Sunday, June 30, 2019

கம்ப இராமாயணம் - நில் அடீஇ

கம்ப இராமாயணம் - நில் அடீஇ 


இராமனை விட்டு வந்த சூர்ப்பனகை காமத்தில் தவிக்கிறாள். கம்பன் அவள் நிலையை விரித்துக் காட்டுகிறான். விருப்பம் உள்ளவர்கள் , தேடுங்கள், கண்டடைவீர்கள்.

பின், சூர்ப்பனகை நினைக்கிறாள்..."இந்த சீதை இருப்பதனால் தானே இராமன் என்னை ஏற்க மறுக்கிறான், அவளை தூக்கி  வந்து விட்டால், இராமனின் எண்ணம் என் பால் வரும்தானே " என்று நினைத்து அவளை தூக்கிச் செல்ல நினைக்கிறாள்.

இராமன் சந்தியா வந்தனம் செய்யப் போய் விட்டான். கம்பன் சொல்கிறான்.  சீதை தனித்து இருக்கிறாள். அவளுக்கு காவலாக இருந்த இலக்குவனை, சூர்ப்பனகை காணவில்லை. தனித்து இருக்கும் சீதையை பிடித்துக் கொண்டு போய் விடலாம் என்று நினைத்து அவள் இருக்கும் இடத்துக்கு இரகசியமாக போகிறாள்.

இவள் வருவதை இலக்குவன் பார்த்து விட்டான்.


"நில்லடி" கத்திக் கொண்டே  என்று அவளை நோக்கி விரைந்து சென்றான். அருகில் வந்த போது அவள் (சூர்ப்பனகை) பெண் என்று  அறிந்து கொண்டான். எனவே வில்லை எடுக்காது, சூர்ப்பனகையின் கூந்தலை பற்றி , கையில் அப்படியே சுற்றி, அவளை உதைத்து கீழே தள்ளி, தன் வாளை உருவுகிறான்

நமக்கு படபட என்று மனம் அடித்துக் கொள்கிறது.


பாடல்

நில் அடீஇ' என, கடுகினன், 
     பெண் என நினைத்தான்; 
வில் எடாது அவள் வயங்கு எரி 
     ஆம் என விரிந்த 
        சில் வல் ஓதியைச் செங் கையில் 
     திருகுறப் பற்றி, 
ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி 
     கிளர் சுற்று-வாள் உருவி,


பொருள்

நில் அடீஇ'  = நில்லடி

என = என்று கூறிக் கொண்டே

கடுகினன் = விரைந்து சென்றான்

பெண் என நினைத்தான்; = பெண் என்று நினைத்தான்

வில் எடாது = வில்லை எடுக்காமல்

அவள்  = அவளுடைய

வயங்கு = ஒளி வீசும்

எரி ஆம் என  = தீ போன்ற சிவந்த

விரிந்த  =  பரந்த

சில் = சில, கொஞ்சம்

வல் =வலிய

ஓதியைச் = கூந்தலை

செங் கையில்  =சிவந்த கைகளால்

திருகுறப் = திருக்கி

பற்றி,  = வளைத்துப் பிடித்து

ஒல்லை = வேகமாக, வெடுக்கென

ஈர்த்து = இழுத்து

உதைத்து = காலால் உதைத்து

ஒளி = ஒளி வீசும்

கிளர் சுற்று-வாள் உருவி = கிளர்ந்து எழும் வாளை உருவி



என்ன ஏது என்று கேட்கவில்லை. பின்னால் போனான், அவள் முடியை பிடித்து வெடுக்கென இழுத்தான்,  அவள் நிலை தடுமாறி விழப் போன நேரத்தில், அவளை காலால் எட்டி உதைத்தான். அது மட்டும் அல்ல, தன் உடை வாளை  உருவினான்.

பெண் என்று நினைத்து வில்லை எடுக்காதவன் , பெண் என்று நினைத்து  வாளை எடுக்கிறான்.

இந்தப் பாட்டில் வரும் "ஒல்லை" என்ற சொல் ஒரு அருமையான சொல்.

ஒல்லை என்ற சொல்லுக்கு சீக்கிரம் என்று பொருள்.

தமிழுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், தமிழில் உள்ள  அழகான, அர்த்தம் பொதிந்த சொற்களை நடை முறையில் பயன்படுத்துங்கள்.  அந்த சொற்களுக்கு உயிர் கொடுங்கள்.

அதனால் இரண்டு விதமான  பலன் உண்டு.

ஒன்று, தமிழுக்கு மீண்டும் அந்த சொற்கள் கிடைக்கும். நம்மால் புது சொற்களை  உருவாக்க முடியாது. இருக்கின்ற சொற்களை பயன் படுத்தலாம்தானே.

இரண்டு, இந்த சொற்கள் பயன்பாட்டில் வந்தால், நமக்கும் , இலக்கியத்துக்கும்  உள்ள இடைவெளி குறையும். பல பாடல்கள் எளிதாகப் புரியும்.  அவற்றை இரசிக்க முடியும்.

மூன்றாவது, நாம் நம் இலக்கியத்தை எளிதாக அறிந்து  கொள்ளும் போது, நம் பண்பாடு, கலாச்சாரம் என்ன என்று அறிந்து கொள்ள முடியும். நாம் எப்படி இருந்தவர்கள்  என்று அறிந்து கொண்டால், அதில் ஒரு நிமிர்வு வரும்.

நான்காவது, அடுத்த தலைமுறைக்கு தமிழ் செல்லும். இல்லை என்றால், ஆங்கில வார்த்தை கலப்பு இல்லாமல்   பேச முடியாத ஒரு தலைமுறையில் நாம்  இருக்கிறோம். அடுத்த தலைமுறை, தமிழ் என்பதே என்ன என்று தெரியாத ஒரு  தலைமுறையாக மாறி விடும் அபாயம் உண்டு.

ஐந்தாவது, தமிழில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. நம்மால் அவற்றை அணுக முடியவில்லை. நம் தாய் மொழி நமக்குப் புரியவில்லை. அதை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்து விட்டோம். இந்த வார்த்தைகள் நம்மை மீண்டும் மொழிக்கு பக்கத்தில் கொண்டு சேர்க்கும். மொழியில் புதைந்து கிடக்கும் நல்லவற்றை நாம் அறிந்து பயன் பெற முடியும்.

ஆறாவது, நீங்கள் ஒரு புது வார்த்தையை பழக்கத்தில் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், அதில் இருந்து பல புதிய சொற் சேர்க்கைகள் வரலாம்.

உதாரணமாக, இந்த ஓலை

சரி, இந்த ஒல்லை என்ற வார்த்தையை வேறு எங்காவது பயன்படுத்தி இருக்கிறார்களா?

இராமன் மிதிலை நோக்கி வருகிறான். அப்போது அந்த கோட்டை சுவற்றில் இருந்த  கொடிகள் எல்லாம் இராமனைப் பார்த்து, "திருமகள், தாமரையை விட்டு, நான் செய்த பெரிய தவத்தினால் இங்குதான் இருக்கிறாள், இராமா "ஒல்லை  வா" என்று கூறுவது போல அசைந்தது என்கிறார் கம்பர்.


"மையறு மலரின் நீங்கி  யான்செய்மா தவத்தின் வந்து
 செய்யவள் இருந்தாள் என்று  செழுமணிக் கொடிகள் என்னும்
 கைகளை நீட்டி அந்தக்  கடிநகர் கமலச் செங்கண்
 ஐயனை "ஒல்லை வா" என்று  அழைப்பது போன்ற தம்மா"

சீக்கிரம் வா என்று அந்த  கொடிகளை பட பட என அடித்துக் கொண்டதாம்.

சொல்லிப் பாருங்கள்....

"கல்யாண வேலை நிறைய இருக்கு. நீ கொஞ்சம் ஒல்லை வந்தால், உதவியா இருக்கும்"

"ஒல்லை வந்துரு என்ன...நீ வந்த உடனே நாம் கிளம்பிரலாம்"

" எவ்வளவு தான் ஒல்லை வந்தாலும், இந்த போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொண்டு நேரம் ஆகி விடுகிறது "

சொல்லிப் பழகுங்கள்.

உயிரினங்கள் அழிவது போல , சொற்களும் அழிந்து கொண்டிருக்கின்றன (extinct ).  அவற்றிற்கு உயிர் கொடுக்க முனைவோம். ஒரு சில சொற்களாவது மீண்டும் உயிர் பெற்றால், நல்லது தானே. ஏதோ நம்மால் முடிந்தது.

இலக்கியம் படிப்பதில் இப்படியும் ஒரு பலன் இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_30.html

Saturday, June 29, 2019

கம்ப இராமாயணம் - ஆர் உயிர் வெந்து புழுங்குவாள்

கம்ப இராமாயணம் - ஆர் உயிர் வெந்து புழுங்குவாள் 


நமக்கு எப்போதாவது துன்பம் வந்தால், நாம் ஊரில் உள்ள அனைவரையும் திட்டித் தீர்ப்போம்.

கணவன்/மனைவி (எனக்குனு வந்து வாச்சிது பாரு), பிள்ளைகள், அக்கம் பக்கம், மேலதிகாரி, கீழே வேலை பார்ப்பவர்கள், அரசாங்கம், பொதுவாக எல்லோரும் நமக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்றே நினைப்போம். சில சமயம் கடவுள் மீது கூட கோபம் வரும்.

நமது அனைத்து துன்பங்களுக்கும் நாம் தான் காரணம்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு.

நமக்கு வரும் நல்லதுக்கு கெட்டதுக்கும் நாம் தான் காரணம். வேறு ஒருவரும் காரணம் அல்ல.

சூர்ப்பனகை இராமனை விரும்பினாள். அவன் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும், அவனுக்கு அவள் மேல் விருப்பம் இல்லை என்று தெரிந்தும் அவனை விரும்பினாள் . அது அவள் குற்றம்.

காமம் அவளை வாட்டுகிறது.

அருகில் உள்ள சோலைக்குச் சென்றாள். இரவு நேரம். நிலவு வருகிறது.

அந்த குளிர் நிலவு அவளுக்கு கொதிக்கிறது.

"கிரஹனத்தன்று வரும் இராகு கேது என்ற அந்த பாம்புகளை பிடித்து வந்து இந்த  சந்திரனை தின்ன வைத்தால் அப்புறம் இந்த சந்திரன் என்னை இப்படி துன்பப் படுத்த மாட்டான் "

என்று நினைக்கிறாள்.

துன்பம் , நிலவினால் அல்ல. அவள் கொண்ட காமத்தினால். ஆனால், அவளோ  நிலவை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறாள்.

தான் செய்த தவறை உணராமல், மற்றவர்கள் மேல் பழி போடுவதும்,  அரக்க குணம்தானோ?

பாடல்

‘அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்
கொணர்வென் ஓடி ‘எனக் கொதித்து உன்னுவாள்
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குவாள்.


பொருள்

‘அணைவு இல் = ஆதரவாக இல்லாத

திங்களை = நிலவை

நுங்க = உண்ண

அராவினைக் = பாம்பினை

கொணர்வென் ஓடி = ஓடிச் சென்று கொண்டு வருவேன்

‘எனக் = என்று

கொதித்து  = ஆத்திரப்பட்டு, கோபப் பட்டு

உன்னுவாள் = நினைப்பாள்

பணை = பெருத்த

இன் = இனிய

மென் = மென்மையான

முலை மேல் = மார்பின் மேல்

பனி = குளிர்ந்த

மாருதம் = காற்று

புணர = சேர

ஆர் உயிர் = அருமையான உயிர்

வெந்து புழுங்குவாள் = வெந்து புழுங்குவாள்

யாரையாவது திட்ட வேண்டும் என்று தோன்றுகிறதா, எவர் மேலாவது பழி போட வேண்டும்  என்று தோன்றுகிறதா, எதன் மீதாவது வெறுப்பு வருகிறதா ...ஒரு நிமிடம் சூர்பனகையை நினையுங்கள்.

தன் காமத்திற்கு நிலவை பழித்த அவளின் செயலை நினையுங்கள்.

ஒருவேளை உங்கள் தவறு உங்களுக்கு புரிபடலாம்.

அதனால், உறவுகளில் விழ இருந்த விரிசல்கள் தவிர்க்கப் படலாம்.

மனம் இருந்தால், சூர்பனகையின் வாழ்வில் இருந்தும் பாடம் படிக்கலாம்.


Friday, June 28, 2019

கம்ப இராமாயணம் - கார் விடம் ஏறுவது என்னவே

கம்ப இராமாயணம் - கார் விடம் ஏறுவது என்னவே 


இராமாயணம் சொல்லும் அறம் என்ன என்று பல விவாதங்கள் நடந்தன, நடக்கின்ற, இனியும் நடக்கும்.

சூர்ப்பனகை படலத்தில் ஒரு முக்கியமான அறத்தை கம்பன் காட்டுகிறான்.

இராவணன், மற்றவன் மனைவியை விரும்பினான்.

சூர்ப்பனகை, மற்றவள் கணவனை விரும்பினாள்.

பிறன் மனை நோக்குவதுதான் குற்றம் என்று சொல்லிவந்தது நம் தமிழ் இலக்கியம்.

கம்பன் ஒரு படி மேலே போகிறான்,  மாற்றான் மனைவியை பார்ப்பது மட்டும் அல்ல குற்றம், மாற்றாள் கணவனை நயப்பதும் குற்றம் என்று காட்டுகிறான்.

சூர்ப்பனகை மட்டும் இராமன் மேல் ஆசை கொள்ளாவிட்டால், இராவணன் அழிந்து இருக்க மாட்டான்.

சூர்ப்பனகையின் பொருந்தா காமம், ஒருதலைக் காமம், அறம் பிறழ்ந்த காமம் அரக்கர் குலத்தை அழித்தது.

ஒருவன் குற்றம் செய்தால் அது அவனை மட்டும் அல்ல, அவனைச் சேர்ந்த எல்லோரையும் பாதிக்கும் என்று தெரிய வேண்டும்.

"சினம்  எனும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் எனும் ஏமப் புணையை சுடும்"

என்பார் வள்ளுவர்.

சினம் மட்டும் அல்ல, காமமும் அப்படித்தான் என்கிறார் கம்பர்.

இராமன், சூர்ப்பனகையை விட்டு விட்டு சீதையோடு குடிலுக்குள் போய் விட்டான். தனித்து விடப்பட்ட சூர்ப்பனகை காமத்தால் தவிக்கிறாள்.

இராமன் இருந்த இடம் விட்டு விலகி, அருகில் உள்ள ஒரு சோலையை அடைகிறாள்.

"நச்சுப் பாம்பு தீண்டினால் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் தலைக்கு ஏறுமோ அது  போல இராமனின் மேல் கொண்ட காமம் சூர்பனகைக்கு ஏறியது" என்கிறான் கம்பன்.

