Thursday, January 30, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம் பையல்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம் பையல் 


நாலாயிர திவ்ய பிரபந்தம் போல எளிய தமிழ் பாடல்கள் கிடையாது. அவ்வளவு எளிமை. ஆழ்வார்கள் பெருமாளோடு கொஞ்சுகிறார்கள். அவ்வளவு அன்யோன்யம்.


"நமக்கு தெரிஞ்ச பையன்...கொஞ்சம் பாத்துக்குங்க" என்று நமக்கு தெரிந்த பையனை மற்றவர்களிடம் அறிமுகம் செய்வது வழக்கம் தானே.

"யார்ரா அவன்...எப்படி பாத்ததாலும் நம்ம பய டா அவன்" என்று நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவதை கேட்டு இருக்கிறோம்.

"நம்ம பையன்" என்று ஒருவர் நம் மீது உரிமை கொண்டாடினால் நமக்கு சந்தோஷம் தானே?

தொண்டரடிப் பொடி ஆழ்வார் கூறுகிறார், "பெருமாளே நீ எனக்கு பெரிய உதவி ஒன்றும் செய்ய வேண்டாம்...இவன் நம்ம பையன் என்று மத்தவங்க கிட்ட சொல்லு போதும்...அதுவே எனக்கு பெரிய அருள் ...அது கூட சொல்ல முடியாதா உனக்கு..என்ன கல் நெஞ்சு உனக்கு " என்று ஆதங்கப் படுகிறார்.

பாடல்


"தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே"

பொருள்


"தெளிவிலாக் = தெளிவு இல்லாத

கலங்கல் = கலங்கிய

நீர் சூழ் = நீர் சூழ்ந்த (காவிரி, கொள்ளிடம் என்ற இரண்டு ஆற்றின் நீரும் கலங்கி செல்லும்)

திருவரங்கங் கத்துள் ளோங்கும் = திருவரங்கத்து உள் ஓங்கும்

ஒளியுளார் தாமே = ஒளி உளார் தாமே

யன்றே =அன்றே

தந்தையும் தாயு மாவார் = தந்தையும் தாயும் ஆவார்

எளியதோ ரருளு மன்றே  = எளியது ஓர் அருளும் அன்றே

எந்திறத் தெம்பி ரானார் = எம் திறத்து எம்பிரானார்

அளியன் = அன்பு கொண்டவன்

நம் பையல் = நம்ம பயல்

என்னார் = என்று சொல்ல மாட்டார்

அம்மவோ  = அம்மாடி

கொடிய வாறே = எவ்வளவு கொடிய நெஞ்சம் கொண்டவர் அவர்

என்னை உன் அடியான் என்று சொல்ல வேண்டாம். என்னை உன் ஆழ்வார்களில் ஒருவனாகச் சொல்ல வேண்டாம். "நம்ம பயல்" என்று சொல்லு. அப்படி சொல்ல உனக்கு என்ன தயக்கம் என்று கேட்கிறார்.

ஆழ்வார்கள், ஆண்டவனை அனுபவித்தது ஒரு மாதிரி என்றால், வைணவ உரை ஆசிரியர்கள் அதற்கு மேல்  சென்று அனுபவிக்கிறார்கள். உரை என்றால் வைணவ உரை தான்   என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு உருக்கம்.

ஏன், அப்படி சொல்கிறேன் என்று கேளுங்கள்.


"தெளிவிலாக் கலங்கல் நீர்"

ஆற்று நீர் கலங்கித்தான் இருக்கும். ணுப்பும் நுரையுமாகத்தான் இருக்கும். அதில் ஒன்றும் விசேடம் இல்லை.

ஆனால், இந்த பாடலுக்கு உரை எழுதியவர்கள் சொல்கிறார்கள் , ஏன் காவிரியும், கொள்ளிடமும் கலங்கி இருந்தது தெரியுமா "பாற் கடல் போல நாம் தினமும்  பெருமாளை சேவிக்க முடியவில்லையே. ஆண்டில் பல நாள் நீர் இல்லாமல் போய் விடுகிறதே....அவன் பாதம் தொட்டு தடவி அவன் அருகில் இருக்க முடியவில்லையே   என்று கலங்கியதாம்".

பெருமாளை , "அன்றே தாயும் தந்தையும் ஆனார்" என்று சொல்கிறார். ஏன்?

நாம் நம் பெற்றோரை தாய், தந்தையர் என்று அழைக்கிறோம்.

தமிழ் ஆழமான மொழி.

தாயார், தந்தையார் என்ற சொல்லில் தாய் + யார்? தந்தை + யார்? என்ற கேள்வி நிற்கிறது அல்லவா?

இந்தப் பிறவியில், இந்த உடம்புக்கு இவர்கள் தாய், தந்தையர். இதற்கு முன்னால் ? இதற்குப் பின்னால் ? யார் தந்தையோ, யார் தாயோ?

இப்படியே முன்னோக்கிப் போனால், முதல் தாய் தந்தை என்று ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா?  ஆதி மூலம், அவர் தான் நம் பெருமாள் என்கிறார்.

"போற்றி என் வாழ் முதலாகிய பொருளே" என்பார் மணிவாசகர்.

இறைவன் ஆணா, பெண்ணா?

தாயா? தந்தையா?

தந்தைதான். தாயும் ஆனவர். தாயுமானவர்.

அவன் தாயும், தந்தையாக இருக்கிறான் என்கிறார் ஆழ் வார்.

"அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ" என்பார் திருநாவுக்கரசர்.

ஆணாகி, பெண்ணாகி ...என்பது மணிவாசகம்.

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  


படித்து படித்து உருகும் பாசுரங்கள். தினம் ஒரு பாசுரமாவது படிக்க வேண்டும். படித்தால் மட்டும் போதாது, பொருள் தெரிந்து, உணர்வு தெரிந்து அதில் மனம் கரைய வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_30.html

Wednesday, January 29, 2020

திருக்குறள் - நாடு

திருக்குறள் - நாடு 


சில நாட்களுக்கு முன் நாம் நமது குடியரசு தினத்தை கொண்டாடினோம். நம்மிடம் உள்ள ஆயுத பலம்,  அரசு மேற்கொண்ட முயற்சிகள் போன்றவற்றை அணிவகுப்பில் இடம் பெறச் செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினோம்.  இவை ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதார மந்த நிலை, வேலை இல்லா திண்டாட்டம் போன்ற சவால்களும் நம் முன்னே இருக்கின்றன.

சற்று தள்ளி, வேறொரு நாட்டில் கொடிய நோய் ஒன்று பரவி வருகிறது. அது உலகம் பூராவும் பரவி விடுமோ என்று உலகமே அஞ்சுகிறது.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும், சில நல்லவைகளும் , சில அல்லாதவைகளும் இருப்பதைக் காண்கிறோம்.

ஒரு நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்....என்னது ? ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஒண்ணே முக்கால் அடியில் சொல்ல முடியுமா என்று நமக்கு வியப்பாக இருக்கும். என்னதான் சொல்கிறார் பார்த்து விடுவோம்.

குறள்


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு


பொருள்

உறுபசியும்  = பெரிய பசியும்

ஓவாப் பிணியும் = நீங்காத நோயும்

செறுபகையும் = அழிக்கின்ற பகையும்

சேராது = சேராமல்

இயல்வது = இருப்பது

நாடு = ஒரு நல்ல நாட்டுக்கு இலக்கணம்.

பசியும், பிணியும், பகையும் இல்லாமல் இருப்பது நல்ல நாடு என்கிறார்.

இது சரிதானா? வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம்,  கட்டமைப்பு  (infrastructure ), எதிர்கால பாதுகாப்பு (social security ) இதெல்லாம் வேண்டாமா?  சட்டம் ஒழுங்கு முக்கியம் இல்லையா? போன்ற கேள்விகள் எழலாம்.

சிந்திப்போம்.

அது  என்ன உறு பசி ?

பெரிய பசி. கொடுமையான பசி.

அங்கொன்றும், இங்கொன்றும் சிலருக்கு சில வேளை பசி இருக்கலாம். யாருக்குமே, எங்குமே பசியே இருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது.

பெரிய பசி என்றால், பஞ்சம் வந்து, உணவு தட்டுப்பாடு வந்து அதனால் மக்கள் பசியால்  வாடுவது. அது உறு பசி.

அந்த உறு பசி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

விவசாயிகள் பாடுபட வேண்டும் (agricultural production ). அவர்களுக்கு விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் (Levy and pricing ), விவசாயம்  செய்ய நீர்  வேண்டும். அதற்கு நீர் மேலாண்மை வேண்டும் (water management ). மழை நீரை தேக்கி தேவையான நேரத்தில் பயன் படுத்தும்  விதத்தில் அணை  கட்ட வேண்டும். (Dam  - infrastructure ). விளைவித்த பொருள்களை சரியான படி  சேமித்து வைக்க வேண்டும்.. உணவு கிடங்குகள் வேண்டும் (storage , godown , warehouse ....infrastructure ). உணவு எல்லா இடத்திலும் உண்டாக்க முடியாது.  நிலத்தின் வளம், நீர் வளம் இவற்றைக் கொண்டு தான் உணவு உற்பத்தி செய்ய முடியும்.  ஒரு இடத்தில் உற்பத்தி செய்த பொருளை நாட்டில் எல்லா  பாகத்துக்கும் விரைந்து கொண்டு செல்ல வேண்டும். (distribution ). அப்படி  கொண்டு செல்ல நல்ல சாலை வசதி வேண்டும் (road , வண்டிகள், infrastructure ).  எல்லோராலும் விலை கொடுத்து வாங்க முடியாமல் இருக்கலாம். மான்ய விலையில் உணவு பொருட்களைத் தர பொது விநியோக முறை வேண்டும்  (public distribution சிஸ்டம்).

பசியை ஒழிக்க வேண்டும் என்றால், இவ்வளவு செய்ய வேண்டும்.

அடுத்தது,  "ஓவா பிணி"

தீராத நோய். தீராத நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

ஆரோக்கியமான உணவு வேண்டும்.

சுகாதாரம் வேண்டும் (hygene ).

அதற்கு நீரும், காற்றும் சுத்தமாக இருக்க வேண்டும் (pollution control ).

குப்பைகளை, கழிவு நீரை உடனடியாக நீக்க வேண்டும் (waste  அண்ட் waste water management ).

