Friday, April 3, 2020

திருக்குறள் - அச்சுஇறும் அப்பண்டம்

திருக்குறள் - அச்சுஇறும் அப்பண்டம்



பாடல்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பொருள்

பீலி = மயில் தோகை

பெய் = வண்டியில் ஏற்றுதல்

சாகாடும் = வண்டியும்

அச்சுஇறும் = அந்த வண்டியின் அச்சும் உடைந்து போகும்

அப்பண்டம் = அந்த மயில் தோகை

சால மிகுத்துப் பெயின் = அளவுக்கு அதிகமாக ஏற்றினால்

அளவுக்கு அதிகமாக ஏற்றினால், அது மயில் தோகையாக இருந்தால் கூட, வண்டியும், அச்சும் உடைந்து போகும்.

இதைச் சொல்ல ஒரு வள்ளுவர் தேவையா? நமக்குத் தெரியாதா ?

தெரியும். ஆனால் வள்ளுவர் சொல்ல வந்தது வேற.

டீ காப்பி குடிப்பது நல்லதா? நல்லது இல்லை தான், இருந்தாலும், காலையில் ஒரு கப் உள்ள போகாட்டி வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதே. காலையில ஒண்ணு,  சாயங்காலம் ஒரு கப்...அவ்வளவு தான்.   ஒரு இறகு.

 வாட்ஸாப் ஓயாமா பாக்குறது நல்லதா? நல்லது இல்லை தான். ..பொழுது தான் போகணும்ல...அப்பப்ப பாக்குறதுதான்...அப்படியே ஒண்ணு ரெண்ட போர்வர்துபண்ணுறதுதான்....இன்னொரு இறகு.

facebook ? அதுவும் ஒருநாளைக்கு ரெண்டு மூணு தடவ பாக்குறதோட சரி. இன்னொரு இறகு.

அர்த்தம் இல்லாத டிவி சீரியல்...இன்னொரு இறகு.

வெட்டி அரட்டை ...

குப்பை புத்தகங்கள், ப்ளாகுகள், youtube , instagaram ....இப்படி நாலஞ்சு இறகு.

எப்பவும் இல்ல, எப்பவாவது நண்பர்களுடன் பார்ட்டி னு போனா, லைட் ஆ ஒரு peg ...

இப்படி நிறைய மயில் இறகுகளை ஏற்றிக் கொண்டே போகிறோம்.

தனித்தனியா பார்த்தா எல்லாம் பெரிய தவறு இல்லைதான்.

ஒரு கப் காப்பி என்ன பெரிய தப்பா?

இல்லை.

இப்படி சின்ன சின்ன தவறுகளாக செய்து கொண்டே போனால், அது இந்த உடம்பை, நம் வாழ்வை முறித்து விடும்.

தவறு என்றால் தவறுதான். சின்னதுதானே  என்று நிறைய செய்து கொண்டே போகக் கூடாது.

எல்லாம் ஒன்று சேர்ந்தால், பெரிய பகையாகி விடும்.

அதை வெல்வது கடினம்.

எப்போதாவது என்று ஆரம்பித்த புகைப் பழக்கம், மதுப் பழக்கம், போதைப் பொருள்கள் பழக்கம் நம்மை  எங்கோ கொண்டு தள்ளிவிடும்.

ஈரலும், நுரையீரலும் வெந்து நொந்து மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்  படுத்து இருக்கும் போது தெரியும், எப்படி அந்த சின்ன கெட்ட பழக்கம்  இந்த வண்டியை குடை சாய்த்தது என்று.

பட்டியல் போடுங்கள்.

ஒவ்வொன்றாக கெட்ட பழக்கங்களை விடுங்கள்.

ஒண்ணுதானே, எப்போதாவது தானே என்று நினைத்தால், மயில் இறகை நினைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு மென்மையாக இருக்கும். எவ்வளவு இலேசாக இருக்கும். அது ஒரு பெரிய பார வண்டியின் அச்சை முறிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_3.html

2 comments:

  1. கருத்து செறிந்த விளக்கம். மேலெழுந்தவாரியாக படித்தால் இவ்வளவு புல பட்டிருக்குமா?

    ReplyDelete
  2. இந்தக் குரளுக்கு நல்ல பொருள் பொருந்திய விளக்கம். நன்றி.

    ReplyDelete