Thursday, April 30, 2020

திருமந்திரம் - எப்படி அப்படி

திருமந்திரம் - எப்படி அப்படி 


ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பை பலவிதமாக பல பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு. ஆனால், முயன்றால் ஜீவ ஆத்மா , பரமாத்மாவுடன் சேரலாம் என்று.

அ-த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்கிறது. வேறு மாதிரி தெரிவது மாயை.

விசிஷ்டாத்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு என்று. இரண்டும் கலக்கவே முடியாது என்கிறது.

இதில் எதை நம்புவது. மூன்றும் , வெவ்வேறு திசையில் இழுக்கின்றன.

திருமூலர் இதை எளிதாக விளக்குகிறார்.

ஒரு படி நீரில், ஒரு பிடி உப்பைப் போட்டால், நீரின் அளவு மாறாது. அது அதே ஒரு படிதான் இருக்கும். அப்படி ஆனால் உப்பு எங்கே போனது? தண்ணீருக்குள்தான் இருக்கிறது. ஆனால், அது தனியாக தெரிவது இல்லை. தண்ணீரை வற்றக் காய்ச்சினால், அந்த உப்பு மீண்டும் வரும்.

இரண்டும் ஒன்றாக கலந்ததா என்றால், ஆம்.

கலந்த பின் உப்புக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல் போயிற்றா என்றால், ஆம்.

மீண்டும் அதை பிரித்து எடுக்க முடியுமா என்றால் , ஆம்.

அது போலத்தான் சீவனும், சிவனும் என்கிறார் திருமூலர்.

ஜீவாத்மா , பரமாத்மாவோடு இரண்டு அற கலந்து விடும். ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனால், உள்ளே தனியாக இருக்கும். வேண்டும் என்றால் மீண்டும் பிரித்துக் கொண்டு வந்து விடலாம்.

இதை எப்படி விளக்குவது? அது போலத்தான் ஜீவனும், சிவனும் என்று கொள்ள வேண்டும் என்கிறார்.


பாடல்



அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.


பொருள்

அப்பினில்  = நீரினில்

உப்பென  = உப்பைப் போல

அத்தன் = இறைவன்

அணைந்திட்டுச் = சேர்ந்துக் கொண்டு

செப்பு பராபரம் = சொல்லும் பராபரம்

சேர் = சேர்ந்து

பர மும் விட்டுக் = பரத்தை விட்டு விட்டு

கப்புறு = உறுதியான

சொற்பதம் = திருவடிகளை

மாயக் கலந்தமை = மறையும்படி கலந்தது

எப்படி = எப்படி என்றால்

அப்படி என்னும் அவ்வாறே. = அப்படி நடந்ததே அதே மாதிரி

உப்பும் தண்ணீரும் கலந்த மாதிரி என்று சொல்லலாம் என்கிறார்.

எளிய உதாரணம். உயர்ந்த கருத்து.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_30.html

Wednesday, April 29, 2020

வெற்றி வேற்கை - எது அழகு

வெற்றி வேற்கை - எது அழகு


மானுக்கு கொம்பு அழகு.

மயிலுக்கு தோகை அழகு.

அது போல் எதற்கு எது அழகு என்று பட்டியல் தருகிறார் அதிவீரராம பாண்டியர், வெற்றி வேற்கை என்ற நூலில்.

எளிய தமிழில் அழகான கருத்துகளை தரும் நூல் அது.

அதில் இருந்து சில மாதிரிகள்....

ஒருவன் படித்தவன், அறிவாளி, கல்வி மான் என்றால் அதை எப்படி அறிந்து அறிந்து கொள்வது.

"கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்"


ஒருவன் கல்வி கற்றவன் என்றால், கற்றதை தவறு இல்லாமல் தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரிய வேண்டும்.

"படிச்ச ஞாபகம் இருக்கு...ஆனா exact ஆ அது என்னனு தெரியாது" என்று சிலர் சொல்வதை கேட்டு இருப்போம். அது படித்ததற்கு அழகு அல்ல.

மற்றவர்களுக்கு புரியும்படி அழகாக சொல்லத் தெரிய வேண்டும்.

இன்று கணனியில் data science என்று சொல்லக் கூடிய பிரிவு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் ஒரு உட் பிரிவு, predictive analysis என்பது. அதாவது என்ன நடக்கப் போகிறது என்று சொல்லுவது.

கையில் இருக்கும் அனைத்து செய்திகளையும் சேர்த்து, இப்படி இருந்தால், இனி இப்படி ஆகும் என்று சொல்லுவது.

உதாரணமாக,  கொரோன வைரஸின் தாக்கம் எப்படி இருக்கும், அது எப்படி பரவும், எவ்வளவு வேகமாக பரவும், இன்னும் ஒரு மாதத்தில் எவ்வளவு பேர் அதனால் பாதிக்கப் படுவார்கள்  என்று ஆராய்ந்து  சொல்லும் பிரிவு.

வெற்றி வேற்கை அதை அன்றே கண்டு சொல்லியது....

"மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்"

என்ன நடக்கப் போகிறது என்று ஆராய்ந்து சொல்லவதுதான் மந்திரிக்கு அழகு.

மந்திரி என்றால் மந்திரி மட்டும் அல்ல. மந்திரியின் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் அது பொருந்தும்.

சில பேர் ஏதோ கொஞ்சம் தெரிந்தால் போதும், உலகிலேயே எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று தையா தக்கா என்று குதிப்பார்கள். அறிவு என்பது   அடக்கத்தைத் தர வேண்டும்.

"அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்"

கற்று, உணர்ந்து அடங்கி இருக்க வேண்டும். அடக்கம் இல்லை என்றால், அறிவு இல்லை என்று அர்த்தம். 

இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. 

தேடி கண்டு பிடித்துப் படித்துப் பாருங்கள். 

மிக எளிமையான நூல். 

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_17.html

திருக்குறள் - வாழ்க்கைத் துணை

திருக்குறள் - வாழ்க்கைத் துணை 


இல்லறத்தில் ஈடுபடும் ஒரு ஆடவனின் 11 கடமைகளைப் பற்றிச் சிந்தித்தோம்.  அந்தக் கடமைகளை அவன் தனியே செய்து விட முடியாது. அவனுக்கு ஒரு துணை வேண்டும். அது, அவன் மனைவி.