நோய் தடுப்பு முறை வேண்டும் (vaccination )

நோய் இன்னது என்று அறியும் அறிவு வேண்டும் (medical diagnosis )

நல்ல மருத்துவ மனைகள் வேண்டும் (hospital )

அவற்றை நிர்வாகம் செய்ய நல்ல மருத்துவர்கள் வேண்டும் (medical education ).

புது புது மருந்துகளை கண்டு பிடிக்க வேண்டும் (research and development )

நோய் பரவாமல் தடுக்க வேண்டும் (quarantine ).

ஓவா பிணி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இவை எல்லாம் செய்ய வேண்டும்.

செறு  பகை

அடுத்து நிற்கும் பகை, அழிக்கும் பகை.

இது இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

படைகள் வேண்டும் (defence force )

ஆயுதங்கள் வேண்டும் (arms and ammunitions )

எதிரியின் நடவடிக்கைளை கவனிக்க வேண்டும் (military intelligence )

அரண் வேண்டும்.

இவற்றிற்கு எல்லாம் பணம் வேண்டும் (resources ). அதற்கு வரி வசூல் செய்ய வேண்டும். அதற்கு நாட்டில் பொருளாதாரம் முன்னேற வேண்டும், உற்பத்தி பெருக வேண்டும்.

இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்ய நல்ல அரசாங்கம் வேண்டும்.

அப்படி ஒரு அரசு இருந்தால், அது இந்த குறளில் சொல்லாத மற்றவற்றையும் தானே செய்யும்.

நான் தந்த பட்டியல் சிறியதுதான். இன்னுமும் எவ்வளவோ இருக்கிறது.

எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்கிறார் வள்ளுவர் ?

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_29.html

Tuesday, January 21, 2020

திருக்குறள் - திருமணமும் சமுதாயக் கடமைகளும்

திருக்குறள் - திருமணமும் சமுதாயக் கடமைகளும் 


(முந்திய பிளாகின் url

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_20.html)


எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள் என்று திருமணம் ஆனவர்களைக் கேட்டால்,

 "அந்தக் காலத்தில், அப்பா அம்மா பாத்து செஞ்சு வச்சாங்க, பண்ணிக்கிட்டேன்" என்று சிலர் சொல்லுவார்கள்.

 "அந்தப் பெண்ணை/பையனை பிடிச்சு இருந்தது...காதல் பண்ணி திருமணம் செய்து கொண்டோம்...எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது...எவ்வளவு காலம் தான் காதலிச்சுக்கிட்டே இருக்கிறது...?" என்று சிலர் சொல்லலாம்.

இன்னும் சிலர், "அத்தை பொண்ணு, மாமா பையன்...சொந்தம் விட்டுப் போகக் கூடாதுனு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்" என்று சிலர் சொல்லலாம்.

ஒரு இனக் கவர்ச்சி. ஒரு சந்தோஷம். புது உறவில் வரும் ஒரு குறுகுறுப்பு. ஒரு எதிர்பார்ப்பு என்று கொஞ்சம் காரணங்களும் இருக்கலாம்.

ஆனால், இவை எல்லாம் இரண்டு தனி மனிதர்கள் சம்பந்தப் பட்டவை. திருமணம் என்பது அவ்வ்ளவுதானா? இரண்டு பேர் சம்பந்தப்பட்ட ஒரு தனிப்பட்ட விஷயமா? அப்படி என்றால் கட்டாயம் மற்றவர்கள் அதில் தலையிடக் கூடாதுதான்.

நம் சமுதாயம் திருமணத்தை அப்படி பார்க்கவில்லை.

நம் சமுதாயம்  திருமணத்தை ஒரு அறமாக பார்த்தது. அதற்கு "இல்லறம்" என்று பெயர் வைத்தது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு இல்லறம் என்று பெயர். இல்லத்தில் இருந்து செய்யும் அறம்.

இன்னொன்று, திருமணம் என்பது ஏதோ இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று  நம் சமுதாயம் பார்க்கவில்லை.

திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய சமுதாய ஒப்பந்தம் என்று நம் சமுதாயம்  சிந்தித்தது.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்களா, அவர்களுக்கு சில  கடமைகளை முன் வைத்தது நம் இனம்.

இந்த கடமைகளை, பொறுப்புகளை நீ ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து  கொள். இல்லை என்றால், இல்லறம் உனக்கு சரிவராது  என்று அடித்துச் சொன்னது நம்  சமுதாயம்.

அது என்ன கடமைகள்? அதை ஏன் செய்ய வேண்டும் ? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கிறது.

சரி, ஏற்றுக் கொள்வோம். சில சமுதாய கடமைகள் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். ஒரு ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும்  திருமணம் செய்து கொண்டால் அந்த சமுதாய கடமைகளை செய்ய முடியாதா?  என்றும் ஒரு கேள்வி வரும் அல்லவா?

ஒரு ஆணும் ஆணுமோ அல்லது ஒரு பெண்ணும் பெண்ணுமோ அந்த கடமைகளை செய்ய முடியாது  என்று நாம் பார்க்க இருக்கிறோம்.

சரி அது என்ன கடமைகள்? பதினோரு கடமைகளை சொல்கிறார் வள்ளுவர். அதெல்லாம் தெரியாமல் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்கிறோம்.

அவை என்னென்ன என்று பார்க்க இருக்கிறோம்.

அப்படித்தானே?


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_21.html





Monday, January 20, 2020

திருக்குறள் - ஓரினச் சேர்க்கை

திருக்குறள் - ஓரினச் சேர்க்கை 


இன்று ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வது, பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது சட்டப்படி அங்கீகாரம் பெற்ற ஒன்றாக ஆகிவிட்டது.

"ஏன், ஒரே பாலினத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? உனக்கு பிடிக்கவில்லை என்றால் செய்து கொள்ளாதே.  மற்றவர்களை தடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது? இது தனி மனித சுதந்திரம். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை " என்ற வாதம் முன் வைக்கப் படுகிறது.

என்ன பதில் சொல்வது?  சட்டம், தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்று வந்த பின், அதற்கு என்ன பதில் சொல்லுவது.

ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ளாத இளைய தலை முறையினர் கூட, "எனக்கு ஏற்பு இல்லை. ஆனால், அதற்காக அது தவறு என்று எப்படி சொல்லுவது" என்று கேட்கிறார்கள்.

பெரியவர்களும் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறார்கள்.

இது சரிதானா? எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டு விடுவதா?  இப்படியே போனால் எங்கு போய் முடியும் இது?  என்ற பயம் தலை தூக்காமல் இல்லை.

இதில் ஏதோ தவறு என்று மனம் சொல்கிறது. இருந்தும், என்ன தவறு என்று சொல்ல முடியவில்லை.  அது சரி என்று சொல்பவர்களின் வாதத்தை எதிர் கொள்ள முடியவில்லை.

ஒரு சமுதாயம் இப்படி தடுமாறி நிற்கும் போது, அந்த சமுதாயத்திற்கு யார் வழி காட்டுவது?  எது சரி, எது தவறு என்று யார் எடுத்துச் சொல்வது? அப்படியே சொன்னாலும்,  யார் ஏற்றுக் கொள்வார்கள்?

திருமணம் என்பது இரண்டு தனி மனிதர்கள் சம்பந்தப் பட்ட ஒன்றுதானா? அதற்கு மேல்  அதில் ஒன்றும் இல்லையா?

திருமணத்துக்கும் , சமுதாயத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா ?

இருக்கிறது என்றால், அது என்ன தொடர்பு?

ஏதோ பெரிய புரட்சிகரமான ஒன்றை கண்டு பிடித்துவிட்டது போல  சொல்கிறார்கள்.

ஏறக்குறை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், இவற்றைப் பற்றி மிக மிக தீவிரமாக,  ஆழமாக யோசித்து எழுதி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.

அவற்றை எல்லாம் படிக்காமல் விட்டதால், திக்கு திசை தெரியாமல்  தவிக்கிறோம்.


"உலகம் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது...நீங்க வேற திருக்குறள், ஆத்தி சூடி என்று பஞ்சாங்கம் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்...அதை எல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு வாருங்கள்.." என்று சிலர் கூறலாம்.

திருக்குறளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவரே கூடச் சொல்லவில்லை.

நிற்க அதற்கு தக என்று தான் சொல்லி இருக்கிறார்.

அவர் என்ன தான் சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.

ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால் விட்டு விடுவோம்.

தெரிந்து கொள்வதால் என்ன பிழை வந்து விடப் போகிறது?

எந்த அளவுக்கு நம்மவர்களின் சிந்தனை சென்று இருக்கிறது என்று பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.

இதற்கு மேலும் சிந்திக்க முடியுமா என்று தோன்றுகிறது.

இன்றைய மேற்கிந்திய சமுதாய மற்றும் உளவியல் கோட்பாடுகளை எல்லாம்  ஒரே அதிகாரத்தில் தூக்கிச் சாப்பிட்டுவிட்டுப் போகிறார் வள்ளுவர்.

Capitalism - socialism - communism - இவை அனைத்தையும் சொன்னது மட்டும் அல்ல,  அவற்றை தாண்டிச் செல்கிறது வள்ளுவரின் சிந்தனை.

அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார்? Build up கொஞ்சம் தூக்கலா இருக்கே  என்று நினைக்கிறீர்களா....

அதையும் தான் பார்த்து விடுவோமே...


interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_20.html

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என 


திருமணம் செய்து கொள்ள ஆவலோடு வந்திருந்த அனைத்து நாட்டின் அரசர்களில், தங்களுக்கு பிடித்த அரசரை தேர்ந்து எடுக்க ஆசையோடு வந்த காசி இராஜாவின் பெண்கள் மூவரும், அங்கே பீஷ்மரை கண்டு கொஞ்சம் ஆச்சரியப் பட்டார்கள். இந்தக் கிழவன் இங்கே என்ன செய்கிறான் என்று.

பீஷ்மர் அதை எல்லாம் பற்றி கவலைப் படவில்லை. அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து, தன் தேரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

மதம் கொண்ட யானை போல சென்றார் என்கிறார் வில்லியார்.

பாடல்

ஏனைவேந்த ரெதிரிவரைப்பெருந்
தானைசூழ்மணிச் சந்தனத்தேற்றியே
சோனைமாமதஞ் சோருங்கடதட
யானையென்ன விளவலொடேகினான்.

