Monday, March 31, 2014

திருக்குறள் - இன்சொல்

திருக்குறள் - இன்சொல் 


இனிய சொல் என்றால் என்ன ?

ஒருவரை பற்றி புகழ்வதா ? நல்லதை கூறுவதா ? அறிவுரை சொல்லுவதா ? ஆறுதல் மொழி கூறுவதா ?

எது இனிய சொல் ?

மிக மிக சிக்கலான கேள்வி.

அதற்கு விடை அளிக்கிறார் வள்ளுவர்.....

இன்சொல் என்பது

- ஈரம் அளவி
- பொய் கலக்காமல்
- உண்மை அறிந்தவர்களின் வாயில் இருந்து வரும் சொல்

பாடல்

இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

சீர் பிரித்த பின்

இன் சொல்  ஈரம் அளவி படிறு இல்லாவாம் 
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்


பொருள்

இன் சொல் = இன் சொல் என்பது

 ஈரம் அளவி = அன்பும் கருணையும் கலந்து

படிறு இல்லாவாம் = குற்றம் இல்லாத, பொய் கலக்காத

செம்பொருள் = உயர்ந்த பொருளை

கண்டார் = அறிந்தவர்கள்

வாய்ச் சொல் = வாயிலிருந்து வரும் சொல்


செம்பொருள் என்பதற்கு உண்மையான பொருள் அர்த்தம் கொள்ள வேண்டும். எல்லோராலும், எந்த காலத்திலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

அப்படிப்பட்ட சான்றோர்கள் வாயிலிருந்து வரும் சொற்களே இனிய சொற்கள்.

இனிய சொற்களை சொல்ல வேண்டும் என்றால் முதலில் செம்பொருளை கண்டறியுங்கள்.

உண்மையை அறியாமல் பேசும் எந்த சொல்லும் இனிய சொல் ஆகாது.

உண்மை அறியாமல் பேசும் போது அது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும்  அது பின்னால் துன்பத்தையே தரும்.


நீங்கள் கண்ட மெய் பொருள் எந்த துறையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.....

மருத்துவம், பொருளாதாரம், கலை, இலக்கியம், குழந்தை வளர்ப்பு, உளவியல்   என்று எதுவாக வேண்டுமானாலும்  இருக்கட்டும்.

அந்தத் துறையில் உள்ள உண்மைகளை கண்டறிந்து, அது சம்பந்தமாக  உங்களிடம் யாராவது  யோசனை கேட்டால், அன்போடு, கருணையோடு, வஞ்சனை இல்லாமல் நீங்கள் சொல் இனிய சொல்.

அதே போல், இனிய சொல்லை நீங்கள் கேட்க வேண்டும் என்றால் அப்படிப் பட்டவரிடம் சென்று கேளுங்கள்.

மற்றவர்களிடம் நீங்கள் கேட்பது , கேட்கும் அந்த நேரத்தில் சுகமாக இருந்தாலும் அவை நிச்சயமாக இனிய சொற்கள் அல்ல.

இனிய சொற்கள் என்றால் என்ன , அதை யாரிடம் கேட்டுப் பெறலாம், எப்படி அதை மற்றவர்களுக்குத் தரலாம் என்று புரிகிறது அல்லவா ? 

Sunday, March 30, 2014

இராமாயணம் - இராவணனின் இறை பக்தி

இராமாயணம் - இராவணனின் இறை பக்தி 


போருக்கு இராவணன் தயாராகிறான்.

போருக்கு முன்னால்  அவன் அடைந்த இழப்புகள் ஏராளம்.

ஒரு தம்பி எதிரியிடம் சென்று விட்டான் (வீடணன்)
ஒரு தம்பி போர்க்களத்தில் மாண்டு விட்டான் (கும்பகர்ணன்)
மூத்த மகன் போரில் இறந்து விட்டான் (இந்திரஜித்து )
மாமன் மற்றும் பல உறவினர்களை இழந்து விட்டான்.

ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம், அவன் நிலையில் நாம் இருந்தால் நம் மன நிலை எப்படி இருக்கும்.

கவலை - துக்கம், அடக்க முடியாத துக்கம், எல்லோர் மேலும் கோபம், வெறுப்பு, ஏமாற்றம், என்று எல்லாம் இருக்கும்.

இதன் நடுவில் இறைவனை வழிபடத் தோன்றுமா ? மற்றவர்களுக்கு உதவத் தோன்றுமா ?

இராவணன் செய்தான்

ஈசனை வழிபடுகிறான். வேண்டுபவர்களுக்கு வேண்டியபொருள்களை தானம் தருகிறான். பின் போருக்குப் புறப்படுகிறான்.

பாடல்


ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற 
பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம் 
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம் 
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் 


பொருள்

ஈசனை = சிவனை

இமையா முக் கண் இறைவனை = இமைக்காத மூன்று கண்களை கொண்ட இறைவனை

இருமைக்கு = இம்மைக்கும் மறுமைக்கும்

ஏற்ற = ஏற்புடைய

பூசனை முறையின் செய்து = பூசைகளை முறையாகச் செய்து

திரு மறை = உயர்ந்த மறைகளில்

புகன்ற தானம் = சொல்லப்பட்ட தானங்களை

வீசினன் இயற்றி = எல்லோருக்கும் கொடுத்து


மற்றும் = மேலும்

வேட்டன  = ஆசைப்பட்டதை

வேட்டோ ர்க்கு எல்லாம் = ஆசைப் பட்டவர்களுக்கு எல்லாம்

ஆசு அற நல்கி = குற்றம் இல்லாமல் கொடுத்து

ஒல்காப் = தளராத

போர்த் தொழிற்கு அமைவது ஆனான் = போர் தொழிலுக்குப் புறப்பட்டான்



Saturday, March 29, 2014

சுந்தர காண்டம் - செயலைத் தொடங்குங்கள், உதவி உடனே வரும்

சுந்தர காண்டம் - செயலைத் தொடங்குங்கள், உதவி உடனே வரும்  


"Until one is committed, there is hesitancy, the chance to draw back-- Concerning all acts of initiative (and creation), there is one elementary truth that ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favor all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamed would have come his way. Whatever you can do, or dream you can do, begin it. Boldness has genius, power, and magic in it. Begin it now."

~Goethe

சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று ஏன் சொல்கிறார்கள் ?

எதையும் படித்தால் மட்டும் போதாது. படித்ததின் படி நடக்கவும் வேண்டும். 

சுந்தர காண்டம், கவலையில் சோர்ந்து போய் , உட்கார்ந்து விட்டவர்களை தட்டிக் கொடுத்து வேலை செய்ய ஊக்குவிக்கிறது. 

அனுமன், மகேந்தர மலையில் இருந்து  கிளம்பி விட்டான். தேவர்கள் கூட அவனை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். அவர்களின் அனுக்ரஹம் அவனுக்கு உண்டு என்று அவர்கள் உணர்த்தினார்கள். 

ஒரு நல்ல காரியத்தை தொடங்கிவிட்டால், இந்த உலகமே உங்களுக்கு உதவி செய்யத் தயாராகி விடும். 

இந்த உலகம் மட்டும் அல்ல, விண்ணுலகும் உங்களுக்கு துணை நிற்கும். 

துன்பத்திற்கு காரணம், முயற்சி இன்மை. முயற்சி குறைவு.

உற்சாகத்தோடு தொடங்குகள். நீங்கள் எதிர் பார்க்காத இடத்தில் இருந்தெல்லாம் உதவி தானாக வந்து சேரும். 

என்னால் எப்படி முடியும், இது எல்லாம் நடக்கிற காரியமா, எவ்வளவு பெரிய வேலை என்றெல்லாம் சோர்ந்து விடாதீர்கள். 

தொடங்குகள். உதவி வரும். 

பாடல் 


இத் திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும்
முத் திறத்து உலகத்தாரும், முறை முறை விரைவில் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும், சுண்ணமும், இனைய தூவி,
'வித்தக! சேறி' என்றார்; வீரனும், விரைவது ஆனான். 

Thursday, March 27, 2014

சுந்தர காண்டம் - ஊடல் தீர்வுற்று

 சுந்தர காண்டம் - ஊடல் தீர்வுற்று 


அனுமன் மகேந்தர மலையில் இருந்து புறப்பட்டு விட்டான். அவன் கிளம்பிய நேரத்தில் மலை கிடுகிடுத்தது.

அந்த அதிர்வு விண்ணுலகம் வரை எட்டியது.

அங்கே......

தேவ மாதர்கள், மது அருந்தி தங்கள் துணைவர்களோடு ஊடல் கொண்டு இருந்தனர். இந்த அதிர்வினால், அவர்கள் பயந்து போய் , ஊடலை விட்டு, தங்கள் தங்கள் துணைவர்களை கட்டி பிடித்துக் கொண்டனர். அந்த நேரத்தில், அவர்கள் , தாங்கள் கூண்டில் இருந்து வெளியில் விட்ட கிளி என்ன ஆயிற்றோ என்று கவலைப் பட்டனர்.

பாடல்

ஊறியநறவும் உற்ற
     குற்றமும்உணர்வை உண்ண,
சீறிய மனத்தர்,தெய்வ
     மடந்தையர்ஊடல் தீர்வுற்று
ஆறினர்,அஞ்சுகின்றார்,
     அன்பரைத்தழுவி உம்பர்
ஏறினர், இட்டு,நீத்த
    பைங்கிளிக்கு இரங்குகின்றார்.

பொருள்

ஊறியநறவும் = நறவு என்றால் மது. ஊறிய நறவு - நாட்பட்ட மது.

உற்ற குற்றமும் = அதனால் எழுந்த குற்றமும்

உணர்வை உண்ண = உணர்வை அழிக்க

சீறிய மனத்தர் = சிறந்த மனத்தை உடைய

தெய்வ மடந்தையர் = தேவ லோகப் பெண்கள்


ஊடல் தீர்வுற்று = ஊடல் தீர்ந்து

ஆறினர் = உடலும், உள்ளமும் ஆறுதல் கொண்டனர்.

