்லை. அதனால்தான வரவில்லை. என்னைப் பற்றி கவலை இல்லை. அதனால் தான் இத்தனை நாள் ஆகிறது. நான் இலக்குவன் மேல் சொன்ன சுடு சொற்களை அவன் இராமனிடம் சொல்லி இருப்பான். அதனால் கோபம் கொண்டு இராமன் என்னைத் தேடி வரவில்லை. வேறு யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பார்"


என்றெல்லாம் மனம் போக வாய்ப்பு இருக்கிறது அல்லவா?


அனுமன் அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், அதை அப்படியே துடைத்து எறிகிறான். 


"நீ இருக்கும் இடம் பற்றிய செய்தியை அரக்கர்கள் அடியோடு மறைத்து விட்டடர்கள். அதுதான் காரணமே அன்றி வேறு எந்த ஒரு காரணமும் இல்லை" என்று உறுதியாகக் கூறுகிறான். 


எதிரில் இருப்பவர் மனம் அறிந்து பேச வேண்டும். 


எவ்வளவு நுட்பமான விடயங்களை கம்பன் சுட்டிக் காட்டுகிறான். 








Saturday, May 21, 2022

திருக்குறள் - ஒழுக்கமும் ,இழுக்கமும்

 திருக்குறள் - ஒழுக்கமும் ,இழுக்கமும் 


திருக்குறள் எவ்வளவோ காலம் கடந்து வந்து இன்றும் நம் வாழ்க்கைக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. 


ஆனாலும், சில குறள்கள் நமக்கு மயக்கம் தருவனவாய் இருக்கின்றன. வள்ளுவர் அப்படி சொல்லி இருப்பாரா? இது இந்தக் காலத்துக்கு பொருந்துமா? இது இன்றைய நிலைக்கு பொருந்தாது, எனவே இந்தக் குறளை நாம் புறம் தள்ளி விடலாமா என்ற எண்ணம் வரும். அல்லது ஒரு வேளை இது ஒரு இடைச் செருகலாக இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம். அல்லது சிலர் சொல்லுவது போல ஓலைச் சுவடிகளை கண்டு பிடித்து அச்சில் ஏற்றும் போது தெரிந்தோ, தெரியாமலோ செய்த பிழையாக இருக்கலாம் என்றெலாம் தோன்றும். 


சிக்கல் என்ன என்றால், ஒரு குறளை நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக மறுதலித்தால், அதே போல் மற்றொரு குறளையும் மறுதலித்தால் என்ன என்று தோன்றும். ஒரு குறள் தவறு அல்லது ஏற்புடையது இல்லை என்றால் மற்ற குறள் மேலும் சந்தேகம் வரும். 


எனவே, இவ்வளவு ஆழமாக, நுட்பமாக சிந்தித்து எழுதிய வள்ளுவர் குறளில் தவறு இருக்க வழி இல்லை. நாம் தான் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம் என்று நாம் மேலும் ஆராயத் தலைப்படுகிறோம். 


அப்படிப்பட்ட குறள்களில் இன்று நாம் பார்க்கப் போகும் குறளும் ஒன்று. 


மக்களை வருணம், குலம் என்ற இரண்டு பிரிவாக வள்ளுவர் பார்கிறார். 


வர்ணம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணங்கள். (இப்போதே சிலர் முகம் சுழிப்பது தெரிகிறது)


இந்த ஒவ்வொரு வர்ணதுக்குள்ளும் குலப் பிரிவு இருக்கிறது. 


எப்படி என்று ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.


வியாபாரம் செய்பவர் வைசியர் என்ற வர்ணத்தை சார்தவர் என்று தெரியும். 


வியாபாரத்தில் பல விதம் உண்டு. மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என்று. 


தங்கம் விற்பவர், காய் கறி விற்பவர், கார் விற்பவர், என்று பல பிரிவுகள் உண்டு அல்லவா?


அதே போல் பிராமணர்களிலும் உட்பிரிவுகள் உண்டு என்று நாம் அறிகிறோம். 


அந்த உட்பிரிவுகளை குலம் என்கிறார். 


இனி குறளுக்கு செல்வோம். 


பாடல் 


ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_21.html


(pl click the above link to continue reading)



ஒழுக்கம் உடைமை = ஒழுக்கம் உடையவனாக இருத்தல் 


குடிமை = குலமாகும் 


இழுக்கம் = அந்த ஒழுக்கத்தில் இருந்து தவறினால் 


இழிந்த பிறப்பாய் விடும் = தாழ்ந்த பிறப்பாகி விடும் 


இங்கே குடிமை, பிறப்பு என்ற இரண்டு சொற்கள் இருக்கின்றன. 


இதற்கு பரிமேலழகர் எப்படி உரை சொல்கிறார் என்று பார்ப்போம். 


"ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , 


இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.


(பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். "


ஒருவர் பிறப்பது ஒரு குறிப்பிட்ட வர்ணத்தில். அதை "பிறப்பு" என்கிறார் வள்ளுவர். 


ஒரு வர்ணத்தில், ஒரு குலத்தில் பிறந்தாலும், நல்ல ஒழுக்கம் உடையவனாக இருந்தால், அந்த வர்ணத்துக்குள் உயர்ந்த குலத்தவனாக கருதப் படுவான். 


மாறாக, ஒருவன் ஒழுக்கக் குறைவாக நடந்தால், வர்ணத்துக்குள் கீழே உள்ள குலத்தவனாக அல்ல, கீழே உள்ள வர்ணத்துக்குப் போய் விடுவான். என்கிறார். 


ஒழுக்கமாய் இருந்தால் வர்ணம் மாறாது. குலம் மாறும். 


ஒழுக்கம் குறைந்தால், வர்ணத்தில் கீழே போய் விடுவான். .


நமக்கு பிரச்னை என்ன என்றால், உயர்ந்த வர்ணம், தாழ்ந்த வர்ணம், உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்று எப்படி வள்ளுவரும், பரிமேலழகரும் சொல்லலாம் என்பது தான். 


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவர் இப்படிச் சொல்வாரா என்ற சந்தேகம் வருகிறது. .


ஜீரணிக்க சற்று கடினமான குறள் தான். 


பரிமேலழகரை தவிர்த்து வேறு சில உரை ஆசிரியர்கள் இதற்கு சற்று வேறு விதமாக உரை செய்து இருக்கிறார்கள். 


ஒழுக்கம் உயர்ந்த நிலையைத் தரும், இழுக்கம் மனிதரிலும் கீழான விலங்கு நிலைக்கு ஒருவனை தள்ளிவிடும் என்று உரை செய்கிறார்கள். 


"மனுஷனா அவன், மிருகம்" என்று மோசமான குணம் உள்ளவர்களை திட்டுவதை நாம் கேட்டு இருக்கிறோம். ஒழுக்கம் தவறினால் மனிதன் தன்னிலும் கீழான விலங்கைப் போல் நடத்படுவதை நான் கண் கூடாக காண்கிறோம். 


குற்றம் செய்தவனை கையில் விலங்கு போட்டு தெருவில் இழுத்துச் செல்கிறார்கள், (கைதிக்) கூண்டில் அடைத்து வைக்கிறார்கள். ஏனைய மனிதர்களோடு வாழத் தகுதி அற்றவன் என்று அவனை தனிமைச் சிறையில் போடுகிறார்கள். 


அப்படியும் உரை சொல்ல வழி இருக்கிறது. 