இல்வாழ்க்கை என்று ஒரு அதிகாரம் எழுதினார். அதில் ஆடவனின் கடமைகளை கூறினார்.

அடுத்து வாழ்க்கை துணை என்று பெண்ணின் கடமைகளை கூற இருக்கிறார்.

ஆணுக்கு தனியே ஒரு அதிகாரம் எழுதவில்லை. பெண்ணுக்கு எழுதுகிறார்.

வாழ்க்கை துணை என்றால் யார்? வாழ்க்கை துணையாக வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் முதல் குறளில்.

தாலி கட்டி கூட்டிக் கொண்டு வந்து விட்டால், அவள் வாழ்க்கை துணை என்று சொல்லவில்லை.

பல பேர் அப்படி நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மனைவி என்ற பொறுப்பு, மிகப் பெரியது.


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்.

பாடல்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

பொருள்

மனைத்தக்க = மனைக்கு தக்க

மாண்புடையள் ஆகித் = மாண்புகளைக் கொண்டு

தற் கொண்டான் = தன்னை கொண்டவனின் (கணவனின்)

வளத்தக்காள் = வளமைக்கு தக்க வாழ்பவள்

வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணை என்று சொல்லப் படுவாள்

மனைக்கு தக்க மாண்புகள் என்றால் என்ன ?

உரை எழுதிய பரிமேல் அழகர் கூறுகிறார்

மனை அறத்துக்கு தக்க நல்ல குணங்கள் என்கிறார். அது என்ன மனை அறம் , நல்ல குணம்  என்ற கேள்விகள் வரும் அல்லவா ? 

இல்லற கடமைகள் என்று 11 கடமைகளை ஆடவனுக்கு கூறினார் அல்லவா? அவற்றை நிறைவேற்ற  மனைவி உதவ வேண்டும்.

உதாரணமாக விருந்து உபசாரம். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க வேண்டியது  ஆடவனின் கடமைகளில் ஒன்று என்று பார்த்தோம். மனைவியின் துணை இல்லாமல் அது  நடக்காது. விருந்தைப் பேணுவதில் கணவனுக்கு உதவி செய்ய வேண்டும்.

சரி செஞ்சிட்டா போகுது என்று போன் போட்டு அருகில் உள்ள பெரிய ஓட்டலில்  விலை உயர்ந்த உணவு வகைகளை வரவழைத்து தந்து விடலாமே?   விருந்தினர்கள் சந்தோஷமாக போவார்களே  என்றால் அது சரி அல்ல என்று அடுத்த  வார்த்தையில் கூறுகிறார்.

"வளத்தக்காள்" கணவனின் வளமை அறிந்து செலவு செய்ய வேண்டும். "என்னால எல்லாம் சமையல்  செய்ய முடியாது. வேணும்னா ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி  அவங்களுக்கு கொடுங்க" என்றால் அது வாழ்க்கைத் துணை அல்ல.

நல்ல குணங்கள் என்ற பட்டியலில் அவர் சொல்வது, "அட்டில் தொழில் வன்மை" என்கிறார். அட்டில் என்றால் சமையல்.

ஆஹா, உங்களுக்கு வடிச்சு கொட்டத்தான் நாங்க இருக்கோமா என்று வரிந்து கட்டிக் கொண்டு  சிலர் கிளம்பலாம்.

அப்படி கிளம்பினால் ஒன்றும் செய்ய முடியாது. கணவன் வெளியில்  சாப்பிடுவான். பிள்ளைகள் swiggy, zomato என்று ஆர்டர் பண்ணி உண்பார்கள். மனைவி மற்றும்   தாயின் தேவை குறைந்து போகும். அப்புறம்  "என் மேல் யாருக்கும் அக்கறை இல்லை.  நான் சொல்வதை யாரும் கேட்பது இல்லை. எனக்கு ஒரு மரியாதையே இல்லை " என்று குறை பட்டுக் கொள்ளுவதில் அர்த்தம் இல்லை.

பிள்ளைகளின் பாசம், Swiggiyin மேல் தானே இருக்கும்?

சமையல் என்பது வேலை அல்ல.

அது அன்பின் வெளிப்பாடு.

முதலில் அன்பு வரும்.

பின்பு அருள் வரும்.

அருள் துறவு நோக்கி செலுத்தும்.

திருக்குறள் என்பது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அறிவுரைகள் தரும் நூல் அல்ல. வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதி வரை, அதையும் தாண்டியும் வழி நடத்திச் செல்லும் ஒரு நூல்.

திருக்குறள் ஒன்றுதானா வழி? வேற வழி இல்லையா? என் வழி தனி வழி என்று  சிலர் நினைக்கலாம்.

திருக்குறள் அளவுக்கு ஆழமாகவும், அகலமாகவும் சிந்தித்து ஒரு வாழ் நாள் பூராவும்  வழி நடத்திச் செல்லும் ஒரு கோட்பாட்டை கண்டு பிடித்து விட்டால், அதன் படி  செல்வதில் தவறு ஒன்றும் இல்லை.

முடியுமா அது ?

அது முடிகிற வரையில், நமக்கு கிடைத்த வழி திருக்குறள் தான்.

திருக்குறள் படி நடப்பது பின்னால். முதலில் அதை புரிந்து கொள்ள முயல்வோம். நடப்பதா இல்லையா என்று பின்னால் தீர்மானித்துக் கொள்ளலாம்.

அதை புரிந்து கொள்ள பொறுமையும்,  நிதானமும் தேவை.  உங்கள் கேள்விகளை கொஞ்சம்  தள்ளி வையுங்கள். முழு திருக்குறளையும் படித்த பின்னால்  உங்கள் கேள்விகள் தானே மறைந்து போகும். மறையாவிட்டால்,  சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_29.html

Tuesday, April 28, 2020

வில்லி பாரதம் - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

வில்லி பாரதம் - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 


சில சமயம் உறவினர்கள் இடையே மனக் கசப்பு வரலாம். ஏதோ ஒரு கோபத்தில் வார்த்தைகள் தடம் மாறிப் போகலாம். நாம் ஒன்று சொல்ல, மற்றவர் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு பிரச்சனை வரலாம்.