நஞ்சு முடிவில் ஆளை கொல்லாமல் விடாது அல்லவா?

பாடல்


அழிந்த சிந்தையள் ஆய் அயர்வாள் வயின்
மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால்
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே.


பொருள் 


அழிந்த சிந்தையள் ஆய் = மனம் அழிந்து, வெறுத்து போனவளாய்

 அயர்வாள்  = சோர்வுற்று

வயின் = அசைச் சொல்

மொழிந்த = சொல்லப்பட்ட

காமக் கடுங்கனல் = காமம் என்ற கொதிக்கும், எரிக்கும் தீ

மூண்டதால் = மூண்டதால்

வழிந்த = பொங்கி வழியும்

நாகத்தின் = நாகப் பாம்பின்

வன் = வன்மையான, கொடுமையான

தொளை = துளையிடும்

வாள் = கத்தி போல் கூர்மையான

எயிற்று = பல்

இழிந்த = வெளிப்பட்ட

கார்  = கரிய

விடம் = விஷம்

ஏறுவது என்னவே. = ஏறியது

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?

யாப்பிலக்கணம் என்பது இலக்கணத்தில் ஒரு பகுதி.

யாக்குதல் என்றால் கட்டுதல் என்று பொருள்.  இந்த உடம்புக்கு யாக்கை என்று ஒரு  பெயர் உண்டு. கை , கால், தலை, கண், மூக்கு என்று இவற்றை எல்லாம்  சேர்த்து கட்டிவைத்த ஒன்றுக்குப் பெயர் யாக்கை.

"ஐவருக்கு இடம் பெற, கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்து அருளே " என்பார் அருணகிரிநாதர்.

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
 வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
 ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
 கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.


சீர், தளை , அடி , தொடை என்று ஒரு செய்யுளை கட்டும் இலக்கணத்துக்கு யாப்பிலக்கணம் என்று பெயர். 

தமிழில் ஒரு பாடல் எப்படி எழுத வேண்டும் என்றுர் சொல்லுவது யாப்பிலக்கணம். 

சரியா?

கவிஞன் சொல்ல வந்த செய்தி ஒரு பக்கம். 

இலக்கண கட்டுப்பாடு மறு பக்கம். 

இரண்டும் பொருந்த வேண்டும். 

சில சமயம் கவிஞன் சொல்ல வந்த செய்தியை சொல்லி முடித்து விடுவான். ஆனால், இலக்கணத்துக்கு இன்னும் ஒரு சொல் வேண்டி இருக்கும். 

உதாரணமாக , குறள் என்றால் ஏழு சீர் (சொல்) வேண்டி இருக்கும். ஆறே வார்த்தையில்  சொல்லி விட்டால், என்ன செய்வது ? ஒரு சொல் பாக்கி இருக்கிறது. அந்த இடத்தை அர்த்தம் இல்லாத ஒரு சொல்லை இட்டு நிரப்புவார்கள். அதற்கு அசைச் சொல் என்று பெயர். 

மன் , மற்று , கொல் , நம்ம , வயின்  என்பவை அசைச் சொற்கள். 

மீண்டும் கவிதைக்கு வருவோம். 

விஷம் எப்படி விறு விறு என்று உடம்பில் பரவுமோ, அது போல சூர்ப்பனகை உடலில்   காமம் பரவியது. 

அப்புறம்?


Thursday, June 27, 2019

திருக்குறள் - அறிவு

திருக்குறள் - அறிவு 


இன்று கணணித் (கம்ப்யூட்டர்) துறையில் செயற்கை அறிவு (artificial intelligence ) பற்றி மிக வேகமாக, ஆழமாக ஆராய்ச்சிகள் நடக்கிறது.

செயற்கை அறிவு ஒரு புறம் இருக்கட்டும். அறிவு என்றால் என்ன? எது அறிவு? யாரை அறிவாளி என்று நாம் சொல்கிறோம் ?

நிறைய புத்தகம் படித்தவரையா ? நிறைய பட்டங்கள் பெற்றவரையா?  திறமையாக காரியம் சாதிப்பவரையா? யார் அறிவாளி அல்லது எது அறிவு என்பது ஒரு சிக்கலான கேள்வி.

அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம். எத்தனை படித்தவர்கள் சொல்லக் கேட்கிறோம். எது நல்லது, எது கெட்டது என்று நமக்குத் தெரியும். இருந்தும் நல்லதை விட்டு விட்டு கெட்டதை ஏன் செய்கிறோம்?

உதாரணமாக, கோபம் கொள்ளக் கூடாது, இனிப்பு தவிர்க்க வேண்டியது, உடற் பயிற்சி அவசியம், வெட்டி அரட்டை நேர விரயம், என்றெல்லாம் நமக்குத் தெரியும். இருந்தும் செய்கிறோமா? இல்லை.

"...அதெல்லாம் சரி தான், இருந்தாலும் நடை முறைக்கு ஒத்து வருமா " என்று ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டு, நாம் பாட்டுக்கு நம் வழியில் செக்கு மாடு போல  செல்லத் தொடங்கி விடுகிறோம்.

ஏன்?

நல்லது என்று தெரிந்தும், அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறோம்?

தீமை என்று தெரிந்தும் சிலவற்றை ஏன் செய்கிறோம்?

அறிவின்மையால்.

அறிவு சரிவர வேலை செய்யாததால்.

படிக்கிற நேரத்தில் ஊர் சுற்றுவது. அலுவலக நேரத்தில் வாட்சப்பில் அரட்டை அடிப்பது.  எது உடம்புக்கு ஆகாதோ, அதை விரும்பி உண்பது. யார் சகவாசம் தீமை  பயக்குமோ அவர்களோடு உறவு கொள்வது....

இதற்கெல்லாம் காரணம் - அறிவின்மை.

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை....எங்களுக்கு அறிவு நிறைய இருக்கு...சில சமயம்  சோம்பேறித்தனத்தால் காரியங்கள் செய்வதில்லை, சில சமயம்  அலுப்பாக இருப்பதால் செய்வதில்லை, நல்ல சாப்பாடு எப்பவுமா  கிடைக்கிறது...பண்டிகை, திருவிழா, என்று வரும் போது இரண்டு வடை, கொஞ்சம் சர்க்கரை பொங்கல், நாலு கப் பாயாசம், triple scoop sundae  என்று அவ்வப்போது   சாப்பிடுவதுதான்...அதற்காக அறிவில்லை என்று சொல்வதா" என்று கேட்கலாம்.

சொன்னது நான் இல்லை. வள்ளுவர்.  அவரை எதிர்த்து பேச முடியுமா?


பாடல்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

பொருள்

சென்ற இடத்தால் = புலன்களும் மனமும் சென்ற இடமெல்லாம்

செலவிடா = அவற்றை செல்ல விடாது

தீது = தீமைகளை

ஓரீஇ  = நீக்கி

நன்றின்பால் = நல்லவற்றின் பால்

உய்ப்பது  = செல்ல விடுவது

அறிவு = அறிவு

கூர்ந்து கவனிக்க வேண்டும்.

முதலாவது, தீமைக்கு காரணம் புலன்களை, மனதை அலைய விடுவது. குளிர் சாதன பெட்டி (பிரிட்ஜ்) நிறைய தின் பண்டங்களாக சேமித்து வைத்தால், அதை திறக்கும் தோறும்  அந்த தின் பண்டம் கண்ணில் படும். ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டால் என்ன   என்று தோன்றும்.

கை பேசியில் (செல் போன்) எல்லா வீடியோ கேம் களையும் தரவிறக்கம் (டவுன்லோட்) பண்ணி வைத்திருந்தால் , அதை விளையாடினால் என்ன என்று தோன்றும்.

ஆறு மணிக்கு நண்பரை பார்க்க கிளப் க்குப் போனால், தண்ணி அடிக்கத் தோன்றும்.

எனவே, புலன்கள் அலையும் வாய்ப்பை முதலில் தரக் கூடாது.

புலன்கள் அலையும் இயல்பு உடையன.

அது சரி, புலன்கள் அலையும் இயல்பு உடையன என்றால், நான் என்ன செய்வது. அது பாட்டுக்கு ஓடுது. அதை எப்படி பிடித்து நிறுத்துவது? அதுக்கு ஏதாவது  வழி சொல்லி இருக்காரா வள்ளுவர் என்றால் அடுத்த வரியிலேயே சொல்லி இருக்கிறார்.

நன்றின் பால் உயிப்பது அறிவு

புலன்கள் ஓடும். ஓடட்டும். தீமையின் பக்கம் செல்லாமல், நல்லவற்றில் பக்கம் அவற்றை திருப்பி விட்டு விட வேண்டும். இப்ப ஓடு என்று.

ஓடிப் போய் நல்லதில் நிற்கும்.

ஆரோக்கியமான உணவுகளை  குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

கை பேசியில் நல்ல வீடியோ, ஆடியோ போன்றவற்றை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி, புலன்கள் எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் நல்லவற்றை வைக்க வேண்டும். புலன்கள் ஓடிச் சென்று அவற்றைப் பற்றிக் கொள்ளும்.

தீயவர்களோடு பழகினால், அவர்களின் தீய குணம் நமக்கும் வரும்.

நல்லவர்களோடு பழக வேண்டும்.

"நடை முறை ..." அது இது என்று சாக்கு சொல்லாமல், அறிவை செயல் பட விடுங்கள்.

நன்றின் பால் உயிப்பது அறிவு.

என்ன நான் சொல்றது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_27.html

Wednesday, June 26, 2019

கம்ப இராமாயணம் - அன்பினில் வலியன்

கம்ப இராமாயணம் - அன்பினில் வலியன்


சூர்பனகையை தனியாக காட்டில் விட்டு விட்டு வந்து விட்டோம். அவள் என்ன ஆனாள் என்று பார்ப்போம்.

இராமன், சீதையைக் கூட்டிக் கொண்டு குடிசைக்குள் போய் விட்டான்.

சூர்ப்பனகை தனித்து நிற்கிறாள்.

தளர்ந்து போனாள். இராமன் தனக்கு இல்லை என்று உணர்ந்தாள். அதனால், அவளுக்கு, அவள் மேலேயே ஒரு தன்னிரக்கம் பிறக்கிறது.

பொதுவாகவே, நாம் எப்போதும் நம் உடலைத்தான், நாம் என்று கூறுவோம்.

நமக்கு ஒரு தலைவலி வந்தால், என்னுடைய தலைக்கு வலிக்கிறது என்று சொல்ல மாட்டோம். என் தலை வலிக்கிறது என்போம்.

ஐம்புல இன்பங்களும் இந்த உடலுக்குத்தான்.

எப்போதாவது நாம், நம் உயிரை, ஆன்மாவை நாம் என்று சொன்னது உண்டா ? நான் என் உடலை தூக்கிக் கொண்டு நடந்து வந்தேன் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறோமா?  உடலை யார் தூக்கிக் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி வரும் அல்லவா?

காதல் தோல்வி, சூர்பனகைக்கு.

முதன் முறையாக தான் வேறு , தன் உடல் வேறு என்ற ஞானம் வருகிறது அவளுக்கு. தான் என்பது இந்த உயிர் என்ற ஆத்ம ஞானம் பிறக்கிறது. இந்த உடலை சுமப்பது கடினம் என்று உணர்கிறாள்.

"இராமன் போன பின், இராமன் போய் விட்டான் என்ற உணர்வு கூட அவளுக்கு இல்லை. அவன் தன் முன் நிற்பதாகவே அவள் நினைக்கிறாள். தன்னுடைய உயிரானது தனது உடலை சுமந்து கொண்டிருக்கும் பொறுமையை கை விட்டு.  மூச்சு விடக் கூட மறந்து ஒடுங்கி நின்றாள். தகுதியில்லாதவன். மனதளவில் கூட என்னை தழுவாதவன்.  கோபம் கொண்டவன். ஆனால், சீதையிடம் , நெருக்கமான அன்பு கொண்டவன் "  என்று சூர்ப்பனகை நினைக்கிறாள்.

பாடல்

புக்க பின், போனது என்னும் உணர்வினள்;
     பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள்; ஒன்றும்
     உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்;
தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்;
     சலமும் கொண்டான்;
மைக்கருங் குழலினாள்மாட்டு அன்பினில்
     வலியன்' என்பாள்.


பொருள்

புக்க பின் = சீதையுடன் இராமன் குடிசைக்குள் புகுந்த பின்

போனது என்னும் = போய் விட்டான் என்ற

உணர்வினள் = உணர்வு உடையவளாய்

பொறையுள் நீங்கி = பொறுமை நீங்கி 


உக்கது ஆம் உயிரள் = நைந்து இருக்கும் உயிரைக் கொண்டவள். அவளுடைய உயிர், அவளின் உடலை சுமந்து தளர்ந்து விட்டது, நைந்து விட்டது

ஒன்றும் உயிர்த்திலள்; = உயிர் மூச்சு இல்லை

ஒடுங்கி நின்றாள் = அனைத்தும் ஒடுங்கி நின்றாள்

தக்கிலன் =  வசப்படாதவன்

மனத்துள் யாதும் தழுவிலன் = மனதில் கூட என்னை தழுவவில்லை

சலமும் கொண்டான் = கோபம் கொண்டவன்

மைக் = கண் மை போன்ற

கருங்  = கரிய

குழலினாள் = கூந்தலைக் கொண்ட

மாட்டு = அவளின் (சீதையின்)

அன்பினில் = அன்பினில்

வலியன்' என்பாள். = வலியவன் என்றாள்

அராக்கிதான் என்றாலும், அவளுள்ளும் ஒரு அன்புக்கு ஏங்கும் பெண் இருக்கத்தான் செய்கிறாள்.



Monday, June 24, 2019

சிலப்பதிகாரம் - அதன் இடை நினக்கு இடை

சிலப்பதிகாரம் - அதன் இடை நினக்கு இடை


முதலிரவு. கண்ணகியின் அழகைப் பற்றி கோவலன் புகழ்ந்து தள்ளுகிறான்.

பெண்ணின் அருகாமை, அவளின் அன்பு, காதல் ஆணுக்கு உயிர் தருகிறது.

கிரேக்க கதைகளில் ஒன்று.

அதிகாலையின் கடவுள்  ஈயாஸ் (Eos ) என்ற ஒரு பெண் தெய்வம். மிக அழகானவள். அவளுக்கு ஒரு காதலன். அவன் பெயர் டித்தோன்ஸ் (Tithonus ) என்று பெயர். அவளோ தெய்வப் பெண். அவனோ மானிடன். மானிடர்களுக்கு இறப்பு என்று ஒன்று உண்டு. ஈயாசுக்கு, அவளுடைய காதலன் ஒரு நாள் இறந்து போவான் என்ற எண்ணத்தையே சகிக்க முடியவில்லை.