எது எப்படியோ, ஒழுக்கம் உயர்வு தரும், இழுக்கம் தாழ்வைத் தரும் என்று புரிந்து கொள்வோம். 





Friday, May 20, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 2

 

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை கீழ் காணும் வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html)


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். 


மேலே தொடர்வோம் 


"உலக நாயகனான இராமனின் தூதுவன் நான் என்று சீதையை தொழுது நின்றான் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். 


சீதைக்கு மனதில் ஆயிரம் கேள்வி எழும் அல்லவா? இது உண்மையா, அல்லது அரக்கர்கள் செய்யும் மாயமா என்று குழப்பம் வருவது இயல்பு.  அவள் குழப்பத்தை தீர்த்து நம்பிக்கை வரும் படி பேச வேண்டும். 


இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசியுங்கள். 


நீங்கள் அனுமன் இடத்தில் இருந்தால் என்ன சொல்லுவீர்கள் என்று. 


என் பெயர் அனுமன். இராமன் என்னை அனுப்பினான். இனி நீங்கள் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால், இதைப் போய் இராமனிடம் சொல்வேன். இராமனிடம் வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா ?" என்று நாம் கேட்போம். 


அனுமன் சொல்கிறான் 


"இராமன் ஆணையால் நான் இங்கு வந்து சேர்ந்தேன். இந்த உலகம் முழுவதையும் தேடி, அலசி ஆராய்ந்து உங்களை கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு சென்றவர்கள் பலர். நான் ஒருவன் மட்டும் அல்ல.  என் தவப் பயனால், உங்கள் திருவடியை தரிசிக்கும் பேறு பெற்றேன்"


என்றான். 


பாடல் 


அடைந்தனென் அடியனேன்; இராமன் ஆணையால்

குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்

மிடைந்தவர் உலப்பிலர்; தவத்தை மேவலால்

மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


(pl click the above link to continue reading)


அடைந்தனென்  = இங்கு வந்து சேர்ந்தேன் 


அடியனேன் = அடியவனாகிய நான் 


இராமன் ஆணையால் = இராம பிரானின் ஆணையால் 


குடைந்து = தோண்டி துருவி 


உலகு அனைத்தையும் = இந்த உலகம் முழுவதும் 


நாடும் = உங்களை நாடி கண்டு பிடிக்க வேண்டும் என்ற வேட்கையால் 


கொட்பினால் = முடிவினால் 


மிடைந்தவர் = சென்றவர்கள், புறப்பட்டவர்கள் 


உலப்பிலர் = கணக்கில் அடங்காதவர்கள் 


தவத்தை மேவலால் = தவப் பயனால் 


மடந்தை!  = பெருமாட்டியே 


நின் சேவடி வந்து நோக்கினேன். = உங்கள் திருவடிகளை வந்து காணும் பேறு பெற்றேன் 


எவ்வளவு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகள். 


முதலில், தன்னை அடியவன் என்று கூறி பணிவு  காட்டுகிறான். அடக்கம் ஒருவனின் பெருமையை காட்டும். 


இரண்டாவது, இராமன் ஆணையால் என்று கூறிய போது இரண்டு விடயங்களை உணரச் செய்கிறான். முதலாவது, இராமன் தான் அனுப்பினான் என்ற செய்தி. இரண்டாவது, "ஆணையால்" என்றதால் அவன் அதிகாரம், வலிமை உள்ளவனாக இருக்கிறான் என்று தெரிகிறது. அது மட்டும் அல்ல, இராமன் தன் மேல் அன்பு கொண்டு, தேடி கண்டு வர ஆட்களை அனுப்பி இருக்கிறான் என்றும் அவள் உணர்ந்து கொள்கிறாள். 


மூன்றாவது, மிக முக்கியமான செய்தி. ஏதோ ஒரு ஆளை அனுப்பினான், அவன் நேரே இங்கு வந்துவிட்டான் என்றால் நம்ப முடியாது. ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சீதை ஐயம் கொள்ளலாம். எனவே, இந்த உலகம் பூராவும் உங்களை தேடி கண்டு பிடிக்க கணக்கில் அடங்காத ஆட்களை இராமன் அனுப்பி இருக்கிறான் என்று சொல்வதின் மூலம் அந்த சந்தேகத்தை தீர்க்கிறான். 


அது மட்டும் அல்ல, எனக்காக என் கணவன் எவ்வளவு பாடு படுகிறான் என்ற எண்ணம் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமான ஒன்று. என் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் உலகம் பூராவும் என்னை தேட ஆள் அனுப்பி இருப்பான் என்ற பெருமிதம் ஒரு பெண்ணுக்குத் தான் புரியும். 


நான்காவது, அது என்ன உலகம் பூராவும் ஆட்கள் அனுப்பினார் என்கிறாய். நீ மட்டும் எப்படி இங்கே வந்தாய் என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கு விடை அளிக்கிறான். "நான் செய்த தவப் பயன்" என்று. இது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சுகமான் ஒன்று? தன்னை காண்பது தவப் பயன் என்று சொல்கிறானே என்று சீதை ஒரு கணம் பெருமிதமும் அமைதியும் அடைந்திருப்பாள். காரணம், இதுவரை இராவணன் வந்து மிரட்டி விட்டு போனதைத்தான்  அவள் கேட்டு இருக்கிறாள். தன் மேல் இவ்வளவு மரியாதையாக, தன்னிடம் இவ்வளவு பணிவாக ஒருவன் பேசுவதை நீண்ட நாட்களுக்குப் பின் அன்று தான் கேட்டிருப்பாள்.


எந்தப் பெண்ணும், தான் போற்றப் படுவதை, மதிக்கப் படுவதை விரும்பாமல் இருக்க மாட்டாள். "இந்த சேலையில் நீ ரொம்ப அழாக இருக்க" என்று மனைவியிடம் சொல்லிப் பாருங்கள். மகிழ்ச்சியான ஒரு புன்னகை அவள் முகத்தில் மலர்வதைக் காண்பீர்கள். அவளுக்கு எத்தனை வயது என்று கணக்கு இல்லை. எந்த வயதிலும் தான் போற்றப் படுவதும், மதிக்கப் படுவதும் ஒரு பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியது. 


அவளுக்கு தன் மனதில் உள்ள சந்தேகங்கள் போக வேண்டும். 


தன்னபிக்கை பிறக்க வேண்டும். 


ஒரு மகிழ்ச்சியும் மன நிறைவும் வர வேண்டும். 


இவை அத்தனனயும் இந்தப் பாடல் அவளுக்கு தருமா இல்லையா? 






Thursday, May 19, 2022

திருக்குறள் - அதுவே துணை

திருக்குறள் - அதுவே துணை 


ஒழுக்கம் விழுப்பம் தரும் என்றார் முதல் குறளில். 


சரி, நமக்கு பெருமை தருவதுதானே, ஒழுக்கமாக இருந்துவிட்டுப் போவோம் என்றால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று வள்ளுவர் சொல்கிறார். 


மிக மிக கடினமான ஒன்று என்கிறார். ஒழுக்கத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப் பட வேண்டி இருக்கும். அது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல என்று எச்சரிக்கிறார். 


அப்படியா, அப்படினா, அதை விட்டு விட்டு வேறு ஏதாவது வழி இருக்கிறாதா ? பெருமை, சிறப்பு இதெல்லாம் அடைய? இருந்தால் பேசாமல் அதை  கடை பிடிப்போமே என்று என்று நினைக்கலாம். 