பொருள்

ஏனை = மற்ற

வேந்தர் = அரசர்கள்

எதிர் = எதிரில்

இவரை = இந்த மூன்று பெண்களையும்

பெருந் = பெரிய

தானை = படை

சூழ் = சூழ்ந்த

மணிச்  = மணிகள் கட்டிய

சந்தனத்தேற்றியே = தேரில் ஏற்றி

சோனை =அடை மழை போல

மாமதஞ் சோருங் = மதன நீர் சொரியும்

கடதட = பெரிய தலையை உடைய (கடம் = மதம், தடம் = இடம், மதம் பிறக்கும் இடம்)

யானையென்ன = யானை போல

விளவலொடேகினான். = இளவரசனோடு சென்றான்



அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

என்பது கந்தர் அலங்காரம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/5.html

Sunday, January 19, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு

வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு 


ஏதோ அந்தக் காலம் முதல் இன்று வரை பெண்களை அடக்கியே வைத்து இருந்தார்கள் என்று இன்றைய பெண்களில் பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. பெண் விடுதலை வேண்டும். பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள்.

உண்மை அதுவா என்று வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்க வேண்டும்.

அந்தக் காலத்தில், பெண்களுக்கு சுயம்வரம் என்று வைத்திருந்தார்கள். இராஜா வீட்டில். பெரிய பெரிய நாட்டின் அரசர்கள் எல்லோரும் வந்திருப்பார்கள். பெண்ணின் கையில் மாலையைக் கொடுத்து, உனக்கு யாரைப் பிடித்து இருக்கிறதோ, அவரை தேர்ந்து எடுத்துக் கொள் என்ற உரிமையை தந்து இருந்தார்கள். பெண்ணின் தந்தை நினைத்து இருந்தால், அந்தப் பெண்ணை யாராவது ஒரு அரசனுக்கு மணமுடித்து இருக்கலாம். அப்படிச்  செய்யாமல், மணமகனை தேர்ந்து எடுக்கும் உரிமையை பெண்ணுக்கு கொடுத்து இருந்தார்கள்.

"ஹா...அதெல்லாம் இராஜா வீட்டு பெண்களுக்கு...சாதாரண பெண்களுக்கு அப்படியெல்லாம் உரிமை இருந்ததா ?" என்று கேட்பதற்கு முன், மீண்டும் ஒரு முறை நம் இலக்கியங்களை, வரலாற்றினை வாசியுங்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

காசி இராஜன் பெண்கள் மூவரும் சுயம்வர மண்டபத்துக்கு மாலையும் கையுமாக வருகிறார்கள்.

அங்கே பல மன்னர்கள் காத்து இருந்தார்கள். அவர்களோடு பீஷ்மரும் இருந்தார். அவரைப் பார்த்ததும், அந்தப் பெண்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, இந்த வயதான தாத்தா எதுக்கு இங்க வந்து   உட்காந்து இருக்காருன்னு ...


பாடல்


'கையில் மாலை இவற்கு' எனக் கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்,
வைய மன்னன் வய நிலை நோக்கியே,
ஐயம் உற்றனர், அன்புறு காதலார்.


பொருள்


'கையில் மாலை இவற்கு' எனக்  = கையில் உள்ள மாலை இவருக்கு என்று

கன்னியர் = அந்த கன்னிப் பெண்கள்

வெய்ய = ஆசை கொண்ட

நெஞ்சொடு = மனதோடு

மின் என வந்தவர், = மின்னலைப் போல் வந்தனர் (வாம்மா மின்னல்)

வைய = உலகுக்கே

மன்னன் = அரசனான  (பீஷ்மரின்)

வய நிலை = வயதின் நிலை

நோக்கியே, = நோக்கி

ஐயம் உற்றனர் = சந்தேகப் பட்டனர்

அன்புறு காதலார் = அன்பும் காதலும் கொண்ட அந்தப் பெண்கள்

ஒரு புறம் வெவ்வேறு நாட்டின் அரசர்கள்.

இன்னொரு புறம் பீஷ்மர்

மற்றொரு புறம் கையில் மாலையுடன் காசி இராஜாவின் மூன்று பெண்கள்.

அந்த சூழ்நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்து என்ன நடக்கும்?

அந்தப் பெண்கள் மற்ற அரசர்கள் கழுத்தில் மாலையை போடுவார்களா?

அல்லது பீஷ்மர் கழுத்தில் மாலையைப் போடுவார்களா?

அல்லது பீஷ்மர் அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து செல்வாரா? அப்படிப் போனால் மற்ற  அரசர்கள் சும்மா இருப்பார்களா?

கதை சூடு பிடிக்கிறதா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/4.html

Saturday, January 18, 2020

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன்

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன் 


தன் தம்பிக்கு மணம் முடிக்க என்று காசி இராஜனின் மகள்களின் சுயம்வரத்துக்கு பீஷ்மர் போகிறார்.

தம்பிக்காக போகிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் குழப்புகிறார்கள்.

"இந்தக் கிழவன் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தவன் ஆயிற்றே, இப்போது , இந்த வயதான காலத்தில் எதற்கு இந்த சுயம்வரத்துக்கு வருகிறான்" என்று ஏனைய அரசர்கள் கலங்கினார்கள்.

கலக்கத்துக்குக் காரணம், சுயம்வரம், போட்டி என்று வந்து விட்டால், பீஷ்மரை தங்களால் வெல்ல முடியாது என்பதால்.

பாடல்

குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம்
ஒருத்தரன் றறிவாருலகோர்பலர்
விருத்தன்வந்தனன் மேலினியேதிவன்
கருத்தெனாமனங் காளையர்கன்றினார்.

பொருள்

குருத்தலந்தனிற் = குருகுலத்தில்

கூறிய வஞ்சினம் = முன்பு செய்த வஞ்சினம் (சத்தியம், விரதம்)

ஒருத்தரன் றறிவாருலகோர்பலர் = ஒருத்தர் அன்றி அறிவார் உலகோர் பலர்

விருத்தன் = வயதானவன்

வந்தனன் = வந்தனன்

மேலினியேதிவன் = மேல் இனி ஏது இவன்

கருத்தெனா = கருத்து என்று

மனங்  = மனத்தில்

காளையர் = அங்கு வந்திருந்த காளை போன்ற இளைய அரசர்கள்

கன்றினார். = வருந்தினர்

விருத்தன் என்றால் வயதானவன் என்று பொருள்.

விருந்தா நாரி பதி விரதா என்று வடமொழியில் ஒரு பழ மொழி உண்டு. வயதான பெண்  பதி விரதை என்பது பொருள்.


அசலம் என்றால் மலை என்று பொருள்.

விருத்தாச்சலம் என்றால் வயதான மலை என்று பொருள். விருதாச்சலத்துக்கு திருமுதுக்குன்றம்  என்பது தமிழ் பெயர்.

அங்குள்ள அம்பிகையின் பெயர் விருத்தாம்பிகை. தமிழில் பெரிய நாயகி.  வயதானவளாக காட்சி தருகிறாள்.

குகை நமச்சிவாயர் என்று ஒரு பக்தர் இருந்தார். அவர் பெரியநாயகி நோக்கி சில பாடல்களை பாடி இருக்கிறார். அவருக்கு பசிக்கும் போதெல்லாம் அன்னைக்கு கட்டளையிடுவார். "சோறு கொண்டு வா" என்று. தாயிடம் என்ன கெஞ்ச வேண்டி இருக்கிறது. "எனக்குப் பசிக்கிறது, சோறு கொண்டு வா" என்று  உரிமையுடன் கேட்பார்.

பெரிய நாயகியிடம் ஒரு நாள்

"நன்றி புனையும் பெரிய நாயகியே நுங்கிழத்தி
என்றும் சிவன்பாலிடக் கிழத்தி-நின்ற
நிலைக்கிழத்தி மேனி முழுநீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா!"

என்று பாடினார். அம்பாளை கிழவி, கிழவி என்றே பாடினார்.

எந்த பெண்ணுக்குத்தான் தான் கிழவி என்று ஏற்றுக் கொள்ள மனம் வரும். இப்போதெல்லாம்  பாட்டி என்று சொல்லக் கூடாது என்கிறார்கள். ஆச்சியம்மா  என்று சொல் என்று பேரப்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறார்கள். பாட்டி என்று சொன்னால் வயதானவளாகத் தெரியுமாம்.

அம்பாள் நேரில் வந்து, "என்னப்பா என்னை இப்படி கிழவி கிழவி என்று சொல்லி விட்டாயே. நல்லாவா இருக்கு. இளமை உள்ளவளாகப் பாடு" என்று வேண்டினாள்.

குகை நமச்சிவாயரும்,

"முத்தாநதி சூழும் முதுகுன்றுறைவாளே 
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர் இடம் தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறு கொண்டு வா!"

என்று பாடினார்.

அம்பாளும் மகிழ்ந்து சோறு கொண்டு வந்து தந்தாளாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/3.html

Friday, January 17, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான்

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான் 


காசி மன்னனுக்கு மூன்று பெண் குழந்தைகள்.  அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை என்பது அவர்கள் பெயர். அவர்களுக்கு திருமண வயது வந்ததும், காசி மன்னன், திருமணம் பற்றி அறிவித்தான்.

அழகில் சிறந்த அந்ப் பெண்களை மணந்து கொள்ள பல அரசர்கள் நான் நீ என்று ஆசைப்பட்டார்கள்.

பீஷ்மனும், தன்னுடைய தம்பியான விசித்திர வீரியனுக்கு அந்த பெண்களை மனமுடித்து வைக்க எண்ணினான். எனவே, சுயம்வரத்தில் கலந்து கொள்ள, பீஷ்மரும் வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்


பாடல்

வரித்தமன்னர் மறங்கெடவன்பினால்
திரித்துமெம்பியைச் சேர்த்துவல்யானெனாத்
தரித்தவில்லொடுந் தன்னிளவேந்தொடும்
வரித்தவெண்குடை வீடுமனேகினான்.

பொருள்

வரித்த மன்னர் = (தங்கள் மனதுக்குள் அந்தப் பெண்களை) வரித்துக் கொண்ட. அதாவது, அந்தப் பெண்கள்தான் என் மனைவி என்று எல்லா அரசர்களும் மனதுக்குள் நினைத்து இருந்தார்கள்.