,அஞ்சுகின்றார் = அச்சம் கொண்டனர்

அன்பரைத்தழுவி = அவர்கள் தத்தம் துணைவர்களைத் தழுவி

 உம்பர் ஏறினர் = விண்ணோர் தங்கள் இடம் சென்றனர்

, இட்டு,நீத்த = கூண்டில் முன்பு போட்டு வைத்து , பின் வெளியில் விட்ட

பைங்கிளிக்கு இரங்குகின்றார். = கிளி என்ன ஆயிற்றோ என்று அதற்காக வருந்தினர்.

அச்சம் ஒரு ஊடல் தீர்க்கும் வாயில்.

ஊடல். ஊடல் தீர்ந்து கூடல். அந்த கூடல் நேரத்திலும் தாங்கள் வளர்த்த கிளி என்ன ஆயிற்றோ என்று கவலைப் படும் உயிர்களின் மேல் நேசம்.

கிளிக்காக கவலைப் படும் எவ்வளவு மென்மையான மனமாக  இருக்க வேண்டும் ?



Wednesday, March 26, 2014

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி 



மகளுக்கும் தாய்க்கும் இடையில் காதலன்.

மகள் தாயை மறந்து காதலன் பின் சென்று விட்டாள்.

தலைவி, தலைவனோடு சென்று விட்டாள் .

தாய் கிடந்து தவிக்கிறாள்.  எல்லா இடத்திலும் தேடிவிட்டாள் . எங்கும் காணவில்லை.

என்னை விட்டு போய் விட்டாளா என்று கலங்குகிறாள்.

தன் மகள் உபயோகப் படுத்திய பொருள்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கிறாள். ஒவ்வொன்றும், அந்தத் தாய்க்கு தன் மகளை நினைவு படுத்துகிறது.

வருவோர் , போவோர் எல்லோரையும் பார்த்து கண் கலங்குகிறாள்....என் மகளைப் பார்த்தீர்களா, என் மகளை பார்த்தீர்களா என்று கேட்டு பரிதவிக்கிறாள்.

அந்தத் தாயின்  பரிதவிப்பை, வீட்டை விட்டுப் போன மகளின் பிரிவை இந்தப் பாடல் பதிவு  செய்கிறது.

பாடல்


இதுவென் பாவை பாவை யிதுவென் 
   அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற் 
   பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை 
   காண்டொறுங் காண்டொறுங் கலங்க 
   நீங்கின ளோவென் பூங்க ணோளே.


Tuesday, March 25, 2014

சுந்தர காண்டம் - பெண்ணின் அருகாமை துன்பம் துடைக்கும்

சுந்தர காண்டம் - பெண்ணின் அருகாமை துன்பம் துடைக்கும் 


அனுமன் மிகுந்த ஆற்றலோடு மகேந்திர மலையை உந்திக் கிளம்புகிறான்.

அப்போது என்னென்ன  நிகழ்ந்தது என்று கம்பர் பட்டியல்  இடுகிறார்.

பூமி மட்டும் அல்ல, வானமும் சும்மா அதிர்ந்துதுல்ல...

வானுலகப் பெண்கள் எல்லாம் பயந்து அருகில் உள்ள தேவர்களை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் அந்த தேவர்கள் அழகு மேலும் கூடி பொலிந்தனர்.

இருக்காத பின்ன...?

தேவலோகப் பெண்கள் கட்டிப் பிடித்தால் மகிழ்ச்சியில் முகம் பிரகாசிக்காதா என்ன ?

அப்படி ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு தேவனை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது எப்படி இருந்தது என்றால் ...

முன்பொரு நாள் , இராவணன் கைலாய மலையை தூக்க முயன்ற போது உமா தேவியார் சிவனைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்த மாதிரி இருந்தது.

பாடல்

வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும், நடுக்கம் எய்தி,
மயில் இயல் தளிர்க் கை மாதர் தழீஇக் கொளப் பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித் தனி கடுத்தல் செய்தார்


நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்

நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்  


நீங்கள் ஒரு பெரிய சம வெளியில் நிற்கிறீர்கள். உங்களைச் சுற்றி தூரத்தில் பெரிய மலைகள் இருக்கின்றன. திடீரென்று அந்த மலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து உங்கள் மேல் சண்டைக்கு வருகின்றன.

ஒரு மலையோடு சண்டை போட்டு வெல்வதே முடியாத காரியம். பல மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் என்ன செய்வீர்கள் ?

ஓடவும் முடியாது. ஓரிடத்தில் நிற்கவும் முடியாது....

அது போல ....நீங்கள் இது வரை சேர்த்து வைத்த வினைப் பயன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகின்றன....மலை போல ....

கொஞ்சமாகவா செய்திருக்கிறோம்...

அப்படி மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் எனக்கு பயமாக இருக்கிறது. என்னை "பயப்படாதே" என்று சொல்லி என்னை காப்பாற்று.

அந்த சமயத்தில் என்னை கை விட்டு விடாதே...என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று இறைவனை வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு `அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.


Monday, March 24, 2014

சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்

சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்  


ஒரு ஆகாய விமானம் எப்போது அதிக பட்ச விசையை செலவிடும் ?

அது தரையில் ஓடி, பறக்கத் தொடங்கும் அந்த நேரத்தில், தரையை விட்டு வானை நோக்கித் தாவும் அந்த நேரத்தில் அதிகபட்ச விசை தேவைப்படும்.

அது போல, நாம் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால், தொடக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன், மிகுந்த பலத்துடன் தொடங்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே, இது எங்க உருப்படப் போகுது என்று சோர்வோடு ஆரம்பித்தால், அந்த காரியம் சரியாக நடக்காது.

அனுமன், மகேந்தர மலையில் இருந்து கிளம்புகிறான்.

என்ன ஒரு உத்வேகம், செய்யத்  தொடங்கிய வேலையில் என்ன ஒரு உற்சாகம், ஒரு புத்துணர்வு....

அங்குள்ள குகைகள் எல்லாம் நசுங்கி, அவற்றில் உள்ள பாம்புகள் நெளிந்து நெளிந்து வெளியே வந்தன. அப்படி ஒரு அழுத்தம் கொடுத்து வேலைக்கு கிளம்புகிறான்.

பாடல்


வன்தந்தவரிகொள் நாகம்,
     வயங்குஅழல் உமிழும் வாய,
பொன்தந்தமுழைகள்தோறும்
     புறத்து உராய்ப் புரண்டு போவ - 
நின்று, அந்தம்இல்லான் ஊன்ற -
    நெரிந்துகீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன்வயிறு கீறிப்
     பிதுங்கினகுடர்கள் மான.

பொருள்

வன் தந்த = தந்தம் என்றால் பற்கள். வன்மையான பற்களை உடைய

வரி கொள் நாகம் = வரி வடிவம் போன்ற நாகப் பாம்புகள் அல்லது உடலில் வரிகளைக் கொண்ட பாம்புகள்

வயங்கு = விளங்கும்

அழல் = தீயை

உமிழும் வாய = வெளிவிடும் வாய்

பொன் தந்த = பொன் தரும்

முழைகள்தோறும் = குகைகள் தோறும்

புறத்து = வெளியே

உராய்ப் புரண்டு போவ = உராய்ந்து கொண்டு புரண்டு போயின

நின்று =  நின்று

அந்தம்இல்லான் = முடிவு இல்லாத (சிரஞ்சீவி ) அனுமன்

ஊன்ற  = ஊன்றி எழும்பி

நெரிந்து கீழ் = அமுக்கி , கீழ் நோக்கி

அழுந்தும் = அழுந்தும்

நீலக் குன்றம் = நீல நிறக் குன்றம்

தன்வயிறு கீறிப் = தன் வயிறு கீறி

பிதுங்கின குடர்கள் மான = குடல்கள் வெளியே வந்தன

.


Sunday, March 23, 2014

சுந்தர காண்டம் - இதுவா தேடியது ?

சுந்தர காண்டம் - இதுவா தேடியது ?


 நாம் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் ?

பணம், புகழ், அதிகாரம், ஆரோக்கியம், அன்பு, புலன் இன்பங்கள்,  மோட்சம்...இதில் எது வேண்டும் நமக்கு ? எல்லாம் வேண்டுமா ?

இந்த நிமிடத்தில், இன்று, இந்த வாரம் எதைத் தேடி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியுமா ?

நாம் விரும்புவது ஒன்று, வேலை செய்வது மற்றொன்றுக்காக .

உடல் ஆரோக்கியம் பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று நினைக்கிறோம்...ஆனால் உணவு விடுதிக்கு சென்று வேண்டாததை எல்லாம் உண்கிறோம்.

இது என்ன மதியீனம்.

அனுமன், சீதையைத் தேடி இலங்கை நோக்கிப் புறப்பட்டான்.

போகிற வழியில் வானவர் நாட்டை ( துறக்க நாடு) கண்டான்.  பொன்னும், பொருளும் நிறைந்த இடம், அழகான இளம் பெண்கள், இனிய இசை, கற்பக மரம் நிறைந்த சோலைகள்.

நாமாக இருந்தால், கொஞ்சம் தங்கி , அந்த ஊரையெல்லாம் சுற்றி பார்த்து விட்டு, நிதானமாக போய் இருப்போம்.

அனுமன்  அறிவாளி.

இது அல்ல நம் நோக்கம் என்று உடனே அறிந்து கொண்டு அங்கிருந்து விலகுகிறான்.


பாடல்

ஆண்தகை, ஆண்டு, அவ் வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்;
'ஈண்டு, இதுதான்கொல் வேலை இலங்கை?' என்று ஐயம் எய்தா,
வேண்டு அரு விண்ணாடு என்ணும் மெய்ம்மை கண்டு, உள்ளம் மீட்டான்;

'காண் தகு கொள்கை உம்பர் இல்' என, கருத்துள் கொண்டான்.