வள்ளுவர், எல்லாம் ஆராய்ந்து பாத்தாச்சு, வேற ஒரு வழியும் இல்லை. ஒழுக்கம் ஒன்றே வழி என்கிறார். 


பாடல் 


 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_19.html


(pl click the above link to continue reading)



பரிந்தோம்பிக் = பரிந்து + ஓம்பி = பரிந்து என்றால் வருந்தி. வருந்தினாலும் அதை கடை பிடிக்க வேண்டும். 


 காக்க = போற்றி பாதுகாக்க வேண்டும் 


ஒழுக்கம் = ஒழுக்கத்தை 


தெரிந்தோம்பித் = அறங்கள் அனைத்தையும் ஒருமனதாக  


தேரினும் = ஆராய்ந்து தெளிந்தாலும் 


அஃதே துணை = அது ஒன்றேதுணை 


குறள் ஒரு பக்கம் இருக்கட்டும். 


நம்மிடம் ஒரு விலை உயர்ந்த பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறோம். வைர ஆபரணம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


பயணம் முழுவதும் நம் கவனம் முழுவதும் அதன் மேலேதான் இருக்கும் அல்லவா? அதை தனியே விட்டு விட்டு எங்காவது போவோமா? தூங்கும் போது கூட அந்த ஆபரணம் உள்ள பெட்டியை  தலையணையாக வைத்துக் கொண்டு உறங்குவோம் அல்லவா? 


ஒழுக்கம் என்பது நாம் வாழ்நாள் எல்லாம் சேர்த்த செல்வம். அதற்கு ஒரு குறையும் வராமால் எவ்வளவு கண்ணும் கருதுமாக நாம் காக்க வேண்டும்? ஒரு வைர நகைக்கே இந்தப் பாடு என்றால் ஒழுக்கத்துக்கு எவ்வளவு பாடு பட வேண்டும்? 


நிறைய பேர் ஆசை காட்டுவார்கள். நமக்கே சபலம் வரும். செய்தால் என்ன, ஒரு முறைதானே, யாருக்குத் தெரியப் போகிறது, ஊர் உலகில் நடக்காததா என்றெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொண்டு ஒழுக்கம் தவற நினைக்கலாம். 


அப்படி இல்லை என்றால், ஒழுக்கமாக இருப்பவனை மிரட்டி அவனை ஒழுக்கம் தவறச் செய்ய இந்த உலகம் முயலும். 


பொய் சொல்ல மாட்டேன், உண்மை மட்டும்தான் பேசுவேன் என்ற ஒரு ஒழுக்கத்தை கடை பிடிக்க அரிச்சந்திரன் எவ்வளவு பாடு பட வேண்டி இருந்தது. 


ஒழுக்கத்துக்கு வேறு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால் இல்லை. கொஞ்சம் ஒழுக்கம் தவறி நடந்து விட்டு, கோவில் உண்டியலில் பணம் போட்டுவிட்டால் சரியாகி விடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அல்லது ஏதோ ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் செய்த ப் பாவம் எல்லாம் போய் விடும் என்று நம்புகிறார்கள். 


ஒழுக்கத்துக்கு ஒரு மாற்றே கிடையாது. 


"அதுவே துணை" என்றார். 


அது துணை என்றால் அது ஒரு துணை, வேறு ஏதும் இருக்கலாம் என்ற ஐயம் வரும். அதுவே துணை என்றால் அது மட்டும் தான் துணை. 


வள்ளுவர் சும்மா சொல்லவில்லை, 'தெரிந்து ஓம்பி தேரினும்' ஒரு மனதாக எல்லா அறங்களையும் ஆராய்ந்தாலும், அதுவே துணை என்கிறார். .


நீங்கள் ஒன்றும் ஆராய வேண்டாம். நான் ஆராய்ந்து விட்டேன். வேறு ஒரு வழியும் இல்லை என்கிறார். 


பொய்யா மொழிப் புலவர். அவர் சொல்வது தவறாக இருக்குமா? 


சரியாகத்தான் இருக்கும். 


நாம் நடைமுறையில் பார்க்கலாம். எவ்வளவோ பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் எங்கோ ஒரு சின்ன சறுக்கலில் அவர்கள் வாழ்நாள் எல்லாம் கட்டிக் காத்த பேர், பெருமை எல்லாம் காற்றில் போய் விடுவதை பார்க்கிறோம். 


ஆசை வரும், ஆணவம் வரும், புலன்கள் சுண்டி இழுக்கும்...ஒரு பொழுதேனும் கவனம் சிதற விடக் கூடாது. 


இன்னும் ஒரு முறை குறளை படித்துப் பாருங்கள். ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரிய வரும். 





Wednesday, May 18, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 1

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 1 



பேசுவது என்பது ஒரு கலை. 


எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். அது மட்டும் அல்ல, கேட்பவர்கள் எதை எதிர்பார்கிரார்களோ அதை அறிந்து பேச வேண்டும். 


கேட்ட கேள்வி ஒன்றாக இருக்கும், சொல்லும் பதில் வேறொன்றாக இருக்கும். 


என் அனுபவத்தில் சில கூறுகின்றேன்....


நேர் முகத் தேர்வில் (interview) வேலைக்கு மனு செய்திருக்கும் நபரைப் பார்த்து "உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்" என்போம். 


பெரும்பாலன் சமயங்களில் வரும் பதில் "என் பெயர் இது, நான் இன்னது படித்து இருக்கிறேன், எனக்கு திருமணம் ஆகி விட்டது/ஆக வில்லை, என் மனைவி இன்ன வேலை செய்கிறாள், என் சொந்த ஊர் இது"


என்று கூறுவார்கள். 


அவர் சொல்லியது அனைத்தும் உண்மை. அதில் பிழை இல்லை. ஆனால், கேள்வி கேட்டவர் எதற்கு கேட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இருக்கிற வேலைக்கு இவர் தகுதியானவரா என்று அ அறியத்தான் கேள்வி கேட்டகப் பட்டது. அதற்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல வேண்டும். 


அதே போல், "இன்று எப்ப வீட்டுக்கு வருவீங்க" என்று மனைவி கேட்டால் "இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் இருக்கிறது...முடிக்க நேரம் ஆகும்..." என்று சொல்லக் கூடாது. 


அவள் எதற்கு கேட்கிறாள்? ஏதோ வெளியே போக வேண்டும். அதற்குத் தானே கேட்கிறாள். அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும். 


எப்ப வருவாய் என்று கேட்டால், கேட்பவர் ஒரு நேரத்தை பதிலாக எதிர் பார்க்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


என்று வருவாய் என்று கேட்டால் கேட்பவர் ஒரு தேதியை பதிலாக் எதிர்பார்க்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


"இன்னிக்கு இரசம் எப்படி இருக்கு" என்று மனைவி கேட்டால்,அதில் ஏதோ புதிதாக செய்து இருக்கிறாள் என்று அர்த்தம், அல்லது ஒரு பாராட்டை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம், அல்லது வேறு ஏதோ பேச தயங்குகிறாள் என்று அர்த்தம்.  


"நல்லா இருக்கு" என்று மொட்டையாக பதில் சொல்லக் கூடாது.  கேட்பவர் மனம் அறிந்து பதில் சொல்லப் பழக வேண்டும். 


கம்பன் அப்படி ஒரு காட்சியைக் காட்டுகிறான். 


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். 


அவர்களுக்குள் நடக்கும் பேச்சு, பேசுக் கலையின் உச்சம் தொட்டு காட்டிகிறான் கம்பன். 


