Saturday, January 18, 2020

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன்

வில்லி பாரதம் - சிகண்டி 3 - விருத்தன் வந்தனன் 


தன் தம்பிக்கு மணம் முடிக்க என்று காசி இராஜனின் மகள்களின் சுயம்வரத்துக்கு பீஷ்மர் போகிறார்.

தம்பிக்காக போகிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் குழப்புகிறார்கள்.

"இந்தக் கிழவன் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தவன் ஆயிற்றே, இப்போது , இந்த வயதான காலத்தில் எதற்கு இந்த சுயம்வரத்துக்கு வருகிறான்" என்று ஏனைய அரசர்கள் கலங்கினார்கள்.

கலக்கத்துக்குக் காரணம், சுயம்வரம், போட்டி என்று வந்து விட்டால், பீஷ்மரை தங்களால் வெல்ல முடியாது என்பதால்.

பாடல்

குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம்
ஒருத்தரன் றறிவாருலகோர்பலர்
விருத்தன்வந்தனன் மேலினியேதிவன்
கருத்தெனாமனங் காளையர்கன்றினார்.

பொருள்

குருத்தலந்தனிற் = குருகுலத்தில்

கூறிய வஞ்சினம் = முன்பு செய்த வஞ்சினம் (சத்தியம், விரதம்)

ஒருத்தரன் றறிவாருலகோர்பலர் = ஒருத்தர் அன்றி அறிவார் உலகோர் பலர்

விருத்தன் = வயதானவன்

வந்தனன் = வந்தனன்

மேலினியேதிவன் = மேல் இனி ஏது இவன்

கருத்தெனா = கருத்து என்று

மனங்  = மனத்தில்

காளையர் = அங்கு வந்திருந்த காளை போன்ற இளைய அரசர்கள்

கன்றினார். = வருந்தினர்

விருத்தன் என்றால் வயதானவன் என்று பொருள்.

விருந்தா நாரி பதி விரதா என்று வடமொழியில் ஒரு பழ மொழி உண்டு. வயதான பெண்  பதி விரதை என்பது பொருள்.


அசலம் என்றால் மலை என்று பொருள்.

விருத்தாச்சலம் என்றால் வயதான மலை என்று பொருள். விருதாச்சலத்துக்கு திருமுதுக்குன்றம்  என்பது தமிழ் பெயர்.

அங்குள்ள அம்பிகையின் பெயர் விருத்தாம்பிகை. தமிழில் பெரிய நாயகி.  வயதானவளாக காட்சி தருகிறாள்.

குகை நமச்சிவாயர் என்று ஒரு பக்தர் இருந்தார். அவர் பெரியநாயகி நோக்கி சில பாடல்களை பாடி இருக்கிறார். அவருக்கு பசிக்கும் போதெல்லாம் அன்னைக்கு கட்டளையிடுவார். "சோறு கொண்டு வா" என்று. தாயிடம் என்ன கெஞ்ச வேண்டி இருக்கிறது. "எனக்குப் பசிக்கிறது, சோறு கொண்டு வா" என்று  உரிமையுடன் கேட்பார்.

பெரிய நாயகியிடம் ஒரு நாள்

"நன்றி புனையும் பெரிய நாயகியே நுங்கிழத்தி
என்றும் சிவன்பாலிடக் கிழத்தி-நின்ற
நிலைக்கிழத்தி மேனி முழுநீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா!"

என்று பாடினார். அம்பாளை கிழவி, கிழவி என்றே பாடினார்.

எந்த பெண்ணுக்குத்தான் தான் கிழவி என்று ஏற்றுக் கொள்ள மனம் வரும். இப்போதெல்லாம்  பாட்டி என்று சொல்லக் கூடாது என்கிறார்கள். ஆச்சியம்மா  என்று சொல் என்று பேரப்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறார்கள். பாட்டி என்று சொன்னால் வயதானவளாகத் தெரியுமாம்.

அம்பாள் நேரில் வந்து, "என்னப்பா என்னை இப்படி கிழவி கிழவி என்று சொல்லி விட்டாயே. நல்லாவா இருக்கு. இளமை உள்ளவளாகப் பாடு" என்று வேண்டினாள்.

குகை நமச்சிவாயரும்,

"முத்தாநதி சூழும் முதுகுன்றுறைவாளே 
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர் இடம் தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறு கொண்டு வா!"

என்று பாடினார்.

அம்பாளும் மகிழ்ந்து சோறு கொண்டு வந்து தந்தாளாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/3.html

2 comments:

  1. வயது ஆனவர்களை கண்டால் ஒரு இளப்பம் மனிதர்களிடம் சகஜம்..ஆகவே யாரும் தங்களை முதியோராக காட்டி கொள்ள விரும்புவதில்லை. ஆனால் பெரிய நாயகிக்கே அந்த எண்ணம் தோன்றியது வியப்பாக உள்ளது!!!

    ReplyDelete
  2. மூலப் பாடல் ஒரு இனிமை. ஆனால், இரண்டு கிளைப் பாடல்களும் அதைவிட இனிமை! முகத்தில் புன்முறுவலை வரவழைத்தன.

    நன்றி.

    ReplyDelete