Thursday, June 27, 2019

திருக்குறள் - அறிவு

திருக்குறள் - அறிவு 


இன்று கணணித் (கம்ப்யூட்டர்) துறையில் செயற்கை அறிவு (artificial intelligence ) பற்றி மிக வேகமாக, ஆழமாக ஆராய்ச்சிகள் நடக்கிறது.

செயற்கை அறிவு ஒரு புறம் இருக்கட்டும். அறிவு என்றால் என்ன? எது அறிவு? யாரை அறிவாளி என்று நாம் சொல்கிறோம் ?

நிறைய புத்தகம் படித்தவரையா ? நிறைய பட்டங்கள் பெற்றவரையா?  திறமையாக காரியம் சாதிப்பவரையா? யார் அறிவாளி அல்லது எது அறிவு என்பது ஒரு சிக்கலான கேள்வி.

அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம். எத்தனை படித்தவர்கள் சொல்லக் கேட்கிறோம். எது நல்லது, எது கெட்டது என்று நமக்குத் தெரியும். இருந்தும் நல்லதை விட்டு விட்டு கெட்டதை ஏன் செய்கிறோம்?

உதாரணமாக, கோபம் கொள்ளக் கூடாது, இனிப்பு தவிர்க்க வேண்டியது, உடற் பயிற்சி அவசியம், வெட்டி அரட்டை நேர விரயம், என்றெல்லாம் நமக்குத் தெரியும். இருந்தும் செய்கிறோமா? இல்லை.

"...அதெல்லாம் சரி தான், இருந்தாலும் நடை முறைக்கு ஒத்து வருமா " என்று ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டு, நாம் பாட்டுக்கு நம் வழியில் செக்கு மாடு போல  செல்லத் தொடங்கி விடுகிறோம்.

ஏன்?

நல்லது என்று தெரிந்தும், அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறோம்?

தீமை என்று தெரிந்தும் சிலவற்றை ஏன் செய்கிறோம்?

அறிவின்மையால்.

அறிவு சரிவர வேலை செய்யாததால்.

படிக்கிற நேரத்தில் ஊர் சுற்றுவது. அலுவலக நேரத்தில் வாட்சப்பில் அரட்டை அடிப்பது.  எது உடம்புக்கு ஆகாதோ, அதை விரும்பி உண்பது. யார் சகவாசம் தீமை  பயக்குமோ அவர்களோடு உறவு கொள்வது....

இதற்கெல்லாம் காரணம் - அறிவின்மை.

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை....எங்களுக்கு அறிவு நிறைய இருக்கு...சில சமயம்  சோம்பேறித்தனத்தால் காரியங்கள் செய்வதில்லை, சில சமயம்  அலுப்பாக இருப்பதால் செய்வதில்லை, நல்ல சாப்பாடு எப்பவுமா  கிடைக்கிறது...பண்டிகை, திருவிழா, என்று வரும் போது இரண்டு வடை, கொஞ்சம் சர்க்கரை பொங்கல், நாலு கப் பாயாசம், triple scoop sundae  என்று அவ்வப்போது   சாப்பிடுவதுதான்...அதற்காக அறிவில்லை என்று சொல்வதா" என்று கேட்கலாம்.

சொன்னது நான் இல்லை. வள்ளுவர்.  அவரை எதிர்த்து பேச முடியுமா?


பாடல்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

பொருள்

சென்ற இடத்தால் = புலன்களும் மனமும் சென்ற இடமெல்லாம்

செலவிடா = அவற்றை செல்ல விடாது

தீது = தீமைகளை

ஓரீஇ  = நீக்கி

நன்றின்பால் = நல்லவற்றின் பால்

உய்ப்பது  = செல்ல விடுவது

அறிவு = அறிவு

கூர்ந்து கவனிக்க வேண்டும்.

முதலாவது, தீமைக்கு காரணம் புலன்களை, மனதை அலைய விடுவது. குளிர் சாதன பெட்டி (பிரிட்ஜ்) நிறைய தின் பண்டங்களாக சேமித்து வைத்தால், அதை திறக்கும் தோறும்  அந்த தின் பண்டம் கண்ணில் படும். ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டால் என்ன   என்று தோன்றும்.

கை பேசியில் (செல் போன்) எல்லா வீடியோ கேம் களையும் தரவிறக்கம் (டவுன்லோட்) பண்ணி வைத்திருந்தால் , அதை விளையாடினால் என்ன என்று தோன்றும்.

ஆறு மணிக்கு நண்பரை பார்க்க கிளப் க்குப் போனால், தண்ணி அடிக்கத் தோன்றும்.

எனவே, புலன்கள் அலையும் வாய்ப்பை முதலில் தரக் கூடாது.

புலன்கள் அலையும் இயல்பு உடையன.

அது சரி, புலன்கள் அலையும் இயல்பு உடையன என்றால், நான் என்ன செய்வது. அது பாட்டுக்கு ஓடுது. அதை எப்படி பிடித்து நிறுத்துவது? அதுக்கு ஏதாவது  வழி சொல்லி இருக்காரா வள்ளுவர் என்றால் அடுத்த வரியிலேயே சொல்லி இருக்கிறார்.

நன்றின் பால் உயிப்பது அறிவு

புலன்கள் ஓடும். ஓடட்டும். தீமையின் பக்கம் செல்லாமல், நல்லவற்றில் பக்கம் அவற்றை திருப்பி விட்டு விட வேண்டும். இப்ப ஓடு என்று.

ஓடிப் போய் நல்லதில் நிற்கும்.

ஆரோக்கியமான உணவுகளை  குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

கை பேசியில் நல்ல வீடியோ, ஆடியோ போன்றவற்றை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி, புலன்கள் எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் நல்லவற்றை வைக்க வேண்டும். புலன்கள் ஓடிச் சென்று அவற்றைப் பற்றிக் கொள்ளும்.

தீயவர்களோடு பழகினால், அவர்களின் தீய குணம் நமக்கும் வரும்.

நல்லவர்களோடு பழக வேண்டும்.

"நடை முறை ..." அது இது என்று சாக்கு சொல்லாமல், அறிவை செயல் பட விடுங்கள்.

நன்றின் பால் உயிப்பது அறிவு.

என்ன நான் சொல்றது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_27.html

3 comments:

  1. எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் புதுப்புது அர்த்தங்கள் தருவது திருக்குறள். சலிக்காது. நன்றி.

    ReplyDelete
  2. திரு பக்கிரிசாமி சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை..தெவிட்டவே செய்யாது..
    ஆனால் திருக்குறள் இரண்டே வரியில் சுருக்கமாக இருந்தாலும் அதில் பொதிந்து உள்ள அர்த்தம் எளிதில் புரியாது..ரொம்ப அழகாக உரை நடையில் .நல்ல உதாரணங்களுடன் விளக்கி உள்ளீர்கள்

    ReplyDelete