அணு அணுவாக இரசிக்க வேண்டிய இடம். 


உங்கள மனதில் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்....

அசோக வனம். சுற்றிலும் அரக்கியர். குண்டா, கருப்பா, பயங்கர ஆயுதங்களுடன், நடுவில் அழகே உருவான சீதை, இடை இடை தடபுடலாக இராவணன் வந்து மிரட்டி விட்டுப் போகும் காட்சி...அழுது, வெறுத்து, தற்கொலை ஒன்றே தீர்வு என்று பிராட்டி முடிவு செய்து, அங்குள்ள ஒரு கொடியை கழுத்தில் சுருக்கிட்டு கொள்ள நினைக்கும் நேரம்...


இதை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். 


"அனுமன் சீதை தற்கொலைக்கு முயல்வதை பார்க்கிறான். அதிர்ச்சி அடைகிறான். ஓடிப் போய் சீதையின் கையை பிடித்து தடுத்து நிறுத்தலாம் என்றால் அவனுக்கு கூச்சமாக இருக்கிறது. எப்படி ஒரு பெண்ணைத் தொடுவது என்று. "உலக நாயகன் அருளிய தூதன்" நான் என்று அவள் முன் சென்று கை கூப்பி நிற்கிறான். 


பாடல் 


கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

'அண்டர் நாயகன்அருள் தூதன் யான்' எனா,

தொண்டை வாய்மயிலினைத் தொழுது,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


(pl click the above link to continue reading)




கண்டனன் = கண்டான் 


அனுமனும் = அனுமன் 


கருத்தும் எண்ணினான் = மனதில் நினைத்தான் 


கொண்டனன் துணுக்கம் = திடுக்கிட்டான் (அவள் தற்கொலை செய்து கொல்லப் போவதைப் பார்த்து) 


மெய் தீண்டக் கூசுவான், = அவள் கையை பற்றி தடுத்து நிறுத்தக் கூச்சப் பட்டான் (முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை எப்படி தொடுவது என்று) 


'அண்டர் நாயகன் =உலகுக்கு எல்லாம் நாயகன் 


அருள் தூதன் யான்' = அருளிய தூதன் நான் 


எனா, = என்று 


தொண்டை வாய்  = கோவைப் பழம் போன்ற வாயை உடைய 


மயிலினைத் தொழுது, = மயில் போன்ற சாயலை உடைய சீதையை தொழுது 



"சீதை, கொஞ்சம் பொறு...நான் சொல்வதைக் கேள்" என்று ஆரம்பித்து இருக்கலாம். 


அனுமன் அப்படிச் செய்யவில்லை. எதைச் சொன்னால் அவள் மனம் சாந்தி அடையும், தான் சொல்வதை கேட்ட்பாள் என்று அறிந்து சொல்கிறான் "உலக நாயகனின் தூதன்" என்று. .


இராமனிடம் இருந்து ஏதாவது செய்தி வருமா என்று தானே அவள் தவம் கிடக்கிறாள். அதை அறிந்து அங்கிருந்து ஆரம்பிக்கிறான் அனுமன். 


தொடர்வோம்....



Tuesday, May 17, 2022

திருக்குறள் - ஒழுக்கமும் விழுப்பமும்

 திருக்குறள் - ஒழுக்கமும் விழுப்பமும் 


நாம் இதுவரை உள்ள அனைத்து குறள்களுக்கும் பரிமேலழகர் கூறிய உரைப் படியே சிந்தித்து வந்தோம். 


இந்தக் குறளில் ஒரு சிறு மாற்றம் செய்ய விருப்பம். 


இந்தக் குறளுக்கு பெரியவர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய உரை கொண்டு சிந்திக்க இருக்கிறோம். 


வெகு நாட்களுக்கு முன் படித்த ஞாபகம். அந்த ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன். 


இந்தக் குறளின் விளக்கம் முழுவதும் அவர் கூறியதின் மாற்று வடிவமே.


பாடல் 


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_79.html


(please click the above link to continue reading)


ஒழுக்கம் = ஒழுக்கம் 


விழுப்பம் = உயர்வு, சிறப்பு, பெருமை 


தரலான் = தரும் என்பதால் 


ஒழுக்கம் = அந்த ஒழுக்கம் 


உயிரினும் = உயிரை விட உயர்ந்ததாகக் கருதி 


ஓம்பப் படும் = போற்றப்படும், காக்கப் படும் 



இதில் என்ன பெரிய விரிவுரை செய் ய இருக்கிறது என்று நினைக்கலாம். 


பொறுத்து இருங்கள். 


'ஒழுக்கம்' என்று தானே சொல்லி இருர்க்கிறார். ஒழுக்கத்தில் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று இரண்டு இருக்கிறதே. இதில் எந்த ஒழுக்கத்தை வள்ளுவர் சொல்கிறார்? பின்னால்  'விழுப்பம்' தரும் என்று சொன்னதால், அது நல்லொழுக்கம் என்று கொள்ள வேண்டும். 


மேலும், உயர்ந்தவர்கள் எதைக் கூறினாலும், நல்லதையே நினைத்துக் கூறுவார்கள். 


வழியே ஏகுக வழியே மீளுக என்றாள் ஔவை. வழியில் போய், வழியில் வா என்று அர்த்தம். அதாவது, நல்ல வழியில் போய், நல்ல வழியில் வா என்று அர்த்தம். குறுக்கு வழி அல்ல அவள் சொன்னது. 


'நெறி அல்லா நெறி தன்னை நெறியாகக் கொள்வேனே" என்பார் மணிவாசகர். வழி அல்லாத வழி. 


நல்ல நெறியை, நெறி என்கிறார். 


தீய வழியை, நெறி அல்லாத நெறி என்கிறார். அதாவது நல்லது இல்லாதது கெட்டது. கெட்டது என்றே சொல்லுவது இல்லை. 


ஒருவனுக்கு எது சிறப்பை, பெருமையை, புகழைத் தரும்?


செல்வம்? படிப்பு? எழுதிய நூல்கள்? செய்த தான தர்மங்கள்? பெற்ற பிள்ளைகள்? பதவி?  


இவை எதுவுமே ஒருவனுக்கு பெருமை தராது. ஒழுக்கம் ஒன்றே ஒருவனுக்கு பெருமை தரும். 


இராவணனிடம் என்ன இல்லை? அறிவு, பதவி, வீரம், ஞானம், செல்வம், புகழ், அழகு...எல்லாம் இருந்தது. நாம் அவனை மதிக்கிறோமா? இல்லையே? ஏன்?  ஒழுக்கம் இல்லை அவனிடம். மாற்றான் மனைவியை விரும்பிய ஒழுக்கம் அற்ற செயலைச் செய்தான். 


பல்கலை கழகத்தின் துணை வேந்தரை ஏதோ தவறு செய்தார் என்று கைது பண்ணி அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவர் மேல் மதிப்பு இருக்குமா?


ஒழுக்கம் ஒன்றே ஒருவனுக்கு பெருமையைத் தரும். 


சரி, எனக்கு பெருமை வேண்டாம், புகழ் வேண்டாம் ...எனவே நான் ஒழுக்கம் இல்லாமல் இருக்கலாமா என்றால்....