நேரே, கடவுள்களுக்கெல்லாம் தலைவரானான ஸியூஸ் (Zeus ) என்பவரிடம் சென்று, தன்னுடைய காதலுனுக்கு சாகா வரம் வேண்டும் என்று கேட்டாள். அவள் மேல் பரிதாபப் பட்டு, அவரும், அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்தார்.

அவளுடைய அவசரத்தில் அவள் தன்னுடைய காதலுனுக்கு என்றும் மாறாத இளமை வேண்டும் என்று கேட்கவில்லை.

அதனால் என்ன ஆயிற்று?

அவளுடைய காதலனுக்கு வயது ஆகிக் கொண்டே போனது.

100, 200, 300, 500 என்று வயது ஆகிக் கொண்டே போகிறது.

கண் பார்வை மங்கி, சுத்தமாக ஒன்றும் தெரியவில்லை. காது கேட்கும் சக்தியை இழந்து விட்டது.  தோல் எல்லாம் சுருங்கி விட்டது. நிற்க முடியவில்லை. பசியில்லை. இயற்கையின் உபாதைகளுக்கு தானே எழுந்து சென்று  தன் காரியங்களை பார்த்துக் கொள்ள முடியவில்லை.

சரி, செத்தாவது தொலைக்கலாம் என்றால், சாகா வரம் இருப்பதால் சாகவும் முடியாது.

சிந்தித்துப் பாருங்கள். 1000, 2000 வருடம் வாழ்ந்து கொண்டிருந்தால், உடலில் வலிமை இல்லாமல் , புலன்கள் எல்லாம் தள்ளாடிப் போய் இருந்தால் எப்படி இருக்கும்?

எனவே, நீண்ட ஆயுள் மட்டும் இருந்தால் போதாது. குன்றாத இளமையும் வேண்டும் அல்லவா?

அதுக்கு நம்ம ஊரில் ஒரு வழி கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

அது தான் "அமுதம்".

அந்த அமுதத்தை உண்டால் மூப்பும் வராது, இறப்பும் வராது.

சரி, அதுக்கும் இந்த சிலப்பதிகாரத்துக்கும் என்ன என்ன சம்பந்தம்.

கோவலன் சொல்கிறான் கண்ணகியிடம்

"இந்த அமுதம் இருக்கிறதே, அதற்கு முன்னால் தோன்றியவள் நீ. எனவே, இந்திரன் தன் படையான வஜ்ராயுதத்தை உனக்கு தந்திருக்க வேண்டும். அந்த வஜ்ராயுதத்தின் இடை, உன்னுடைய இடை (இடுப்பு).

அதுமட்டும் அல்ல, இந்த முருகன் இருக்கிறானே, ஒரு காரணமும் இல்லாமல், தன்னுடைய கூரிய வேலை உன் கண்களுக்கு தந்துவிட்டுப் போய் விட்டான். அது என்னை என்ன பாது படுத்துகிறது தெரியுமா "






பாடல்


மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?


பொருள்

மூவா மருந்தின் = மூப்பு வராமல் காக்கும் மருந்து (அமுதம்)

முன்னர்த் தோன்றலின், = அந்த அமுதத்துக்கு நீ முன்னால் தோன்றியதால்

தேவர் கோமான்  = தேவர்களின் தலைவன் (இந்திரன்)

தெய்வக் காவல் படை  = தெய்வக் காவல் படையான வஜ்ராயுதத்தை

நினக்கு அளிக்க  = உன்னிடம் கொடுக்க

அதன் இடை  = அந்த ஆயுதத்தின் இடுப்புப் பகுதி

நினக்கு இடை என = உன் இடை ஆயிற்று


அறுமுக ஒருவன் = ஆறு முகங்களை கொண்ட ஒருவன் (முருகன்)

ஓர் பெறும் முறை இன்றியும் = நீ பெற்றுக் கொள்ள எந்த முறையும் இல்லாமல்

இறும் முறை  = (நான்) துன்பப்  படும் காட்சியை

காணும் இயல்பினின் அன்றே  = காணாததால்

அம் சுடர் நெடு வேல் = அந்த சுடர் போல ஒளி விடும் வேலை

ஒன்றும் நின் முகத்துச் = உன்முகத்தில்

செங் = சிவந்த

கடை  =  கடைசியில், கடைக்கண் , கண்ணோரத்தில்

மழைக் கண்  = ஈரம் நிறைந்த உன் கண்கள்

இரண்டா ஈத்தது? = இரண்டாக தந்துவிட்டான்


வஜ்ராயுதம் என்பது மின்னலைக் கொண்டு செய்தது. மின்னல் போல் இடுப்பு. இருக்கிறதா, இல்லையா என்று தெரியாது. தொட்டால் மின்சாரம் பாயுமோ? 

இளங்கோ அடிகள் தான் இப்படி விழுந்து விழுந்து வர்ணனை செய்கிறார் என்றால், இந்த தாடிக்கார தாத்தா, வள்ளுவர், அவர் முறைக்கு அவர் விடும் ஜொள்ளைப் பாருங்கள். 


உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு 
அமிழ்தின் இயன்றன தோள்


ஒவ்வொரு முறை அவளை கட்டி அணைக்கும் போதும், உயிர் தளிர் விட்டு துளிர்ப்பதால்,  அவளுடைய தோள்கள் அமுதத்தால் ஆனதோ என்கிறார்?

உயிரில்,  புதிதாக, இளமையாக, தளிர் துளிர்க்குமாம், ஒவ்வொரு முறை கட்டிப் பிடிக்கும் போதும். 

வாழ்க்கையை இரசியுங்கள். ஒவ்வொரு வினாடியையும் இரசித்து அனுபவியுங்கள்.  

வாழ்க்கை இனிமையானது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_24.html

Sunday, June 23, 2019

சிலப்பதிகாரம் - படை வழங்குவது ஓர் பண்பு உண்டு

சிலப்பதிகாரம்  - படை வழங்குவது ஓர் பண்பு உண்டு 


கோவலனுக்கும் கண்ணகிக்கும் முதல் இரவு. அந்த அறையின் தோற்றத்தை விளக்கினார் அடிகளார்.

அடுத்தது, அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று சொல்கிரார்.

அவர்கள் எங்கே பேசினார்கள். கோவலன் தான் பேசுகிறான். கண்ணகியின் அழகில் மயங்கி, அவள் அழகைப்  புகழ்கிறான்.

கோவலன் , கண்ணகியிடம் சொல்கிறான் (கொஞ்சுகிறான்)

"இந்த சிவ பெருமான், பிறை நிலவை தலையில் சூடிக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு அழகாகத்தான் இருக்கிறது. எல்லோரும் அவரை வணங்கும்போது, அந்த பிறை நிலவையும் வணங்குகிறார்கள். ஆனால், அந்த பிறை நிலா அவருக்கு உரியது அல்ல. உன் நெற்றியில் இருந்து வந்தது அது. எனவே, அதை உனக்கு (கண்ணகிக்கு) அவர் தருவதுதான் ஞாயம்.

அரசர்கள் போருக்குச் செல்லும் முன், வீரர்களுக்கு ஆயுதங்களை வழங்குவார்கள். போரில் போராடி வெற்றி பெற வேண்டி. இந்த காமப் போரில் நீ வெல்ல அந்த மன்மதன், தன் கையில் இருந்த கரும்பு வில்லை உன் புருவமாக வளைத்து அனுப்பி வைத்திருக்கிறான் போலும் "


பாடல்


குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின், 
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்

பொருள்

குழவித் = குழவி என்றால் குழந்தை. இங்கே இளைய, அல்லது சிறிய. பிறை.

திங்கள் = நிலா

இமையவர் = தேவர்கள்

ஏத்த = போற்ற

அழகொடு = அழகாக

முடித்த = முடியில்

அருமைத்து ஆயினும் = அருமையாக இருந்தாலும்

உரிதின் = அதன் உரிமை

நின்னோடு = உன்னுடையது

உடன் பிறப்பு = (காரணம்) அது உன் உடன் பிறப்பு

உண்மையின் = உண்மையாக,

பெரியோன்  = சிவா பெருமான்

தருக = உனக்குத் தர வேண்டும்

திரு நுதல் ஆக என: = உன்னுடைய சிறந்த நெற்றியாக (நுதல் = நெற்றி)

அடையார் முனை = பகைவர்களை சந்திக்கும் இடம்

அகத்து = அந்த இடத்துக்கு

அமர் = போர்

மேம்படுநர்க்குப் = செய்யச் செல்வோருக்கு

படை = ஆயுதங்கள்

வழங்குவது = கொடுத்து  அனுப்புவது

ஓர் பண்பு உண்டு = ஒரு வழக்கம்

ஆகலின், = ஆகவே, அது போல

உருவிலாளன் = மன்மதன். மன்மதனுக்கு உருவம் கிடையாது. யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான், அவன் மனைவி இரதி தேவியைத் தவிர.

ஒரு = சிறந்த

பெரும் கருப்பு வில் = பெரிய கரும்பு வில்லை


பெண்களுக்கு நெற்றி சிறிதாக இருக்க வேண்டும் என்பது சாமுத்திரிகா இலட்சணங்களில் ஒன்று.

ஏன் ?

பெண்களுக்கு கருணை அதிகம். (அந்தக் கால பெண்களுக்கு). கருணை, கண் வழியேதான்  வெளிப்படும்.  அதற்கு கண்ணோட்டம் என்று பெயர்.

கண்ணோட்டம் என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

கருணை அதிகமானால், கண்கள் விரியும். கண்கள் விரிந்தால், நெற்றி சுருங்கும்.

அம்பாளுக்கு விசாலாட்சி என்று ஒரு பெயர் உண்டு.  விரிந்த, பெரிய கண்களை உடையவள் என்று அர்த்தம்.

கண்ணகியின் நெற்றி, பிறைச் சந்திரனைப் போல சிறியதாக இருந்ததாம்.

சீதையை,  குகனிடம் அறிமுகப் படுத்தும் போது இராமன் சொல்லுவான், "இந்த சிறந்த போன்ற  நெற்றியை உடைய சீதை உன் உறவினள்" என்று.

"நல் நுதலவள் நின் கேள்"


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்

    தொழில் உரிமையின் உள்ளேன் 


வர்ணனை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலிரவில், மனைவியை ,கணவன் புகழ்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. 

நாம், மற்றவைகளை எவ்வளவு புகழ்கிறோம் ? அவர்கள் நல்ல குணத்தை, அவர்கள் செய்த உதவியை, எவ்வளவு புகழ்கிறோம். 

மனைவியின் சமையலை, அவள் வேலை மெனக்கட்டு வீட்டை சுத்தமாக  வைக்க படும் பாட்டை, கணவனின் வெளி உலக சங்கடங்களை சமாளிக்கும் திறமையை, நண்பர்களின் உதவியை, கீழே வேலை செய்பவர்களின் பங்களிப்பை...இப்படி ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது, புகழ்ந்து சொல்ல. 

நாம் புகழ்கிறோமா?

குறை சொல்ல மட்டும் முதலில் வந்து விடுகிறோம். 

சாப்பாட்டில், ஒரு உப்புக் கல் கூடி விட்டால், தைய தக்கா என்று குதிக்கிறோம்.  சரியாக இருந்தால், நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. 

மற்றவர்களை, மனம் விட்டு புகழ வேண்டும். போலியாக அல்ல. உண்மையாக. 

அவர்கள் சந்தோஷப் படுவார்கள். நமக்கு மேலும் உதவி செய்ய நினைப்பார்கள். 

உதாரணமாக, இந்த பிளாக் நன்றாக இருக்கிறது என்றால், நன்றாக இருக்கிறது  என்று ஒரு வார்த்தை சொல்லலாம். அடடா, இத்தனை பேர் நன்றாக இருக்கிறது என்று  சொல்கிறார்களே என்று மேலும் எழுத உற்சாகம் வரும்...:)

"யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. " என்பார் திருமூலர். 


யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. 

முயன்று பாருங்கள். 


Saturday, June 22, 2019

சிலப்பதிகாரம் - பெரும் தோள் எழுதி

சிலப்பதிகாரம் - பெரும் தோள் எழுதி


கோவலன் மற்றும் கண்ணகியின் திருமணச் சடங்குகள் இனிதே நடந்து முடிந்தன.

இரவு தொடங்கி விட்டது.

அவர்களின் முதலிரவு காட்சியினை இளங்கோ அடிகள் என்ற துறவி காட்டுகிறார்.

கத்தி மேல் நடப்பது போன்ற வேலை. ஒரு வார்த்தை பிசகினாலும் முகம் சுளிக்க நேரிடலாம். அதே சமயம், ஒரு பெண்ணும், ஆணும் முதன் முதலில் தனிமையில் சந்திக்கும் அந்த இன்பத்தையும் காட்ட வேண்டும்.

தமிழ் இலக்கியம் சிற்றின்பத்தை கண்டு ஓடியதில்லை. உலகப் பொதுமறை எழுதிய வள்ளுவரும், இன்பத்துப் பால் எழுதினர். தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்ற பக்தி இலக்கியங்களிலும் சிற்றின்பம் என்பது நாயக நாயகி பாவமாக ஊடாடிக் கிடந்தது.

தமிழர்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்தார்கள். அக வாழ்க்கையை பற்றி பேச அவர்கள் தயங்கியதே இல்லை. பிற்காலத்தில் எங்கிருந்தோ இந்த சங்கடம் வந்துவிட்டது.   ஆண் பெண் உறவு என்பது ஏதோ அசிங்கமானது, தவிர்க்கமுடியாத ஒரு நிர்பந்தம் என்ற உணர்வு வந்து விட்டது.

நம் தமிழ் இலக்கியம், ஆண் பெண் உறவை தலை மேல் வைத்து கொண்டாடி இருக்கிறது.

"இரவு நேரம். பெரிய கட்டில். கட்டில் பூராவும் மலர் தூவி இருக்கிறது. கோவலனும் கண்ணகியும் தனித்து இருக்கிறார்கள். சந்திரனும், சூரியனும் ஒன்றாக சேர்ந்து இருந்தது போல இருந்ததாம். கோவலன், அங்கிருந்த சந்தனம், குங்குமம் இவற்றை மயிலிறகால் தொட்டு கண்ணகியின் தோளில் படம் வரைந்தான். அவர்கள் இருவரும் அணிந்திருந்த மாலையில் இருந்து பூக்கள் உதிர்ந்தன. அந்த மாலைகள் என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கி நின்றன. அப்போது, தீராத காதோலோடு கோவலன் கண்ணகியின் முகம் பார்த்து சொல்லுவான் "


பாடல்

சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,
தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:

பொருள்

சுரும்பு  = வண்டுகள்

உணக் கிடந்த = தேன் உண்ணும்படி கிடந்த

நறும் பூஞ் சேக்கைக் = நல்ல பூக்களின் சேர்க்கை

கரும்பும் வல்லியும் = கரும்பு வல்லி என்பவை இன்பத்தை தூண்டும் படங்கள் என்று விரிவுரையாளர்கள்  கூறுகிறார்கள்

பெரும் தோள் எழுதி = அவளுடய தோளில் வரைந்து. இலக்கியத்தில் அவ்வளவுதான் சொல்ல முடியும்.உரை ஆசிரியர்கள் அவன் எங்கெல்லாம் படம் வரைந்தான் என்று சொல்லுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் தேடி கண்டு கொள்க.