உறவுகளுக்குள் இந்த மாதிரி பிரச்சனை வருவது இயல்புதான். அப்படி வந்து விட்டால் அப்புறம் என்ன செய்வது?

திருப்பியும் அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? எப்படி நடந்து விட்ட தவற்றை தள்ளி வைத்து விட்டு உறவை மேலே கொண்டு செல்வது?

மற்ற உறவை விடுங்கள். கணவன் மனைவி உறவில், பெற்றோர் பிள்ளைகள் உறவில், உடன் பிறப்புகள் இடையில் நிரந்தர விரிசல் விழுந்து விடுவது இல்லையா.

தவறுகளை மறந்து, மன்னித்து ஒற்றுமையாக வாழ்வது எப்படி?

ஒரு தயக்கம், பழைய நினைவுகள், வராமல் இருக்குமா ?

பாரதம் வழி காட்டுகிறது?

பாண்டவர்களுக்கு, கௌரவர்கள் செய்யாத கொடுமை இல்லை. பாஞ்சாலியை சபைக்கு முடியை பிடித்து இழுத்து வந்து, அவள் ஆடையை களைய முயன்றார்கள்.

சகிக்க முடியுமா? மறக்க முடியுமா ? மன்னிக்க முடியுமா?

இதை எல்லாம் நினைத்து தருமனை தவிர எல்லோரும் கொதித்துக் கொண்டு இருந்தார்கள். யுத்தம் வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே எல்லோர் மனதிலும் நிறைந்து நின்றது.

ஆனால், தர்மர் மட்டும் வேறுபட்டு சொல்கிறார்.

"பீமா, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒரே குலத்தில் பிறந்தவர்கள் ஒன்றாக வாழ்வதைப் போல உறுதி வேறொன்றில்லை. மாறாக, ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் , இருவருக்கும் பழி வந்து சேரும் அல்லவா"

என்றான்.

நாம் நினத்துக் கொண்டு இருக்கிறோம், சண்டை என்று வந்து விட்டால், ஒருவர் பக்கம் நியாயம் இருக்கும். மற்றது அநியாயம் என்று. தர்மன் மிகப் பெரிய உண்மையை எடுத்துச் சொல்கிறான். பகை என்று வந்து விட்டால், பழி இரண்டு பக்கமும் வரும் என்கிறான். சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாடல்


பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர்க்கை
                  பணித்து, நோக்கி,
'குருகுலத்தோர் போர்ஏறே! குற்றமது பார்க்குங்கால்
                  சுற்றம் இல்லை;
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல்
                  உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ, இரு நிலம் காரணமாக
                  எதிர்ப்பது?ன்றான்.

பொருள்

பரிவுடன் = பரிவுடன், அன்புடன்

மற்று இவை = இவற்றை

கூறும் = கூறிய

பவன குமாரனை  = வாயு குமாரனான பீமனைப் பார்த்து

மலர்க்கை = மலர் போன்ற கையால்

பணித்து = அமைதி படுத்தி விட்டு

நோக்கி = அவனை நோக்கி

'குருகுலத்தோர் போர்ஏறே! = குருகுலத்தில் தோன்றிய ஏறு போன்ற போர்க் குணம் கொண்டவனே

குற்றமது பார்க்குங்கால் = குற்றம் பார்த்தால்

சுற்றம் இல்லை; = சுற்றம் இல்லை

ஒரு குலத்தில் பிறந்தார்கள் = ஒரே குலத்ததில் பிறந்தவர்கள்

உடன் வாழும் வாழ்வினைப்போல் = ஒன்று பட்டு வாழும் வாழ்வைப் போல

உறுதி உண்டோ? = உறுதி உண்டோ ?

இருவருக்கும் வசை அன்றோ = இருவருக்கும் பழி வந்து சேரும் அல்லவா?

இரு நிலம் காரணமாக = இந்த நிலம் காரணமாக

எதிர்ப்பது?ன்றான். = எதிர்த்து நின்றால் என்றான்

தவறு எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், மன்னித்து, மறந்து, ஒன்றாக வாழ்வதே  சிறந்தது என்கிறான்.

சுற்றம் என்று இருந்தால், அவ்வப்போது தவறு ஏற்படுவது இயல்பு. அதையே நினைத்துக் கொண்டிருந்தால், சுற்றம் என்ற ஒன்றே இருக்காது. தனித்து இருக்க வேண்டியதுதான்.

இது போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது, அவை கொஞ்சமாவது நம் மனதில் , நம் வாழ்வில் கடை பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_95.html


திருமந்திரம் - சொல் கேட்டு காமம் வந்தது போல

திருமந்திரம் - சொல் கேட்டு காமம் வந்தது போல 


"ஏய் இங்க வாயேன்" என்று கணவன் ஆசையோடு  கூப்பிடுவான். அவன் கூப்பிட்ட குரலை கேட்டதுமே மனைவிக்குத் தெரியும். அவள் மனத்திலும் ஆசை பிறக்கும்.

அதே சொற்களை வேறே யாராவது சொல்லி இருந்தால், அந்த காதலும் காமமும் பிறக்காது.

அன்பு கொண்ட இருவரில் ஒருவர் ஒரு சொல் சொன்னால் போதும், மற்றவர் மனதில் அது பத்திக் கொள்ளும்.

அது போல, பக்தியால் உள்ளம் கனிந்தவர்கள் ஒரு சொல் சொன்னாலும் போதும், இறைவன் இசைந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்கிறார் திருமூலர்.

பாடல்


அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.