பொருள்

ஆண்தகை = ஆண்மையில் சிறந்த அனுமன்
ஆண்டு = அங்கு

அவ் வானோர்  = அந்த வானவர்கள் (தேவர்கள்)

துறக்க நாடு = விண்ணோர் உலகம் (சொர்க்கம்)

அருகில் கண்டான் = பக்கத்தில் பார்த்தான்

'ஈண்டு, = இங்கு

இதுதான்கொல் = இதுதான்

வேலை = கடல் சூழ்ந்த

இலங்கை? = இலங்கை

என்று ஐயம் எய்தா = என்று ஐயம் கொண்டான்

வேண்டு = எல்லோரும் விரும்பும்

அரு விண்ணாடு = அருமையான சுவர்க்கம்

என்ணும் மெய்ம்மை கண்டு = என்ற உண்மையை கண்டு கொண்டு

உள்ளம் மீட்டான் = அதன் பின் சென்ற தன் உள்ளத்தை மீட்டுக் கொண்டான்


'காண் தகு கொள்கை உம்பர் இல்' என = காண வேண்டிய கொள்கை, அதாவது சீதை, இந்த இடத்தில் இல்லை

கருத்துள் கொண்டான் = என்று கருத்தில் கொண்டான்.

நாம் ஒரு கொள்கை நோக்கி செல்லும் போது , நடுவில் இந்த மாதிரி சபலங்கள் , குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். அவற்றில் மயங்கி நாம் நின்று விடக் கூடாது. நாம் எங்கு செல்ல வேண்டுமோ அதில் குறியாக இருக்க வேண்டும்......

சுந்தர காண்டம் தரும் முதல் பாடம் இது....



Saturday, March 22, 2014

அற்புதத் திருவந்தாதி - அக்கோலத்தே அவ்வுருவேயாம்

அற்புதத் திருவந்தாதி - அக்கோலத்தே அவ்வுருவேயாம் 


படித்து அறிவது என்பது ஒன்று
அனுபவத்தில் உணர்ந்து அறிவது என்பது வேறு ஒன்று

அனுபவத்தில் கிடைப்பதை படித்து அறிய முடியாது.

இறை அனுபவம் என்பது படித்து அறிவது அல்ல. ஆயிரம் புத்தகம் படித்தாலும், காதலியின் கடைக் கண் சொல்லும் செய்தி புரியாது. அதற்கு அனுபவம் வேண்டும்.

காரைக் கால் அம்மையார், இறைவனைப் பற்றி  கூறுகிறார்.

பாடல்

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக!
நீல மணிமிடற்றா னீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கு
மக்கோலத் தவ்வுருவே யாம்.

பொருள்

நூலறிவு பேசி = புத்தக அறிவு பற்றி பேசி, விவாதம் பண்ணி

நுழைவிலா தார் திரிக! = நுழைவு இல்லாதார் திரிக. அனுபவம் என்ற உணர்வு தன்னில் நுழையாதவர்கள் மனம் போன படி பேசித் திரியட்டும்


நீல மணிமிடற்றா = நீல மணி போன்ற கழுத்தை உடைய

நீர்மையே = கீழாக இருக்கும்
மேலுலந்த = மேல் உலந்த = அனைத்திற்கும் மேலாக இருப்பது

தெக்கோலத் = எந்த கோலத்தில்

தெவ்வுருவா = எந்த உருவத்தில்

யெத்தவங்கள் = எந்த தவங்கள்

செய்வார்க்கு = செய்பவர்களுக்கு

மக்கோலத் = அக் கோலம்

தவ்வுருவே யாம். = அவ் உருவேயாம்

யார் எப்படி, எந்த உருவத்தில், எப்படி நினைத்து தவம் செய்கிறார்களோ, அந்த உருவத்தில்  அவன் இருப்பான்.

மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் ஒரு பெண்ணால் எழுதப் பட்ட பாடல்.



பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் 


இவ்வம்மையார் காரைக்காலில் உதித்ததால் இப்பெயர் பெற்றார். இவருடைய இயற்பெயர்  புனிதவதி.

அற்பத்து மூன்று நாயன்மார்களில் 3 பெண்கள். அவர்களில் இவர்  ஒருவர்.

அவர், பரமதத்தன் என்பவரை மணந்து இல்லறம் நடத்தி  வந்தார்.

ஒரு நாள் பரம தத்தனின் கடைக்கு வந்த வணிகர்கள் அவரிடம் இரண்டு மாங்கனிகளை தந்தனர். அவரும், அதை தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த கனிகளை பெற்றுக் கொண்ட புனிதவதியார், மதியம் கணவன் உணவு உண்ண வரும்போது தரலாம் என்று அதை வைத்து  இருந்தார்.

அப்போது பசியோடு ஒரு சிவனடியார் வந்தார்.

புனிதவதி அவருக்கு ஒரு மாங்கனியை உணவாக  கொடுத்தார்.

பின், பரமதத்தன் உணவு உண்ண அந்த போது , மீதி இருந்த ஒரு மாங்கனியை அவருக்கு கொடுத்தார். அதன் சுவை மிக நன்றாக இருக்கவே, அவர் இன்னொரு மாங்கனியும் வேண்டும் என்று கேட்டார்.

புனிதவதியார், இறைவனை வேண்ட, சிவன் அருளால் அவருக்கு ஒரு மாங்கனி கிடைத்தது.

அதை பரமதத்தனுக்கு கொடுத்தார்.

இரண்டாவது மாங்கனியின் சுவை மிக மிக இனிமையாக இருக்கவே, இது ஏது என்று கணவன் கேட்ட போது பொய் உரைக்காமல் இறை அருளால் மாங்கனி கிடைத்ததை  கூறினார்.

பரமதத்தன் நம்பவில்லை. அப்படியானால் இன்னொரு மாங்கனி இறைவனிடம் கேட்டு  பெற முடியுமா என்று கேட்டான்.

அம்மையாரும் அவ்வாறே இறைவனை வேண்டி இன்னொரு மாங்கனி பெற்றுத்  தந்தார்.

பரமதத்தன் மிரண்டு போனான்.

இந்தப் பெண் தெய்வாம்சம் நிறைந்த பெண் என்று எண்ணி, வேறு ஊருக்கு சென்று இன்னொரு பெண்ணை மணந்து  வாழ்ந்து வந்தான்.

இதை அறிந்த புனிதவதியார் அந்த ஊருக்கு உறவினர்களோடு  சென்றார்.

அப்போது, பரமதத்தன் புனிதவதியின் காலில் விழுந்து ஆசி வேண்டினான்.

கணவன் தன்னோடு வாழ மாட்டான் என்று அறிந்து, இனி இந்த இளமையும் அழகும் தேவை இல்லை என்று எண்ணி, இறைவனை வேண்டி, உடலில் உள்ள தசைகளை துறந்து பேய் வடிவம் பெற்றார்.

அதைச் சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார்



ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து இங்கு உன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்றார். 

பொருள்

ஈங்கிவன் = இங்கு இவன் (கணவன்)

குறித்த கொள்கை = கொண்ட கொள்கை . அதாவது, புனிதவாதியான தன்னை ஒரு தெய்வப் பெண் என்று அவன் நினைத்த கொள்கை

இது = இந்த உடல்

இனி = இனிமேல்

இவனுக்காகத் = கணவனுக்காகத்

தாங்கிய = பெற்ற, கொண்ட

வனப்பு நின்ற= அழகு நின்ற

தசைப்பொதி = தசை என்ற சுமை

கழித்து = கழித்து, விடுத்து

இங்கு உன்பால் = இன்று உன்னிடம்

ஆங்குநின் தாள்கள் = அங்கு (கைலாய மலையில் ) உன் திருவடிகளை

போற்றும் = வணங்கும்

பேய்வடிவு = பேய் வடிவம் (பூத கணங்கள் )

அடியேனுக்குப் = அடியவனாகிய எனக்கு (புனிதவதியாருக்கு)

பாங்குற வேண்டும் = அழகுடன் வேண்டும்

என்று பரமர்தாள் பரவி நின்றார் = என்று இறைவனின் திருவடிகளை போற்றி  நின்றார்.

இவர்  இயற்றிய பாடல்கள் :

1. அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள்,
2. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்),
3. திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும்.

தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.

தமிழ் பாடல்களை இசை வடிவில் பாடியதில் இவரே முதன்மை  பெறுகிறார்.

நேரம் இருப்பின், இந்த மூல நூல்களைப் படித்துப் பாருங்கள். 

அற்புதமான பாடல்கள். 


திருப்புகழ் - இளமை அழகு - பகுதி 2

திருப்புகழ் - இளமை அழகு   



இளமையும் அழகும் எவ்வளவு நாள் ? வெகு வேகமாக இளமை கரையும். முதுமை வந்து சேரும். அதைத் தொடர்ந்து மரணம் வரும்.

அது வருமுன்னே அவனை நினை என்று அறிவுறுத்துகிறார் அருணகிரி.

ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

வாழ்வின் நிலையாமை புரியும்.


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ

 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.


-----------------------------------------------------------------------------------------------------------

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ
---------------------------------------------------------------------------------------------------------


பொருள்

 வெட்ட விட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென = வெட்ட விட வெட்ட , கிடஞ்சம் கிடஞ்சம் என்று பறைகள் எழுப்பும் ஒலி ஒரு புறம்.

மக்களொரு மிக்கத் = மக்கள் ஒரு மிக்க = மக்கள் ஒன்றாக 

தொடர்ந்தும் = தொடர்ந்து வந்து  

புரண்டும் = வழி எல்லாம் அழுது புரண்டு 

வழி  விட்டு = வழி விட்டு 

வரு மித்தைத் = வரும் இத்தை = வரும் துன்பத்தை  

தவிர்ந்து = விலக்கி 

உன் பதங்களுற வுணர்வேனோ = உன் திருவடிகளை உள்ளுக்குள் உணர்வேனோ?