முதிர் = முதிர்ந்த

கடல் = கடல் (சூழ்ந்த)

ஞாலம் முழுவதும் விளக்கும்  = இந்த உலகம் முழுவதும் விளங்கும்

கதிர் = நிலவும், சூரியனும்

ஒருங்கு இருந்த காட்சி போல, = ஒன்றாக இருந்த காட்சி போல

வண்டு வாய் திறப்ப = வண்டுகள் வாய் திறக்க

நெடு நிலா விரிந்த = நெடுக வெண்மையான ஒளி பரப்பும் நிலவின் ஒளி போல


வெண் தோட்டு மல்லிகை விரியல் =  வெண்மையான மல்லிகை மலரில் கட்டிய   (விரியல் என்றால் பூமாலை என்று பொருள்)

மாலையொடு = மாலையோடு (மல்லிகைப் பூ மாலை)

கழுநீர்ப் = நீலோற்பலம் என்ற ஒருவகை மலர். தாமரை போல் நீரில் பூக்கும் ஒரு மலர்

பிணையல்  = மாலை

முழுநெறி பிறழ = அந்த மாலையில் உள்ள மலர்கள் மாலையில் இருந்து உதிர்ந்து விழ

தாரும் மாலையும் = அவர்கள் அணிந்திருந்த மாலைகள்

மயங்கி = மூச்சு முட்டி மயங்கி

கையற்று = என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து, செயல் இழந்து

தீராக் காதலின் = தீராத காதலோடு

திரு முகம் நோக்கி = கண்ணகியின் அழகிய முகத்தைப் பார்த்து

கோவலன் கூறும்  = கோவலன் கூறும்

ஓர் குறியாக் கட்டுரை = ஒரு குறிப்பான கட்டுரை.

கத்தி மேல் நடக்கும் வித்தைதானே? சொல்லவும் வேண்டும், முழுவதுமாக சொல்லவும் கூடாது.

வயது வராத பிள்ளைகள் படித்தால் விகல்பமாக ஒன்றும் தெரியாது.

வயது வந்தவர்களுக்கு, திருமணம் முடித்தவர்களுக்கு அந்த வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கும்.  அவற்றை தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு மகிழ்வார்கள்.

Pornography என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆண் பெண் உறவை கொச்சைப் படுத்தாமல், அழகாகவும்  சொல்ல முடியும் என்று காட்டுகிறார் அடிகளார்.

அழகாக சொல்லப் படிக்க வேண்டும். .அடிகளார் நினைத்து இருந்தால், இந்த பகுதியை விட்டு விட்டுப் போயிருக்கலாம்.

நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும். படிக்க வேண்டும்.

யோசித்துப் பார்ப்போம்...எத்தனை முறை நாம் நம்முடைய ஆழமான, நுண்ணிய, மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறோம் என்று.

"இந்த சேலையில் நீ ரொம்ப அழகா இருக்க" என்று கடைசியாக மனைவியிடம்  எப்போது கூறினோம்.

இந்த T ஷர்ட் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு என்று கணவனிடம் எப்போது கூறினோம்?

இன்னிக்கு சாப்பாடு பிரமாதம்...செஞ்ச கைக்கு ஒரு முத்தம் தரணும் என்று அவள் கையை எப்போது  பிடித்து அன்பை வெளிப்படுத்தினோம்?

மெல்லிய, நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அவரை மழுங்க அடித்துக் கொண்டிருக்கிறோம்.

கோபம், எரிச்சல், வெறுப்பு...இவற்றை காட்ட நாம் என்றுமே தயங்கியது இல்லை. அன்பு, பாசம், காதல், காமம் இவற்றை வெளிப்படுத்துவதில் ஒரு தயக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

நான், எல்லோரையும் சொல்லவில்லை. பொதுவாகச்  சொல்லுகிறேன்.

உணர்வுகளை அழகாக வெளிப்படுத்த பழக வேண்டும்.

இளங்கோ அதோடு விடவில்லை. மேலும் போகிறார்.

முதலிரவில், மனைவியோடு ஏதோ சொல்லப் போகிறான் கோவலன்.

என்ன சொல்லி இருப்பான் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_31.html


Friday, June 21, 2019

சிலப்பதிகாரம் - மங்கல நல் அமளி ஏற்றினார்

சிலப்பதிகாரம்  - மங்கல நல் அமளி ஏற்றினார் 


உலகில் எல்லோரும் வேண்டுவது எது என்று கேட்டால், "நினைத்தது நடக்க வேண்டும்" என்பதுதானே.

நினைப்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது நடந்துவிட்டால் சந்தோஷம் தானே?

எந்த வயதிலும், ஏதோ ஒரு கனவோடுதான் மனிதன் வாழ்கிறான். அந்த கனவு மெய்ப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

எப்படி நினைத்ததை அடைவது? அது சாத்தியமா?

சாத்தியம் என்று அறிவிக்கிறது தமிழ் இலக்கியம்.

தமிழ் இலக்கியம் என்ன பெரிய அறிவியல் கோட்பாடா? அது சொன்னால் அது சரியாக இருக்குமா ? நானும் தான் எவ்வளவோ நினைக்கிறேன். எங்கே நடக்கிறது? ஒண்ணு ரெண்டு நடந்தால் அதுவே பெரிய விஷயம். இதில் எங்கே நினைப்பதெல்லாம் நடப்பது. இதெல்லாம், சும்மா இலக்கியம் படிக்க நல்லா இருக்கும். நடைமுறை சாத்தியமா ? என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் ஓடலாம்.

கேள்வியை அப்படி ஒரு புறம் வைத்திருங்கள்.

வள்ளுவர் சொல்கிறார்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்


அதாவது, நினைத்ததை , நினைத்த மாதிரியே அடைவார்கள் யார் என்றால் அப்படி நினைத்தவர்கள்  மன உறுதி கொண்டவர்களாக இருந்தால்.

ஒரு பொருளை அடைய வேண்டுமானால், முதலில் அதுபற்றிய சிந்தனை மனதில் எழ வேண்டும். அது என்ன பொருள், அதை எப்படி அடைவது, எவ்வளவு சீக்கிரம் அடைவது, அதை அடைய என்னென்ன வழி முறைகள், அதை அடைய  என்னென்ன செய்ய வேண்டும், யார் யார் உதவி என்ற எண்ணங்கள் முதலில் வர வேண்டும்.

அதன் பின், அவற்றை செயல் படுத்துவதில் உறுதி வேண்டும்.

இரண்டும் இருந்து விட்டால், வாழ்வில் எதையும் அடையலாம் என்கிறார் வள்ளுவர்.

இதில் முக்கியமானது என்ன என்றால், "எண்ணங்கள்". மனதில் நாம் எதை நினைக்கிறோமோ, அதையே அடைவோம்.

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர்தம் 
உள்ளது அணையது உயர்வு 

என்பதும் வள்ளுவம்.

எனவே, மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே ஓட விட வேண்டும்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்

"மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே ஓட விட வேண்டும். "


எண்ணங்கள் நல்லவைகளாக இருந்தால், உயர்ந்தவைகளாக இருந்தால், வாழ்வும் சிறக்கும்.

சரி, அதுக்கும், இந்த சிலப்பதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் முடிந்து விட்டது. அங்குள்ள மக்கள்  எல்லாம் அவர்களை வாழ்த்துகிறார்கள்.

வாழ்த்தில் தெரிந்தோ தெரியாமலோ அமங்கல சொற்கள் வந்து விழுந்து விடுகின்றன.   இளங்கோ அடிகள் தெரிந்தே அப்படிச் செய்தாரா அல்லது பின் வரப் போகும்   அமங்கல நிகழ்வுகளுக்கு இவை ஒரு தீய சகுனங்கள் மாதிரி முன்பே வந்து  விழுந்தனவா என்று தெரியாது.

பாடல்


‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-

பொருள்


‘காதலற் = கோவலனும் கண்ணகியும்

பிரியாமல் = ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல்

கவவுக் கை = பிடித்த கை

ஞெகிழாமல், = நெகிழ்ந்து விட்டு விடாமல்

தீது அறுக!’ = தீது இல்லாமல் வாழ்க

என ஏத்தி = என வாழ்த்தி

 சில் மலர் கொடு தூவி = மலர் தூவி

அம் கண் உலகின் = அந்த உலகத்தின்

அருந்ததி அன்னாளை = அருந்ததி போன்றவளை (கண்ணகியை)

மங்கல = மங்கல

நல் அமளி ஏற்றினார் = கட்டில் ,  படுக்கை. இங்கே ஆசனம் என்று கொள்ளலாம்.

அமளி என்றால் சண்டை, சச்சரவு. (பாராளுமன்றத்தில் அமளி. எதிர் கட்சிகள் வெளி நடப்பு ).கட்டிலுக்கு, படுக்கைக்கு, மெத்தைக்கு  அமளி என்று பெயர். கணவன் மனைவி அன்பு செய்வதைப் பார்த்தால் ஏதோ மல் யுத்தம் நடப்பது மாதிரிதானே இருக்கும்.

மாணிக்க வாசகர் சொல்கிறார் "போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு " என்று.

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்




இந்த வாழ்த்தைப் பார்த்தாலே, ஏதோ நல்ல வாழ்த்து மாதிரிதான் இருக்கும்.

ஆனால், சற்று உன்னிப்பாக கவனித்தால் தெரியும், அதில் ஊடாடும் அமங்கலம் .

"காதலர் பிரியாமல்"

"ஒருவரை ஒருவர் கை விட்டு விடாமல்"

"தீமை இன்றி"

என்று சொல்லும்போது பிரிதல், கை விடுதல், தீமை என்ற அமங்கல சொற்கள்  நிறைந்து இருப்பதைக் காணலாம்.

இது எப்படி இருக்கிறது என்றால்

"பெண்ணும் மாப்பிளையம், ஒருவரை ஒருவர் சந்தேகப் படாமல், ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாகாமல்,  வாந்தி பேதி என்று எந்த நோயும் இல்லாமல், அற்ப ஆயுளில் போகாமல் வாழ்க "

என்று வாழ்த்துவது போல இருக்கிறது.

அப்படி வாழ்த்தினார்கள், காதலர்கள் பிரிந்தார்கள், கை நழுவியது, தீமை வந்து சேர்ந்தது .

எனவே, மறந்து தீய, அமங்கல சொற்களை சொல்லக் கூடாது, நினைக்கக் கூடாது.

நினைவு சொல்லாக மாறும்.

சொல், செயலாக மாறும்.

தமிழ் இலக்கியம் அதை நம்பியது.

நாமும் நம்பிவிட்டுப் போவோமே. நல்லதை நினைப்போம். நல்லது நிகழும் என்று நம்புவோம்.

காசா பணமா...

Thursday, June 20, 2019

சிலப்பதிகாரம் - ஒசிந்த நோக்கினர்

சிலப்பதிகாரம் - ஒசிந்த நோக்கினர் 


இந்த கல்யாண வீட்டுல பார்த்தா, பெண்கள் தான் பெரிய முக்கியத்துவம் பெறுகிறார்கள். இருக்குறதுக்குள்ள நல்ல பட்டா எடுத்து கட்டிக்கிட்டு, வீட்ல இருக்குற நகையெல்லாம் அள்ளி மேல போட்டுக்கிட்டு, beauty பார்லர் ல போய் முகத்தை எப்படியெல்லாம் மெருகேற்ற முடியுமோ அப்படி எல்லாம் மெருகேற்றிக் கொண்டு கல்யாண வீட்டுக்கு  வந்து விடுவார்கள்.

வந்த பின், சும்மா நின்னால் யாராவது ஏதாவது சொல்லுவார்களோ என்ற பயத்தில் எதையாவது கையில் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒரு தட்டில் பூ, ஒரு குடத்தில் தண்ணீர், ஒரு கும்பாவில் சந்தனம், ஏதாவது சாமி படம் என்று எதையாவது கையில் வைத்துக் கொள்ளுவார்கள்.

சரி, கையில் வைத்துக் கொண்டு சும்மா நின்னா எப்படி, வேலை செய்வது மாதிரி காட்ட வேண்டுமே...அதற்காக, அங்கும் இங்கும் பரபரப்பாக நடப்பார்கள்....ஏதோ மூன்றாம் உலக யுத்தம் வரப்போவது மாதிரியும், இவர்கள் தான் அதை போய் தடுக்கப் போவது மாதிரியும் அப்படி ஒரு பரபரப்பு. "அந்த கல்கண்டை பாத்தியா, பால் வந்ததா, பூக் காரன் வந்தானா, வீடியோ ஆள் இன்னும் வரலியா ...." என்று தானும் டென்ஷன் ஆகி, இருக்கிற ஆளுகளையும் டென்ஷன் பண்ணிக் கொண்டு இருப்பார்கள். வேலை செய்கிறார்களாமாம்...

அங்கு உள்ள ஆம்பிளைங்க எல்லாம் பேசாம நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்த தையா தக்கா ஆட்டத்தை இரசித்துக் கொண்டு இருப்பார்கள்.

இது இன்று நேற்று நடப்பது அல்ல....சிலப்பதிகார காலம் தொட்டு நடக்கிறது.

இளங்கோ அடிகள் சொல்கிறார்

அந்தக் காலத்தில் புகைப் பட வசதி இல்லை. கண்ணகியின் திருமண நிகழ்ச்சியை ஒரு   வீடியோ, அல்லது குரூப் போட்டோ எடுத்தால் எப்படி இருக்கும் , அதை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார் அடிகளார்....

பாடல்


விரையினர், மலரினர், விளங்கு மேனியர், 
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 


பொருள்

விரையினர் = நறுமண பொருள்களை கொண்டு நடப்பவர்கள். சந்தனம், அகில் போன்றவை.