 மறங்கெட = மறம் + கெட = அவர்களின் வீரம் கெட

வன்பினால் = வன்மையால்

திரித்து = அவர்களை திரும்பி ஓடச் செய்து

மெம்பியைச்  =என் தம்பியிடம்

சேர்த்துவல்யானெனாத் = சேர்த்து வைப்பேன் நான் என்று

தரித்த   வில்லொடுந் = வில்லை எப்போதும் ஆடை போல தரித்து இருக்கும்


தன்னிள வேந்தொடும் = தன்னுடைய இளைய வேந்தனோடும்

வரித்த வெண்குடை = சூடிய வெண் குடை உள்ள

வீடுமனேகினான். = வீடுமன் (பீஷ்மன்) சென்றான்

சுயம்வரத்தில் கலந்து, வீரத்தை நிலை நாட்டி, அந்தப் பெண்களை கொண்டு வந்து தன் தம்பிக்கு மணம் முடிக்க பீஷ்மர் புறப்பட்டார்.

அடுத்து என்ன ஆகப் போகிறதோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/2.html

Tuesday, January 14, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - ஒரு முன்னோட்டம்

வில்லி பாரதம் - சிகண்டி  - ஒரு முன்னோட்டம் 


பெண்ணின் மனதை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை.

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாததால் வரும் சிக்கல்களை வைத்துத்தான் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் பின்னப் பட்டு இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.

ஒரு கூனியை, கைகேயியை, சூர்பனகையை புரிந்து கொள்ளாமல் அவர்களின் உணர்சிகளோடு ஆண்கள் தவறாக விளையாடியதால் என்ன நிகழ்ந்தது என்று இராமாயணம் காட்டுகிறது.

பாரதமும் அப்படித்தான்.

அதில் ஒரு மிக மிக சுவாரசியமான பாத்திரம் சிகண்டி.

எனக்குத் தெரிந்து, ஒரு அலியின் மன நிலை எப்படி இருக்கும் என்று எந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லை. ஆணின் மனம் புரிகிறது. பெண்ணின் மனம், சிக்கலாக இருந்தாலும், பின்னால் ஓரளவு புரிகிறது.

இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அலியின் மனம் எப்படி வேலை செய்யும்.

சிகண்டியை அலி என்று கூட சொல்ல முடியாது. பெண்ணாய் பிறந்து, ஆணாக மாறிய ஒரு பாத்திரம். இதுவரை வேறு எந்த இலக்கியத்திலும் கேள்விப் படாத ஒரு பாத்திர படைப்பு.

காதல் - தோல்வி - பச்சாதாபம் - ஏளனம் - கோபம் - ஆங்காரம் - வன்மம் - விடா முயற்சி - என்று அந்த உணர்சிக்களின் படைப்பு  சிகண்டி.

பாரதத்தின் மிகப் பெரிய பாத்திரமான பீஷ்மரை கொன்ற பாத்திரம்.

சிகண்டி இல்லாவிட்டால், பாண்டவர்கள் போரை வென்றிருக்க முடியாது.

பார்த்ததில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய பாத்திரம் சிகண்டி.

எல்லாம் முடிந்த பின்,  சிகண்டி மேல் நமக்கு ஒரு பரிதாபம்தான் வரும். ஒரு பச்சாதாபம்   .தான் வரும். அப்படி ஒரு பாத்திரம்.

தவறு யார் மேல் என்று நம்மால் உறுதி செய்ய முடியாத கதைப் போக்கு.

பீஷ்மர் செய்ததும் சரிதான். சிகண்டி செய்ததும் சரிதான். என்று நம்மை நியாய அநியாயங்களுக்கு நடுவில் நிறுத்தி ஒரு பக்கமும் சாய முடியாமல் செய்கிறது  பாரதக் கதை இந்த சிகண்டி பாத்திரத்தின் மூலம்.

மற்றவர்களின் உணர்ச்சிகளை நாம் எவ்வளவு எச்சரிக்கையாக கையாள வேண்டும்  என்று உணர்த்தும் பாத்திரம்.

யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை அம்புப் படுக்கையில் படுக்க வைத்தது  அவரின் மெத்தனப் போக்கு.  அம்பையின் உணர்வுகளை மதிக்காமல் இருந்ததால் , உடல் எல்லாம் சல்லி சல்லியாக துளை பட்டு பீஷ்மர் கிடந்தார்.

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காததால் பீஷ்மரே அந்த பாடு பட்டார் என்றால், நாமெல்லாம் எந்த மூலை?

வர இருக்கும் நாட்களில் சிகண்டி பற்றி காண இருக்கிறோம்.

interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_14.html




Saturday, January 11, 2020

நன்னூல் - நூலின் அழகு

நன்னூல் - நூலின் அழகு 


எப்படி அழகாக எழுதுவது?  ஒரு சிறந்த நூல் எப்படி இருக்க வேண்டும்? அலுவலகத்தில் கூட, நிறைய "presentation" தர வேண்டி இருக்கும். அவை எப்படி இருக்க வேண்டும். இன்று, "Steve Jobs" presentation உலகத் தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.  நம்மவர்கள், ஒரு சிறந்த நூலோ, அல்லது presentation ஓ எப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்து விட்டுப் போய் இருக்கிறார்கள். நாம் இதைப் படிப்பதை விட்டு விட்டு, "ஆ" என்று மேல்நாட்டாரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அழகான எழுத்து, புத்தகம், presentation எப்படி இருக்க வேண்டும்?

பாடல்

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.

பொருள்


சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் = இது முதல் சூத்திரம். எதையும் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.  வள வள என்று எழுதிக் கொண்டோ பேசிக் கொண்டோ இருக்கக் கூடாது. அதற்காக, ரொம்பவும் சுருக்கி என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் போகும் படியும் இருக்கக் கூடாது.


நவின்றோர்க் கினிமை = யாருக்கு சொல்கிறோமோ, அவர்களுக்கு அது இனிமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கேட்க மாட்டார்கள்.


நன்மொழி புணர்த்தல் = நல்லவற்றை சொல்ல வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்றவற்றை சொல்லக் கூடாது.

ஓசை யுடைமை = சந்த நயம் இருக்க வேண்டும். ஒலி அழகு இருக்க வேண்டும்.


யாழமுடைத் தாதல் = ஆழம் உடைத்தாதல். ஆழமான பொருள் இருக்க வேண்டும். சும்மா நுனிப் பபுல் மேயக் கூடாது

முறையின் வைப்பே = சொல்வதை முறைப்படுத்திச் சொல்ல வேண்டும். ஒரு ஒழுங்கு வேண்டும். முன்னுக்கு பின் அலைக்கழிக்கக் கூடாது.  உயர்ந்தவற்றை முதலில் சொல்லி, மற்றவற்றை பின்னால் சொல்ல வேண்டும். ஆசிரியரும் மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும். மாறாக, மாணவர்களும் ஆசிரியரும் வந்தார்கள் என்று சொல்லக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைமையில் மாதாவுக்கு முதல் இடம், தெய்வத்துக்கு நாலாவது இடம். முதல் அமைச்சர் அவருடைய செயலாளரோடு வந்தார் என்று சொல்ல வேண்டும். செயலாளர், முதலமைச்சரோடு வந்தார் என்று சொல்லக் கூடாது.



யுலகமலை யாமை  = உலகம் மலையாமை?  உலகமே மலைக்கும் படி சொல்லக் கூடாது. மலைத்தல் என்றால் , 'இது எப்படி இப்படி இருக்க முடியும் " என்று திகைக்க வைக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி ஒரு பெரிய பொருளை  விளங்கச் செய்ய வேண்டும்.

விழுமியது பயத்தல்  = சிறப்பானவற்றை சொல்ல வேண்டும். ஒரு நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை சொல்கிறோம் என்றால், இந்த வருடம் என்ன சாதித்தோம் என்று சொல்ல வேண்டும், என்ன புதிதாக செய்தோம் என்று சொலல் வேண்டும்.. ஒரு பொருளை விற்கிறோம் என்றால், அந்தப் பொருளின் சிறப்பு என்ன என்று சொல்ல வேண்டும்.

விளங்குதா ரணத்ததாகுதல்  = விளங்கு உதாரணத்து ஆகுதல். அதாவது, கடினமான ஒன்றை எளிய உதாரணம் மூலம் சொல்லி விளக்க வேண்டும்.

னூலிற் கழகெனும் பத்தே. = நூலினிக்கு அழகெனும் பத்தே. இந்த பத்தும் ஒரு நூலுக்கு அழகு சேர்ப்பவை.

நூல் என்றால் நூலோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. பேச்சு, presentation என்று  அதை நீட்டிக் கொள்ளலாம்.

அடுத்த முறை பேசுவதற்கு முன்போ, ஏதாவது ரிப்போர்ட் அனுப்பும் முன்போ, presentation தருவதற்கு முன்போ, இந்த 10 விதிகளும் கடை பிடிக்கப் பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒவ்வொரு தடவையும் இவற்றைக் கொண்டு சரி  பார்த்துக் கொண்டே இருந்தால், நாளடைவில் அழகாக எழுதுவது என்பது தானே வந்து விடும்.


சொன்னால் மட்டும் போதாது. அழகாகவும் சொல்ல வேண்டும்.

இது நல்லா இருக்கா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_73.html

பெரிய புராணம் - தாங்க ஒண்ணா துன்பம் வந்த போது

பெரிய புராணம் - தாங்க ஒண்ணா துன்பம் வந்த போது 


எப்படியோ துன்பம் வந்து விடுகிறது. நம் பிழை என்று இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் துன்பம் வந்து நம்மை வேதனை செய்கிறது.

துன்பம் வந்து விட்டால், தளர்ந்து போகிறோம். என்ன செய்யப் போகிறோம், இதில் இருந்து எப்படி மீழ்வது என்று தவிக்கிறோம்.

துன்பமே இல்லாத வாழ்வு இருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.

இன்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை , இந்த துன்பம் வரமால் இருந்தால் சரி என்று நினைக்கிறோம்.

நாமாவது இந்த உலக வாழ்க்கையில் ஈடுபட்டு, ஏதேதோ செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ தவறு நிகழ்ந்து விடலாம். தெரியாமல் யாரையாவது மனம் புண்பட பேசி இருப்போம். தெரிந்து அல்ல, தெரியாமல். தெரியாமல் குடித்தால் நஞ்சு நம்மைக் கொல்லாதா. செய்த வினைக்கு மறு வினை வரும் தானே?

