Monday, June 24, 2019

சிலப்பதிகாரம் - அதன் இடை நினக்கு இடை

சிலப்பதிகாரம் - அதன் இடை நினக்கு இடை


முதலிரவு. கண்ணகியின் அழகைப் பற்றி கோவலன் புகழ்ந்து தள்ளுகிறான்.

பெண்ணின் அருகாமை, அவளின் அன்பு, காதல் ஆணுக்கு உயிர் தருகிறது.

கிரேக்க கதைகளில் ஒன்று.

அதிகாலையின் கடவுள்  ஈயாஸ் (Eos ) என்ற ஒரு பெண் தெய்வம். மிக அழகானவள். அவளுக்கு ஒரு காதலன். அவன் பெயர் டித்தோன்ஸ் (Tithonus ) என்று பெயர். அவளோ தெய்வப் பெண். அவனோ மானிடன். மானிடர்களுக்கு இறப்பு என்று ஒன்று உண்டு. ஈயாசுக்கு, அவளுடைய காதலன் ஒரு நாள் இறந்து போவான் என்ற எண்ணத்தையே சகிக்க முடியவில்லை.

நேரே, கடவுள்களுக்கெல்லாம் தலைவரானான ஸியூஸ் (Zeus ) என்பவரிடம் சென்று, தன்னுடைய காதலுனுக்கு சாகா வரம் வேண்டும் என்று கேட்டாள். அவள் மேல் பரிதாபப் பட்டு, அவரும், அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்தார்.

அவளுடைய அவசரத்தில் அவள் தன்னுடைய காதலுனுக்கு என்றும் மாறாத இளமை வேண்டும் என்று கேட்கவில்லை.

அதனால் என்ன ஆயிற்று?

அவளுடைய காதலனுக்கு வயது ஆகிக் கொண்டே போனது.

100, 200, 300, 500 என்று வயது ஆகிக் கொண்டே போகிறது.

கண் பார்வை மங்கி, சுத்தமாக ஒன்றும் தெரியவில்லை. காது கேட்கும் சக்தியை இழந்து விட்டது.  தோல் எல்லாம் சுருங்கி விட்டது. நிற்க முடியவில்லை. பசியில்லை. இயற்கையின் உபாதைகளுக்கு தானே எழுந்து சென்று  தன் காரியங்களை பார்த்துக் கொள்ள முடியவில்லை.

சரி, செத்தாவது தொலைக்கலாம் என்றால், சாகா வரம் இருப்பதால் சாகவும் முடியாது.

சிந்தித்துப் பாருங்கள். 1000, 2000 வருடம் வாழ்ந்து கொண்டிருந்தால், உடலில் வலிமை இல்லாமல் , புலன்கள் எல்லாம் தள்ளாடிப் போய் இருந்தால் எப்படி இருக்கும்?

எனவே, நீண்ட ஆயுள் மட்டும் இருந்தால் போதாது. குன்றாத இளமையும் வேண்டும் அல்லவா?

அதுக்கு நம்ம ஊரில் ஒரு வழி கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

அது தான் "அமுதம்".

அந்த அமுதத்தை உண்டால் மூப்பும் வராது, இறப்பும் வராது.

சரி, அதுக்கும் இந்த சிலப்பதிகாரத்துக்கும் என்ன என்ன சம்பந்தம்.

கோவலன் சொல்கிறான் கண்ணகியிடம்

"இந்த அமுதம் இருக்கிறதே, அதற்கு முன்னால் தோன்றியவள் நீ. எனவே, இந்திரன் தன் படையான வஜ்ராயுதத்தை உனக்கு தந்திருக்க வேண்டும். அந்த வஜ்ராயுதத்தின் இடை, உன்னுடைய இடை (இடுப்பு).

அதுமட்டும் அல்ல, இந்த முருகன் இருக்கிறானே, ஒரு காரணமும் இல்லாமல், தன்னுடைய கூரிய வேலை உன் கண்களுக்கு தந்துவிட்டுப் போய் விட்டான். அது என்னை என்ன பாது படுத்துகிறது தெரியுமா "






பாடல்


மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?


பொருள்

மூவா மருந்தின் = மூப்பு வராமல் காக்கும் மருந்து (அமுதம்)

முன்னர்த் தோன்றலின், = அந்த அமுதத்துக்கு நீ முன்னால் தோன்றியதால்

தேவர் கோமான்  = தேவர்களின் தலைவன் (இந்திரன்)

தெய்வக் காவல் படை  = தெய்வக் காவல் படையான வஜ்ராயுதத்தை

நினக்கு அளிக்க  = உன்னிடம் கொடுக்க

அதன் இடை  = அந்த ஆயுதத்தின் இடுப்புப் பகுதி

நினக்கு இடை என = உன் இடை ஆயிற்று


அறுமுக ஒருவன் = ஆறு முகங்களை கொண்ட ஒருவன் (முருகன்)

ஓர் பெறும் முறை இன்றியும் = நீ பெற்றுக் கொள்ள எந்த முறையும் இல்லாமல்

இறும் முறை  = (நான்) துன்பப்  படும் காட்சியை

காணும் இயல்பினின் அன்றே  = காணாததால்

அம் சுடர் நெடு வேல் = அந்த சுடர் போல ஒளி விடும் வேலை

ஒன்றும் நின் முகத்துச் = உன்முகத்தில்

செங் = சிவந்த

கடை  =  கடைசியில், கடைக்கண் , கண்ணோரத்தில்

மழைக் கண்  = ஈரம் நிறைந்த உன் கண்கள்

இரண்டா ஈத்தது? = இரண்டாக தந்துவிட்டான்


வஜ்ராயுதம் என்பது மின்னலைக் கொண்டு செய்தது. மின்னல் போல் இடுப்பு. இருக்கிறதா, இல்லையா என்று தெரியாது. தொட்டால் மின்சாரம் பாயுமோ? 

இளங்கோ அடிகள் தான் இப்படி விழுந்து விழுந்து வர்ணனை செய்கிறார் என்றால், இந்த தாடிக்கார தாத்தா, வள்ளுவர், அவர் முறைக்கு அவர் விடும் ஜொள்ளைப் பாருங்கள். 


உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு 
அமிழ்தின் இயன்றன தோள்


ஒவ்வொரு முறை அவளை கட்டி அணைக்கும் போதும், உயிர் தளிர் விட்டு துளிர்ப்பதால்,  அவளுடைய தோள்கள் அமுதத்தால் ஆனதோ என்கிறார்?

உயிரில்,  புதிதாக, இளமையாக, தளிர் துளிர்க்குமாம், ஒவ்வொரு முறை கட்டிப் பிடிக்கும் போதும். 

வாழ்க்கையை இரசியுங்கள். ஒவ்வொரு வினாடியையும் இரசித்து அனுபவியுங்கள்.  

வாழ்க்கை இனிமையானது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_24.html

2 comments:

  1. என்ன ஒரு வர்ணனை ... அருமையிலும் அருமை. அழகாக விளக்கியமையும் அருமை!

    ReplyDelete
  2. கிரேக்கக் கதை சொல்லி இனிமையாக விளக்கியதற்கு நன்றி.

    ReplyDelete