ஒழுக்கமாக இருந்தால் பெருமை வரும் 

ஒழுக்கம் அற்றவனாக இருந்தால் சிறுமை வரும். ஊர் பார்த்து சிரிக்கும். மனைவி, மக்கள், சுற்றம் எல்லாம் ஏளனம் செய்யும். ஒருவன் இலஞ்சம் வாங்கி கைது ஆகிறான் என்று வைத்துக் கொள்வோம். பள்ளியில் அவன் பிள்ளைக்கு என்ன மரியாதை இருக்கும். அவன் மனைவி தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? 


"ஓம்பப் படும்" என்று கட்டளையாகக் கூறுகிறார்.  எதுக்கு? ஒழுக்கத்தை கடை பிடிப்பதால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வி வரும் அல்லவா? பலன் இல்லாமல் ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது. 


"விழுப்பம் தரும்" எனவே அதை கடைப்பிடி என்கிறார். 


"உயிரினும்" என்று சொல்லுவதின் அர்த்தம் என்ன?


கி. ஆ. பெ அவர்கள் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கும். 


உயிர் உயர்ந்தது தான். வரும் காலத்தில் ஏதோ ஒரு விஞ்ஞானி இறவாமல் இருக்க ஒரு மருந்து கண்டு பிடித்து விடலாம். அல்லது இறந்த உயிரை மீண்டும் கொண்டு வந்து விடலாம். ஆனால், ஒழுக்கம் போனால் வரவே வராது என்பதால் உயிரை விட அது உயர்ந்தது என்றார். 


இரண்டாவது, உயிரோடு இருக்கும் ஒருவன் ஒரு மிகப் பெரிய தவறை செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பின் அவன் நடை பிணமாகத் தான் அலைய வேண்டி இருக்கும். உயிர் இருந்தாலும் அவனை ஒரு உயிருள்ள மனிதன் என்று யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே, அந்த உயிருக்கே சிறப்பு தருவது, ஒழுக்கம் தான். 


மூன்றாவது, ஒருவன் இறந்து போனால், அவன் செய்த குற்றங்களை நாம் பெரிதாக சொல்லுவது இல்லை. ஒரு நாகரீகம் கருதி  சரி சரி என்று விட்டு விடுகிறோம். 


போரில் அடி பட்டு இராவணன் இறந்து கிடக்கிறான். 


"மும்மடங்கு பொலிந்ததம்மா அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா" 


என்பான் கம்பன். 





சில சமயம் செய்த தவறை உணர்ந்து ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்றே வைத்துக் கொள்வோம். நாம் அவனை மன்னிக்கத் தயாராக இருப்போம். நல்ல மனுஷன், செஞ்ச தவறுக்காக உயிரையே விட்டு விட்டான்...அவன் மனுஷன் என்று சொல்ல்வதைக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?


தவறான முடிவால் கோவலனை கொன்று விட்டதை அறிந்து உயிரை விட்ட பாண்டிய மன்னனை நாம் வெறுத்து விடவில்லை. 


ஒழுக்கத் தவற்றினை உயிரைக் கொடுத்தாவது சரி செய்து விடலாம். 


உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒருவன் ஒழுக்கக் குறைவாக நடந்தால் அவனை என்ன சொல்லுவோம்? 


ஒருவன் உயிரை இழந்து விட்டால் அவனுக்கு அதில் துன்பம் இல்லை. அவன் தான் இறந்து விட்டானே. அவனை சுற்றி உள்ளவர்கள் அழுவார்கள். 


ஆனால், ஒருவன் ஒழுக்கத்தை இழந்தால் அவனும் அழ வேண்டும், அவன் சுற்றமும் அழும். எனவே, உயிரை விட ஒழுக்கம் உயர்ந்தது. 


உயிர் உள்ள எல்லோரும் ஒரு நிலையில் இருப்பது இல்லை. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன் என்று ஆயிரம் வேற்றுமைகள் இருக்கும்.  ஆனால், ஒழுக்கம் உடைய எல்லோருமே சிறப்பித்துக் கூறப் படுவார்கள். 


சீதையை விட கண்ணகி கற்பு ஒழுக்கத்தில் உயர்ந்தவள் என்று யாரும் கூற மாட்டார்கள். 


எனவே, உயிர் எவ்வளவு நமக்கு முக்கியமோ, சிறப்போ, இன்றி அமையாததோ, அதை விட ஒரு படி மேலாக ஒழுக்கத்தைக் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


(குறிப்பு - மேலே உள்ள உரையில் உதாரணங்கள் திரு. கி. ஆ. பெ அவர்கள் சொன்னது அல்ல. பிழை இருப்பின் அது என் குறையே அன்றி அவர் பிழை அல்ல).


மூத்த திருப்பதிகம் - அங்கம் குளிர்ந்து அனலாடும்

மூத்த திருப்பதிகம் - அங்கம் குளிர்ந்து அனலாடும் 


பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் இறைவன் புகழ் பாடும், நிலையாமை பற்றிக் கூறும், வீடு பேறு பற்றிப் பேசும், இறைவன் அருள் வேண்டி உருகும், அடியவவ்ர்களின் பெருமை பேசும்.  


என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதுதான் நான் அறிந்தது.  


காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்களைப் படிக்கும் போது ஒரு மின்சாரம் தாக்கிய அதிர்ச்சி. 


இந்தப் பாடல்களுக்கு என்ன அர்த்தம் (சொற்களின் அர்த்தம் அல்ல), இது எப்படி சாத்தியம், இதனால் நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்று அம்மையார் விரும்புகிறார், அவர் சொல்ல வந்தது என்ன என்று ஆயிரம் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.


முதலில் அறுப்பது மூவரில் ஒரே ஒரு பெண் காரைக்கால் அம்மையார். 


பெண் என்றால் நம் மனதில் அன்பு, பாசம், தாய்மை, மென்மை, பொறுமை , கருணை, தியாகம் இவை போன்றவைதான் தோன்றும். 


அடுத்தது, வழிபாடு என்றால் வழிபடும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும், பூ, சந்தனம், குங்குமம்,  ஊதுபத்தி போன்ற மங்களகரமான பொருட்கள் இருக்க வேண்டும். 


அமைதியாக இருக்க வேண்டும். இறைவன் மேல் பக்திப் பாடல்கள் ஒலிக்க வேண்டும் 


அங்கே உள்ளவர்கள் மனதில் ஒரு பக்தியோடு அந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். 


இது தானே நாம் அறிந்த ஒன்று. இதில் கொஞ்சம் மாற்றம் இருக்கலாம். கோவில்களில் மேளம், நாதஸ்வரம் போன்ற இன்னிசைக் கருவிகள் ஒலிக்கலாம். 


காரைக்கால் அம்மையார் காட்டும் சூழலைப் பாருங்கள். 


இடம் - சுடுகாடு 

கூட இருப்பவர்கள் - பேய்கள் 

சப்தம் - பேய்களின் அலறல் சப்தம் 

இறைவன் - சிவ பெருமான் தலையை விரித்துப் போட்டு கையில் தீயோடு ஆடுகிறான். 


அதிலும் பேய் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போகவில்லை. 


"மார்பகங்கள் மெலிந்து, நரம்புகள் திரண்டு எழுந்து,  ஆழமான ஓட்டைக்  கண்கள், ஈ என்று சிரிக்கும் போது வெளிறிய, நீண்ட பற்கள், குழி விழுந்த வயிறு, சிக்கு பிடித்த முடி, இடு காட்டில் அலறும் பெண் பேய் ...அப்படிப் பட்ட காட்டில் கையில் அனல் ஏந்தி அங்கங்கள் குளிர ஆடும் சிவன்" 


என்கிறார். 