மலரினர் = தட்டில் பூக்களை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைபவர்கள்

விளங்கு மேனியர் = அழகான வடிவம் உள்ளவர்கள் ("figure")

உரையினர் = எதையாவது பேசிக் கொண்டே இருப்பவர்கள்

பாட்டினர் = பாட்டு பாடுபவர்கள்

ஒசிந்த நோக்கினர் = ஓரக் கண்ணால் பார்ப்பவர்கள் (சைட் அடிப்பவர்கள்)

சாந்தினர் = மேலே பூசிக் கொள்ளும் சந்தனம், குங்குமம் போன்றவற்றை கொண்டு நடப்பவர்கள்

புகையினர் = சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற நறுமண புகை தரும் பொருள்களை கொண்டு நடப்பவர்கள்

தயங்கு கோதையர் = மெல்லமாக, தயங்கி தயங்கி நடக்கும் பெண்கள்

ஏந்துஇள முலையினர் = எடுப்பான, இளமையான மார்பகத்தை கொண்டவர்கள்  (இளங்கோ அடிகள் சொல்கிறார்)

இடித்த சுண்ணத்தர் = பொடிகளை இடித்து வைத்திருப்பவர்கள்

விளக்கினர் = கையில் விளக்கை ஏந்தியவர்கள்

 கலத்தினர் = நீர் குடம், பால் குடம் போன்ற குடங்களை ஏந்தியவர்கள்

விரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர்  = முளைப் பாலிகை குடத்தை கையில் ஏந்தியவர்கள்


முகிழ்த்த மூரலர் = புன்னகை மலர்ந்த முகத்தினர்

போதொடு  = மலரோடு

விரி கூந்தல் = விரித்த கூந்தல் (ஷாம்பூ போட்டு குளித்து, hair straighten பண்ணி வந்தவர்கள்)

பொலன் நறுங் கொடி அன்னார்,  = அழகிய பொற் கொடி போன்றவர்கள்

ஆண்பிள்ளைகளை மருந்துக்கும் காட்டவில்லை  இளங்கோ அடிகள்.

எல்லாம் அவங்க நாட்டாமை.

"போதொடு விரி கூந்தல்"

போது என்றால் அன்று அலர்ந்த மலர் என்று அர்த்தம்.


"போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார், அவர் பின் புகுவேன் " என்பார் நாவுக்கரசர்.

பக்தர்கள், பூவும் நீரும் கொண்டு கோவிலுக்கு செல்வார்கள், அவர்கள் பின்னேயே நானும் சென்று விடுவேன் என்கிறார். அவ்வளவு பணிவு.

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் #களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

இத்தனை பேரும் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தை கற்பனை செய்து பாருங்கள்.

வீடியோ, புகைப்படம் இல்லாத குறை தீர்ந்ததா?

அதுதான் இலக்கியம். அதுதான் கவிதை.

தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தை படம் பிடிக்கும் காலக் கண்ணாடி.

கல்யாண வீட்டில் வேறு என்ன என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_20.html


Wednesday, June 19, 2019

கம்ப இராமாயணம் - தலைவர் அவர்

கம்ப இராமாயணம் - தலைவர் அவர் 


சில பாடல்களை படிக்க படிக்க புதுப் புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றது.

இராமாயணத்தில், முதல் பாடல், கடவுள் வாழ்த்துப் பாடல். எத்தனையோ தரம் படித்து, கேட்டு, மனப்பாடம் ஆன வரிகள்தான். இதில், இனிமேல் என்ன இருக்கிறது மேலும் அறிய என்று நினைத்துக் கொண்டிருருந்தேன்.


முதலில் பாடலைப் பார்த்து விடுவோம்

பாடல்


உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

பொருள்


உலகம் யாவையும் = உலகம் அனைத்தையும்

தாம் உள = தம் மனதில் நினைத்த படி

ஆக்கலும் = படைக்கவும்

நிலை பெறுத்தலும் = நிலைபெறும்படி காக்கவும்

நீக்கலும் = பின் அவற்றை அழிக்கவும்

நீங்கலா = முடிவில்லா

அலகு இலா = அளவற்ற

விளையாட்டு உடையார் = அதை விளையாட்டாகச் செய்பவர்

அவர் = அவர்

தலைவர் = தலைவர்

அன்னவர்க்கே = அவருக்கே

சரண் நாங்களே = நாங்கள் சரணம் அடைகிறோம்

சொல்லுக்கு, அர்த்தம் என்னவோ அவ்வளவுதான்.

இதில் புதிதாக என்ன இருக்கிறது?

உலகை படைத்து, காத்து, அழிக்கும் அந்தக் கடவுளை நாங்கள் சரண் அடைகிறோம் என்கிறார்.

யோசித்துப் பார்க்கிறேன்.

நான் பிறந்தது என் விருப்பப் படி அல்ல.


இந்த நாட்டில், இந்த ஊரில், இந்த பெற்றோருக்கு இந்த வடிவில் பிறக்க வேண்டும் என்று  நான் விரும்பவில்லை. என் விருப்பம் இல்லாமல் என் பிறப்பு நிகழ்ந்தது.

சரி போகட்டும், என் விருப்பப்படி நான் வாழ முடிகிறதா?

என்ன பெரிய விருப்பப்படி வாழ்வது...நான் நினைத்தபடி காலையில் எழுந்திரிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அலாரம் வைத்து விட்டு படுக்கிறேன். இரவு படுக்கப் போகும்போது காலையில் ஐந்து மணிக்கு எழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கிறேன். எல்லா நாளும் முடிவதில்லையே.  மனைவி/கணவன், பிள்ளைகள், நம் படிப்பு, வேலை, மேலதிகாரிகள்  என்று ஆயிரம் விஷயங்கள் என்னை மீறி நடந்து கொண்டே இருக்கிறது.

சரி, வாழ்வும் என் கையில் இல்லை.

சாவாவது என் கையில் இருக்கிறதா?

அது என்று தேதியும் தெரியாது, இடமும் தெரியாது.

எவ்வளவோ பேர், எவ்வளவோ துன்பத்தில் தவிக்கிறார்கள். சாவு வராதா  என்று ஏங்குகிறார்கள். அவர்கள் விருப்பப்படி அது வருவது இல்லை.

சரி, வேண்டாம் என்றால் வராமல் இருக்கிறதா? கல்யாணம் முடித்து, புது மனைவியோடு  தேனிலவு போன இடத்தில் விபத்தில் சிக்கி இறந்தவர்கள் எத்தனை பேர்.

வேண்டும் என்பவர்களுக்கு வருவது இல்லை.

வேண்டாம் என்பவர்களிடம் வந்து நிற்கிறது.

எனவே முடிவும் என் கையில் இல்லை.

நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கையை நான் முடிவு செய்கிறேன் என்று. எது என் கையில் இருக்கிறது?

இப்படி தொடக்கம், நடு , முடிவு என்று எதுவமே என் கையில் இல்லை.

என் கையில் இல்லை என்றால் வேறு யார் கையில் இருக்கிறது?

யார் இதை எல்லாம் செய்கிறார்கள் ?

நான் செய்யவில்லை.

ஒன்று அது தானாக நிகழ வேண்டும், அல்லது யாராவது செய்ய வேண்டும்.

கம்பர் நினைக்கிறார், கம்பரைப் போல படித்த பெரும் புலவர்கள் நினைத்தார்கள்,  இவற்றைச் செய்வபன் ஒருவன் இருக்கிறான்.

அவன் தான் தலைவன்.

"அவர் தலைவர்"

அவர் கடவுள் என்று சொல்லவிலை.

அவர் பெருமாள், சிவன், பிரம்மா , இயேசு, அல்லா என்று எந்த கடவுள் பெயரையும் அவர் சொல்லவில்லை.

இன்னும் போனால், "அவர் கடவுள்" என்று கூட சொல்லவில்லை.

"அவர் தலைவர்", என்று சொல்கிறார்.

"அன்னவர்க்கே சரண் நாங்களே"

அந்தத் தலைவருக்கு, நாங்கள் சரண் என்கிறார்.

இவற்றைஎல்லாம் செய்வது இயற்கை என்று சொல்கிறீர்களா? அந்த இயற்கை தான்  தலைவர். அந்த இயற்கையிடம்  நாங்கள் சரண் அடைகிறோம் என்கிறார்.

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  அதனிடம் ஏன் சரண் அடைய வேண்டும்?  அது ஒரு பக்கம் இருந்து விட்டுப் போகட்டுமே.

அதனிடம், அல்லது அந்தத் தலைவரிடம் ஏன் போய் சரண் அடைய வேண்டும்?

அதைச் சொல்லப் புகுந்தால், blog நீண்டு விடும்.

அதை, இன்னொரு நாள் சிந்திப்போமா...


https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_32.html

சிலப்பதிகாரம் - காண்பார் கண் நோன்பு என்னை

சிலப்பதிகாரம் - காண்பார் கண் நோன்பு என்னை


கண்ணகியையும், கோவலனையும் அறிமுகம் செய்தபின், இளங்கோ அடிகள் நேரடியாக அவர்கள் திருமணத்துக்கு வந்து விடுகிறார். கதை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்கிறது.  ஊரு, அங்கு உள்ள நில புலன்கள், மக்கள் நிலை என்றெல்லாம் இளங்கோ மெனக்கடவில்லை.

யாருக்கு பொறுமை இருக்கிறது? யாரிடம் நேரம் இருக்கிறது ? Blog கொஞ்சம் நீண்டு விட்டாலே "...நல்லாத்தான் இருக்கு ஆனால் கொஞ்சம் நீளமா இருக்கு " என்று சொல்லும் காலத்தில் இருக்கிறோம் நாம். பார்த்தார் அடிகளார்.

ஒரு திரைக்கதை சொல்லுவது மாதிரி, கதையை எடிட் பண்ணி வேகமாக நகர்த்துகிறார். இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.

கோவலன் கண்ணகி திருமணக் காட்சி.

பாடல்


முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன;
முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து, 
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் 
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!


பொருள்

முரசு இயம்பின = முரசு அடித்து சப்தம் உண்டாக்கி

முருடு அதிர்ந்தன = முருடு அதிர்ந்தது


முரை எழுந்தன = முறையாக அனைத்து மங்கல வாத்தியங்களும் எழுந்து ஒலி எழுப்பின

பணிலம் = சங்கு

வெண்குடை = வெண் குடை

அரசு  = அரசன்

எழுந்ததொர்படி = எழுந்து வரும் போது எப்படி வருமோ அப்படி

எழுந்தன = எழுந்தன

அகலுள் = ஊரில்

மங்கல அணி = மங்கல அணி, திருமாங்கல்யம்

எழுந்தது = வலம் வரச் செய்தனர்

மாலை தாழ்  = மாலைகள் கட்டிய

சென்னி = பெரிய தலையை உடைய

வயிர மணித் தூண் அகத்து = வைரம் போன்ற தூண்களில்

நீல விதானத்து = நீல நிற பட்டினாலான மேற் கூரையில்

நித்திலப் = முத்து

பூம் பந்தர்க் கீழ் = பூக்கள் செறிந்த பந்தலின் கீழ்

வான் ஊர்  = வானில் செல்லும்

மதியம் = நிலவு

சகடு = ரோகிணி நட்சத்திரம்

அணைய = சேர. அதாவது, நிலவு ரோகிணி நடச்சத்திர கூட்டத்தில் இருக்கும் போது

வானத்துச்  = வானில் உள்ள

சாலி ஒரு மீன் தகையாளைக் = ஒரு வகை விண் மீன் போன்றவளை (அருந்ததி போன்ற கற்பு உடையவளை என்று அர்த்தம் கொள்க)

 கோவலன், = கோவலன்

மா முது பார்ப்பான் = சிறந்த, வயதில் முதிர்ந்த பார்ப்பனர்

மறை வழி காட்டிட, = வேத வழி காட்டிட

தீ வலம் செய்வது = தீயை வலம் வந்து

காண்பார் கண் நோன்பு என்னை! = அந்தக் காட்சியை காண்பவர் கண்கள் என்ன தவம் செய்தனவோ

இலக்கியம் என்பது ஒரு காலக் கண்ணாடி. இலக்கியம் நடந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்  என்பதை நமக்குச் சொல்பவை இலக்கியங்கள்.

நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்கள் பின் பற்றிய நடை முறைகள் என்ன, எப்படி பல்வேறு சடங்குளை செய்தார்கள் என்றெல்லாம் நமக்கு அறியத் தருபவை இலக்கியங்கள்.

இலக்கியங்கள் சொல்பவை மட்டும் அல்ல, அவை சொல்லாமல் விட்டவையும் நமக்கு  பல உண்மைகளை புலப் படுத்தும்.

எப்படி என்று பார்ப்போம்.

இப்போதெல்லாம், திருமண சடங்கின் போது திருமாங்கல்யத்தை ஒரு தட்டில் வைத்து, கொஞ்சம் மஞ்சள் கலந்த அரிசியை வைத்து திருமணம் நடக்கும் மண்டபத்தில் உள்ள  பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி வாங்குவார்கள்.

இந்த முறை கோவலன் கண்ணகி காலத்திலும் இருந்திருக்கிறது.

அந்தக் காலத்தில், அல்லது கோவலன் கண்ணகி போன்ற பெரிய இடத்து திருமணங்களில் , மங்கல அணியை , ஊரில் அனைவரிடமும் ஆசி வாங்கி இருக்கிறார்கள்.

"அகலுள் மங்கல அணி எழுந்தது."

என்கிறார் இளங்கோ.

இந்த தாலி கட்டுவது என்பது எப்போது வந்தது என்று தெரியவில்லை.

கம்ப இராமாயணத்தில், சீதைக்கு இராமன் தாலி கட்டியதாக கம்பன் சொல்லவில்லை.

கனா கண்டேன் தோழி நான் என்று பாடிய ஆண்டாளும், மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்து என்  கழுத்தில் மாங்கல்யம் பூட்ட கனா கண்டேன் என்று சொல்லவில்லை.  தீ வலம் வந்தாள் , மாலை அணிந்தாள் , மஞ்சள் நீராடினாள்  ஆனால் மாங்கல்யம் அணிந்ததாக சொல்லவில்லை.


அடுத்ததாக, அந்தக் காலத்தில் என்னென்ன வாத்திய கருவிகள் இருந்தன என்று  காட்டுகிறார் அடிகளார்.

மேலும், மண்டபத்தை எப்படி அழகு படுத்தினார்கள் என்று காட்டுகிறார். அந்தக் காலத்திலும் திருமண மண்டபங்கள் இருந்திருக்கின்றன. அதை decorate  செய்திருக்கினார்கள். மேலே பார்த்தால் வானம் போல இருக்க வேண்டும் என்பதற்காக  நீல நிற பட்டில் மேற்கூரையை அலங்கரித்து இருக்கிறார்கள். நட்சத்திரம் மாதிரி தெரிய வேண்டும் என்பதற்காக அதில் சில  முத்துக்களை பதித்து இருக்கிறார்கள்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். கதை நகர வேண்டுமே என்று அடிகளார்  "அடடா...அந்தத் திருமணத்தை பார்ப்பவர்கள் கண்கள் என்ன தவம்  செய்ததோ " என்று சொல்லிவிட்டு மேலே நகர்கிறார்.

