Monday, April 13, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான் பெற்ற துன்பம் நீயும் பெற்றாயா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான் பெற்ற துன்பம் நீயும் பெற்றாயா?



நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற இலக்கியங்களை படிக்கும் போது, பல உணர்ச்சிகள் உண்டாகிறது.

ஒரு பக்கம் பக்தி. இன்னொரு பக்கம் காதல். இன்னொரு பக்கம் தமிழின் சுவை, கவிதையின் நயம், சொல்லாட்சி, ஆறு போன்ற கருத்தோட்டம்...எதை எடுப்பது, எதை விடுவது என்று நம்மை தத்தளிக்க வைக்கும்.

நம்மாழ்வாரின் இன்னுமொரு அற்புதமான பாசுரம்.

அவள் கடற்கரையை ஓரம் உள்ள ஒரு குப்பத்தில் வசிப்பவன். அவளுக்கு அவன் மேல் அப்படி ஒரு காதல்.

ஒரு நாள், மாலை நேரம், கடற்கரையில் அமர்ந்து அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள். நேரம் மெல்ல மெல்ல போய் கொண்டிருக்கிறது. மாலை போய் முன்னிரவு வந்து விட்டது. நிலவொளியில் கடல் நீர் பால் போல ஜொலிக்கிறது.

அலை அடித்த வண்ணம் இருக்கிறது.

அந்தக் கடலைப் பார்த்து அவள் கேட்கிறாள் ...

"நீயும் தூக்கம் இல்லாமல் இரவும் பகலும் என்னைப் போல நெஞ்சம் உருகி ஏங்குகிறாயா ? ஒரு நேரமாவது இந்த அலை அடிக்காமல், நிம்மதியா தூங்க மாட்டாயா ? எதுக்கு அனாவசியமா காதலிக்கிற ? அப்புறம் கிடந்து இப்படி நிம்மதி இல்லாம அலையுற" என்று கேட்கிறாள்.

பாடல்


காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,

நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்

தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,

யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே


பொருள்


காமுற்ற = காமம் உற்ற = ஆசைப் பட்டு

கையறவோ = கையில் கிடைக்காமல்

டெல்லே இராப்பகல் = இரவு பகல் எந்நேரமும்

நீமுற்றக் = நீ முழுவதும்

கண்டுயிலாய் = கண் துயில மாட்டாய்

நெஞ்சுருகி = நெஞ்சு உருகி

யேங்குதியால் = ஏக்கம் கொள்கிறாயா

தீமுற்றத்  = தீ முற்றும் அழிக்க

தென்னிலங்கை யூட்டினான்  = தென் திசையில் உள்ள இலங்கையை எரித்தான்

தாள்நயந்த = திருவடிகளை விரும்பிய

யாமுற்ற = யாம் உற்றது = எனக்கு கிடைத்தது

துற்றாயோ  = உனக்கும் கிடைத்ததா

வாழி கனைகடலே = நீ வாழ்க கடலே

முற்ற என்ற சொல் எவ்வளவு அழகாக வந்து  விழுகிறது பாருங்கள்.

காமம் உற்ற
நீயும் உற்ற
தீ முற்ற
யாம் உற்ற

என்ன ஒரு சொல்லாட்சி. என்ன ஒரு உணர்ச்சி பிரவாகம். என்ன ஒரு எளிமையான பாடல்.

இதைப் படிக்கவும் நேரம் இல்லையே...என்ன செய்யலாம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_13.html

2 comments:

  1. திருமாலிடம் உள்ள பக்தியின் உச்சத்தை காண்பிக்கிற பாடல் இது.

    ReplyDelete
  2. "தென் திசையில் உள்ள இலங்கையை எரித்தான்" அன்று அனுமனை அல்லவோ சொல்ல வேண்டும்?

    ReplyDelete