பக்தி வருகிறதா? பயம் வருகிறது. 


இது ஏதோ ஒரு திகம்பர சாமியார் பாடினார் என்றால் கூட ஒரு மாதிரி நாம் ஜீரணித்துக் கொள்ள முடியும். ஒரு பெண் பாடினார் என்பதை எப்படிப் பார்ப்பது. 


இந்து சமயத்தில் பெண்களை சுடுகாட்டுக்குள்  அனுமதிப்பதே இல்லை. 


ஒரு பெண் சுடுகாட்டில், பேய்களுக்கு மத்தியில் என்பதை நம்மால் சிந்திக்கக் கூட முடியவில்லை. 



பாடல் 




கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்

தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி

அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_17.html


(Please click the above link to continue reading)


கொங்கை = மார்பகங்கள் 


திரங்கி = வற்றி, மெலிந்து 


நரம்பெ ழுந்து = நரம்புகள் புடைத்து எழுந்து 


குண்டு கண் = குழி விழுந்த கண்கள் (குண்டும் குழியுமாக இருக்கிறது என்றார் போல்)


வெண்பற் =  வெண்மையான பற்கள் 


குழிவ யிற்றுப் = குழி விழுந்த வயிறு 


பங்கி = தலை முடி 


சிவந்து  = எண்ணெய் இல்லாமல் செம்படையாக சிவந்து வறண்ட முடி 


இரு பற்கள் நீண்டு = இரண்டு கோரைப் பற்கள் நீண்டு வெளியே தெரிய 


பரடுயர் = குதிங்கால் உயர்ந்து 


நீள்கணைக் கால்  = நீண்ட கால் 


ஓர் பெண்பேய் = ஒரு பெண் பேய் 


தங்கி யலறி யுலறு காட்டில் = தங்கி அலறி உலரும் காட்டில் 


தாழ்சடை = விரித்த சடை தரை வரை தாழ்ந்து இருக்கிறது 


எட்டுத் திசையும் வீசி = அந்த முடியை எட்டுத் திசையும் வீசி 


அங்கங் குளிர்ந்து  = அங்கங்கள் குளிர்ந்து 


அனலாடும்  = கையில் தீயை ஏந்தி ஆடும் 


எங்கள் = எங்கள் 


அப்ப னிடந்திரு ஆலங் காடே. = அப்பன் இருக்கும் இடம் திருவாலங்காடே 


மற்ற பேய்கள் எல்லாம் எங்கோ ஓடி விட்டனவாம். இந்த ஒரு பெண் பேய் மாத்திரம் தனித்து இருப்பதால்,  மற்ற பேய்கள் எங்கே என்று அலறிக் கொண்டு ஓடுகிறதாம். 


இது ஒரு வித்தியாசமான பக்திப் பாடல். 


நாம் மனதில் கொண்ட பிம்பத்தை கலைத்துப் போடும் பாடல். 


சிந்திக்க சிந்திக்க ஒன்றும் புலப்பட மாட்டேன் என்கிறது. 


பக்தி என்பது இறைவனை எங்கும் காண்பது, கோவிலில் மட்டும் அல்ல என்று சொல்ல வருகிறாரா ? அல்லது 


பயம் நம்மை சுருங்க வைக்கிறது. பயம் இருந்தால் நம்மால் எதையும் முழுவதுமாக அறிய முடியாது. அங்கே பாம்பு இருக்கிறது என்றால் அந்தப் பக்கமே போக மாட்டோம். 


பயங்களில் மிகப் பெரிய பயம் மரண பயம். பல பேர் மரணம் என்ற சொல்லைக் கூட சொல்லப் பயப்படுவார்கள். எதுக்கு அமங்கலமா பேசிக்கிட்டு என்று முகம் சுளிப்பார்கள். 


பயம் இருக்கும் வரை நம் சிந்தனையில் தெள்வு இருக்காது. பயம் என்ற கண்ணாடி மூலமே நாம் உலகைப் பார்ப்போம். 



எதிகாலம் பற்றிய பயம், எனவே செல்வம் சேர்க்க வேண்டும். 


உடல் நிலை பற்றிய பயம்,எனவே அதற்கு வேண்டியதைச் செய்வது. 


உறவுகள் பற்றி பயம். எல்லோரையும் சேர்த்து அணைத்துக் கொண்டு போக வேண்டும். 


அரசாங்கம் பற்றி பயம். ஏதாவது சொன்னால் வம்பு வந்து விடுமோ என்ற பயம்.


பயம் நம்மை சுருங்க வைக்கிறது. 


பயத்தை உதறினால் அல்லது நம்மால் வாழ்வை, உண்மையை தரிசிக்க முடியாது என்பதானால் "இங்கே வா, சுடுக்காட்டுக்கு என் கூட வா, பேயைக் காட்டுகிறேன்...முதலில் பயம் வரும். பின் பயம் தெளியும், இறை தரிசனம் கிட்டும்" என்று காட்ட நம்மை அழைத்துச் செல்கிறாரா?


தெரியவில்லை. 


சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். 


குருவருள் துணை புரிய வேண்டும், இதைப் புரிந்து கொள்ள. 




Sunday, May 15, 2022

திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - முன்னுரை

 திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - முன்னுரை 


அடக்கம் உடைமை என்ற அதிகாரத்துக்குப் பின் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


ஏன்? அது என்ன முறை?


எவன் ஒருவன் தன் புலன்களை தன் கட்டுபாட்டுக்குள் வைத்து இருக்கிறானோ அவனால்தான் ஒழுக்கம் பேண முடியும் என்பதால் முதலில் அடக்கம் உடைமை பற்றி கூறி பின் ஒழுக்கம் உடைமை பற்றிக் கூறுகிறார். 


பாலாகட்டும், இயலாகட்டும், அதிகார முறைமையாகட்டும் அனைத்திலும் ஒரு ஒழுங்கு. தர்கரீதியாக, ஒரு ஆற்றோட்டம் போல் எழுதிக் கொண்டு சென்றால் மனதில் எளிதில் நிற்கும். 


ஒழுக்கமா, அடக்கமா எது முதலில் வரும் என்று கேட்டால் இப்போது எளிதாகச் சொல்லி விடலாம். முதலில் புலன் அடக்கம், பின் ஒழுக்கம் என்று. 


முதலில் ஒழுக்கம் என்றால் என்ன என்று சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_15.html


(click the above link to continue reading)



ஒழுக்கம் என்றால் அற வழியில் நடத்தல், உயர்ந்த நூல்கள் கூறிய சிறந்த நெறி முறைகளை கடைபிடித்தல் என்று நாம் அறிவோம். 


சிக்கல் என்ன என்றால், இந்த அறம் இருக்கிறதே அது என்ன என்று எங்கும் முழுவதுமாகச் சொல்லப் படவில்லை. அறங்களை எல்லாம் தொகுத்த ஒரு புத்தகம் இல்லை. அங்கங்கே கோடி காட்டப் படுகிறது. அவ்வளவுதான். 


மேலும், இந்த நூல்களில் சொல்லப்பட்டவை மட்டும்தான் அறமா என்றால் இல்லை. நூல்கள் ஓரளவு எடுத்துச் சொல்லும். அறம் மிகப் பெரியது. ஒரு நூலில் ஓரிரு அறங்களை சொல்வதே மிகக் கடினம். எல்லா அறத்தையும் ஒரு நூலில் சொல்வது என்பது முடியாத காரியம். 


