Friday, January 17, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான்

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான் 


காசி மன்னனுக்கு மூன்று பெண் குழந்தைகள்.  அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை என்பது அவர்கள் பெயர். அவர்களுக்கு திருமண வயது வந்ததும், காசி மன்னன், திருமணம் பற்றி அறிவித்தான்.

அழகில் சிறந்த அந்ப் பெண்களை மணந்து கொள்ள பல அரசர்கள் நான் நீ என்று ஆசைப்பட்டார்கள்.

பீஷ்மனும், தன்னுடைய தம்பியான விசித்திர வீரியனுக்கு அந்த பெண்களை மனமுடித்து வைக்க எண்ணினான். எனவே, சுயம்வரத்தில் கலந்து கொள்ள, பீஷ்மரும் வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்


பாடல்

வரித்தமன்னர் மறங்கெடவன்பினால்
திரித்துமெம்பியைச் சேர்த்துவல்யானெனாத்
தரித்தவில்லொடுந் தன்னிளவேந்தொடும்
வரித்தவெண்குடை வீடுமனேகினான்.

பொருள்

வரித்த மன்னர் = (தங்கள் மனதுக்குள் அந்தப் பெண்களை) வரித்துக் கொண்ட. அதாவது, அந்தப் பெண்கள்தான் என் மனைவி என்று எல்லா அரசர்களும் மனதுக்குள் நினைத்து இருந்தார்கள்.

 மறங்கெட = மறம் + கெட = அவர்களின் வீரம் கெட

வன்பினால் = வன்மையால்

திரித்து = அவர்களை திரும்பி ஓடச் செய்து

மெம்பியைச்  =என் தம்பியிடம்

சேர்த்துவல்யானெனாத் = சேர்த்து வைப்பேன் நான் என்று

தரித்த   வில்லொடுந் = வில்லை எப்போதும் ஆடை போல தரித்து இருக்கும்


தன்னிள வேந்தொடும் = தன்னுடைய இளைய வேந்தனோடும்

வரித்த வெண்குடை = சூடிய வெண் குடை உள்ள

வீடுமனேகினான். = வீடுமன் (பீஷ்மன்) சென்றான்

சுயம்வரத்தில் கலந்து, வீரத்தை நிலை நாட்டி, அந்தப் பெண்களை கொண்டு வந்து தன் தம்பிக்கு மணம் முடிக்க பீஷ்மர் புறப்பட்டார்.

அடுத்து என்ன ஆகப் போகிறதோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/2.html

1 comment:

  1. நீங்க தான் சொல்லவேண்டும்!!

    ReplyDelete