தாலி கட்டியாகி விட்டது.

அடுத்து என்னவாக இருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_19.html


Tuesday, June 18, 2019

சிலப்பதிகாரம் - மண் தேய்த்த புகழினான்

சிலப்பதிகாரம் - மண் தேய்த்த புகழினான் 


கதாநாயகியான கண்ணகியை அறிமுகம் செய்த பின், அடுத்ததாக கதாநாயகனான கோவலனை அறிமுகம் செய்கிறார் இளங்கோ அடிகள்.

எப்படி கண்ணகியின் குலப் பெருமை சொல்லி அவளை அறிமுகம் செய்தாரோ, அதே போல் கோவலனின் குலப் பெருமை சொல்லி அவனையும் அறிமுகம் செய்கிறார்.

"பெரிய நிலம் முழுவதையும் ஆளும் அரசனை தலைமகனாக கொண்டு தனித்து உயர்ந்த குடிகளோடு உயர்ந்த செல்வந்தன், தனக்கு வரும் வருமானத்தை பிறர்க்கு அளிக்கும் மாசாத்துவான் என்பவன், அவனுடைய மகன், 18 வயதுடையவன், கோவலன் என்று அவன் பெயர்.

அந்த கோவலன் பெரும் புகழ் படைத்தவன். மன்மதன் போல் அழகானவன் "

என்று கோவலனை நமக்கு அறிமுகம் செய்கிறார் அடிகளார்.

பாடல்

ஆங்கு, 
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த 
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்-தான்,  
மண் தேய்த்த புகழினான்;மதி முக மடவார் தம் 
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
‘கண்டு ஏத்தும் செவ்வேள்’ என்று இசை போக்கி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ. 


பொருள்

ஆங்கு = அங்கே, புகார் நகரில், கண்ணகி இருந்த புகார் நகரில்

பெரு நிலம் = பெரிய நிலம்

முழுது ஆளும் = முழுவதையும் ஆளும்

பெருமகன் = மூத்தவன், தலைவன், அரசன்

தலைவைத்த = அவனை தலை மகனாகக் கொண்டு

ஒரு தனிக் குடிகளோடு = அவனோடு நெருங்கி வாழும் மிகச் சில குடி மக்களோடு

உயர்ந்து ஓங்கு செல்வத்தான் = நிறைந்த செல்வம் கொண்டவன்

வரு நிதி = வரு நிதி வினைத்தொகை. வந்த நிதி, வருகின்ற நிதி, வரப் போகும் நிதி

பிறர்க்கு = மற்றவர்களுக்கு

ஆர்த்தும் = கொடுத்தும்

மாசாத்துவான் என்பான் = மாசாத்துவான் என்பவன்

இரு நிதிக் கிழவன் = இரண்டு நிதிகளுக்கு தலைவன்

மகன் = அவனுடைய மகன்

ஈர்-எட்டு ஆண்டு அகவையான் = இரண்டு எட்டு, அதாவது 16 வயது

அவனும்-தான்,   = அவனும் தான்

மண் தேய்த்த புகழினான் = அவனுடைய புகழின் முன்னால் இந்த பூமி சிறிதாகத் தோன்றும்.

மதி = நிலவு

முக = முகம் . நிலவு போன்ற முகம்

மடவார் தம் = பெண்கள் தம்

பண் = இசை

தேய்த்த = தோற்கும் படி பேசும்

மொழியினார் = குரலைக் கொண்ட பெண்கள்

ஆயத்துப் = ஆராய்ந்து

பாராட்டி = பாராட்டி

கண்டு ஏத்தும் செவ்வேள்’ = கண்டு போற்றும் முருகன்

என்று = என்று

இசை போக்கி = புகழ் பெற்று

காதலால் = காதலால்

கொண்டு ஏத்தும் கிழமையான் = போற்றப் படும் தலைவன்

கோவலன் என்பான் மன்னோ.  = கோவலன் என்பார்கள்.


ஒரு சில சொற்களுக்கு கொஞ்சம் விரிவான பொருள் காண்போம்.

முதலில் கிழவன் என்ற சொல் இரண்டு இடத்தில் வருகிறது.


"இரு நிதிக் கிழவன்"

"காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான்"

ஒளவையையும் நாம் தமிழ் கிழவி என்கிறோம். அது மரியாதையா? அவ்வளவு  அறிவு கொண்ட ஒரு பெண்ணை, கிழவி என்று அவள் வயதை வைத்தா குறிப்பிடுவது?

கிழவன், கிழவி என்றால் உரிமை உள்ளவன், தலைவன் என்று பொருள்.

முருகனுக்கு குறிஞ்சிக் கிழவன் என்று பெயர்.  முருகன் கிழவனா? குறிஞ்சி நிலத்துக்கு  உரிமையானவன், தலைவன் என்று பொருள்.

அவ்வளவு ஏன் போக வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை

திங்கள் கிழமை

செவ்வாய் கிழமை

என்று சொல்கிறோமே, கிழமை என்றால் என்ன அர்த்தம்?

ஞாயிற்றுக்கு (சூரியனுக்கு) உரிய நாள்

திங்களுக்கு (நிலா) உரிய நாள்

என்று அர்த்தம்.

கோவலனுக்கு 18 வயசு. அவனைப் போய் கிழவன் என்று சொல்ல முடியுமா?

சரி, அடுத்தது,

"இரு நிதி"

அது என்ன இரு நிதி?

நிதியில் மொத்தம் 9 வகையான நிதிகள் இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள்.

நவ நிதிகள்.

மற்றவற்றை விட்டு விடுவோம். இரு நிதி என்றால் சங்க நிதி, பதும நிதி என்ற இரண்டைக் குறிக்கும்.

இந்த இரண்டு நிதிகளும் குபேரனின் வசம் உள்ளவை. சங்க, பதும என்பவை குபேரனின் இரண்டு மனைவிகளை குறிக்கும் என்று சொல்பவர்களும் உண்டு.

குபேரன் இந்த இரண்டு செல்வத்தையும் தன்னுடைய இரண்டு மனைவிகளிடம் கொடுத்து  வைத்து இருக்கிறாராம்.

இதில் பதும நிதி என்றால் அறிவு, ஞானம்.

சங்க நிதி என்றால் பொருள் செல்வத்தையும் குறிக்கும்.

அறிவும், பொருள் செல்வமும் கோவலனின் தந்தையான மாசாத்துவானிடம் இருந்தது.

நாவுக்கரசர் தேவாரத்தில் சொல்லுவார்

"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து , இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் ஆளும் அரச பதவி தந்தாலும், அதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, சிவனடியார்களோடு  சேர்ந்து இருப்பதே எங்களுக்கு வேண்டியது"

என்கிறார்.


சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் மல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.


பசு மாட்டின் தோலை உரித்து, அந்த மாமிசம் சாப்பிடுபவன், சிவனடியாராக இருந்தால், அவன் தான் எனக்கு கடவுள் என்கிறார்.

நாவுக்கரசர் பெரிய  புரட்சியாளர். ஒரு கீழ் சாதிக்காரனை, தொடுவது இருக்கட்டும், அவனோடு பேசுவது இருக்கட்டும், அவனை கடவுள் என்கிறார் . அவர்   இருந்த காலத்தில் ஜாதி கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்திருக்கும்?


பாடலுக்கு மீண்டும் வருவோம்.

கோவலனின் புகழுக்கு முன்னால், இந்த பூமியே தேய்ந்து சிறிதாக தோன்றுமாம். அவ்வளவு புகழ்.

பெண்கள் எல்லாம் ஜொள்ளு விடும் அளவுக்கு அழகன்.

பெரிய செல்வந்தன்.

இராசாவுக்கு நெருங்கிய குடும்பம்.

16 வயசு.

கதாநாயகனையும் அறிமுகம் செய்தாயிற்று.

அடுத்து என்ன?

திருமணம்தான்.

16 வயது பையனுக்கும், 12 வயது பெண்ணுக்கும் திருமணம்.

அது எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_18.html

Monday, June 17, 2019

சிலப்பதிகாரம் - மாதரார் தொழுது ஏத்த

சிலப்பதிகாரம் - மாதரார் தொழுது ஏத்த 


இயற்கையை போற்றிய பின், ஊர் சிறப்பு சொல்லிய பின், இளங்கோ அடுத்து என்ன சொல்லப் போகிறார்.

நாம் நினைப்போம், அரசனைப் பற்றி, அவன் ஆட்சி பற்றி, அங்குள்ள மக்கள் நலம் பற்றி சொல்லப் போகிறார் என்று.

இளங்கோ அடிகள் அதையெல்லாம் விட்டு விடுகிறார்.

கதாநாயகனை கூட அறிமுகப் படுத்தவில்லை. நேரே கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார்.

என்னைக் கேட்டால், இது ஒரு பெரும் புரட்சி. பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார்.

கதாநாயகியை வர்ணிப்பது என்றால் ரொம்ப மெனக்கெட வேண்டும். மிகச் சிறப்பான உவமைகளை தேட வேண்டும்.

இளங்கோ அடிகள் கண்ணகியை அறிமுகப் படுத்தும் விதமும் மிகப் புரட்சிகரமானது.

நமக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. சினிமாவில், சிலை வடிவில் கண்ணகியை பெரிய ஒரு பெண்மணியாக நாம் பார்த்து இருக்கிறோம். கிட்டத்தட்ட ஆறடி உயரம், தலை விரி கோலம், கையில் ஒரு சிலம்பு, நிமிர்ந்த ஒரு கோப பார்வை..இதுதான் நமக்கு கண்ணகி என்றால் நினைவுக்கு வரும்.

ஏதோ கண்ணகி பிறக்கும் போதே அப்படியே பிறந்த மாதிரி.

நீங்கள் சிலப்பதிகாரத்தை இரசிக்க வேண்டும் என்றால், கண்ணகியின் அந்த பிம்பத்தை அழித்து விடுங்கள்.

இளங்கோ காட்டும் கண்ணகி மிக இனிமையானவள். மென்மையானவள். சாந்தமானவள். பயந்த சுபாவம் உடையவள். கடைசியில் கோபம் கொண்டாள் . அதற்காக அவள் எந்நேரமும் அப்படியே இருந்தாள் என்று நினைப்பது தவறு.

இளங்கோ எப்படி அறிமுகப் படுத்துகிறார் தெரியுமா ?

"அவளுக்கு பன்னிரண்டு வயது. பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். மிக அழகாக இருப்பாள். பெண்களே , பொறாமை படும் அளவு அல்ல, கை எடுத்து கும்பிடும் அளவு நல்ல குணங்கள் அமைந்தவள். ரொம்ப அன்புடையவள். அவள் பெயர் கண்ணகி "

என்று அவளை அறிமுகப் படுத்துகிறார்.

பாடல்


மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்; 
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

பொருள்

மாக வான் = கரிய வானம்

நிகர் = போல

வண் கை = சக்தி வாய்ந்த கை

மாநாய்கன் = மாநாய்கன் என்ற

குலக் = குலத்தில்  பிறந்த

கொம்பர் =  கொம்பு

ஈகை = தானம் செய்வதில்

வான் கொடி அன்னாள் = வானத்தில் தோன்றும் வானவில் போன்றவள்

ஈர்-ஆறு ஆண்டு அகவையாள் = இரண்டு ஆறு, அதாவது பன்னிரண்டு வயதுடையவள்

அவளும்-தான் = அவளும் தான்

போதில் = தாமரை மலரில்

ஆர் = இருக்கும்

திருவினாள் = இலக்குமி போன்றவள்

புகழ் உடை வடிவு என்றும் = புகழ் உடைய வடிவத்தை உடையவள்

தீது இலா = தீமை இல்லாத

வடமீனின்  = அருந்ததி நட்சத்திரம் (மீன் = விண்மீன்)

திறம் இவள் திறம் என்றும் = போன்ற கற்பு இவளுடைய கற்பு என்றும்

மாதரார் = பெண்கள்

தொழுது ஏத்த = தொழுது போற்றும் படி

வயங்கிய =விளங்கிய

பெரும் குணத்துக்  = சிறந்த குணங்களை கொண்டவள்

காதலாள் = அன்பு நிறைந்தவள்

பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ. = பெயர் கண்ணகி என்று சொல்லுவார்கள்



மாக வான் = கரிய வானம்

பிரபந்தத்தில் ஒரு பாசுரம்.

"ஓ  மேகங்களே, உங்களுக்கு எப்படி அந்த நாராயணின் நிறம் வந்தது? சரி தான்,  கடலில் சென்று நீரை கொண்டு வந்து மழையாக பெய்து உயிர்களை எல்லாம்  காப்பாற்றுகிறீர்கள் அல்லவா, அந்த நாராயணனைப் போல, அதனால் தான்  உங்களுக்கும் அவன் நிறம் வந்திருக்கிறது போலும் "

மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? (2509, நான்காம் திருமொழி)


"குலக் கொம்பர்; "

குலத்தில் பிறந்த கொம்பு. கொடி பற்றி வளர உதவும் கொம்பு போல, குலம் தழைக்க வந்த கொம்பு.

கொம்பு இல்லாத கொடி போல தவித்தேன் என்பார் மணிவாசகர்.

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.


(நீத்தல் விண்ணப்பம்)

கண்ணகிக்கு 12 வயது.

பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்.

அழகானவள்.

கற்புடையவள்.

இதெல்லாம் சரி.  வேறு என்ன சிறப்பு என்றால், வான் மழை போல அவளே தானம்  செய்வாளாம்.

இன்றும் கூட, சம்பாதிக்கும் பெண்கள் கூட, யாருக்கும் ஏதாவது தானம் , உதவி செய்வதானால் கூட , கணவனை, பெற்றோரை கேட்டுவிட்டுத்தான் செய்வார்கள், பெரும்பாலும்.

கண்ணகி, வேண்டியவர்களுக்கு, அவளே தானம் செய்தாள் என்ற அவள் இளகிய மனதை  காட்டுகிறார் இளங்கோ.

உலகிலேயே கடினமான விஷயம் ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாராட்டுவதுதான்.

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இதெல்லாம் நீங்களே இட்டு கட்டிச் சொல்வது. நான் எல்லாம் எத்தனை பெண்களை பாராட்டுகிறேன் தெரியுமா " என்று சில பெண்மணிகள் கோபிக்கலாம்.

சரி. பாராட்டுகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

வணங்குவீர்களா? ஒரு பெண்ணின் திறமையை, அவளின் அழகை, அவளின் நல்ல குணங்களை கண்டு  தலை மேல் கை வைத்து வணங்குவீர்களா? முடியுமா ?