அப்பர், சுந்தரர், மணிவாசகர் போன்ற பெரியவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

சிறு வயதில், சைவ சமயம் விட்டு, சமண சமயத்தில் சேர்ந்து விட்டார் அப்பர். அவருடைய தமக்கையார், பெயர் திலகவதியார். திலகவதியார் ஒரு நாள் சிவனிடம் முறையிட்டார் ..."என் தம்பி இப்படி போய் விட்டானே, அவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நீ தான் அவனை நல் வழிப் படுத்த வேண்டும் " என்று  மனம் உருகி வேண்டினார்.

சிவன், அவருடைய கனவில் வந்து சொன்னார், "உன் தம்பி முன்பே என்னை நோக்கி தவம் செய்திருக்கிறான். அவனுக்கு சூலை நோயை கொடுத்து நல் வழிப் படுத்துவோம்" என்று.

சிவன் நினைத்தால், நாவுக்கரசரை மனம் மாறச் செய்ய முடியாதா? தாங்க முடியாத வயிற்று வலியை கொடுத்தார். நாவுக்கரசர் வலி தாளாமல் துடித்தார்.

அந்த வலி வந்ததால், அவர் தன்னுடைய தமக்கையை நோக்கி வந்தார்.  பின் சைவ சமயத்தை  வந்து அடைந்தார். தேவாரம் பாடினார்.

செய்தி அதுவல்ல.

துன்பம் வரும் போது , தோல்வி வரும் போது தவிக்கிறோம். துவள்கிறோம். அது எல்லாம் சரி.  அந்த துன்பம் கூட, தோல்வி கூட ஏதோ ஒரு பெரிய நன்மைக்கு  என்று நாம் நினைக்க வேண்டும்.

தோல்வியை கண்டு துவண்டு விடக் கூடாது. ஏதோ ஒரு மிகப் பெரிய வெற்றியைத் தரவே  இறைவன்/இயற்கை இந்த தோல்வியை/துன்பத்தை நமக்குத் தந்திருக்கிறது என்று நினைக்க வேண்டும்.

சுடு மணலில் , செருப்பு இல்லாமல் நிற்க வைத்தார்கள் மணி வாசகரை.

தாள முடியாத வயிற்று வலியால் துன்பப் பட வைத்தார் நாவுக்கரசரை.

அந்தத் துன்பங்களுக்கு பின்னால், அவர்கள் பக்தி உலகுக்குத் தெரிந்தது.

ஏதோ ஒன்றை வெளிக் கொணரவே துன்பங்களும், தோல்விகளும், அவமானங்களும்  வருகின்றன என்று நம்ப வேண்டும். அவற்றை வென்று  முன்பு இருந்ததை விட பெரிய  , உயரிய நிலைக்குப் போக வேண்டும்.



பாடல்

மன்னுதபோ தனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்
"உன்னுடைய மனக்கவலை பொழிநீ;யுன் னுடன்பிறந்தான்
 முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்
 அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வ"மெனவருளி,


பொருள்


மன்னு = நிலைத்த

தபோதனியார்க்குக் = தவம் புரிந்த அந்த பெண்மணிக்கு

கனவின்கண் = கனவில்

மழவிடையார் = மழு என்ற ஆயுதத்தைக் கொண்ட சிவனார்

"உன்னுடைய = உன்னுடைய

மனக்கவலை = மனக் கவலையை

பொழிநீ; = ஒழி நீ

யுன்னுடன்பிறந்தான் = உன் உடன் பிறந்தான் (நாவுக்கரசர்)

முன்னமே = முன்பு, முந்தைய பிறவியில்

முனியாகி  = முனிவனாகி

யெனையடையத் = என்னை அடையத்

தவமுயன்றான் = தவ முயற்சிகள் மேற் கொண்டான்

அன்னவனை = அவனை

யினிச் = இனி

சூலை = சூலை நோய் (கொடிய வயிற்று வலி)

மடுத்தாள்வ = மடுத்து ஆள்வோம்

"மெனவருளி, = என்று அருளினார்

பரீட்சை வைத்துதானே மார்க் போட முடியும். மார்க் வாங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஐயோ பரீட்சை வந்து விட்டதே என்று அலறினால் என்ன அர்த்தம்.

கொஞ்சம் படித்தவுடன் , ஒரு பரீட்சை வரும். அதில் தேறினால், மேலும் படிக்கலாம்,  அதில் இன்னொரு பரீட்சை வரும்.

பரீட்சை கொஞ்சம் கடினம் தான். இருந்து படிக்க வேண்டும், எழுத வேண்டும்.

வாழ்க்கையும் அப்படித்தான். அப்பப்ப சோதனைகள் வரும்.

சோதனை வரும் என்று எதிர் பார்த்து அதற்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஒன்றும் படிக்காமல் பரீட்சை எழுதப் போனால், எப்படி. நடுக்கம் வரத்தான் செய்யும்.

அடுத்து என்ன சோதனை வரும் என்று எண்ணிப் பாருங்கள். அதை எப்படி சமாளிப்பது என்று  திட்டம் போடுங்கள்.

நம்மை தினமும் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி செய்தால், எளிதாக தேர்ச்சி பெற முடியும். இல்லை என்றால், கையில்  வினாத்தாளை வைத்துக் கொண்டு திரு திரு என்று முழிக்க வேண்டியதுதான்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_11.html

Friday, January 10, 2020

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே 


மரணத்தை கண்டு அஞ்சாதவர் யார். வாழ்க்கை எவ்வளவுதான் துன்பம் நிறைந்ததாக இருந்தாலும், சாவதற்கு யாருக்கும் மனம் வருவதில்லை. சாகாமல் இருக்க வழி இருக்கிறதா என்றால் இருக்கிறது.

சாகாமல் இருக்க முடியுமா ? முடியும்.

பிறக்காமல் இருந்தால்.

பிறந்தால்தான் சாக முடியும். இறவா வழி வேண்டும் என்றால், பிறவாமல் இருக்க வேண்டும்.

பிறந்தாகி விட்டது. பிறந்த நாள் தொட்டு இறுதி நாள் வரை, அழியக் கூடிய பொருள்களையே தேடி அலைகிறோம். பொம்மை, பென்சில், சாக்லேட், பூ, சைக்கிள், ரிப்பன், கண் மை, சட்டை, பாவாடை,  எதிர் பாலினர்மேல் ஈர்ப்பு, செல்வம், பிள்ளைகள் என்று அனைத்தும் அழியக் கூடியவை. அவை பின்னால் அலைகிறோம். பின் இறுதி நாளில், என்னத்த செய்தோம் இத்தனை நாள் ...வாழ் நாள் எல்லாம் அலைந்து கண்டது என்ன என்று பச்சாதாபம் வருகிறது. அழியாத பொருள் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அருணகிரிநாதர் உருகுகிறார்....

"இறவாமல், பிறவாமல் என்னை ஆட்கொள் குருநாதா. என்றும் நிலைத்து நிற்கும் பெருவாழ்வை எனக்கு அருள்வாய். நான்கு விதமான அறத்தை சொல்லுபவனே, அவிநாசியில் காட்சி தரும் பெருமாளே "

என்று.


பாடல்

இறவாமற் பிறவாமல் எனையாள்சற்  குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்  தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்  குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.



பொருள்

இறவாமற் = இறவாமல்

பிறவாமல் = பிறவாமல்

எனையாள் = என்னை ஆட்கொண்ட

சற்குருவாகிப் = சத்குருவாகி

பிறவாகித்  = மற்றவை யாவும் ஆகி

திரமான  = ஸ்திரமான, நிலையான

பெருவாழ்வைத் = பெரு வாழ்வைத்

தருவாயே = தருவாயே

குறமாதைப் புணர்வோனே = குறவள்ளியோடு சேர்பவனே

குகனே = குகனே

சொற் = பெருமை வாய்ந்த

குமரேசா = குமரேசா

அறநாலைப்  = நான்கு அறங்களை

புகல்வோனே  = போதிப்பவனே

அவிநாசிப் = அவிநாசியில் வீற்றிருக்கும்

பெருமாளே. = பெருமாளே

அது என்ன நான்கு அறம் ?

அறம் , பொருள், இன்பம் , வீடு என்ற நான்கையும் அறமாக கொள்கிறார் அருணகிரி நாதர்.


நாலுதரம் வாசித்தால் மனதுக்குள் ஒட்டிக் கொள்ளும் பாடல்.

திரமான பெருவாழ்வு என்ன என்று சிந்திக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_10.html

Thursday, January 9, 2020

கம்ப இராமாயணம் - கிண்டல், நக்கல், நையாண்டி

கம்ப இராமாயணம் - கிண்டல், நக்கல், நையாண்டி 


கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களை, ஏதோ அதில் உள்ள கதைக்காக படிக்காமல்,அதில் உள்ள வாழ்வியல் பாடங்களுக்காக படித்ததால் நமது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

என்னைக் கேட்டால், கம்ப இராமாயணத்தின் மிகப் பெரிய பாடம், எளியவர்களை ஏளனம் செய்யாதே என்ற பாடம் தான்.


மற்றவர்களை கிண்டல்  பண்ணுவது,நக்கல், நையாண்டி போன்றவை செய்பவர்களுக்கு வேண்டுமானால்  அது ஒரு விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கலாம். யாரை நக்கல் பண்ணுகிறார்களோ, பெரும்பாலான சமயங்களில், கிண்டல் பண்ணப்பட்டவரின் மனம் புண் படும் என்பதே உண்மை.

ஒருவரின் உடல்வாகைப் பற்றி, அவர்கள் பேச்சு பற்றி, அவர்கள் செய்த ஏதோ ஒரு தவறு பற்றி கிண்டல் பண்ணுவது எளிது. அதுவும் பலர் முன்னால், அப்படிச் செய்தால், நிச்சயம் அவர்கள் மனம் புண் படும்.

மனைவியை மற்றவர்கள் முன் விமர்சினம் செய்வது, வேலையாட்களை எள்ளி நகையாடுவது, கீழே வேலை பார்ப்பவர்களை கிண்டல் பண்ணுவது போன்றவை மற்றவர்களுக்கு வருத்தம் தரும் செயல் என்று நாம் உணர வேண்டும்.  என் மனைவியை கிண்டல் பண்ண எனக்கு உரிமை இல்லையா என்று மார்தட்டக் கூடாது. இல்லை. அவளின் மனதை புண் படுத்த அதிகாரம் இல்லைதான்.