பொருள்


அதுக்கென்று = அதற்காகவென்றே

இருவர் = இருக்கும் இருவர்

அமர்ந்த = ஓரிடத்தில் இருந்து

சொற் கேட்டும் = அவர்கள் ஒரு சொன்ன ஒரு சொல்லை கேட்டதும்

பொதுக்கெனக் = பொசுக் என்று

காமம் புலப்படு மாபோல் = காமம் வெளிப்படுவது போல

சதுக்கென்று = சது என்றால் அமைதி. மனம் அமைதி பெற்றவர்கள்

வேறே சமைந்தாரைக்  = பக்குவப் பட்டவர்களை

காண = காண்பதற்கு

மதுக் = தேன் நிறைந்த

கொன்றைத் = கொன்றை மலர்களை கொண்டு செய்த

தாரான் = மாலையை அணிந்த சிவன்

வளந்தரும் அன்றே. = நல்லனவற்றை தருவான் அப்போதே

திருஞான சம்பந்தர் குழந்தையாக இருந்த போது, அழுதார். சிவகாமி பால் தந்தாள்.

எத்தனையோ பிள்ளைகள் அழுகின்றன. எல்லோருக்குமா அருள் கிடைக்கிறது.

மனம் பக்குவப் பட வேண்டும்.

மனம் பக்குவப்பட்டால், அமைதி அடைந்தால், இறைவனை தேட வேண்டாம். அவனே வருவான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_79.html

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே 


வகுப்புக்கு ஒழுங்கா வருகிற மாணவனைத்தான் ஆசிரியர் நிறைய கேள்வி கேட்பார், பரீட்சை வைப்பார், வீட்டுப் பாடம் தருவார். போட்டு படுத்தி எடுப்பார். வகுப்புக்கு வரமால், ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருப்பவனை ஆசிரியர் கண்டு கொள்ள மாட்டார்.

ஒழுங்கா வருகிறவனைப் போட்டு படுத்துகிறார். ஊரு சுற்றுபவவனை ஒன்றும் சொல்வதில்லை. இது சரியில்லையோ என்று தோன்றும்.

ஆனால், கேள்வி, பரீட்சை, வீட்டுப் பாடம் என்று போட்டு படுத்தி எடுத்த மாணவனுக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி என்று பட்டம் கிடைக்கும்.

தகுதி இருக்கானு பாக்கணும் இல்ல.

அது  போல, இறைவனும், முக்தி தருவதற்கு முன்னால் பக்தர்களை போட்டு படுத்தி எடுத்து விடுவான்.

ஞானம், பக்தி, என்று கிடந்து அல்லாட வேண்டும். அப்புறம் தான் முக்தி தருவான்.

ஆனால், ஒரு தாய் என்பவள் அப்படி அல்ல. பிள்ளை படிச்சானா, வேலை செஞ்சானா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. ஐயோ , என் பிள்ளைக்கு பசிக்குமே என்று சோறிடுவாள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்


"ஞானம் பெற்று, நல்லது செய்து, பக்தியால் நாளும் உள்ளம் நைந்து உருகுபவர்களுக்குத்தான் திருமால் முக்தி கொடுப்பான். ஆனால், இராமானுஜரோ, அவரிடம் வந்தவர்களுக்கு, அவர்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை எல்லாம் அகற்றி, தன்னுடய கருணையினால் அவர்களுக்கு முக்தி கொடுப்பார் "

என்று.


பாடல்


ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.


பொருள்

ஞானம் கனிந்த  = ஞானத்தை முழுமையாகப் பெற்று

நலங்கொண்டு = நல்லவற்றை செய்து

நாடொரும் = ஒவ்வொரு நாளும்

-நைபவர்க்கு = பக்தியால் உருகுபவர்க்கே

வானம் கொடுப்பது = முக்தி தருவது

மாதவன் = மாதவனான திருமாலின் வழி

வல்வி னை யேன்மனத்தில் = கொடிய வினைகள் கொண்ட என் மனத்தில்

ஈனம் கடிந்த = கீழான எண்ணங்களை மாற்றி

 இராமா னுசன் = இராமானுஜன்

தன்னை எய்தினர்க்குத் = தன்னை அடைந்தவர்களுக்கு

தானம் கொடுப்பது = தானமாக கொடுப்பது

தன்தக வென்னும் = தன்னுடைய சான்றாண்மை என்ற

சரண் கொடுத்தே. = திருவடிகளை கொடுத்தே


சும்மா இருக்கிற புத்தகத்தை எல்லாம் படிச்சா போதாது. படித்து தெளிந்த ஞானம் பெற வேண்டும்.

பின், பெற்ற ஞானத்தால் பிறருக்கு  உதவ வேண்டும்.

பின், பக்தியால் மனம் தினமும் உருக வேண்டும்.

இப்படி எல்லாம் செய்தால், திருமால் முக்தி தருவார்.

விடிஞ்சிரும்.

இராமாநுஜரிடம் இப்படி எல்லாம் ஒரு கெடு பிடியும் கிடையாது.

நீயே சரண் என்று அவரை பிடித்து விட்டால் போதும், நேரே சுவர்க்கம் தான்.

point to point service மாதிரி.

எது வசதி?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_71.html

இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி

இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி 



ஒவ்வொரு கால கட்டத்திலும், மக்கள் எது அறம், எது அறம் அல்லாதது என்று வழி தெரியாமல் தவித்து இருக்கிறார்கள்.

ஓரினத்தில் திருமணம் செய்து கொள்வது அறமா, அறம் அற்ற செயலா ?

பல பெண்களை மணந்து கொள்வது சரியா தவறா ?

மாமிசம் உண்பது சரியா, தவறா ?

சூதாடுவது சரியா, தவறா?

வட்டி வாங்குவது சரியா, தவறா ?

இப்படி பல குழப்பங்களில் மக்கள் தடுமாறி இருக்கிறார்கள். தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி, மக்கள் திசை தெரியாமல் தவிக்கும் போது, பெரியவர்கள் தோன்றி மக்களை வழி காட்டி இருக்கிறார்கள்.

 திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்

"கடல் போல அஞ்ஞான இருள் உலகமெங்கும் சூழ்ந்து இருந்த போது, இராமானுஜர் மட்டும் வந்து நான்கு வேதத்தின் சாரத்தை எடுத்து அறிவொளி தந்து இருக்கா விட்டால், இந்த ஆன்மாக்களை உடையவன் நாராயணன் என்று  யாருமே உற்று உணர்ந்து அறிந்து இருக்க மாட்டார்கள்"

பாடல்


கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

பொருள்

கடலள வாய = கடல் அளவான

திசையெட்டி னுள்ளும் = திசை எட்டினுள்ளும்

கலியிருளே = கலி புருஷனின் இருள். அதாவது அஞ்ஞான இருள்

மிடைதரு காலத்தில் = அடர்ந்து இருந்த காலத்தில்

இராமா னுசன் = இராமானுஜன்

மிக்க = சிறந்த

நான்மறையின் = நான்கு வேதத்தின்

சுடரொளியால் = சுடர் ஒளியால்

அவ் விருளைத் = அந்த இருளை

துரத்தில னேல் = துரத்தி இருக்காவிட்டால்

உயிரை = உயிரை

உடையவன் = உடையவன்

நாரணன் = நாராயணன்

என்றறி வாரில்லை = என்று அறிவாரில்லை

உற்றுணர்ந்தே = உற்று உணர்ந்தே

முதலாவது,  குழப்பத்தில் இருந்த மக்களை வழி காட்டி நடத்த அவர் வந்தார்.

இரண்டாவது, என்ன குழப்பம்?  மக்களுக்கு புரியவில்லை. யார் இறைவன், யாரை வழிபடுவது போன்ற குழப்பங்கள். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை சொல்கின்றன.   ஒரே மதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆளுக்கு ஒரு மதம்,  மதத்துக்கு ஒரு கடவுள் என்ற குழப்பங்கள்.

மூன்றாவது, அவர் இருளை விலகினார். உடனே எல்லோருக்கும் புரிந்து விட்டதா?  இல்லை. ஒரு அறையில் நல்ல  புத்தகம் இருக்கிறது. ஆனால், அறை முழுவதும்   ஒரே இருள். இராமானுஜர் வந்து விளக்கை ஏற்றி வைத்தார். புத்தகம் இருக்கிற இடம் தெரிகிறது. ஆனால், புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டியது நம் பொறுப்பு.  "அறிவாரில்லை உற்று உணர்ந்தே" என்கிறார்.

அறியவும் வேண்டும். உணரவும் வேண்டும்.

அறிவது எளிது. உணர்வது கடினம்.

இரண்டையும் அடைய இராமானுஜர் ஞான ஒளி ஏற்றினார்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_28.html

Monday, April 13, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான் பெற்ற துன்பம் நீயும் பெற்றாயா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான் பெற்ற துன்பம் நீயும் பெற்றாயா?



நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற இலக்கியங்களை படிக்கும் போது, பல உணர்ச்சிகள் உண்டாகிறது.

ஒரு பக்கம் பக்தி. இன்னொரு பக்கம் காதல். இன்னொரு பக்கம் தமிழின் சுவை, கவிதையின் நயம், சொல்லாட்சி, ஆறு போன்ற கருத்தோட்டம்...எதை எடுப்பது, எதை விடுவது என்று நம்மை தத்தளிக்க வைக்கும்.

நம்மாழ்வாரின் இன்னுமொரு அற்புதமான பாசுரம்.

அவள் கடற்கரையை ஓரம் உள்ள ஒரு குப்பத்தில் வசிப்பவன். அவளுக்கு அவன் மேல் அப்படி ஒரு காதல்.

ஒரு நாள், மாலை நேரம், கடற்கரையில் அமர்ந்து அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள். நேரம் மெல்ல மெல்ல போய் கொண்டிருக்கிறது. மாலை போய் முன்னிரவு வந்து விட்டது. நிலவொளியில் கடல் நீர் பால் போல ஜொலிக்கிறது.

அலை அடித்த வண்ணம் இருக்கிறது.

அந்தக் கடலைப் பார்த்து அவள் கேட்கிறாள் ...

"நீயும் தூக்கம் இல்லாமல் இரவும் பகலும் என்னைப் போல நெஞ்சம் உருகி ஏங்குகிறாயா ? ஒரு நேரமாவது இந்த அலை அடிக்காமல், நிம்மதியா தூங்க மாட்டாயா ? எதுக்கு அனாவசியமா காதலிக்கிற ? அப்புறம் கிடந்து இப்படி நிம்மதி இல்லாம அலையுற" என்று கேட்கிறாள்.

பாடல்


காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,

நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்

தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,

யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே


பொருள்


காமுற்ற = காமம் உற்ற = ஆசைப் பட்டு

கையறவோ = கையில் கிடைக்காமல்

டெல்லே இராப்பகல் = இரவு பகல் எந்நேரமும்

நீமுற்றக் = நீ முழுவதும்

கண்டுயிலாய் = கண் துயில மாட்டாய்

நெஞ்சுருகி = நெஞ்சு உருகி

யேங்குதியால் = ஏக்கம் கொள்கிறாயா

தீமுற்றத்  = தீ முற்றும் அழிக்க

தென்னிலங்கை யூட்டினான்  = தென் திசையில் உள்ள இலங்கையை எரித்தான்

தாள்நயந்த = திருவடிகளை விரும்பிய

யாமுற்ற = யாம் உற்றது = எனக்கு கிடைத்தது

துற்றாயோ  = உனக்கும் கிடைத்ததா

வாழி கனைகடலே = நீ வாழ்க கடலே

முற்ற என்ற சொல் எவ்வளவு அழகாக வந்து  விழுகிறது பாருங்கள்.

காமம் உற்ற
நீயும் உற்ற
தீ முற்ற
யாம் உற்ற

என்ன ஒரு சொல்லாட்சி. என்ன ஒரு உணர்ச்சி பிரவாகம். என்ன ஒரு எளிமையான பாடல்.

இதைப் படிக்கவும் நேரம் இல்லையே...என்ன செய்யலாம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_13.html

Sunday, April 12, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இரவெல்லாம் விழித்து இருப்பாயா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இரவெல்லாம் விழித்து இருப்பாயா?


அன்றில் பறவை என்று ஒரு பறவை இருந்தது. இப்போது இல்லை. தமிழ் இலக்கியத்தில் இந்தப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளது.  அன்னப் பறவை போல இந்தப் பறவையும் இன்று இல்லை.