மேலும், எத்தனையோ நூல்கள் நம் கைக்கு கிடைக்காமலேயே போய் விட்டது. அதில் உள்ள அறங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியாது. 


மேலும், அத்தனை நூல்களையும் படித்து அதில் உள்ள அறங்களை பட்டியல் இட முடியுமா நம்மால்? ஒரு வாழ்நாள் போதாது. 


மேலும், ஒருவேளை எல்லா நூல்களும் கிடைத்து, அவற்றை எல்லாம் நாம் படித்து, அதில் கூறிய அறங்களை எல்லாம் பட்டியல் இட்டுவிட்டோம் என்றே வைத்துக் கொள்வோம், பட்டியல் இருக்கிறது என்பதற்காக அவை எல்லாம் புரிந்து விடுமா?  ஒரு சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு சர்ச்சைகள் நடக்கின்றன. அத்தனை அற நூல்களில் உள்ள அறமும் தெளிவாக புரிந்து விடுமா?


மேலும், புரிந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம், அவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கும். எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றம் என்று ஆகும். என்ன செய்வது?


அப்படி என்றால் ஒழுக்கமாக வாழவே முடியாதா? 


முடியும். இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம். 


ஒழுக்கம் என்ற சொல், ஒழுகுதல் என்பதில் இருந்து வந்தது. 


வீட்டில் கூரை சரி இல்லை என்றால் நீர் ஒழுகி கீழே வரும். எங்கே ஒழுகினாலும் அது கீழேதான் வரும். எங்காவது ஏதாவது திரவம் ஒழுகி கீழ் இருந்து மேலே செல்வதை கண்டு இருகிறீர்களா? இல்லையே?


ஒழுக்கம் என்பது உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வது. மேலிருந்து கீழே வருவது ஒழுகுதல். 


நம்மால் எல்லாவற்றையும் படித்து, தெளிய முடியாது. நம்மை விட உயர்ந்தவர்கள், தெரிந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் வழி  நடந்து விட்டுப் போவது எளிய வழி. 


இரண்டாவது, ஒழுக்கம் என்பது உயர்ந்தவர்களிடம் இருந்து வர வேண்டும். இப்போதெல்லாம் என்ன ஆகி விட்டது என்றால், கீழே உள்ளவர்களிடம் இருந்து உலகம் படிக்கத் தொடங்கி இருக்கிறது. 


உதாரணம் சொன்னால் கூட ஏன் அதில் என்ன தவறு என்று சண்டைக்கு வருவார்களோ என்று ஐயமாக இருக்கிறது. எதுவும் சரி என்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம். 


மது அருந்துவது, போதை பொருட்களை உட்கொள்வது ஒழுக்கம் அற்ற செயல் என்று வைத்துக் கொள்வோம். எங்கோ ஒருவன், மது அருந்தினால் என்ன? நன்றாகத் தானே இருக்கிறது? மது அருந்துவது என்பது தனி மனித சுதந்திரம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று வாதம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். 


இன்று உலகம் என்ன செய்கிறது என்றால், அவன் சொல்வதை கேட்கத் தலைப்படுகிறது. உடையை கிழித்து அணிந்தால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தன் உடையை தானே கிழித்துக் கொண்டு, அப்படி கிழிந்த உடையை அணிந்து கொண்டு செல்பவனை நம் சமுதாயம் பைத்தியம் என்று கூறியது. இன்று அது ஒரு நாகரீகமாகி விட்டது. 


நான் சரி தவறு என்று வாதம் செய்யவில்லை. நாம் யாரிடம் இருந்து படிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 


மேலும், ஒழுகுதல், சொட்டுதல், தெறித்தல் என்றெல்லாம் இருக்கிறது. ஒழுகுதல் என்றால் இடை விடாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது. 


ஒழுக்கம் என்பதும் அப்படித்தான். இடைவிடாமல் கடைசிவரை கடைபிடிக்க வேண்டும். 


வாரத்தில் ஒரு நாள் புலால் உண்பது இல்லை, ஒரு நாள் மது குடிப்பது இல்லை, புகை பிடிப்பது இல்லை, வெள்ளி செவ்வாய் பொய் சொல்வது இல்லை, என்பதெல்லாம் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் என்றால் இறுதிவரை கைகொள்ள வேண்டும். 


உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் பெற்றதை இறுதிவரை அந்தப் பாதையில் செல்வதை ஒழுக்கம் என்கிறோம். 


இராமன் என்ன செய்தான், தர்மன் என்ன செய்தான், கண்ணப்பன் என்ன செய்தான், என்று உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் பெற்று அதன் படி வாழ்வது. 


நம் சமுதாயத்தில் உயர்ந்தவர்களுக்கா பஞ்சம்? நாம் அவர்களை விட்டு விட்டு நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


அற நூல்களில் சொல்லியவற்றை காலத்துக்கு ஏற்ப மாற்றலாம். மாற்ற வேண்டும். 'நிற்க அதற்கு தக' என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறார். ஆனால், யார் மாற்றுவது என்பதில் தான் சிக்கல். 


உயர்ந்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். படித்தவர்கள், சமுதாய அக்கறை உள்ளவர்கள், எதிர்கால சந்ததி பற்றி சிந்திப்பவர்கள், சுயநலம் இல்லாதவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை தேடிப் பிடித்து அவர்கள் சொல்வதை கேட்டு, அதன் படி வாழ்வதுதான் ஒழுக்கம். 


முன்னுரை சற்று நீண்டு விட்டதால், அதிகாரத்துக்குள் நாளை செல்வோம். 




Saturday, May 14, 2022

சேத்திரத் திருவெண்பா - தில்லைச் சிற்றம்பலமே சேர்

சேத்திரத் திருவெண்பா - தில்லைச் சிற்றம்பலமே சேர் 


நீண்ட தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு இரயிலில் போகிறோம். போகிற தூரம் எவ்வளவு என்று தெரியாது.  எப்போது போய்ச் சேருவோம் என்று தெரியாது. ஆனால், போகிற வழியில் எவை எவை வரும் என்று தெரியும். வழியில் உள்ள ஊர்கள் பெயர் தெரியும். அங்கு என்ன விசேடம் என்று தெரியும். இந்த ஊர் வந்து விட்டால், அடுத்து என்ன ஊர் வரும் என்று தெரியும். 


"ஓ, இந்த ஊர் வந்துருச்சா, இங்க முறுக்கு நல்லா இருக்கும். அடுத்து அந்த ஊர் வரும், அங்கே அல்வா நல்லா இருக்கும்," என்று நமக்குத் தெரியும். 


இது நாம் அனுபவதில் கண்டது தானே?


சில சமயம் இரவு இரயிலில் போவோம். வண்டியில் ஏறிய சில நிமிடங்களில் தூங்கிப் போய் இருப்போம். அதி காலை. எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. வண்டி பாட்டுக்கு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. வெளியே நல்ல இருட்டு. இன்னும் முழுவதும் விடியவில்லை. 


இரயில் பெட்டியின் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே இருக்கிறோம். சட்டென்று ஒரு சின்ன இரயில் நிலையம் வருகிறது. வண்டி நிற்காமல் போனாலும், அது எந்த ஊர் என்று வாசித்து விடுகிறோம். 


"அடடா, இந்த ஊர் வந்தாச்சா, அப்படினா நாம இறங்குற இடம் இன்னும் அரை மணியில் வந்து விடும் " என்று அரக்க பறக்க சாமான்களை அள்ளி எடுத்துக் கொண்டு இரயில் பெட்டியின் வாசலுக்கு அருகில் வந்து நிற்போம் அல்லவா? இறங்கத் தயாராக இருப்போம் அல்லவா.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாழ்கை என்ற இரயில் பயணம் சென்று கொண்டே இருக்கிறது. .