இராமன், இராசா வீட்டு கன்னுக்குட்டி. அரண்மனையில் ஆடிப் பாடி சுதந்திரமாக திரிந்திருப்பான். அங்கே, கூனி அங்கும் இங்கும் செல்வதைப் பார்த்து இருப்பான். அம்பில் மண் உருண்டையை வைத்து, அவள் கூன் மேல் அடித்து விளையாடி இருக்கிறான். அவனுக்கு அது ஒரு விளையாட்டு. [பொழுது போக்கு. அவள் முதுகில் அடித்து விட்டு,கை கொட்டிச் சிரித்து இருப்பான்.

விளையாட்டுப் பிள்ளைதானே. அதுவும் மூத்த இளவரசன். யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள்.

ஆனால், அந்த வலி கூனிக்கு இருந்து கொண்டே இருந்தது.

அவள் சமயம் பார்த்து திருப்பி அடித்தாள். அந்த வலியை இராமானாலும் தாங்க முடியவில்லை.  பின்னால், சுக்ரீவனிடம் சொல்லி அங்கலாய்க்கிறான்.

கூனி அடித்த அடி எப்படி இருந்தது ?

தயரதன் இறந்தான், இராமன் கானகம் போனான், இலக்குவன் மனவியைப் பிரிந்து கானகம் போனான்.  பரதன் மனவியைப் பிரிந்து 14 வருடம் அரசை விட்டு விட்டு , நந்திக் கிரமாத்தில் தவம் கிடந்தான். சீதை, இராவணனிடம் சிறை பட்டு  துன்பம் அனுபவித்தாள்.

இராஜ குலத்தையே திருப்பி போட்டது, கூனியின் கோபம்.

இராமன், கூனியை அம்பால் அடித்த போது, யாராவது அவனுக்குச் சொல்லி இருக்க வேண்டும்.  "வயதானவர்களை, உடல் ஊனம் உற்றவர்களை இப்படிச் செய்யக் கூடாது. போ, போய் மன்னிப்பு கேள்" என்று சொல்லி இருக்க வேண்டும்.

அங்கே திருத்தாமல் விட்ட சின்ன தப்பு, எப்படி வளர்ந்து என்ன பாடு படுத்தியது? இராமன் நினைத்து இருப்பானா, இந்த கூனி எனக்கு வரும் அரசையே தடுத்து நிறுத்தி விடுவாள் என்று. இவளால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக இருந்திருப்பான்.

இப்பவும், வீட்டில் பிள்ளைகள் தவறு செய்வார்கள். மரியாதைக் குறைவாக பேசுவார்கள், மட்டு மரியாதை இல்லாமல் பேசுவார்கள், எளியவர்களை ஏளனம் செய்வார்கள். "ஆஹா, என் பிள்ளை எப்படி பேசுகிறான் பார்...அவங்க அப்பாவை  அவன் குரங்குனு தான் சொல்லுவான், அவருக்கு அறிவே இல்லேனு  அவர் முன்னாலேயே சொல்லுவான்" என்று பிள்ளையின் சாமர்த்தியத்தை  பெருமிதப் படும் தாய்மார்கள், இராமனை நினைக்க வேண்டும்.

அப்பேற்பட்ட இராமனே  அந்த பாடுபட்டான் என்றால், நம் பிள்ளை என்ன பாடு படுவானோ என்று பதற வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தால் உடனே அதை  திருத்த வேண்டும். மாறாக, "அடடா, வேலைக்காரியின் பிள்ளையை  விட்டான் பாரு ஒரு அடி" என்று சொல்லி மகிழக் கூடாது.

அரண்மைனையில் ஒரு வயதான கிழவிக்கு செய்த சின்ன தீங்கே இவ்வளவு பெரிதாக  முடியும் என்றால், வீட்டில் கணவனை/மனைவியை/ பிள்ளைகளை/பெற்றோரை/ மாமனார்/மாமியாரை/ நண்பர்களை என்று யாரையுமே உதாசீனம் செய்யக் கூடாது.

யாருடைய அறியாமையையோ, இயலாமையையோ கண்டு ஏளனம் செய்யக் கூடாது.

பாடல்

தொண்டை வாய்க் கேகயன்
    தோகை கோயில் மேல்
மண்டினாள், வெகுளியின்
    மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன்
    பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன்
    உள்ளத்து உள்ளுவாள்.


பொருள்


தொண்டை = கோவை பழத்தைப் போல சிவந்த

வாய்க் = இதழ்களை உடைய

கேகயன்  தோகை  = கேகய மன்னன் மகள் (கைகேயி)

கோயில் மேல் = இருக்கும் அரண்மனைக்கு

மண்டினாள் = வந்து சேர்ந்தாள் (யார்? கூனி)

வெகுளியின் = கோபத்தால்

மடித்த வாயினாள் = உதட்தை கடித்துக் கொண்டு

பண்டை நாள் = முன்பு ஒரு நாள்

இராகவன் = இராமன்

பாணி = கை. பாணி என்றால் கை. பாணி கிரஹணம் என்றால் கையைப் பிடித்தல். சப்பாணி என்றால், சப் சப் என்று கையால் தாளம் போடுதல்

வில் உமிழ் = வில் உமிழ்ந்த

உண்டை = மண் உருண்டை

உண்டதனைத்  = தன் மேல் பட்டு வலி உண்டாக்கியதை

தன் = தன்னுடைய

உள்ளத்து = மனதில்

உள்ளுவாள். = நினைப்பாள்

இராமன், பாடம் படித்தான் இல்லை. பின்னாளில், சூர்பனகையிடமும் கொஞ்சம்  நக்கலும் நையாண்டியுமாக பேசி இருக்கிறான். அது அவனைப் புரட்டிப் போட்டது.

யாரையும் மனம் புண் படும்படி பேசவோ, செய்யவோ கூடாது.

வார்த்தைகளை பண் படுத்த படிக்க வேண்டும்.

மரியாதை, இனிமை, அடக்கம் இவற்றை எப்போதும் கை கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.

நல்ல பாடம் தானே?


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_9.html

Tuesday, January 7, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம் 



இன்பம் வருதோ இல்லையோ, துன்பம் வராமல் இருந்தால் போதும் என்று தானே எல்லோரும் நினைப்பார்கள். பல கோடி சொத்து வராட்டாலும் பரவாயில்லை, கையில இருக்குற காசும் பறி போய்விடக் கூடாது என்பதில்தான் எல்லோரும் கவனமாய் இருப்பார்கள்.

பணம் இல்லாமையால் வரும் துன்பம், நோய், உறவுகளில் சிக்கல், எதிர்காலம் பற்றிய பயத்தால் வரும் துன்பம், பிள்ளைகளுக்கு ஒன்றுரம் ஆகி விடக் கூடாதே என்ற பயம்...எல்லாம் விட்டு,கடைசியில் நரகத்துக்குப் போவோமோ என்ற பயம். நரகமும் ஒரு கெடுதல் தானே.

துன்பம் பல வழிகளில் வரும். கணவன்/மனைவியினால், பிள்ளைகளால், பெற்றோர்களால், அரசாங்கத்தால், உயர் அதிகாரிகளால், நாட்டின் பொருளாதார நிலமையால், சுற்றுப் புற சூழ்நிலைகளால்...இப்படி பல இடங்களில் இருந்து துன்பம் வருகிறது.

இம்மையிலும், மறுமையிலும் வரும் துன்பங்களில் இருந்து விடுபட ஒரே ஒரு எளிய வழியைச் சொல்கிறார் நம்மாழவார்.

"கேசவா" என்று சொன்னால் போதும். எல்லா இடர்களும் விலகும். கேசவா என்று சொல்லிக் கொண்டே திருவனந்தபுரம் ஒரு நடை போய் வாருங்கள் என்கிறார்.


பாடல்


கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.


பொருள்


கெடுமிட ராயவெல்லாம்  = கெடும் + இடர் + ஆன + எல்லாம். இதை கொஞ்சம் மாற்றி போடுவோம். இடர் ஆன எல்லாம் கெடும். அனைத்து துன்பங்களும் கெட்டுப் போகும். விலகிப் போய் விடும்.


கேசவா வெள்ள  = கேசவா என்று சொல்ல

நாளும் = ஒவ்வொரு நாளும்

கொடுவினை = கொடிய வினை செய்யும்

செய்யும் = செய்யும்

கூற்றின் = எம தர்மனின்

தமர்களும் = கூட்டாளிகளும்

குறுககில்லார் = குறுக்கே வர மாட்டார்கள்

விடமுடை = விஷம் உள்ள

யரவில் = அரவில் , பாம்பில்

பள்ளி விரும்பினான் = பள்ளி கொள்ள விரும்பிய

சுரும்பலற்றும் = சுரும்பு + அலற்றும். சுரும்பு என்றால் வண்டு. வண்டுகள் ஆர்ப்பாராம் செய்யும் ரீங்காரமிடும்

தடமுடை வயல் = தடத்தை உடைய வயல்கள் நிறைந்த

அனந்தபுரநகரிப் = திரு அனந்தபுரம்  என்ற நகரம்

புகுதுமின்றே. = புகுத்தும் + இன்றே .இன்னிக்கே போய் வாருங்கள்


108 திவ்ய தேசங்களில் ஒன்று.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_7.html



Monday, January 6, 2020

பட்டினத்தார் - தீங்குகள்

பட்டினத்தார் - தீங்குகள் 


நாம யாருக்கு என்ன தீங்கு செய்கிறோம்?  யார் சொத்தையும் களவாடுகிறோமா? அல்லது பொய் சொல்லி பணம் சம்பாதிக்கிறோமா? கொலை, களவு, நம்பிக்கை துரோகம் என்று செய்கிறோமா? நாம உண்டு நம்ம வேலை உண்டு என்று இருக்கிறோம். இதில் தீவினை எங்கிருந்து வருகிறது. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத போது நமக்கு ஏன் துன்பம் வருகிறது?

தவறு, தீமை என்று தெரியாமலேயே பல தீமைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்ளலாம். தெரியாவிட்டால்? அதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்போம் அல்லவா?

அது என்ன தெரியாத தவறு?

பட்டினத்தார், பட்டியல் தருகிறார்.