(தொடரும்)

Thursday, March 20, 2014

திருப்புகழ் - இளமை அழகு - பாகம் 1

திருப்புகழ் - இளமை அழகு   



இளமையும் அழகும் எவ்வளவு நாள் ? வெகு வேகமாக இளமை கரையும். முதுமை வந்து சேரும். அதைத் தொடர்ந்து மரணம் வரும்.

அது வருமுன்னே அவனை நினை என்று அறிவுறுத்துகிறார் அருணகிரி.

ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

வாழ்வின் நிலையாமை புரியும்.


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே

 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ

 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.


பொருள்


கட்டழகு விட்டுத் = கட்டழகு விட்டு 

தளர்ந்தங் கிருந்து = தளர்ந்து அங்கு இருந்து.

முனம் = முன்பு

இட்டபொறி தப்பிப் = இருந்த புலன்கள் நம்மை விட்டு தப்பிப் போய்

 பிணங்கொண்ட தின் = பிணம் என்று ஆன பின்

சிலர்கள் = சிலர்

கட்டணமெ டுத்துச் = கட்டணம் எடுத்து. கூலிக்கு

சுமந்தும் = சுமந்து சென்று

பெரும்பறைகள் = பெரிய பறைகள்

முறையோடே = முறைப் படி



(தொடரும்)

சுந்தர காண்டம் - 2 - துன்பம் நேர்கையில்

சுந்தர   காண்டம் - துன்பம் நேர்கையில்  



நமக்கு  துன்பம் வந்தால் நாம் என்ன செய்வோம் ?

முதலில், எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நொந்து கொள்வோம்.

 பின்,  துன்பத்திற்கு யார் யார் எல்லாம் காரணம் என்று மனதுக்கு தோன்றுகிறதோ அவர்களை எல்லாம் திட்டித் தீர்ப்போம்.

பின், இந்த துன்பத்தில் இருந்து விடுபட நமக்கு உதவி செய்யாதவர்கள் மீது கோபம் கொள்வோம்.

பின், எதிலும் எரிச்சல். எதிலும் ஒரு பிடிப்பின்மை. நாட்டமின்மை என்று உலகே அஸ்தமானம் ஆனது போல் இடிந்து போய் உட்கார்ந்து விடுவோம்.

இராமன் என்ன  செய்கிறான்,நமக்கு எப்படி  வழி காட்டுகிறான் என்று பார்ப்போம்:

1. முதலாவது, மனைவியிடம் அன்பாக  இருக்கிறான். அவள் அழகை இரசிக்கிறான். இராஜ்யமே போய் விட்டது என்று இடிந்து போய்  விடவில்லை.

2. இயற்கையை இரசிக்கிறான், மனைவியோடு சேர்ந்து. பணம் போனால் என்ன ? இராஜ்ஜியம் போனால் என்ன ? பதவி போனால் என்ன ? என் அன்பு மனைவி  என்னோடு இருக்கிறாள் என்று உலகை அவளோடு சேர்ந்து இரசிக்கிறான்.

3. மற்றவர்கள் மேல் அன்பாக இருக்கிறான். குகனிடம், சுக்ரீவனிடம், வீடணினிடம்  சகோதர அன்பு  பாராட்டுகிறான்.

4. விருந்தில் கலந்து கொள்கிறான்.

5. மற்றவர்களுக்கு உதவி செய்கிறான்.  நானே துன்பத்தில் இருக்கிறேன், இவர்கள் வேறு என்னிடம் வந்து நை நை என்று ஏதோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எரிந்து  விழவில்லை.முடிந்த உதவிகளை செய்கிறான்.

6. துன்பத்தை எதிர்த்து  போராடுகிறான். 

7. கடமைகளைச் செய்கிறான். ஜடாயுவுக்கு நீர் கடன்  செய்தான்.

8. நிதானம் தவறாமல் இருக்கிறான்.

9. பகைவனுக்கும்  அருள்கிறான்.இன்று போய் நாளை வா என்று நிதானமாக இருக்கிறான்.

10. எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறான்....

11. அநீதியை எதிர்த்து போராடுகிறான்.

12. மன்னிக்கிறான்.

துன்பம் வரும். எல்லோர் வாழ்விலும் துன்பம் வரும். துன்பம் வந்தால் எப்படி இருக்க  வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன்.

இத்தனையும் சுந்தர காண்டம் நமக்குச் சொல்லித் தருகிறது.

மிகப் பெரிய துன்பத்தை தாங்கி, போராடி எவ்வாறு இராமன் வாழ்ந்து காட்டினான் என்று   பாடம் நடத்துகிறது சுந்தர காண்டம்.

இனி வரும் பகுதியில் இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சுந்தர காண்டத்தை , நம் வாழ்க்கைக்கு அது எப்படி வழி காட்டும் என்ற கோணத்தில்   சிந்திப்போம்.




நீத்தல் விண்ணப்பம் - மரத்தில் இட்ட தீ

நீத்தல் விண்ணப்பம் - மரத்தில் இட்ட தீ 


மரம் என்னவோ பெரிய மரம் தான்.

தீ என்னவோ சின்ன தீ தான்.

தீயை மரத்தில் வைத்தால் என்ன ஆகும் ? முதலில் மெதுவாக எரியும். நேரம் செல்ல செல்ல அந்த மரமே விறகாக தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த மரத்தை முழுவதும் எரித்து கரியாக்கிவிடும்....அது போல

இந்த புலன் ஆசைகள் என்ற தீ, உடல் என்ற மரத்தை மெல்ல மெல்ல எரித்து சாம்பாலாக்கி விடும்.

புலனாசைகளால் வெந்து நீராவோம்.

அப்படி வெந்து நொந்து இருக்கும் என்னை விட்டு விடாதே என்று பதறுகிறார் மணிவாசகர்.

பாடல்

பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய, புலன் தீக் கதுவ,
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்? விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு
அதும்பும், கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே


பொருள் 

பொதும்பு உறு = மரப் பொந்தினை அடைந்த 

தீப்போல் = தீயைப் போல

புகைந்து எரிய = புகை விட்டு எரிய

புலன் தீக் கதுவ = புலன்களாகிய தீ பற்றிக் கொள்ள, பற்றிக் கொள்ள

வெதும்புறுவேனை = வெதும்பி துன்பப் படுபவனான என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

விரை ஆர் = மணம் வீசும் 

நறவம் = தேன்

ததும்பும் = ததும்பும்

மந்தாரத்தில் = மந்தாரம் என்ற மலரில்

தாரம் பயின்று, = இசை பயின்று

மந்தம் = மந்தமாகிய இசையை

முரல் வண்டு = ரீங்காரமிடும் வண்டு

அதும்பும், = அழுந்தும்

கொழும் தேன் = செழுமையான தேன்

அவிர் சடை = விளங்கும் சடையை கொண்ட

வானத்து அடல் அரைசே =  வானில் உள்ள வீரமிக்க அரசே

மரமே தீயை வைத்துக் கொள்வது போல, நமக்கு நாமே தீயை வைத்துக் கொள்கிறோம்.

எரிவது தெரியாமல், அதுவே சுகம் என்று இருக்கிறோம்.





Tuesday, March 18, 2014

சுந்தர காண்டம் - அறிமுகம்

சுந்தர காண்டம் - அறிமுகம் 


இராமாயணத்தில் மிக முக்கியமான பகுதி சுந்தர காண்டம்.

சுந்தர காண்டம் படித்தால் துன்பங்கள் எல்லாம் விலகி மனதில் அமைதி பிறக்கும் என்பது ஐதீகம்.

துன்பம் இல்லாத மனிதன் யார் ?

உறவுகள், பணம், வேலை, ஆரோக்கியம்,  பிள்ளைகள், கணவன், மனைவி, அண்டை , அயல், அலுவலகம் என்று ஆயிரம் வழிகளில் துன்பம் வருகிறது.

நம் துன்பம் எப்போது குறையும் ?

நம்மை விட அதிக துன்பம் உள்ளவர்களைப் பார்க்கும் போது , நம் துன்பம் அவ்வளவு பெரியதில்லை என்ற ஆறுதல் பிறக்கும். அவர்கள் அவ்வளவு பெரிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சமாளித்து வாழ்கிறார்கள் என்றால் நாம் ஏன் நமக்கு வந்த துன்பத்தை தாங்க முடியாது ? நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

இராமனுக்கு வராத துன்பமா ?

ஓர் இரவில் , சக்ரவர்த்தியாக வேண்டியவன் முடி துறந்தது மட்டும் அல்ல, காட்டுக்கும்  போக வேண்டி வந்தது என்றால் அதை விட பெரிய துக்கம் என்ன இருக்கும்.

ஒரு பத்து ரூபாய் தொலைந்து விட்டால் எவ்வளவு வருத்தப் படுவோம்.

ஒரு இராஜ்யத்தையே தொலைத்து விட்டால் ? தாங்க முடியுமா நம்மால் ?

துன்பத்தில் பெரிய துன்பம் நமக்கு வரும் துன்பங்கள் அல்ல....நம்மால் மற்றவர்களுக்கு  வரும் துன்பம்.

நம்மால் நம் மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உடன் பிறப்போ துன்பப் பட்டால்  அது சகிக்க முடியாத துன்பம். நமக்கு வரும் துன்பத்தை நாம் தாங்கிக்  கொள்ளாலாம். நம்மால் மற்றவர்கள் படும் துன்பத்தை தாங்க முடியாது.

சீதையும், இலக்குவனும் இராமன் பொருட்டு கானகம் வந்தார்கள். அது இராமனுக்கு எவ்வளவு வருத்தத்தை தந்திருக்கும் ?

அதையும் தாங்கிக் கொண்டான்.

கானகம் போன இடத்திலாவது நிம்மதி உண்டா என்றால் - இல்லை.

கட்டிய மனைவியை மற்றவன் தூக்கிப் போனான்.

மனைவியைப் பறி  கொடுத்தான்.