நடு நடுவே ஊர்கள் வருகின்றன. 


ஒரு நாள் முடி நரைக்கிறது. அது ஒரு ஊர். 


பல் சொத்தை விழுகிறது. அது ஒரு ஊர். 


தோலில் கொஞ்சம் சுருக்கம் வருகிறது. அடுத்த ஊர். 


சமீபத்தில் கேட்டது, படித்தது நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது. மறந்து போய் விடுகிறது.  அடுத்த ஊர். 


முன்ன மாதிரி வேகமா நடக்க முடியல. ஓட முடியல. மூச்சு வாங்குது. அடுத்த ஊர். 


இப்படி ஒவ்வொரு ஊராக வர வர...நாம் இறங்கும் இடம் நெருங்கி விட்டது என்று அறிய வேண்டாமா?


மூட்டை முடிச்சை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாராக வேண்டாமா? 


நான் செல்லும் ஊர் வரவே வராது என்று யாராவது இருப்பார்களா? 


பாடல் 


ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்

கோடுகின்றார்; மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற

நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே

தில்லைச்சிற் றம்பலமே சேர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_14.html


(Please click the above link to continue reading)



ஓடுகின்ற = வேகமாக ஓடுகின்ற 


நீர்மை = தன்மை. பத்து வயது பையன் ஓடுவான். என்பது வயது ஆள் ஓட முடியமா? 


 சேத்திரத் திருவெண்பா இது போன்ற அற்புதமான பாடல்களைக் கொண்டது. மூல நூலை தேடிப் படியுங்கள். நான் சொன்னதற்கு மேலேயும் உங்களுக்கு பல விடயங்கள் புலப்படலாம். 



ஒழிதலுமே = ஒழிந்து போய் விடும். ஓட முடியாத காலம் ஒன்று வரும். 


உற்றாரும் = உறவினர்களும் 


கோடுகின்றார் = கோடுதல் என்றால் வளைதல். நேராக இருந்த அவர்கள் இப்போது வேறு மாதிரி இருக்கிறார்கள். "கிழத்துக்கு வேற வேலை இல்லை" 


மூப்புங் குறுகிற்று = மூப்பு அருகில் வந்து விட்டது. நமக்கு எங்கே மூப்பு வரும் என்று இருந்தோம். இப்போது அருகில் வந்து விட்டது. 


நாடுகின்ற = போகின்ற 


நல்லச்சிற் றம்பலமே = இங்கே கொஞ்சம் சீர் பிரிக்க வேண்டும். நல் + அச்சு + இற்று + அம்பலமே என்று. நல்ல அச்சு என்றால் தேரின் பளுவை தாங்கும் அச்சாணி. இங்கே, இந்த உடம்பைக் குறிக்கும். இற்றுப் போதல் என்றால் உடைந்து போதல். உடம்பு தளர்ந்து போகும். நல் அச்சு இற்றுப் போய் விட்டால் தேரைக் கொண்டு போய் அது இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அது இனி நகராது. அது போல, உடம்பு இற்றுப் போய் விட்டால் இந்த உடம்பை எங்கு போய் வைப்பது? அது தான் அம்பலம். பொதுவான இடம். எது? சுடுகாடு. எல்லோருக்கும் பொதுவான இடம். 


 நண்ணாமுன் = அங்கே போய்ச் சேரும் முன் 


நன்னெஞ்சே = நல்ல நெஞ்சே 


தில்லைச்சிற் றம்பலமே சேர். = தில்லை சிற்றம்பலேமே சேர் 


சொல்லும் பொருளும் அவ்வளவுதான். 


கொஞ்சம் இலக்கணம் படித்தால் பாடலை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். 


முயற்சி செய்வோம். 


"உற்றாரும்" என்பதில் உள்ள 'ம்' உயர்வு சிறப்பு உம்மை. உற்றார் கோடுகின்றார்  என்று சொல்லி இருக்கலாம். உற்றாரும் கோடுகின்றார் என்று சொல்வதன் மூலம், அவர்களே மாறிப் போனால், மற்றவர்கள் என்ன செய்ய மாட்டார்கள் என்று யோசித்துக் கொள் என்கிறார். மனைவி, கணவன், பெற்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்ற உற்றார்களே குணம் மாறிப் போவார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள், பழக்கம் உள்ளவர்கள் எல்லாம் எப்படி மாறுவார்கள்? 


"மூம்பும் குறிகிற்று" : இங்கும் 'ம்' முற்றும்மை. அதாவது மூப்பு வந்து விட்டது என்றால் எல்லாம் வந்து விட்டது என்று அர்த்தம். இனி வருவதற்கு ஒன்றும் இல்லை. விழாவுக்கு அந்த ஊர் MLA வந்தார், ஆட்சியாளர் (கலெக்டர்) வந்தார், ஜனாதிபதியும் வந்திருந்தார் என்றால் எல்லாரும் வந்தாகிவிட்டது என்று அர்த்தம். மூப்பும் வந்து விட்டது. 


"நல்லச்சிற் றம்பலமே" : நல் அச்சு இற்று அம்பலமே. இங்கே அம்பலமே என்பதில் உள்ள ஏகாரம் ('ஏ') பிரி நிலை ஏகாரம். மற்றவற்றில் இருந்து பிரித்து காட்டுவது. 'இல்லை எனக்கு சுடுகாட்டுக்குப் போக பயமாக இருக்கிறது. அங்கே போகப் பிடிக்கவில்லை ...நான் போக மாட்டேன்" என்றெல்லாம் சொல்ல முடியாது. அம்பலமே கதி. வேற வழியே இல்லை. 


'சிற்றம்பலமே சேர்' என்பதில் உள்ள ஏகாரம் இன்னொரு பிரிநிலை ஏகாரம். வேற எங்கேயாவது போயிராத. தில்லை சிற்றம்பலதுக்கே போ. வேற இடம் ஒன்றும் இல்லை. 


"மூப்பும் குறுகிற்று" என்பதில் உள்ள உம்மை இறந்தது தழுவிய உம்மை. தேர்வு எப்படி எழுதி இருந்தாய் என்ற கேள்விக்கு "முதல் பரிசும் வாங்கி விட்டேன்" என்று சொன்னால், அதற்கு முன் எழுதிய தேர்வு நன்றாக எழுதி இருந்தேன் என்று புரிந்து கொள்கிறோம் அல்லவா. முதலில் நடந்தது தேர்வு எழுதியது. அது இறந்த காலம். முதல் பரிசு வாங்கியது அதற்குப் பின் நிகழ்ந்தது. பின் நடந்த ஒன்றில் 'ம்' சேர்த்துச் சொன்னால் அது முன் நடந்ததையும் சேர்த்து கொண்டு வரும். மூப்பும் குறுகிற்று என்றால் இளமை போய் விட்டது என்று அர்த்தம் தானே விளங்கும். 



இலக்கணம் படிக்க படிக்க பாடல்களின் அழகும் ஆழமும் மேலும் தெரிய வரும். 


இன்றைக்கே போய் ஒரு நல்ல இலக்கண நூலை வாங்கிப் படிக்கத் தொடங்குகள், இதுவரை படிக்காமல் இருந்தால்.  உங்கள் இரசனை மேம்படும்.