கண்ணகியின் சிறந்த குண நலன்களை கண்டு பெண்கள் வணங்கினார்கள், போற்றினார்கள் என்கிறார் அடிகளார்.

"மாதரார் தொழுது ஏத்த"

சின்ன பொண்ணு.  12 வயசு. முடியுமா ?

இறைவனை விட்டு விட்டு , இயற்கையை வாழ்த்தி, முதல் சிக்ஸர் அடித்தார்.

வயக்காட்டில் மீன் விளையாட்டும், வறுமையே இல்லை என்று எல்லோரும் எப்போதும் சொல்லும்  ஊர் சிறப்பை விட்டு விட்டு, "பதி எழு அறியா பழங்குடி " என்று இரண்டாவது சிக்ஸர் அடித்தார்.

கதாநாயகனை விட்டு விட்டு, முதலாவதாக கதாநாயகியை அறிமுகப் படுத்தி  மூன்றாவது சிக்ஸர்.

படிக்க படிக்க மேலும் ஆர்வத்தை தூண்டும் காப்பியம்.

சரி தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_17.html


Sunday, June 16, 2019

சிலப்பதிகாரம் - பதி எழு அறியா பழங்குடி

சிலப்பதிகாரம் - பதி எழு அறியா பழங்குடி 


இயற்கையை போற்றிய பின், இளங்கோ கதை தொடங்கும் புகார் நகரின் சிறப்பைப் பற்றி கூற வருகிறார்.

ஒரு நாடு சிறந்த நாடு என்பதை எதை வைத்து வரையறுக்கலாம்?

வள்ளுவர், சிறந்த நாடு எது என்று 10 குறள் எழுதி இருக்கிறார்.  அதில் ஒன்று

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேராது இயல்வது நாடு.

பெரிய பசியும், தீரா பிணியும், பகைமையும் இல்லாமல் இருப்பது நல்ல நாடு என்று கூறுகிறார்.


அயோத்தியின் சிறப்பைப் பற்றி கூற வந்த கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
    மடை எலாம் பணிலம்; மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக்
    குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
    பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்
    கா எலாம் களி வண்டு ஈட்டம்.

இப்படி ஒரு நாட்டின் சிறப்பை பல விதங்களில் வர்ணிக்கலாம்.

எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும் படி இளங்கோ அடிகள் புகார் நகரை வர்ணிக்கிறார்.

அவர் வர்ணிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இதை வாசிக்கும் பலர், சொந்த நாட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொந்த  மாநிலத்தை விட்டு வேறு இடத்தில் வசிக்கலாம் .

ஏன், உங்கள் சொந்த இடத்தை விட்டு விட்டு வந்தீர்கள்?

நல்ல வேலை வாய்ப்பு, உயர்ந்த சம்பளம்,  வாழ்க்கைத் தரம், அமைதியான சூழ்நிலை, குறைந்த வருமான வரி,  குழந்தைகளின் மேல் படிப்பு, இனிய தட்பவெப்பம்,  என்று பல காரணம்  சொல்லலாம்.

இவை எல்லாம் இல்லாததால் தானே பிறந்து வளர்ந்து மண்ணை விட்டு வெளியேறினீர்கள். இவை அனைத்தும் சொந்த ஊரிலேயே இருந்திருந்தால் , நீங்கள் அங்கேயே  இருந்திருப்பீர்கள் அல்லவா? அப்படி இல்லாத ஊர் நல்ல ஊர் இல்லைதானே.

"என் ஊரைப் போல வருமா ?" என்று வெளி மாநிலத்தில், வெளி நாட்டில் போய் இருந்து  கொண்டு பேசுவது ஒரு ஏமாற்று வேலைதானே. நல்ல ஊர் என்றால் அதை ஏன் விட்டு விட்டு, அந்த அளவுக்கு நல்லா இல்லாத ஊருக்குப் போக வேண்டும்?

இளங்கோ அடிகள் சொல்கிறார்

"பதி எழு அறியா பழங்குடி" என்று.

அந்த ஊரில் (பூம்புகாரில்) உள்ள மக்கள் அந்த ஊரை விட்டு வெளியே போனதே கிடையாதாம்.   இப்ப மட்டும் அல்ல, காலம் காலமாக அங்கேயே இருக்கிறார்களாம்.

ஏன் என்றால்,  அந்த ஊரில் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. எதற்கு இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் ?

இப்போது சொல்லுங்கள், இதை விட ஒரு ஊரை சிறப்பாக வர்ணிக்க முடியுமா?


பாடல்

ஆங்கு, 
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், 
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின் 
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,


பொருள்


ஆங்கு,  = அங்கே

பொதியில் ஆயினும் = பொதிய மலை ஆயினும்

இமயம் ஆயினும், = இமய மலை ஆயினும்

பதி  = இருக்கின்ற இடம்.  (பதி  என்றால் இடம். உயர்ந்த இடம், திருப்பதி)

எழு = எழுதல், எழுந்து வெளியே எங்கும் போவது

அறியாப் = அறியாத

பழங் குடி = பழைய குடி மக்கள்

கெழீஇய = நட்புடன்

பொது அறு = பொதுமை இல்லாத

சிறப்பின் = சிறப்பின். அந்த நாட்டுக்கு என்று சில சிறப்புகள் உண்டு.  பொதுவாக உள்ள சிறப்புகள் இல்லை, speical

புகாரே ஆயினும், = புகார் நகரே ஆயினும்

நடுக்கு இன்றி = நடுக்கம் இன்றி

நிலைஇய = நிலைத்து நிற்கும்

என்பது அல்லதை = என்பது தவிர வேறு எதையும்

ஒடுக்கம் கூறார் = அவற்றிற்கு முடிவு உண்டு என்று

உயர்ந்தோர் = உயர்ந்தவர்கள்

உண்மையின் = உண்மையின்

முடித்த கேள்வி = அனைத்து கேள்விகளுக்கும் விடையை

முழுது உணர்ந்தோரே. = முழுவதும் உணர்ந்தவர்கள்

அதனால், = அதனால்

நாக நீள் நகரொடு = நாகர் உலகுடனும்

நாக நாடு-அதனொடு = சுவர்க்கம் என்ற அதனுடனும்

போகம் = போகம்

நீள் புகழ் மன்னும் = நீண்ட புகழ் நிலைத்து நிற்கும்

புகார்-நகர் அது-தன்னில், = புகார் நகரத்தில்

எப்படி இருக்கு ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_16.html

Saturday, June 15, 2019

திருக்குறள் - எது வலிமை, எது இல்லாமை?

திருக்குறள் - எது வலிமை, எது இல்லாமை? 


மிகவும் கடினமான செயல் என்றால் எதைச் சொல்வோம் ?

பளு தூக்குவது, மலை ஏறுவது, கடினமான பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது, பிள்ளை பெறுவது, என்று நமக்குத் தெரிந்த கடினமான வேலைகளை சொல்லுவோம்.

இதெல்லாம் பெரிய கடினமான வேலை இல்லை என்று வள்ளுவர் சொல்கிறார்.

உலகிலேயே மிகவும் கடினமான வேலை, முட்டாள்களின் செயலை பொறுத்துக் கொல்வதுதான் என்கிறார்.

யோசித்துப் பாருங்கள்....

அரைகுறையாக படித்து விட்டு, எல்லாம் படித்த மேதாவி போல் உளறும் முட்டாள்கள் சொல்வதை கேட்பது எவ்வளவு கடினமான செயல் என்று.

அரசியல்வாதிகளின் பிதற்றல், டிவி யில் நிபுணர்கள் போல வந்து எல்லா சப்ஜெக்ட்க்கும் ஒரு ஒப்பீனியன் தருவது, அரை வேக்காட்டு நண்பர்களின் மேதாவிலாசம், என்று இவற்றை பொறுத்துக் கொள்வது எவ்வளவு கடினமான செயல்.

அது போல, உள்ளத்துக்குள்ளேயே பெரிய இல்லாமை எது தெரியுமா ?

அறிவு இல்லாமை, புகழ் இல்லாமை,  பிள்ளை இல்லாமை, உறவுகள் இல்லாமை ..என்று நாம் நினைப்போம்.

அது எல்லாம் இல்லாமை தான். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஆனால் அது எல்லாவற்றையும் விட பெரிய இல்லாமை, எது தெரியுமா ?


ஐயோ, கையில் காசு இல்லையே. இப்போ ஏதாவது விருந்தினர் வந்து விட்டால் என்ன செய்வது என்று  ஒருவன் பதறுவானேயானால், அது தான் பெரிய இல்லாமை என்கிறார்.

விருந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது நம் தமிழ் பாரம்பரியம்.

பாடல்

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

பொருள்

இன்மையுள் இன்மை = இல்லாமையை பெரிய இல்லாமை

விருந்தொரால் = விருந்தை உபசரிக்க முடியாமல் போதல்

வன்மையுள் = கடினமானவற்றுள்

வன்மை = கடினமானது

மடவார்ப் பொறை = மடையர்களை பொறுத்துக் கொள்வது


எத்தனை மடையர்கள், எவ்வளவு பொறுமை வேண்டி இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_22.html

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து

சிலப்பதிகாரம்  - மங்கல வாழ்த்து 


சொற்களுக்கு வலிமை உண்டு என்று நம் முன்னவர்கள் நம்பினார்கள்.

தமிழில் மங்கல சொற்கள், அமங்கல சொற்கள் என்று உண்டு.

எப்போதும் அமங்கல சொற்களை தவிர்த்து மங்கல சொற்களையே பயன்படுத்த வேண்டும். அமங்கல சொற்களை சொல்லுவதை விடுங்கள், அது காதில் கூட விழக் கூடாது என்று தான் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கெட்டி மேளம் என்ற ஒன்றை வைத்தார்கள்.

பூஜை செய்யும் போது மணி அடிப்பதும் அதற்குத்தான். யாராவது, அக்கம் பக்கத்தில் ஏதாவது சொல்லுவார்கள். அது பூஜை செய்யும் போது நம் காதில் விழும். மனம் அந்த சொல்லைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னேயே போய் விடும். அதைத் தவிர்க்கத்தான், மணி அடிப்பது.

கோவிலிலும், பூஜை நடக்கும் போது பெரிய மணியை அடிப்பார்கள். காண்டா மணி என்று அதற்குப் பெயர்.

கடவுள் வாழ்த்தோடு காப்பியங்களை, உயர்ந்த நூல்களை தொடங்குவது மரபு.

கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளையாவது அல்லது தான் பாட எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய கடவுளை வாழ்த்தி நூலை தொடங்குவது மரபு என்பார் பரிமேலழகர்.

சிக்கல் என்ன என்றால், எந்தக் கடவுளை வாழ்த்தினார் என்று ஆராய புறப்பட்டுவிடும் ஒரு கும்பல்.  அந்தக் கடவுள் அவர்கள் வணங்கும் கடவுள் இல்லை என்றால், அந்த நூலையே புறக்கணித்து விடுவார்கள்.

அது சைவ நூல், அது வைணவ நூல் என்று பேதம் காணத் தொடங்கி விடுவார்கள்.

திருவள்ளுவர் "ஆதி பகவன்", "வாலறிவன்" , "எண் குணத்தான் " என்று சொன்னார்.  அது எல்லாம் சமண சமயக் கடவுள். எனவே திருவள்ளுவர் ஒரு சமணர் என்று  முத்திரை குத்தி விட்டார்கள்.

திருவள்ளுவருக்கே அந்தக் கதி.

இளங்கோ அடிகள், மரபில் இருந்து சற்றே விலகுகிறார் .

காலத்தில் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது போல, அதிரடியாக  முதல் பாடலிலேயே புரட்சியை ஆரம்பிக்கிறார்.

கடவுளை விட்டு விட்டு, இயற்கையை வாழ்த்துகிறார்.

நிலவை, சூரியனை, மழையை, கதை தொடங்கும் நிலத்தை போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவும், சூரியனும், மழையும் அனைவருக்கும் பொது தானே. என் சூரியன், உன் சூரியன் என்று உரிமை கொண்டாட முடியாதே?

பாடல்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு 
மேரு வலம் திரிதலான்.

மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.

பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

பொருள்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! = நிலவை போற்றுவோம், நிலவை போற்றுவோம்

கொங்கு = தேன் ("கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ..." பாடல் ஞாபகம் வருகிறதா?)

அலர் = நிறைந்த

தார்ச் = மாலை

சென்னி = தலை

குளிர் = குளிர்ந்த

வெண்குடை போன்று, = வெண் கொற்ற குடை போல

இவ் அம் கண் உலகு அளித்தலான். = இந்த உலகை பாதுகாத்தலால்



ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!- = சூரியனை போற்றுவோம், சூரியனை போற்றுவோம்

காவிரி நாடன் = காவிரி நாடன், சோழன்

திகிரிபோல் = ஆணைச் சக்கரம் போல

பொன்  கோட்டு  = பொன்  மலை

மேரு வலம் திரிதலான். = மேருவை சுற்றி வருவதால்


மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!- = சிறந்த மழையை போற்றுவோம், மழையை போற்றுவோம்

நாம = பயத்தை தருகின்ற

நீர் = நீர்

வேலி = வேலி போல (கடல் நீர் உலகிற்கு வேலி போல இருக்கிறது)

உலகிற்கு = உலகிற்கு

அவன் = சோழ மன்னன்

அளி = கொடை , ஈகை

போல் = போல

மேல நின்று = மேலே நின்று

தான் சுரத்தலான் = அது சுரத்தலால்



பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்! = பூம்புகாரை போற்றுவோம்

வீங்கு நீர் = நிறைந்த நீர்

வேலி உலகிற்கு = வேலி போல் அமைந்த உலகிற்கு

அவன் குலத்தோடு = சோழன் குலத்தோடு

ஓங்கிப் = உயர்ந்து

பரந்து = விரிந்து

ஒழுகலான். = இருப்பதால்

நிலவும், சூரியனும், மழையும், கதைக் களத்தையும் போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவு, சூரியன், மழை - இது எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து பெய்வதில்லை மழை, காய்வதில்லை நிலவும் சூரியனும்.

அது போல, அனைத்து குடி மக்களுக்கும் அரசன் நடு நிலையாக இருப்பான், இருக்க வேண்டும்  என்று முதல் பாட்டிலேயே எடுத்து வைக்கிறார் அடிகளார்.


அரசன் சிறந்த கொடையாளனாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு, வறியவர்களுக்கு, முடியாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வரி விதிப்பதும், போர் செய்வதும் மட்டும் அரசன் கடமை அல்ல. மழை போல பலன் கருதாமல்  உதவ வேண்டும். 