சொல்லால் வரும் குற்றம்.  யாரையும் மனம் நோக்கும் படி பேசுவது, மற்றவர்களை ஏளனமாக பேசுவது, கோபித்து பேசுவது, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவது என்று இப்படி சொல்லால் பல குற்றங்களை செய்து கொண்டு இருக்கிறோம்.

சிந்தையால் வரும் குற்றம்.  பொறாமை. பொருந்தா காம சிந்தனை. மற்றவனுக்கு தீமை வர வேண்டும் என்று நினைப்பது. இப்படி சிந்தியால் பல குற்றங்கள் செய்கிறோம்.

பார்வையால் வரும் குற்றங்கள். ஒருவரை பார்வையால் நோகடிக்க முடியும்.  பசி என்று வரும் பிச்சைக்காரனை நாம் பார்க்கும் பார்வை இருக்கிறதே. மாற்றான் மனைவி மேல் பார்க்கும் பார்வை. "யார் கண்ணோ பட்டிருக்கும். சுத்தி போட வேண்டும்" என்று சொல்லுவார்கள். அது  பார்வையால் வரும் குற்றம்.

இதெல்லாம் கூட நமக்குத் தெரியும்.  கேடு என்று தெரியும். இருந்தாலும், பெரிய குற்றம் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்ததாக ஒரு பெரிய குற்றத்தை சொல்கிறார் பட்டினத்தார். இதுவரை கேட்டிராத குற்றம்.

"நல்ல நூல்களை படிக்காமல்,மற்றவற்றை படித்த குற்றம்" என்று புதிதாக ஒரு குற்றத்தைச் சொல்கிறார்.

யோசித்துப் பார்ப்போம். நல்லன அல்லாத நூல்கள் எத்தனை நாம் படிக்கிறோம். இங்கே நூல்கள் என்று சொல்லும் போது சினிமா, டிவி சீரியல், youtube videos , bloggukal , என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நூல் , எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

எத்தனை ஆயிரம் மணிகளை நாம் செலவழித்து இருப்போம் இந்த நல்லன அல்லாதவற்றை  அறிந்து கொள்ள.

நல்லன அல்லாதவற்றை படிப்பது எப்படி குற்றம் ஆகும்? ஏதோ பொழுது போகாமல்  வாசிக்கிறதுதான், பாக்குறதுதான். அது ஒரு குற்றமா? என்றால் குற்றம் தான்.

நம் அறிவுக்குள், மனதுக்குள் எது போகிறதோ அது நம்மை மாற்றுகிறது.

நம் எண்ணங்களை, செயல்களை , நம் வார்த்தைகளை அவை மாற்றுகின்றன.

இராமாயணத்தில், இராமனுக்கு அரசு இல்லை என்று சொன்னவுடன் இலக்குவன் கொதித்து எழுந்து  எல்லோரையும்   அழித்து விடுகிறேன் என்று புறப்படுகிறான்.  "விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி " என்றான்.

அப்போது இராமன் சொல்லுவான் "மறை சொன்ன வாயால், இப்படி கண்டதையும்   பேசலாமா" என்று. வேதம் படித்தால் நல்ல சொல் தான் வரும் என்பது இராமனின்  முடிவு.

ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ

நல்லன அல்லாததை படிப்பது பெரிய குற்றம். அது மனதை நல்லன அல்லாதவற்றை சிந்திக்க வைக்கும். சிந்தனை செயலாகும்.

பாடல்


சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.


பொருள்


சொல்லால் வருங்குற்றம் = சொல்லால் வரும் குற்றம்

சிந்தையால்  = மனதால்

வருந்தோடஞ் செய்த = வருந்தி ஓடச் செய்த

பொல்லாத தீவினை  = பொல்லாத தீவினை

பார்வையிற் = பார்வையில்

பாவங்கள் = (செய்த ) பாவங்கள்

புண்ணியநூல் = புண்ணியம் தரும் நல்ல நூல்களை

அல்லாத = அவை அல்லாத

கேள்வியைக் = அறிவை

கேட்டிடுஞ் தீங்குகள் = கேட்டிடும் அல்லது படித்திடும் தீங்குகள்

யாவுமற்று = யாவும் விட்டு

எல்லாப் பிழையும் = எல்லா பிழையும்

பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. = பொறுத்து அருள்வாய் கச்சி (காஞ்சீபுரம்) ஏகம்பனே


"எந்தெந்த குப்பைகளை எல்லாம் படித்தேனோ, எந்தெந்த குப்பைகளை எல்லாம் கேட்டேனோ, அந்த பிழை எல்லாம் பொறுத்து எனக்கு அருள் செய்வாய்"  என்று வேண்டுகிறார்.

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற ஒரே ஒரு வாசகத்தைப்  படித்து விட்டு, அனைத்தும் துறந்து  தெருவில் இறங்கினார் பட்டினத்தார். அதற்கப்புறம் ஒன்றும் படிக்கவில்லை.

நாமோ?

இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறோம், டிவி, whatsaap , youtube , facebook  என்று ஒன்று விடாமல் அனைத்தையும் மூளைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

"எல்லா பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!"


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_6.html


Sunday, January 5, 2020

கம்ப இராமாயணம் - இரணியன்

கம்ப இராமாயணம் - இரணியன் 


வலிமை வர வர மனிதனுக்குள் ஆணவம் ஏறுகிறது. ஆணவத்தின் உச்சம், நான் தான் எல்லாம் என்று சொல்ல வைக்கிறது.

என்னால் தான் இந்த நிறுவனம் நடக்கிறது, என்னால்தான் இந்த குடும்பம் நடக்கிறது, இந்த நாடு என்னால் நடத்தப் படுகிறது என்று மனிதன் நினைக்கத் தலைப்படுகிறான்.


ஒரு குடும்பத் தலைவி நினைக்கலாம், "நான் மட்டும் இல்லை என்றால் இந்த வீடு என்ன கதி ஆகும்...நான் இருக்கேனா ஒழுங்கா எல்லாம் நடக்குதோ" என்று.

அளவு மாறுபடலாம், நிகழ்வு ஒன்றுதான்.

என்னால் நிகழ்கிறது என்பது ஒரு அரக்க குணம்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். மிகப் பெரிய பலசாலி.  மிகப் பெரிய என்றால் எவ்வளவு பெரிய தெரியுமா? கம்பன் காட்டுகிறான்.

எட்டு திக்குகளையும் காவல் காக்கும் யானைகள் இருக்கின்றன அல்லவா? அதில் இரண்டு யானைகளை இரண்டு கையால் எடுத்து, ஒன்றோடு ஒன்று அப்பளம் மாதிரி நொறுக்குவானாம்.  பெரிய கடல் இருக்கிறது அல்லவா? அது அவனுக்கு கணுக்கால் மட்டும் வருமா. அப்படி என்றால் முழுக்  காலும் எவ்வளவு பெரிதாக இருக்கும், அவ்வளவு பெரிய கால் என்றால் ஆள் எப்படி இருப்பான் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.


பாடல்

‘பாழி வன் தடம் திசை சுமந்து
    ஓங்கிய பணைக்கைப்
பூழி வன்கரி இரண்டு இருகை
    கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய்,
    அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இருதாள் அளவு
    எனக் கடந்து ஏறும்.


பொருள்

‘பாழி = அகன்ற

வன்  = வன்மையான

தடம் = வழி

திசை சுமந்து = திசைகளை சுமந்து நிற்கும்

ஓங்கிய = பெரிய

பணைக்கைப் = பனை மரம் போன்ற பெரிய தும்பிக் கைகளை

பூழி  = துவாரம் உள்ள

வன்கரி = பலமான யானை

இரண்டு = இரண்டினை

இருகை  கொடு  = இரண்டு கைகளை கொண்டு

பொருத்தும் = முட்ட வைப்பான்

ஆழம் காணுதற்கு அரியவாய், = ஆழம் காண முடியாத

அகன்ற = அகன்ற

பேர் ஆழி = பெரிய கடல்

ஏழும் = ஏழையும்

தன் இருதாள் அளவு = தன்னுடைய இரண்டு கால் பாதங்களின் அளவு

எனக் கடந்து ஏறும். = என்று அதில் நடந்தே கடந்து விடுவானாம்.


கடல் கணுக்கால் அளவு என்றால் ஆள் எப்படி இருப்பான்?

ஐந்து அல்லது ஆறு அடி இருக்கும் நமக்கு இவ்வளவு ஆணவம், இறுமாப்பு இருக்கும் என்றால், இரணியனுக்கு எவ்வளவு இருந்திருக்கும் ?

நரசிம்ம  அவதாரம் பற்றி முன்பு எழுதி இருந்தேன். இது, அதன் முன் பகுதி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_5.html


Friday, January 3, 2020

பட்டினத்தார் பாடல் - பக்தி

பட்டினத்தார் பாடல் - பக்தி 



பெரும்பாலானோர் செய்யும் பக்தி எப்படி இருக்கும்? தினமும் காலையும், மாலையும் விளக்கு ஏற்றுவது, பூ போடுவது, கற்பூர ஆராதனை காட்டுவது, ஊதுபத்தி கொளுத்தி வைப்பது, முடிந்தால் வாழைப் பழத்தின் முனையை சற்று உரித்து வைப்பது....மற்றபடி நாள் கிழமை என்றால் பொங்கல், சுண்டல், வடை, பொரி என்று நைவேத்தியம் பண்ணுவது. முடிந்தால் சில பல இடங்களுக்குச் சென்று, கட்டணம் செலுத்தி சிறப்பு வழியில் சென்று கடவுளை தரிசிப்பது.  இதுதான் பெரும்பாலானோர் செய்யும் பக்தி.

இதில் அவர்களுக்கு பெரிய பெருமை வேறு. ஒரு நாள் கிழமை விடுவது கிடையாது, தினம் இரண்டு வேளை பூஜை செய்கிறேன், மடி, ஆச்சாரம் என்று ஒரே பெருமை.

இதெல்லாம் செய்து விட்டால், சொர்க்கத்தில்/வைகுண்டத்தில்/ கைலாயத்தில் ஒரு இடம் நமக்கு கட்டாயம் உண்டு என்று முன்பதிவு செய்த மாதிரி தைரியமாகத் திரிகிறார்கள்.


இதுவா பக்தி?