துன்பம் மேலும் கூடியது.

அதையும் தாங்கிக் கொண்டான்.

அவன் பொருட்டு ஜடாயு உயிர் விட்டான்.

அதையும் தாங்கிக் கொண்டான்.

சக்கரவர்த்தி குமாரன், சுக்ரீவன் என்ற வானரத்திடம் உதவி வேண்டும் என்று கையேந்தி  நின்றான்.

இவ்வளவு துன்பமும் யாருக்கு ?

திருமாலின் அவதாரம் - தசரதனின் குமாரன் - ஜனகனின் மருமகன் - வசிட்டனின் சீடன் - பரசுராமனின் உரம் உருவியவன் - விச்வாமித்ரனின் வேள்வி காத்தவன் .....

அவனுக்கு இவ்வளவு துன்பங்கள் என்றால் , நாம் எல்லாம் எம்மாத்திரம் ?

துன்பம் ஏதோ நமக்கு மட்டும் வந்து விடவில்லை -  அந்த துன்பங்கள் இராமனையும் விட்டு வைக்க வில்லை.

துன்பம் வந்த போது இராமன் என்ன செய்தான் ? எப்படி அவற்றை சமாளித்தான் ?

வாழ்க்கையில் நமக்கும் துன்பம் வரும்.

அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும் என்று சொல்லித்தரும் பகுதி சுந்தர காண்டம்.


சுந்தர காண்டம் பற்றி மேலும் பார்ப்போம்.



Monday, March 17, 2014

இராமாயணம் - இராமன் மார்பில் பாய்ந்த சரம்

இராமாயணம் - இராமன் மார்பில் பாய்ந்த சரம் 


யுத்த காண்டம்.

மாலையில் இராமன் கடற் கரையில் தனிமையில் இருக்கிறான்.

யுத்தம் வரப் போகிறது. எப்படி சண்டை இட வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய இடம்.

இராமனை சீதையின் நினைவு வாட்டுகிறது.

அவளைப் பற்றி நினைக்கிறான்.   அவன் உடல் சோர்வு அடைகிறது. காமத்தில் மெலிகிரான் .

அவன் மார்பும் தோளும் எவ்வளவு வலிமை மிக்கவை ? மேரு மலையை மத்தாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, மேரு மலை சாய்ந்தது. அதை பிடித்து நிறுத்த யாராலும் முடியவில்லை. அவர்களுக்கு வாலி உதவினான். அப்படிப்பட்ட பலம் கொண்ட வாலியின் நெஞ்சை ஒரே அம்பால் துளைத்த வலிமை கொண்டவன் இராமன்.

அது மட்டுமா ?

கரன் என்ற அரக்கனின் உயிரை கொண்டவன்.

அது மட்டுமா ?

ஏழு மரா மரங்களை ஒரே அம்பால் துளைத்த தோள் வலி கொண்டவன் இராமன்.

அப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இராமனின் மார்பை மன்மதனின் அம்பு துளைத்தது.

அது மட்டும் அல்ல,

நிலவின் ஒளி என்ற வாளும் அவன் நெஞ்சில் பாய்ந்தது.

பாடல்

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய 
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன் 
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 

பொருள்

கரத்தொடும் = கையினால்

பாழி = வலிமையான, பெரிய

மாக் கடல் = பெரிய கடல்

கடைந்துளான் = கடைந்தவன் (வாலி)

உரத்தொடும் = அவன் வலிமையையும்

கரனொடும் = கரன் என்ற அரக்கனின் உயிரையும்

உயர ஓங்கிய = நீண்டு உயர்ந்து வளர்ந்த

மரத்தொடும் = மரா மரங்களையும்

தொளைத்தவன் மார்பில் = துளைத்தவன் மார்பில்

மன்மதன் = மன்மதன்

சரத்தொடும் = மலர் அம்புகளோடு

பாய்ந்தது = பாய்ந்தது

நிலவின் = நிலாவின்

தாரை வாள் = ஒளி என்ற வாள்

ஆணை செலுத்துவதும், அவனை சோர்வடையச் செய்வதும் - பெண் தான்.

எவ்வளவு பெரிய வலிமையான ஆளாக இருந்தாலும் (இராமன் உட்பட) பெண் மேல் கொண்ட  அன்பு / காதல் / காமம் ஆணை மென்மையாக்குகிறது.


பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத

 பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத 


அழுவது ஒரு அழகா ?

அழகுதான் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

திரு ஞான சம்பந்த நாயனாரை அறிமுகப் படுத்தும் முதல் பாடல்.

ஞான சம்பந்தர் என்ற குழந்தை அழுததாம்.

எதற்கு அழுதது ?

பசித்து பாலுக்கு அழவில்லை....பின் எதற்கு அழுதது ?

வேத நெறி தழைத்து ஓங்கவும்,
சைவத் துறை விளங்கவும்,
பூதப் பரமபரை பொலியவும்

ஞான சம்பந்தர் என்ற குழந்தை வாய் மலர்ந்து அழுதது.

பாடல்

வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 
 பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
 சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
 பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 

பொருள்

வேத நெறி = வேதங்களில் சொல்லப் பட்ட நெறிகள்

தழைத்து ஓங்க = தழைத்து ஓங்க

மிகு = மிகுந்த

சைவத் துறை விளங்கப் = சைவத் துறை விளங்க

பூத பரம்பரை = பூதப் பரம்பரை என்றால் இந்த அனைத்து உயிர்களும்

பொலியப் = சிறப்புடன் வாழ

புனித வாய் = புனிதம் நிறைந்த வாய்

மலர்ந்து அழுத = மலர்ந்து அழுத

சீத = குளிர்ந்த

வள = வளமையுள்ள

வயல்= வயல்கள்

புகலித் = சீர்காழி என்ற ஊரில்

திருஞான சம்பந்தர் = திருஞான சம்பந்தர்

பாத மலர் = பாதம் என்ற மலரை

தலைக் கொண்டு = தலையில் சூடிக் கொண்டு

திருத் தொண்டு பரவுவாம் = உயர்ந்த தொண்டை பரப்புவோம்

 
வேத நெறி தழைத்து ஓங்க .....மனிதன் பொல்லாதவன். நல்லது எதைத் தந்தாலும்  அதை குழப்பி, தானும் குழம்பி, அதை தன் சுயநலத்துக்கு பயன் படுத்திக்  கொள்வான். இதனால், மற்றவர்கள் எது சரி எது தவறு என்று குழம்புவார்கள்.  குரங்கு கை பூமாலை போல, எதை தந்தாலும் தன் குற்றங்களை அதில்  ஏற்றி, தன் சாமர்த்தியத்தை காட்டுகிறேன் என்று பாலில் நஞ்சைக் கலக்கும்  வேலையில் அவன் தேர்ந்தவன். இதனால் , உயர்ந்த  கோட்பாடுகளில்  களைகள் சேர்ந்து விடுகின்றன. உண்மை எது பொய் எது என்று தெரியாத குழப்பம்  வருகிறது. களைகளை நீக்கி , வேத நெறிகள் தழைத்து ஓங்கவும். 



சைவத் துறை விளங்கவும்: சமயம் என்ற ஆறு இறைவன் என்ற கடலை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆற்றில் பல கிளைகள். ஒவ்வொரு  கிளைக்கும் பல துறைகள்  உள்ளன.அதில் சைவத் துறை விளங்க அவர்  மலர் வாய் திறந்து அழுதார். 

பூதப் பரம்பரை பொலிய : சைவத் துறை என்றால் அது சைவர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் அது பொது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா உயிர்களுக்கும்  பொது அது. எனவே பூதப் பரம்பரை பொலிய என்றார். எல்லா உயிர்களும்  சிறந்து வாழ வேண்டும் என்ற அளவற்ற கருணை. 

புனித வாய்: பார்வதியிடம் ஞானப் பால் உண்பதற்கு முன்பே அது புனித வாய் என்றார். விட்ட குறை தொட்ட குறை என முன் பிறப்பில் கொண்ட இறை உணர்வு  கொண்டு  பிறந்தார்.

Saturday, March 15, 2014

இராமாயணம் - கற்று அறிந்தவர் என அடங்கி

இராமாயணம் - கற்று அறிந்தவர் என அடங்கி


இராமனும் சீதையும் வனத்தில் நடந்து செல்கிறார்கள். இராமன் இயற்கை காட்சிகளை சீதைக்கு காட்டிக் கொண்டே வருகிறான்.

"பெரிய யானைகளை அப்படியே விழுங்கும் மலைப் பாம்புகள், முனிவர்கள் மலையில் ஏறுவதற்கு எளிதாக படிகட்டுகள் போல வளைந்து வளைந்து கிடப்பதை பார் " என்று சீதைக்கு காட்டுகிறான்.

பாடல்

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச்சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப்படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன-பாராய்! 

பொருள்

இடி கொள் = இடியை விழுங்கியதைப் போல் சப்தம் எழுப்பும்

வேழத்தை = யானைகளை 

எயிற்றொடும் =  எயிறு என்றால் பல். இங்கு தந்தம்.

எடுத்து = எடுத்து

 உடன் விழுங்கும் = அப்படியே விழுங்கும்

கடிய மாசுணம் = வலிமை மிக்க மலைப் பாம்புகள்

கற்று அறிந்தவர் = கற்று அறிந்தவர்கள்

என அடங்கிச் = போல அடங்கி

சடை கொள் சென்னியர் = சடை கொண்ட முனிவர்கள்

தாழ்வு இலர் = தாழ்வு இல்லாதாவர்கள்

தாம் மிதித்து ஏறப் = அவர்கள் மிதித்து ஏற

படிகளாம் = படிகளாக

எனத் தாழ்வரை = என தாழ்ந்து

கிடப்பன-பாராய் = கிடப்பதைப் பார்

கற்று - அறிந்தவர் என்று இரண்டு வார்த்தைகளை கம்பன் போடுகிறான்.