அரசன் இரக்கம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். நிலவு எப்படி குளிர்ந்து, சுகமாக இருக்கிறதோ அப்படி  இதமாக இருக்க வேண்டும். கொடுங்கோலனாக, மக்களை வாட்டி வதைப்பவனாக இருக்கக் கூடாது. 

அரசாங்கம் வெளிப்படையாக நடக்க வேண்டும். வெளிச்சத்தில், அனைவரும் காணும்படி  , ஒளிவு மறைவு இன்றி நடக்க வேண்டும். சூரிய ஒளி எப்படி அனைத்தையும்  மறைக்காமல் காண உதவுகிறதோ அப்படி. 

மங்கல வாழ்த்து முடிந்து, காப்பியத்துக்குள் நுழைவோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_15.html

Friday, June 14, 2019

சிலப்பதிகாரம் - இலக்கிய நோக்கம்

சிலப்பதிகாரம் -  இலக்கிய நோக்கம் 


ஒரு நூல் செய்வதானால் அதற்கு என்ன நோக்கம் இருக்க வேண்டும் என்று பவணந்தி முனிவர் நன்னூலில் கூறுகிறார்.

அவர் கூறுவது இருக்கட்டும். நம் இலக்கிய கர்த்தாக்களை கேட்டால் என்ன சொல்லுவார்கள் ?

"என் மனதில் தோன்றியதை பிறருடன் பகிர்ந்து கொள்ள"

"பேரும் புகழும் சம்பாதிக்க"

" பணம் சம்பாதிக்க"

"மொழியை வளர்க்க என்னால் ஆன சிறிய பங்களிப்பு"

"சிறுமை கண்டு பொங்க , அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க"

என்று காரணம் கூறுவார்கள்.

அவர்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் எதற்கு புத்தகங்களை வாசிக்கிறோம் ?

பரீட்சையில் தேற, நல்ல மதிப்பெண்கள் வாங்க, நல்ல வேலை கிடைக்க, பொழுது போக, என்னதான் சொல்லி இருக்கு என்று அறிந்து கொள்ள என்று பல காரணங்கள் இருக்கலாம்.

இவை அனைத்துமே காரணங்கள் அல்ல என்கிறார் நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே"

ஒரு நூலை எழுதுவதற்கும், அதை படிப்பதற்கும் காரணம் அறம் , பொருள், இன்பம், வீடு இவற்றை அடையவே என்கிறார்.

நீங்கள் எதை வாசிக்கத் தொடங்கினாலும் இந்த நாலில் எது உங்களுக்கு கிடைக்கிறது  என்று அறிந்து கொண்டு வாசிக்க வேண்டும்.

மாத நாவல்கள் , டிவி சீரியல்கள், whatsapp துணுக்குகள் படிக்கும் போது "இன்பம்"  கிடைக்கிறதே...அதுவும் ஒரு பலன் என்றுதானே பவணந்தியார் கூறி இருக்கிறார்.  எனவே, அதில் தவறு என்ன என்று கேட்கலாம்.

அதையே இன்னும் கொஞ்சம் நீட்டிப்போம். கொள்ளை அடித்தால் பொருள் கிடைக்குமே,  அதுவும் ஒரு பலன் என்று தானே நன்னூல் சொல்கிறது? கொள்ளை அடிக்கலாமா ? ஒரு பெண்ணை கெடுப்பது ஒருவனுக்கு இன்பம் தரலாம்,  செய்யலாமா?

அதற்குத்தான் முதலில் அறத்தை வைத்தார்கள்.

அறம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டு அதன் படி பொருள் ஈட்ட வேண்டும்,  அதன் படி இன்பம் துய்க்க வேண்டும், அதன் படி வீடு பேற்றை அடைய வேண்டும்.

அறமே அனைத்துக்கும் அடிப்படை.

சிலப்பதிகாரம் மூன்று அறங்களை வலியுறுத்தி  சொல்கிறது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"

"கற்புடைய பெண்ணை தெய்வமும் வணங்கும்"


இந்த மூன்று அறங்களை வைத்து பின்னப் பட்டதுதான் சிலப்பதிகாரம் என்ற  காப்பியம்.

சிலப்பதிகாரத்தில் வில்லன் என்று யாரும் இல்லை.  ஒரு இராவணன், ஒரு துரியோதனன் போன்ற  வில்லன்கள் யாரும் கிடையாது. கதாநாயனுக்கு  சண்டை போடும்  வாய்ப்பே இல்லை.

சண்டை போடும் அளவுக்கு அவன் வீரனும் அல்ல.

வீட்டை வெளியே அதிகம் வராத கதாநாயகி

"வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்"

என்பார் இளங்கோ அடிகள்.

கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்ற வழக்கமான பார்முலாவை உடைத்து எறிந்த  இலக்கியம் சிலப்பதிகாரம்.

நல்லது வெல்லும், தீமை அழியும் என்ற சித்தாந்தத்தையும் உடைத்து எறிகிறது  சிலப்பதிகாரம்.

கோவலன் ஒரு அப்பாவி. மனைவியின் சிலம்பை விற்க வந்தவனை போட்டு தள்ளி விட்டார்கள்.  அவனுக்கென்று யாரும் இல்லை.

ஒரு அனுமன், ஒரு கிருஷ்ணன் என்று யாரும் இல்லை.

அனாதையாக, முன் பின் தெரியாத ஊரில் வெட்டுப் பட்டு சாகிறான்.

இளங்கோவுக்கு இதெல்லாம் முக்கியம் இல்லை.

தான் சொல்ல வந்த அறத்தை வலியுறுத்துவது மட்டுமே அவருக்கு நோக்கமாக இருந்து இருக்கிறது.

அதை எப்படி செய்கிறார் என்று பார்க்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_14.html

Thursday, June 13, 2019

சிலப்பதிகாரம் - ஒரு முன்னோட்டம்

சிலப்பதிகாரம் - ஒரு முன்னோட்டம் 


ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் ஒன்று.

மற்ற காப்பியங்களில் இருந்து மிக மாறுபட்டது சிலப்பதிகாரம்.

இராமாயணமும், பாரதமும் வேற்று மொழியில் எழுதப்பட்டு பின் தமிழில் மடை மாற்றம் செய்யப்பட்டது.

அதில் உள்ள கதா பாத்திரங்கள் நமக்கு அந்நியமானவர்கள். அவர்கள் பெயர், அவர்கள் பழக்க வழக்கம் எல்லாம் நம்மில் இருந்து வேறுபட்டது.

கடவுள்கள் அவதாரங்களாக வந்து காப்பியத்தை வழி நடத்திப் போனார்கள்.

சிலப்பதிகாரத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.

நம்ம ஊர் மதுரை, திருச்சி, பூம்புகார் என்று நம்மைச் சுற்றி நிகழ்ந்த கதை. கோவலன், கண்ணகி, மாதவி, என்ற கதா பாத்திரங்கள் நம்மில் ஒருவராய் உள்ள கதா பாத்திரங்கள்.

பலவீனமான கதாநாயகன். வரம் வாங்கி, போர் செய்து, பெரிய தாதா கிடையாது. பணக்கார வீட்டுப் பையன். விலை மகள் பின் போனவன். சொத்தையெல்லாம் தொலைத்து விட்டு வெறும் கையோடு வருகிறான். ஒரு கொல்லன் போட்டுக் கொடுக்க, வெட்டுப் பட்டு சாகிறான்.

பூவாக இருந்த கதாநாயகி, எரிமலையாக வெடிக்கிறாள். ஊரையே எரித்து சாம்பலாக்குறாள்.

இராமாயணத்தில் சீதை, மிகுந்த ஆற்றல் உள்ளவள் தான்.

இந்த உலகை எல்லாம் என் சொல்லால் சுட்டு எரித்து விடுவேன் ஆனால் அது இராமனின்   வில்லாற்றலுக்கு மாசு என்று விட்டு விட்டேன் என்கிறாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆக்கமோ
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள்

தன் ஆற்றலை அடக்கிக் கொண்டு இருந்து விடுகிறாள்.

அதற்கு முன்னால் , இராமனைக் காணாமல் தூக்கு போட்டு தற்கொலை கூட செய்யத் துணிகிறாள். அவ்வளவு பலவீனமாக காட்டுகிறான் கம்பன் அவளை.

பாரதத்தில், திரௌபதி, துரியோதனன் தொடையில் இருந்து வந்த இரத்தத்தை தடவித் தான் என் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததோடு சரி.  மற்றபடி அரண்மனையில் தங்கி விட்டாள்.

ஆனால், கண்ணகியோ, வெகுண்டு எழுந்து நீதி கேட்டாள் , ஊரை எரித்தாள்.

இன்று feminism , equal rights என்று பேசுபவர்களுக்கு முன்னால் கண்ணகி நிற்கிறாள். போராடினாள்.

மிக மிக சுவையான கதைப் போக்கு, சட்டு சட்டென்று மாறும் கதைப் போக்கு, கதைத் தளம், அடி நாதமாய் ஓடும் கணவன் மனைவி உறவு, அதில் ஏற்படும் சிக்கல்,  அரசியலும் , தனி மனித வாழ்வும் கலந்து நிற்கும் ஒரு வினோத கலவை.

இவற்றிற்கு மேலாக மிக முக்கியமான மூன்று அறங்களை வலியுறுத்தி, அதை சுற்றியே  கதையை நகர்த்தி, முடிவில் அந்த அறங்களின் வலிமையை நிலை நிறுத்திப் போகிறது இந்த காப்பியம்.

அது என்ன மூன்று அறம் ?

மேலும் சிந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_13.html

Wednesday, June 12, 2019

கம்ப இராமாயணம் - பாவியேனையும் பார்க்கும் கொலோ?

கம்ப இராமாயணம் - பாவியேனையும் பார்க்கும் கொலோ?


தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டிய சூர்ப்பனகையின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு, இராமன் பர்ணசாலைக்குள் சீதையோடு போய் விட்டான்.

வெளியே நின்ற சூர்ப்பனகை புலம்புகிறாள்.

"நீல மலரோ, மீனோ என்று சொல்லும் படி இருக்கும் சீதை , இலக்குமி போல இருக்கிறாள். அவளைப் பார்த்த இராமனின் கண்கள் என்னையும் பார்க்குமா" என்று ஏங்குகிறாள். காதலில், காமத்தில், அவளின் உயிர் ஓய்கிறது, ஆனாலும் ஆசை ஓயவில்லை என்கிறான் கம்பன்.


பாடல்



‘காவியோ கயலோ எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும் கொலோ? ‘எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள்.


பொருள்


‘காவியோ = நீல மலரோ

கயலோ  = மீனோ

எனும் = என்று எண்ணும்படி இருக்கும்

கண் இணைத் = இரண்டு கண்கள் கொண்ட

தேவியோ = இராமனின் தேவியான சீதையோ

திருமங்கையின் = திருமகளைவிட

செவ்வியாள்; =  சிறந்தவளாக இருக்கிறாள்

பாவியேனையும் = பாவியாகிய என்னையும்

பார்க்கும் கொலோ? ‘எனும் = பார்ப்பானா என்று

ஆவி ஓயினும் = உயிர் ஓய்ந்தாலும்

ஆசையின் ஓய்வு இலாள். = ஆசை ஓய்வு இல்லாதவளான சூர்ப்பனகை

பாட்டு என்னவோ, மேலோட்டமாக பார்த்தால், சாதாரணமாகத்தான் தெரியும்.

தான் பெரிய ஆள், மன்மதனும், மும்மூர்த்திகளும், தேவர்களும் என்னை அடைய  தவம் கிடக்கிறார்கள் என்று தற்பெருமை பேசிய சூர்ப்பனகை, தான் பெரிய ஆள் இல்லை என்று உணர்கிறாள்.  காதல் என்று வந்து விட்டால், இந்த ஆணவம் போய் விடுகிறது. யாரை காதலிக்கிறோமோ, அவர்களே உலகம் என்று ஆகிப் போகிறது.  நீ இல்லாமல் என் வாழ்வு பூரணமாகாது என்ற நிலைக்கு காதலர்கள் வந்து விடுகிறார்கள்.   நீ  இல்லாமல் எனக்கு சந்தோஷம் இல்லை  என்பது எதை காட்டுகிறது   என்றால், நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. நீ இருந்தால் தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்  என்று காதலிப்பவருக்கு  அனைத்து முக்கியத்துவமும் போகிறது. தன்னைத் தானே  தாழ்த்தி, காதலிப்பவரை வானளாவ உயர்த்திப் பிடிப்பது காதல்.

தற்பெருமை பேசிய சூர்ப்பனகை "பாவியேனையும் பார்க்கும் கொலோ?" என்று  தன்னை ஒன்றும் இல்லாதவளாக உணரத் தலைப் படுகிறாள்.


எவ்வளவு பெரிய ஆணவக் காரனையும், காதல் நாய் குட்டிப் போல மென்மை படுத்தி விடுகிறது.

தெரியாமலா சொன்னான் பாரதி "ஆதலினால் காதல் செய்வீர்" என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அது என்ன "ஆவி ஓயினும் ".

ஆவி எப்படி ஓயும்? ஆவி என்ன ஓடி ஆடி வேலை செய்கிறதா, களைப்பு அடைய?

உடல் ஓயும். நமக்குத் தெரியும்.

உள்ளம் ஓயும். அதுவும் நமக்குத் தெரியும்.

உயிர் ஓயுமா?

ஓயும். அது நமக்குத் தெரிவதில்லை.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் " என்பார் மணிவாசகர். இளைத்தது யார்? உடலா? உள்ளமா ? இல்லை, இந்த உயிர் ஒவ்வொரு பிறவியாக எடுத்து களைத்து, சலித்துப், இளைத்துப் போய் விடுகிறது.


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்


உயிரும் இளைக்கும்.

பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்

பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே!

பிறந்து அலுத்தேன் நான் என்பார் பட்டினத்தார்.  உயிரும்  அலுக்கும்.

உடலையும், உள்ளத்தையும் தாண்டி உயிரைப் பற்றும் காதல்.


புலம்புவது சூர்ப்பனகை.


பக்திப் பாடல்களைப் பார்த்தால் தெரியும், பாடுபவர்கள், "நான் ஒரு பாவி, நான் ஒரு அறிவிலி,  நான் ஒரு முட்டாள், ஆண்டவா என்னை காப்பாற்று" என்று   தன்னைத் தாழ்த்தி இறைவனை போற்றுவார்கள்.

"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு 
தாயிற் சிறந்த தயவான தத்துவனே "

என்பது திருவாசகம்.

"நம்மையும் ஒரு பெருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து" 

என்பதும் மணிவாசகம்.

சூர்ப்பனகை சொல்லுகிறாள், "இந்த பாவியை அவன் பார்ப்பானா"  என்று.

சிந்திக்கலாம்தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_12.html