அத்தனை சொத்தையும் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு கோவணத்துடன் புறப்பட்ட பட்டினத்தார் சொல்கிறார்...."நான் செய்வது என்ன பக்தி...அந்த மூன்று பேர் செய்த பக்திக்கு முன்னால் நான் செய்வது ஒன்றும் இல்லை...அப்படி எல்லாம் செய்ய முடியாத நான், எங்கே இறைவனை அடைய போகிறேன் " என்று அழுகிறார்.


பாடல்

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்; நானினிச் சென்று
ஆளாவது எப்படியோதிருக்காளத்தி அப்பனுக்கே


பொருள்

"வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்"

சிறுத்தொண்டர் என்று ஒரு நாயனார் இருந்தார். அவர் வீட்டுக்கு சிவனடியார் உருவத்தில் வந்த  சிவன், "பிள்ளைக் கறி" போட்டால் சாப்பிடுகிறேன் இல்லையென்றால்  சாப்பிடமாட்டேன் என்றார். சிறுத்தொண்டரும் ஒத்துக் கொண்டார்.

சிவனடியார் சில நிபந்தனைகள் வைத்தார்...

- பிள்ளை ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்
- பிள்ளைக்கு ஒரு உடல் குறையும் இருக்கக் கூடாது
- தாய் பிடித்துக் கொள்ள, தகப்பன் பிள்ளையை அரிந்து சமைக்க வேண்டும்
- முக்கியமாக, இருவரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக் கூடாது.

சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் ஒத்துக் கொண்டு பிள்ளைக் கறி செய்து போட்டார்கள்.

என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதே என்கிறார் பட்டினத்தார்.

அடுத்தவர் திருநீலகண்டர் என்று ஒரு நாயன்மாரில் ஒருவர்.

"மாது சொன்ன சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்"

(சூள் = ஆணை, சத்தியம்)


மண் பாண்டம் செய்து விற்கும் குயவனார். சிவனடியார். ஆனால், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் பலவீனம் உள்ளவர்.  பல பெண்களிடம் உறவு கொள்பவர். காமத்தை கட்டுப் படுத்தத் தெரியாதவர்.

ஒரு நாள் அவரின் இந்த பலவீனம், அவருடைய மனைவிக்குத் தெரிந்தது. அன்று இரவு  மனைவியின் அருகில் சென்றார். "எம்மைத்  தொடாதீர். தொட்டால் , அந்த திருநீலகண்டத்தின் மீது ஆணை"  என்று சொல்லிவிட்டார்.
என்னை என்று சொல்லவில்லை. எம்மை என்று சொன்னார். எம்மை என்பது பன்மை. எனவே எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை என்று இருந்துவிட்டார் திருநீலகண்டர்.  முடியுமா?  காமத்தை அடக்க முடியுமா ?

குடிசை வீடு. அருகில் மனைவி. புரண்டு படுத்தால் கை படும், கால் படும். சிவன் மேல் ஆணை, எம்மை தொடாதீர் என்றதனால் அந்தக் கணம் முதல் எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை  என்று இருந்தார்.

"என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதே" என்கிறார் பட்டினத்தடிகள்.

மூன்றாவது ஒரு ஆளைச் சொல்கிறார்.

"நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்"

நாள் + ஆறில்

ஆறே நாள். பக்தி உச்சம் தொட்டது. இறைவன் காட்சி கொடுத்தான்.

கண்ணப்ப நாயனார். சிவ இலிங்கத்தை கண்ட ஆறாவது நாள். இலிங்கத்தின் கண்ணில் இருந்து இரத்தம்  வந்ததைக் கண்டு பொறுக்க மாட்டாமல், தன்னுடைய கண்ணை தோண்டி தந்து விட்டார். ஒன்றல்ல, இரண்டு கண்களையும்.

"என்னால் அப்படியும் செய்யும் முடியாதே " என்கிறார் பட்டினத்தார்.

இப்படி எல்லாம் பக்தி செய்து அவர்கள் இறைவனை அடைந்தார்கள். என்னால் அதெல்லாம்  செய்ய முடியாது. நான் எப்படி இறைவனை அடைவேன்  என்று அயர்ந்து போகிறார் பட்டினத்தார்.

அவர் கதி அப்படி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை ?

வீட்டுக்குள், சௌகரியமாக இருந்து கொண்டு, உடல் நோகாமல் பக்தி செய்து விட்டு, "அடடா என்னைப் போல் பக்திமான் உண்டா" என்று இறுமாத்துப் போகிறோம்.

அப்படியெல்லாம் செய்தவர்கள், இறைவனை அடைந்தார்கள்.

அனைத்தையும் விட்டு விட்ட பட்டினத்தார் போவோமா மாட்டோமா என்று சந்தேகம் கொள்கிறார்.

நாம்?

அடுத்த முறை கோவிலுக்குப் போனதற்கு,  உண்டியலில் பணம் போட்டதற்கு,  விளக்கு ஏற்றி பாட்டு படிப்பதற்கு ..இதெல்லாம் பெரிய பக்தி என்று   நினைக்கும் போது ,இந்தப் பாடலையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_3.html


Thursday, January 2, 2020

ஓடி விளையாடு பாப்பா - பாரதியார் பாடல்

ஓடி விளையாடு பாப்பா - பாரதியார் பாடல் 


இலக்கியங்கள் படிக்க மிகக் கடினமாக இருந்தால், அது ரொம்பக் கடினம் என்று விட்டு விடுகிறோம்.

மிக எளிமையாக இருந்தால், அதில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாக விட்டு விடுகிறோம்.

ஓடி விளையாடு பாப்பா என்று பாப்பாவுக்கு பாடல் சொன்னான் பாரதி. பள்ளிக் கூடத்தில் படித்தது. அதில் என்ன இருக்கிறது என்று மேலே போய் விடுகிறோம்.

அந்தப் பாடலில் எத்தனை அடிகள் இருக்கிறது, எத்தனை பகுதி இருக்கிறது என்று கூட பலருக்குத் தெரியாது. அதில் கடைசிப் பகுதியில் பாரதி வாழ்க்கை முறை பற்றிச் சொல்கிறான் சொல்கிறான்....


பாடல்

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் ...அப்பா, அம்மா, கணவன் மனைவி, பிள்ளைகள் என்று இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு வேண்டும் என்றான். உயிர் என்றால் இங்கே மனிதர்கள் மட்டும் அல்ல....விலங்குகளும், தாவரங்களும் அடங்கும். தெரு நாய், மின்சார கம்பி மேல் அமர்ந்து இருக்கும்புறா, சிட்டுக் குருவி, சாலை அமைக்கிறோம் என்று வெட்ட நினைக்கிறார்களே அந்த மரம்  இவற்றின் மேல் எல்லாம் அன்பு வேண்டும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்

என்றாரே வள்ளலார், அந்த அன்பு வேண்டும்.

கணவன் மனைவி இடம் அன்பு இல்லை, பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு இல்லை,  உடன் பிறப்புகள் நீதி மன்ற படிக்கட்டுகளில், தவித்த வாய்க்கு தண்ணீர்  தர மறுக்கும் அயல் மாநிலம், என்று எங்கும் அன்புப் பஞ்சமாய் இருக்கிறது.

அன்பை கொடுக்கவும் ஆள் இல்லை. கொடுத்தால் பெற்றுக் கொள்ளவும் ஆள் இல்லை.

குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை கொடுத்த அன்பு ...

கொம்பு இல்லாமல் ஆடிய கொடிக்கு தேர் கொடுத்த அன்பு ...

புறாவைக் காக்க தன் சதையை அரிந்து கொடுத்த அன்பு ...

இவை எல்லாம் இருந்தது இந்த நாட்டில், ஒரு காலத்தில்.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். யாரையும் கடிந்து பேசாதீர்கள். பிறர் மனம் வருந்தும் காரியங்களை செய்யாதீர்கள். பிற உயிர்கள் மேல் இரக்கம் கொள்ளுங்கள்.

அன்பே சிவம் என்பார் திருமூலர்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே 
அன்பிலதனை அறம் 

என்பார் வள்ளுவப் பேராசான்.

அடுத்தது,

"தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்"

தெய்வம் உண்மை என்று நீங்களே அறிய வேண்டும். யாரோ சொன்னார்கள் என்று சொல்லக் கூடாது. மாணிக்க வாசகர் சொன்னார், சேக்கிழார் சொன்னார், அதில் அப்படி போட்டு இருக்கிறது, இதில் இப்படி போட்டு இருக்கிறது என்று சொல்லக் கூடாது. "தான் அறிதல்" வேண்டும்.   நீங்களே அறிய வேண்டும். அவர்கள் அறிந்தார்கள். அது அவர்களுக்கு. நீங்கள் அறிந்தீர்களா?  அவர் என்ன பொய்யா சொல்லப் போகிறார் என்று  மற்றவர்கள் சொல்வதற்கு தலை ஆட்டிக் கொண்டு இருக்காதீர்க்கள்.

மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம் என்றால்

"தெய்வம் உண்மை என்று அறிதல் வேணும்" 

என்று சொல்லி இருப்பான் பாரதி.

"தானறிதல் வேணும்" என்று சொல்கிறான். வேலை மெனக்கெட்டு "தான்" என்ற ஒரு வார்த்தையைப் போடுகிறான். 

வேதம் சொல்கிறது, கீதை சொல்கிறது, என்று சொல்லாதீர்கள். நீங்கள் அறிந்தது என்ன?


"வயிர முடைய நெஞ்சு வேணும்" -

சிலருக்கு எதிலும் எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் ஒரு உறுதி கிடையாது. மனதில் வைரம் போல உறுதி வேண்டும். எது சரி, எது தவறு என்பதில்  உறுதி வேண்டும். எப்போதும் குழம்பிக் கொண்டே இருக்கக் கூடாது.


 இது வாழும் முறைமையடி பாப்பா!

இது தான் வாழும் முறை என்கிறான் பாரதி.

இந்த மூன்று மட்டும் அல்ல. இந்தப் பாட்டில் பல விஷயங்கள் சொல்லி இருக்கிறான் பாரதி.   பாடலைத்  தேடி கண்டு பிடித்து மீண்டும் ஒரு முறை படியுங்கள். எளிய பாடல் என்று உதாசீனம் செய்து விடாதீர்கள்.

அது பாப்பாவுக்கு மட்டும் சொன்னது  அல்ல. நமக்கும் சேர்த்துத்தான்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால், சொல்லிக் கொடுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post.html