கல்வி வேறு , அறிவு வேறு.

கல்வி கற்று, பின் அறிவு பெற்றவர்கள் அடங்கி இருப்பார்கள்.

அடக்கம் இல்லாதவர்களைப் பார்த்தால், ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள்  கல்வி அறிவு இல்லாதவர்கள் என்று.

அடக்கம் அறிவின் இலட்சணம்.

இரண்டாவது, அறிவு தவத்திற்கு ஒரு படி கீழே.

தவம், அறிவைத் தாண்டி மேலே போகிறது.

முதலில் கல்வி, பின் அறிவு, அதையும் தாண்டி தவம்.


திருக்குறள் - எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது ?

திருக்குறள் - எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது ?


நமக்கு வரும் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், எதைச் செய்வது, எதை செய்யக் கூடாது என்று அறியாமல் குழம்புவதுதான்.

இந்த வேலையில் சேரலாமா வேண்டாமா ? இந்த course ஐ எடுக்கலாமா வேண்டாமா ? உடற் பயிற்சி மையத்தில் சேரலாமா வேண்டாமா ?

சரி எப்படியோ, பல பேரிடம் கேட்டு மண்டையை உடைத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம், எடுத்த முடிவை எப்படி செயல் படுத்துவது.

ஒரு மாதிரி மண்டையைக் குழப்பி ஒரு வேலையில் சேர்ந்து விட்டோம், அல்லது ஒரு course இல் சேர்ந்து விட்டோம், அடுத்து என்ன செய்வது ?

இத்தனை சிக்கலான கேள்விக்கு இரண்டே வரிகளில்  தருகிறார் வள்ளுவர்.....

முதலில் பாடலைப் பார்ப்போம்.


என்று மொருவுதல் வேண்டும் புகழொடு  
நன்றி பயவா வினை


சீர் பிரித்த பின்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

புகழோடு நன்றி தரதா செயலை ஒரு போதும் செய்யக் கூடாது.

அர்த்தம் என்னவோ அவ்வளவுதான். ஆழமாக சிந்திக்க வேண்டிய குறள் .

எந்த வேலையை செய்தாலும் பயனும் வர வேண்டும், புகழும் வர வேண்டும் . அப்படி பட்ட  வேலையைதத் தான் செய்ய வேண்டும். அப்படி புகழும் பயனும் தராத  வேலையைச் செய்யக் கூடாது.

அது என்ன பயன், புகழ் ?

எந்த வேலையை செய்தாலும், நமக்கு அதில் ஒரு பலன் கிடைக்கும்.

படித்து , பரீட்சை எழுதினால் அதற்கு தகுந்த மதிப்பெண் வரும்.

புகழ் வர வேண்டும் என்றால்  என்ன செய்ய வேண்டும் ?

தங்கப் பதக்கம் வாங்க வேண்டும்,  அகில இந்திய அளவில் முதலாவதாக வர வேண்டும்....

அதற்கு என்ன செய்ய வேண்டும்  ? அதிகமாக உழைக்க வேண்டும்.

கொஞ்சமாக உழைத்தால் பயன் கிடைக்கும்.

மிக மிகக்  கடினமாக உழைத்தால் புகழ் கிடைக்கும்.

அப்படி புகழும் பயனும் கிடைக்காத செயலை ஒரு போதும் செய்யக் கூடாது.

எதையும் மிக மிக சிறப்பாக செய்து பழக வேண்டும்.

யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், புகழ் பெற என்ன செய்ய வேண்டும் என்று.



நாலடியார் - ஊடலும் உப்பும்

நாலடியார் - ஊடலும் உப்பும் 


ஊடல் என்பது உப்பு போல.

அது இல்லாவிட்டால் உணவு சுவைக்காது.

சரி, அதுதானே உணவுக்கு சுவை சேர்க்கிறது என்று நினைத்து, சற்று அதிகமாக உணவில் உப்பை சேர்த்தால், உணவை வாயில் வைக்க முடியாது.

மிக மிக எச்சரிக்கையோடு உப்பை சேர்க்க வேண்டும்.

விலை மலிவு தான் என்று அள்ளிப் போடக் கூடாது.

ஊடல் கொள்வது எளிதுதானே என்று எப்ப பார்த்தாலும் துணைவன் அல்லது துணைவியோடு சண்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

சமைப்பவர்களுக்குத் தெரியும், உணவில் உப்பு சற்று கூடி விட்டால் அதை சரி செய்வது எவ்வளவு கடினம் என்று. என்ன தான் சரி செய்தாலும் உணவில் நல்ல சுவை வராது. ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருக்கும்.

ஊடலும் அப்படித்தான். சற்று கூடி விட்டால் வாழ்க்கை நெருடத் தொடங்கிவிடும்.

எவ்வளவு உப்பு போட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் சுவையின் அளவைப் பொருத்தது. சிலருக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும். சிலருக்கு கொஞ்சம் குறைய வேண்டும். சுவை அறிந்து உப்பை சேர்க்க வேண்டும்.

எனவே தான், இலையின் ஓரத்தில் உப்பை வைத்து விடுவார்கள். யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளட்டும் என்று.

ஊடலும் அது போலத்தான். சுவை அறிந்து சேர்க்க வேண்டும்.

"அவளை கண்டு , அவளை அணைக்கா விட்டால் அவள் வாடிப் போவாள். கண்ட பின், கொஞ்சம் ஊடல் கொள்வாள். அந்த ஊடல் காதலில் உப்பு போல. ஊடல், காதலில் ஒரு வழி"

பாடல்

முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

பொருள்

முயங்காக்காற் = அவளை கண்டு அணைக்கா விட்டால் 

பாயும் = உடனே பாய்ந்து வரும் 

பசலை = பிரிவு துயரில், பெண்ணின் உடல் நிறம் மாறும் என்கிறார்கள். நிறம் மாறுமோ இல்லையோ, கொஞ்சம் வாடிப் போகும் என்று கொள்ளலாம்.

மற் றூடி = மற்று ஓடி = மற்ற படி ஊடல் கொண்டு

உயங்காக் கால் = உயங்குதல் என்றால் வாடுதல், மெலிதல், சோர்தல் என்று பொருள். ஊடல் கொண்டு வாடாவிட்டால் 

உப்பின்றாம் காமம் = காமம் உப்பு சப்பு இல்லாமல் போய் விடும்


வயங்கு = வயங்குதல் என்றால் ஒளி வீதல். சிறந்து இருத்தல் 

கோதம் = ஓதம் = ஓதம் என்றால் கடலின் நீர் பெருக்கம். சில சமயம் கடல் நீர் பொங்கி ஆற்றில் உள் நோக்கி வரும். அந்த மாதிரி இடங்களுக்கு  ஓதம் பொங்கும் முகம் என்று பெயர்.  (Backwaters )

நில்லாத் =  நில்லாமல்

திரையலைக்கும் = திரை என்றால் அலை. அலை அடித்துக் கொண்டே இருக்கும்

நீள்கழித் = நீண்ட ஆற்றின் கரை

தண் = குளிர்ச்சி உடைய

சேர்ப்ப! = தலைவா

புல்லாப் = புல்லுதல் என்றால் அணுகுதல், அணைத்தல் 

புலப்பதோர் = புலத்தல் என்றால் ஊடுதல்

ஆறு = வழி

ஊடலும் கூட கூடலுக்கு ஒரு வழிதான் என்கிறது நாலடியார்.





 

Tuesday, March 11, 2014

நீத்தல் விண்ணப்பம் - களையாய் களை ஆய குதுகுதுப்பே

நீத்தல் விண்ணப்பம் - களையாய் களை ஆய குதுகுதுப்பே


நமக்கு ஏதாவது மிக மிக மகிழ்ச்சியான ஒன்று நிகழ்ந்து விட்டால் நமக்கு தலை கால் புரியாது அல்லவா ? லாட்டரியில் ஒரு கோடி விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்...எப்படி இருக்கும் நம் நிலை.

இறைவன் திருவருள் கிடைத்து விட்டாலோ ?

உன் கருணை என்ற தேனைப் பருகி தலை கால் தெரியாமல் களிப்பு கொண்டு கண்டதையும் செய்து  அலைகிறேன்.  நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் பித்து பிடித்து அலைகிறேன். அதுக்காக என்னை கை விட்டு விடாதே. முன்பு எனக்கு உன் திருவடிகளை தந்து அருள் செய்தது போல மீண்டும் உனக்கு பணி செய்ய என்னை கூவி அழைத்துக் கொள். சும்மா கூப்பிட்டால் எனக்கு காது கேக்காது. கூவி, சத்தம் போட்டு கூப்பிடு. அது மட்டும் அல்ல, அருள் பயிருக்கு நடுவே வளர்ந்துள்ள உலக இன்பம் என்ற களையை நீக்கி விடு என்று வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.


பொருள் 

கண்டது செய்து = கண்டதையும் செய்து.

கருணை மட்டுப் பருகிக் = மட்டு என்றால் தேன். கருணை என்ற தேனைப் பருகி

களித்து = இன்புற்று

மிண்டுகின்றேனை  = இன்பத்தில் தத்தளிக்கும் என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

 நின் = உன்

விரை  = மணம் பொருந்திய

மலர்த் தாள் = மலராகிய திருவடி

பண்டு தந்தால் போல் = முன்பு தந்தது போல

பணித்து = என்னை பணி கொள்ளுமாறு செய்தது போல

பணிசெயக் கூவித்து = மீண்டும் என்னை பணி செய்யுமாறு கூவி அழைத்து

என்னைக் கொண்டு = என்னை கொண்டு (பணி செய்வித்து )

என் எந்தாய் = என் தந்தையே

களையாய் = களைந்து விடு

களை ஆய = களை ஆன

குதுகுதுப்பே = சிற்றின்பங்களையே



Monday, March 10, 2014

நீத்தல் விண்ணப்பம் - ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை

நீத்தல் விண்ணப்பம் - ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை


ஒரு பெரிய கரிய யானை உங்களை நோக்கி வேகமாக வருகிறது. உங்களுக்கு எவ்வளவு பயம் இருக்கும் ?