அன்றில் பறவையின் சிறப்பு என்ன என்றால், அது எப்போதும் துணையுடனேயே இருக்கும்.

அன்றி + இல் = துணை இல்லையேல், தானும் இல்லை.

அந்தப் பறவை இரவில் தூங்கும் போது, துணை பறவையின் அலகை, தன் அலகால் கவ்விக் கொண்டே தூங்குமாம்.

துணையைப் பிரிந்தால், "குர்ரீ குர்ரீ" என்று பெரிய குரல் எடுத்து துணையை அழைக்கும். துணை வராவிட்டால், உயிரை விட்டுவிடும்.

அது துணையை அழைக்கும் குரல் ஏக்கத்தின் குரலாக ஒலிக்கும். கேட்போர் மனதை உருக்கும்.

அவள் வீடோ ஒரு சிறு குடிசை. கடற்கரை ஓரம் உள்ள ஒரு சின்ன குடிசை. நேரமோ இரவு நேரம்.  குளிர்ந்த கடல் காற்று நிற்காமல் அடித்துக் கொண்டு இருக்கிறது. தூரத்தில், அலை அடிக்கும் சத்தம்.

வீட்டின் மறு பக்கத்தில் எல்லோரும் படுத்து உறங்குகிறார்கள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. முழங்காலை கட்டிக் கொண்டு, அதில் தலை சாய்த்து அவனை நினைத்து உருகுகிறாள்.

அந்த நிசப்த இரவில், அவள் வீட்டின் கொல்லையில் உள்ள தோட்டத்தில், ஒரு அன்றில் பறவை ஏக்கக் குரலில் தன் துணையை தேடி அழைக்கிறது.

"ஏய் அன்றில் பறவையே, இந்த நீண்ட யாமப் பொழுதில், நீயும் உன் துணையை பிரிந்து ஏங்குகிறாயா என்னைப் போல" என்று அந்த அன்றில் பறவையிடம் கேட்கிறாள்.


பாடல்

கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே.


பொருள்

கோட்பட்ட = சிறைப்பட்ட

சிந்தையாய்க்  = மனதால்

கூர்வாய = கூர்மையான அலகைக் கொண்ட

அன்றிலே = அன்றில் பறவையே

சேட்பட்ட = நீண்ட

யாமங்கள் = யாமப் பொழுதுகள்

சேரா திரங்குதியால், = சேராது + இரங்குதியால். உன் துணையோடு சேராமல்  இரக்கம் கொள்கிறாயா ?

ஆட்பட்ட = அடிமைப் பட்ட

எம்மேபோல் = என்னைப் போல

நீயும் = நீயும்

அரவணையான் = அரவு + அணையான் = பாம்பை படுக்கையாக கொண்டவன்

தாட்பட்ட = திருவடிகளில் பட்ட

தண்டுழாய்த் = குளிர்ந்த துளசி

தாமம்  = மாலை மேல்

கா முற்றாயே. = ஆசைபட்டாயா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_12.html

Saturday, April 11, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உனக்கும் தூக்கம் வரலியா ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உனக்கும் தூக்கம் வரலியா ?



அது கடற்கரை ஓரம் உள்ள ஒரு சின்ன கிராமம். அதில் ஒரு வீடு. வீட்டில் இருந்து பார்த்தால் கடல் தெரியும். வீட்டை சுற்றி கொஞ்சம் கடல் மணலில் வளரும் சில குறுஞ்செடிகள்.

இரவு நேரம். நிலா வெளிச்சத்தில் கடல் பளபளக்கிறது. தூரத்தில் அலை அடிக்கும் சத்தம். கடற்காற்று, மணலை மெல்ல புரட்டிப் போட்டுக் கொண்டு போகிறது.

ஊரே தூங்கி விட்டது.

அவள் மட்டும் தூங்கவில்லை. தூக்கம் வரவில்லை.  அவன் நினைவு. ஜன்னல் வெளியே பார்க்கிறாள். அங்கிருந்த குறு மரத்தில் ஒரு நாரை உட்கார்ந்து இருக்கிறது. அதுவும் தூங்காமல் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டு இருக்கிறது. அடிக்கிற காற்று அந்த நாரையை தள்ளுகிறது. அது விழாமல் அந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

"எனக்குத்தான் தூக்கம் வரவில்லை. அவனை நினைத்து, தூக்கம் வராமல் தவிக்கிறேன். உனக்கும் தூக்கம் வரலியா? நீயும் அவன் மேல் காதல் கொண்டாயோ ?"

என்று அந்தப் பெண், நாரையிடம் கேட்கிறாள்.

பாடல்

வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.


பொருள்


வாயுந்  = மேலும் மேலும்

திரை = அலை, கடல் அலை

உகளும் = உருளும், அடிக்கும்

கானல் = கடற்கரை

மட நாராய், = நாரையே

ஆயும் = தாயும்

அமருலகும்  = அமரர் + உலகும் = தேவ லோகமும்

துஞ்சிலும்  = தூங்கினாலும்

நீ துஞ்சாயால், = நீ தூங்க மாட்டாயா ?

நோயும்  = (காதல்) நோயும்

பயலைமையும் = அதனால் வரும் பசலை நிறமும்

மீதூர = உன் மேல் வர

வெம்மே போல், = என்னைப் போலவே

நீயும் = நீயும்

திருமாலால் = திருமாலால்

நெஞ்சம் = மனம்

கோட் பட்டாயே. = பறித்துக் கொள்ளப் பட்டாயோ?

அவன், என் மனதைத்தான் கொண்டு சென்றான் என்று நினைத்தேன். உன் மனதையும்  கொண்டு சென்று விட்டானா ?

நம்மாழ்வார் பாசுரம்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்.

பிரபந்தத்தை புரட்டிப் பாருங்கள். இப்படி எத்தனையோ பாடல்கள்.