என்ன செய்யுமோ ? ஏது செய்யுமோ என்று  பயத்தில் வெல வெலத்துப்  போவீர்கள் தானே ?

ஒன்று அல்ல ஐந்து மதம் கொண்ட யானைகள் உங்களை நோக்கி வந்தால் எப்படி இருக்கும் ?

ஐந்து புலன்களும் ஐந்து யானைகள் போன்றவை.   அவற்றிற்கு கட்டாயம் பயப்பட வேண்டும். நம்மை அழிக்கும் ஆற்றல் கொண்டவை அவை.

யாரால் அதை தடுத்து நிறுத்தி, அவற்றை  அடக்கி, அந்த யானைகளிடம் இருந்து வேலை வாங்க முடியும் ?

அப்படி செய்யும் தகுதி கொண்டவன் மிகப் பெரிய ஆளாக இருக்க வேண்டும்.

ஆலகால விஷத்தையே அமுதமாக்கியவனுக்கு, இந்த யானைகளிடம் இருந்து நம்மை காத்து அவற்றை நமக்கு அடிமை கொள்ளச் செய்வது ஒண்ணும் பெரிய காரியம்  இல்லை.

பாடல்


அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய்? விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மா மணியே, சுடு தீச் சுழல,
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

பொருள் 

அடல் =  வலிமையான  (அடலருணை திருக் கோபுரத்தே அந்த வாசலுக்கு - கந்தர் அலங்காரம் )

கரி போல் = யானையைப் போல  இருக்கும்

ஐம் புலன்களுக்கு = ஐந்து புலன்களுக்கு

அஞ்சி = அஞ்சி

அழிந்த என்னை = அழிந்த என்னை

விடற்கு அரியாய் =  விட  முடியாதவனே

விட்டிடுதி கண்டாய்? = என்னை கை விட்டு விடாதே

விழுத் = பெருமை மிகுந்த

தொண்டர்க்கு அல்லால் = தொண்டர்கள் அல்லாதவர்களுக்கு

தொடற்கு அரியாய் = தொட முடியாதவனே

சுடர் மா மணியே = ஒளி  வீசும் மணி போன்றவனே

சுடு தீச் சுழல = சுழன்று எழும் தீ சுழல

கடல் கரிது ஆய் = கடலில் இருந்து

 எழு நஞ்சு  = எழுந்த நஞ்சை

அமுது ஆக்கும் = அமுது ஆக்கும்

கறைக்கண்டனே = கழுத்தில் கறை உள்ளவனே

விஷத்தை அமுது ஆக்கியவனுக்கு இது எல்லாம் ஜுஜுபி....



இராமாயணம் - கலங்குவது எவரைக் கண்டால் ?

இராமாயணம் - கலங்குவது எவரைக் கண்டால் ?


மாலை முடிந்து இரவு ஏறிக் கொண்டிருக்கிறது. தன்னந் தனி சாலை. தெரு விளக்கு மங்கலாக இருக்கிறது. சாலை ஓரம் நெளிந்து வளைந்து ஏதோ ஒன்று கிடக்கிறது.

உங்கள் இதயத் துடிப்பு லேசாக ஏறுகிறது. ஒரு வேளை பாம்பாக இருக்குமோ ?
எச்சரிக்கையோடு , சற்று மெல்லமாக அடி எடுத்து வைக்கிறீர்கள். அது அசைவது போல ஒரு பிரமை.

இன்னும் கொஞ்சம் நெருங்கிய பின் தெரிகிறது, அது பாம்பு அல்ல மாலை என்று.

அறிவு தெளியாத போது தோன்றிய பாம்பு மறைந்து விட்டது. அறிவு தோன்றிய பின் உண்மை எது என்று தெரிகிறது.

நாம் காணும் இந்த உலகம் பாம்பா , மாலையா? மாலை என்று தெரியும் வரை பாம்பு உண்மை என்று நினைத்தோம்.

அது போல இந்த நாம் காணும் உலகம் பாம்பாக இருந்தால் ? மாலை எது ? அதை யார் அறிவார் ?

அறியாமை நீங்கி அறிவு வரும்போது உண்மை தெரியும். எப்போது அறியாமை நீங்கும் ? இராமனைக் கண்டால் அறியாமை நீங்கும் என்கிறார் கம்பர்.

பாடல்

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை 
     அரவு என, பூதம் ஐந்தும் 
விலங்கிய விகாரப்பாட்டின் 
     வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் ?
     அவர், என்பர்- கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே,

     மறைகளுக்கு இறுதி யாவார்!

பொருள்

அலங்கலில் = மாலையில். அலங்கல் என்றால் மாலை.

தோன்றும் பொய்ம்மை = தோன்றுகின்ற பொய்த் தோற்றம்

அரவு என = பாம்பு என

பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும்

விலங்கிய விகாரப்பாட்டின் = ஒன்றோடு ஒன்று கலந்தும் விலகியும் நின்ற

வேறுபாடு உற்ற வீக்கம் = வேறு வேறாகத் தெரிந்த வீக்கம். வீக்கம் வளர்ச்சி அல்ல. வளர்ந்தது போன்ற ஒரு தோற்றம். வீக்கம் வடிந்து விடும்.

கலங்குவது எவரைக் கண்டால் ? = யாரைப் பார்த்து அந்த பொய்மை பயப்படும் ?


அவர், என்பர் = அவர் என்று சொல்வார்கள்

கைவில் ஏந்தி = கையில் வில்லை ஏந்தி

இலங்கையில் பொருதார் = இலங்கையில் சண்டை போட்டாரே

அன்றே = அன்னிக்கு


மறைகளுக்கு இறுதி யாவார் = அவரே வேதங்களுக்கு இறுதியானவர்


நீங்கள் நிஜம் என்று நினைப்பது எல்லாம் நிஜமாக இருக்குமா ?

பொய்யானவை எல்லாம் போய் அகல வந்தருளி என்பார் மணிவாசகர் சிவபுராணத்தில்

பொய்களை நிஜம் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.



Sunday, March 9, 2014

தேவாரம் - முத்து வயல் கரை குவிக்கும்

தேவாரம் - முத்து வயல் கரை குவிக்கும் 


ஞான சம்பந்தர் இள வயதிலேயே ஞானம் பெற்றவர். அவரின் பாடல்களில் இயற்கையை கண்டு வியக்கும் அழகை காணலாம். ஒரு சிறு பிள்ளையைப் போல ஒவ்வொன்றையும் பார்த்து அவர் இரசிப்பதைக் நாம் கண்டு வியக்கலாம்.

அவர் திருவையாருக்கு போகிறார். அங்கே உழவர்கள் உழுவதற்கு என்று வயலுக்குப் போகிறார்கள். ஆனால், அங்குள்ள வயல்கள் உழும் படி இல்லை. அங்கு பாயும் காவிரி ஆறு, கடலில் உள்ள முத்துக்களைக் கொண்டு வந்து வயல் எங்கும் தெளித்து விட்டு சென்றிக்கிறது. எங்கு பார்த்தாலும் முத்தும் பவளமும் சிதறிக் கிடக்கிறது. அப்படிப் பட்ட திருவையாறில் இருக்கும் சிவனே என்று பாடுகிறார்.

பாடல்

அடல் வந்த வானவரை அழித்து உலகு
   தெழித்து உழலும் அரக்கர் கேமான்
மிடல் வந்த இருபதுதோள் நெரியவிரல்
    பணிகொண்டோன் மேவும் கோவில்
நடவந்த உழவர் இது நடவு ஒணா வகை
    பரலாய்த் தென்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல்

   கரை குவிக்கும் கழுமலமே

பொருள் 

அடல் வந்த = போருக்கு வந்த

வானவரை = தேவர்களை

அழித்து = அழித்து

உலகு தெழித்து = உலகை அச்சுறுத்தி 

உழலும் = வாழும்

அரக்கர் கேமான் = அரக்கர்களின் தலைவன்

மிடல் = வலிமை மிக்க

வந்த  இருபதுதோள் = வந்த இருபது தோள்களும் 

நெரிய = நசுங்கும்படி

விரல்     பணிகொண்டோன் = கால் கட்டை விரலால் அழுத்தி அவனை பணிய வைத்த சிவன்

மேவும் கோவில் = வாழும் கோவில்

நடவந்த உழவர் = நடவு செய்ய வந்த உழவர்கள்


 இது நடவு ஒணா வகை = இங்கே நடவு செய்ய முடியாத வகையில்

பரலாய்த் = சிறு சிறு கற்களாய்

தென்று துன்று = இருக்கிறது என்று

கடல் வந்த = கடலில் இருந்து வந்த 

சங்கு ஈன்ற முத்து  = சங்கு ஈன்ற முத்து

வயல் கரை குவிக்கும் = வயல்களின் வரப்புகளில் அவற்றை குவித்து வைக்கும் 

 கழுமலமே = மலத்தை (பாவங்களை) கழுவும் இடமே


இராமாயணம் - உருகு காதலின்

இராமாயணம் - உருகு காதலின் 


இராமனும் சீதையும் சித்ர கூடம் வழியாக செல்கிறார்கள். அந்த இடம் எங்கும் இயற்கை எழில்  .கொஞ்சுகிறது.

சீதைக்கு ஒவ்வொன்றாக காட்டி , இதைப் பார், அதைப் பார் என்று காண்பித்துக் கொண்டே வருகிறான்.

அங்கே ஆன் யானையும் பெண் யானையும் செல்கின்றன. பெண் யானை கரு உற்றிருக்கிறது. அதனால் அவ்வளவு வேகமாக நடக்க முடியவில்லை. சோர்ந்து போகிறது. அப்போது ஆண் யானை, மலைக் குகையில்  தேனீக்கள் தேன் கூடு கட்டி இருக்கின்றன. அந்த தேனீக்களை விரட்டி விட்டு, அதில் இருந்து தேனை எடுத்து, பெண் யானையின் வாயில் உருகுகின்ற காதலோடு ஊட்டி விடுகிறது.