எதெதற்கோ நேரம் ஒதுக்குகிறோம். இதுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் படித்தால்  என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_11.html

Wednesday, April 8, 2020

ஐங்குறுநூறு - நீங்கினளோ என் பூங்கணோளே

ஐங்குறுநூறு - நீங்கினளோ என் பூங்கணோளே


பிள்ளைகளை விட்டு பிரிவது என்பது மிக மிக கடினமான காரியம்.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளிய போகத்தன் துடித்துக் கொண்டு இருப்பார்கள். பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த வலி.

ஏதோ ஒரு காரணத்துக்காக பிள்ளகைள் வீட்டை விட்டு சென்று விடுகிறார்கள்...மேல் படிப்புக்கோ, வேலை நிமித்தமோ, திருமணம் ஆன பின்னோ...வீட்டை விட்டுப் போய் விடுகிறார்கள்.

அவர்கள் போன பின், அவர்கள் இருந்த அறை , அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்கள், எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

"அந்த பய ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிள்...."

"அவ ஆசை ஆசையா வாங்கின படம்..."

வீட்டில் ஒவ்வொன்றும் பிள்ளைகளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அதெல்லாம் அந்த குழந்தைகளுக்குத் தெரியாது. வீட்டில் பெற்றோர் படும் பாடு, அவர்களின் ஞாபகம் படுத்தும் பாடு...

இந்த உணர்ச்சிகளை சங்கப்பாடலான ஐங்குறுநூறு என்ற தொகுப்பில், ஓதலாந்தையார் என்ற கவிஞர் படம் பிடித்து காட்டுகிறார்.

மகள், திருமணம் ஆகி, கணவனோடு சென்று விட்டாள் .  இங்கே வீட்டில் அம்மா கிடந்து மருகுகிறார்கள்.

"இது என் மகள் வைத்து விளையாடிய பொம்மை. இது என் மகள் கொஞ்சிய கிளி. இப்படி எதைப் பார்த்தாலும் அவள் ஞாபகமே வருகிறது. எப்படித்தான் என்னை விட்டு விட்டுப் போனாளோ "

பாடல்

இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண் தொறும் காண் தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.


பொருள்

இது என் பாவை = இது பொம்மை போன்ற என் மகள் விளையாடிய

பாவை = பொம்மை

இது என் = எது என்

அலமரு நோக்கின் = அலை பாயும் கண்களை உடைய

நலம்வரு சுடர் நுதல் = நல்ல சுடர் விடும் நெற்றியைக் கொண்ட

பைங்கிளி எடுத்த = கிளி போன்ற என் மகள் எடுத்து விளையாடிய

பைங்கிளி = பச்சைக் கிளி

என்றிவை = என்று இவை

காண் தொறும்  காண் தொறும்  = பார்க்க பார்க்க

கலங்க = என் மனம் கலக்கம் அடைய

நீங்கினளோ = என்னை விட்டுப் போய் விட்டாளே

என் பூங்கணோளே. = என்னுடைய பூ போன்ற அழகிய கண்களை உடைய என் மகள்

மகள் வைத்து புழங்கிய ஒவ்வொன்றைப் பார்த்தும் மருகுகிறது அந்தத் தாய் மனம்.

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்.

உலகம் எவ்வளவோ மாறி விட்டது.

ஆனாலும், அந்த அடிப்படை மனித உணர்ச்சிகள் இன்றும் அப்படியே இருக்கிறது.   ஆச்சரியம்.

எவ்வளவு எளிய பாடல்.

எவ்வளவு அழுத்தமான, ஆழமான  உணர்ச்சிகள்.

சங்க இலக்கியத்தை படிக்கும் போது, நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியும்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, பிள்ளைகள் பெற்றோரின் பாசத்தை  புரிந்து கொள்வதே இல்லையோ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_8.html

Friday, April 3, 2020

திருக்குறள் - அச்சுஇறும் அப்பண்டம்

திருக்குறள் - அச்சுஇறும் அப்பண்டம்



பாடல்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பொருள்

பீலி = மயில் தோகை

பெய் = வண்டியில் ஏற்றுதல்

சாகாடும் = வண்டியும்

அச்சுஇறும் = அந்த வண்டியின் அச்சும் உடைந்து போகும்

அப்பண்டம் = அந்த மயில் தோகை

சால மிகுத்துப் பெயின் = அளவுக்கு அதிகமாக ஏற்றினால்

அளவுக்கு அதிகமாக ஏற்றினால், அது மயில் தோகையாக இருந்தால் கூட, வண்டியும், அச்சும் உடைந்து போகும்.

இதைச் சொல்ல ஒரு வள்ளுவர் தேவையா? நமக்குத் தெரியாதா ?

தெரியும். ஆனால் வள்ளுவர் சொல்ல வந்தது வேற.

டீ காப்பி குடிப்பது நல்லதா? நல்லது இல்லை தான், இருந்தாலும், காலையில் ஒரு கப் உள்ள போகாட்டி வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதே. காலையில ஒண்ணு,  சாயங்காலம் ஒரு கப்...அவ்வளவு தான்.   ஒரு இறகு.

 வாட்ஸாப் ஓயாமா பாக்குறது நல்லதா? நல்லது இல்லை தான். ..பொழுது தான் போகணும்ல...அப்பப்ப பாக்குறதுதான்...அப்படியே ஒண்ணு ரெண்ட போர்வர்துபண்ணுறதுதான்....இன்னொரு இறகு.

facebook ? அதுவும் ஒருநாளைக்கு ரெண்டு மூணு தடவ பாக்குறதோட சரி. இன்னொரு இறகு.

அர்த்தம் இல்லாத டிவி சீரியல்...இன்னொரு இறகு.

வெட்டி அரட்டை ...

குப்பை புத்தகங்கள், ப்ளாகுகள், youtube , instagaram ....இப்படி நாலஞ்சு இறகு.

எப்பவும் இல்ல, எப்பவாவது நண்பர்களுடன் பார்ட்டி னு போனா, லைட் ஆ ஒரு peg ...

இப்படி நிறைய மயில் இறகுகளை ஏற்றிக் கொண்டே போகிறோம்.

தனித்தனியா பார்த்தா எல்லாம் பெரிய தவறு இல்லைதான்.

ஒரு கப் காப்பி என்ன பெரிய தப்பா?

இல்லை.

இப்படி சின்ன சின்ன தவறுகளாக செய்து கொண்டே போனால், அது இந்த உடம்பை, நம் வாழ்வை முறித்து விடும்.

தவறு என்றால் தவறுதான். சின்னதுதானே  என்று நிறைய செய்து கொண்டே போகக் கூடாது.

எல்லாம் ஒன்று சேர்ந்தால், பெரிய பகையாகி விடும்.

அதை வெல்வது கடினம்.

எப்போதாவது என்று ஆரம்பித்த புகைப் பழக்கம், மதுப் பழக்கம், போதைப் பொருள்கள் பழக்கம் நம்மை  எங்கோ கொண்டு தள்ளிவிடும்.

ஈரலும், நுரையீரலும் வெந்து நொந்து மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்  படுத்து இருக்கும் போது தெரியும், எப்படி அந்த சின்ன கெட்ட பழக்கம்  இந்த வண்டியை குடை சாய்த்தது என்று.

பட்டியல் போடுங்கள்.

ஒவ்வொன்றாக கெட்ட பழக்கங்களை விடுங்கள்.

ஒண்ணுதானே, எப்போதாவது தானே என்று நினைத்தால், மயில் இறகை நினைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு மென்மையாக இருக்கும். எவ்வளவு இலேசாக இருக்கும். அது ஒரு பெரிய பார வண்டியின் அச்சை முறிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_3.html

Wednesday, April 1, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - காதல் நோய்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - காதல் நோய் 


நோய் என்று இருந்தால் அதற்கு ஒரு மருந்து என்று ஒன்று இருக்க வேண்டும். மருந்தே இல்லாத நோய் வந்தால் என்ன செய்வது?

நோயினால் வரும் துன்பம் ஒரு புறம். மருந்து இல்லாத கவலை இன்னொருபுறம்.

நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஒரு கட்டத்தில், இறப்பு வந்தால் கூட பரவாயில்லை, இந்த வேதனையில் இருந்து விடுதலை பெறலாம் என்று நினைக்கலாம்.

இந்த காதல் நோய் இருக்கிறதே, இறந்த பின்னும் தொடரும் போல் இருக்கிறதே என்று அவள் வருந்துகிறாள்.

அவனோ கண்டு கொள்ள மாட்டேன் என்கிறான்.

இந்த இரவு வேறு முடிந்து தொலைய மாட்டேன் என்று ஊழிக் காலம் போல நீண்டு கொண்டே போகிறது.

அவன் வருவது ஒன்றுதான் இந்த காதல் நோய்க்கு மருந்து. அவன் வராவிட்டால், இந்த உயிரை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று தவிக்கிறாள்.

பாடல்

பின்நின்று காதல் நோய்*  நெஞ்சம் பெரிது அடுமால்* 
முன்நின்று இரா ஊழி*  கண் புதைய மூடிற்றால்* 
மன் நின்ற சக்கரத்து*  எம் மாயவனும் வாரானால்* 
இந் நின்ற நீள் ஆவி*  காப்பார் ஆர் இவ் இடத்தே?*


பொருள்

பின்நின்று காதல் நோய் = காதல் நோய் தெரிகிறது. அது என்ன பின் நின்று காதல் நோய்?  காதல் அவளை பின்னே இருந்து பிடித்துத் தள்ளுகிறது. போ, அவன் கிட்ட போய் சொல்லு என்று. நாணம் , வெட்கம் தடுக்கிறது.

அது ஒரு அர்த்தம்.

இறந்த பின்னாலும் விடாமல் தொடரும் காதல் என்று வியாக்கியானம் செய்த  பெரியவர்கள் கூறுகிறார்கள்.


நெஞ்சம் = மனம்

பெரிது = ரொம்பவும்

அடும் = அடும் என்றால் சண்டை பிடிக்கும், அழிக்கும் என்று அர்த்தம்.

ஆல் = அசைச் சொல்

முன் நின்று = முன்னால் நிற்கும்

இரா  = இந்த இரவு நேரம்

ஊழி = ஊழிக் காலம் போல நீண்டு கொண்டே போகிறது

கண் புதைய மூடிற்று  = கண்ணை கட்டி விட்டது மாதிரி இருண்டு கிடக்கிறது

ஆல் = அசைச்சொல்

மன் = மன் (இரண்டு சுழி ன் ) என்றால் நிலைத்து நிற்கும்

நின்ற = நிற்கும்

சக்கரத்து = சக்கரத்தைக் கொண்ட

எம் மாயவனும் வாரானால்*  = அந்த மாயவன் வராவிட்டால்

இந் நின்ற = இங்கே இருக்கும் என்

நீள் ஆவி = நீண்ட உயிரை

காப்பார் ஆர் இவ் இடத்தே ? = யார் காவல் செய்வார்கள் இங்கே


பக்தி என்பது எப்போதாவது நேரம் கிடைக்கும் போது செய்வது அல்ல.  காலையில் ஒரு பத்து நிமிடம், மாலையில் ஒரு பத்து நிமிடம், வருடத்துக்கு  இரண்டு தடவை  தல யாத்திரை, நாள் கிழமைன்னா கோவிலுக்கு போவது ...அது அல்ல  பக்தி.

காதல் வயப் பட்டவர்களை பாருங்கள் தெரியும்.

எந்நேரம் பார்த்தாலும் அவள் (அவன்) சிந்தனைதான் இருக்கும்.

நொடிக்கு நூறுதரம் செல் போனை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

நடு இரவில் தூக்கம் கலைந்தால் , செல் போனை எடுத்து செய்தி ஏதாவது வந்து இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இல்லை என்றால் ஏதாவது செய்தி அனுப்புவார்கள்.

காதல் என்றால் அப்படித் தான் இருக்கும்.

பக்தியும் அப்படி இருக்க வேண்டும்.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார் மணிவாசகர்.

அப்படி இலயிக்க வேண்டும்.

உருக வேண்டும்.

நம்மால் உருக முடியுமா என்று தெரியவில்லை.

உருகியவர்கள் பாடிய பாசுரங்களை படித்தால், நம் நெஞ்சும் உருகும்.


interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post.html