அதனைப் பாராய். என்று சீதைக்கு இராமன் காட்டுகிறான்.

பாடல்


உருகு காதலின் தழைகொண்டு
     மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந் தேனினை
     முழைநின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு
     பிறை மருப்பு யானை,
பருக, வாயினில், கையின்நின்று
     அளிப்பது - பாராய்!

பொருள்

உருகு காதலின் = உருகிய, உருகுகின்ற, உருகும் காதலின்

 தழைகொண்டு = இலைகளைக் கொண்டு

மழலை வண்டு ஓச்சி = குழந்தைகளைப் போல சத்தம் போடும் வண்டுகளை ஓட்டி

முருகு நாறு = மணம் வீசுகின்ற

செந் தேனினை = இனிய தேனினை

முழை = குகையில் இருந்து

நின்றும் வாங்கி = இருந்து வாங்கி

பெருகு  = நாளும் பெரிதாகிக் கொண்டே வரும்

சூல்= கருவைக் கொண்ட

இளம் பிடிக்கு = இளமையான பெண் யானைக்கு

ஒரு பிறை = ஒரு பிறைச் சந்திரனைப் போல

மருப்பு = தந்தத்தை கொண்ட

யானை = யானை

பருக =  பருக

வாயினில் = அதன் வாயினில்

கையின்நின்று = தும்பிக்கையில் இருந்து

அளிப்பது - பாராய்!  = அளிப்பதைப் பார்

அவள் மட்டும் என்ன, நாமும் பார்ப்போமே !


நீத்தல் விண்ணப்பம் - மத்தில் அகப்பட்ட தயிர்

நீத்தல் விண்ணப்பம் - மத்தில் அகப்பட்ட தயிர் 


தயிர் கடையும் போது தயிர் மத்தின் இடையில் அகப்பட்டு அங்கும் இங்கும் அலையும். அதுக்கு நிம்மதி கிடையாது. ஒரு மத்து என்றால் அப்படி. அதுவே 5 மத்தாக இருந்தால் எப்படி இருக்கும் ? அந்தத் தயிர் என்ன பாடு படும் ?

அது போல ஐந்து குற்றங்கள் / குறைகள் / மலங்கள் என்பவற்றால் நாம் அலைக் கழிக்கப் படுகிறோம்.

இப்படி துன்பப்படும் என்னை என் குற்றங்களை களைந்து என்னை காப்பாற்று என்று வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே,
மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.

பொருள் 

குலம் களைந்தாய்; = சுற்றத்தாருடன் எனக்கு இருந்த தொடர்பை களைந்தாய்.

களைந்தாய் என்னைக் குற்றம் = என் குற்றங்களை களைந்தாய்

கொற்றச் சிலை ஆம் விலங்கல் = மேரு மலையை வெற்றி பெரும் வில்லைக்

 எந்தாய், = என் தந்தை போன்றவனே

விட்டிடுதி கண்டாய்? = கை விட்டு விடாதே

பொன்னின் = பொன்னைப் போல்

மின்னு  = மின்னும்

கொன்றை = கொன்றை மலரை

அலங்கல் = மாலையாகக் கொண்டவனே

அம் தாமரை மேனி அப்பா = அழகிய தாமரை போன்ற உடலை கொண்டவனே

ஒப்பு இலாதவனே = ஒப்பு இல்லாதவனே

மலங்கள் ஐந்தால் = குற்றங்கள் ஐந்தால்

சுழல்வன் = சுழல்கின்றேன்

தயிரில் பொரு மத்து உறவே = தயிரில் பொருந்திய மத்தைப் போல



Friday, March 7, 2014

நாலடியார் - துணையிலாற்கு இம் மாலை என் செய்யும்

நாலடியார் - துணையிலாற்கு இம் மாலை என் செய்யும் 


மாலை வரும். அவன் வரும் வேளை வரும் என்று கன்னி அவள் காத்திருந்தாள்.

வருவான் காதலன், வந்தபின் தருவான் காதல் இன்பம் நூறு என்று வரும் வழி பார்த்த விழி பூத்திருந்தாள்.

பூவை எடுத்து அந்த பூவை மாலை தொடுத்தாள்.

மாலை வரும் அவனுக்கு என்று மாலை தொடுத்து வைத்தாள்.

மயக்கும் மாலையும் மெல்ல மெல்ல வந்தது.

வந்தார் மற்றோர் எல்லாம்.

அவன் வரவில்லை. வருவான். கொஞ்சம் நேரம் ஆகலாம். அவளுக்கு பொறுக்கவில்லை.

கவலை மாலை மாலையாக நீராக வடிந்தது.

கை மாலை கை நழுவி விழுந்தது.

அவன் வருவானா ? அவள் தனிமை தீர்பானா ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மக்கள் = கம்மம் செய்யும் மக்கள்

கருவி ஒடுக்கிய = தங்கள் கருவிகளை எடுத்து வைத்து விட்டார்கள். வேலை முடிந்தது.

மம்மர்கொள் = மயக்கம் தரும்

மாலை = மாலை

மலராய்ந்து = மலர் + ஆய்ந்து. மலர்களை ஆராய்ந்து எடுத்து

பூத்தொடுப்பாள் = பூக்களை மாலையாக தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலையை

இட்டுக்  = தரையில் போட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு

இம்மாலை = இந்த மலர் மாலையை 

என்செய்வ தென்று  = வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று.


அவள் சோகம், அவள் தனிமை உங்கள் இதயம் தொடுகிறதா ? எத்தனையோ ஆண்டுகளைத் தாண்டி   அவளின் தனிமை சோகம் நம் நெஞ்சை ஏதோ செய்கிறது அல்லவா ?

அதுதான் இலக்கியம். 

Wednesday, March 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து


நீத்தல் விண்ணப்பம் - புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து


புலன்கள் புதுப் புது இன்பங்களை கண்டு திகைக்கிறது. அட, இப்படி கூட இருக்குமா என்று திகைக்கிறது. பின்  அதை அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப் படுகிறது. அதை அனுபவித்த பின், ஆஹா என்று திகைக்கிறது.

பின் சிறிது காலத்தில் இதுவா இன்பம், இந்த இன்பத்திற்கா இவ்வளவு அலைந்தேன் என்று திகைப்படைக்கிறோம்.

எல்லா இன்பங்களும் ஒரு நிலைக்கு அப்பால் சலிப்பைத் தரும். அவை நிரந்தரமானவை அல்ல. முதலில் இன்பம் போல் தோன்றினாலும் துன்பத்தில் போய் முடியும்.

அவை நம்மை தவறான வழியில் இட்டுச் செல்லும்.    அந்த பொய்யான பாதையில் செல்லும் என்னை கை விட்டு விடாதே.

நஞ்சை அமுதாக்கினவன் நீ. எனவே என் தவறுகளை நீ பொறுத்து என்னை நீ நல் வழியில் செலுத்துவது ஒன்றும் உனக்கு பெரிய காரியம் இல்லை.

பாடல்


புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணும், மண்ணும், எல்லாம்
கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே!
துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.


பொருள் 

புலன்கள் திகைப்பிக்க = புலன்கள் என்னை திகைக்க வைக்க

யானும் திகைத்து = நானும் திகைத்து

 இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே = இந்த வாழ்க்கையில் பொய்யான வழிகளில்

விலங்குகின்றேனை = செல்லுகின்ற என்னை

விடுதி கண்டாய்?  = விட்டு விடுவாயா ?

விண்ணும், மண்ணும், எல்லாம் = விண்ணும் மண்ணும் எல்லாம்

கலங்க = கலங்கும்படி

முந்நீர் = ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்ற மூன்று நீரால் நிறைந்த கடல், அதில் தோன்றிய 

நஞ்சு அமுது செய்தாய் = நஞ்சை அமுதாகச் செய்தவனே

கருணாகரனே! = கருணைக் கடலே

துலங்குகின்றேன் அடியேன் = பயந்து இருக்கும் அடியவனாகிய என்னை

 உடையாய் = என்னை ஆட்க் கொண்டவனே

என் தொழுகுலமே. = என் தொழுகைக்கு உரியவனே


கந்தர் அலங்காரம் - வேல் மறவேன்

கந்தர் அலங்காரம் - வேல் மறவேன் 


நம் உணர்சிகளிலேயே மிகவும்  ஆழமானது, அழுத்தமானது, சக்தி வாய்ந்தது காம உணர்ச்சி.

கள் கூட உண்டால் தான் மயக்கம்  தரும்.காமம் நினைத்த மாத்திரத்திலேயே மயக்கத்தை தரும் இயல்பு உடையது.

காமம் தலைக்கு ஏறி விட்டால், எது சரி, எது தவறு என்றெல்லாம் ஒன்றும் தெரியாது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

காமம் - சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

சக்ரவர்திகளை காலில் விழ வைத்திருக்கிறது.

ஆயிரக் கணக்கான உயிர்களை கொன்று  குவித்திருக்கிறது.

அருணகிரி நாதர் காம வயப் பட்டு விலை மகள்கள் பின்னால்  போனவர்தான். எவ்வளவுதான் தவறான வழியில் போனாலும், அவர் மனம் என்னமோ, ஒரு மூலையில், முருகனின் வேலையே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறது.

காம மயக்கத்தில் கூட முருகனை மறக்கவில்லை என்கிறார்.

சுந்தரர் சொன்ன மாதிரி "சொல்லும் நா நமச்சிவாயவே" என்று மனமும் உடலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், நாக்கு மட்டும் நமச்சிவாய என்று சொல்லிக்  .கொண்டே இருக்கிறது.

பெற்ற தாய்தனை மகமறந் தாலும் 
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் 
     உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் 
          உயிரை மேவிய உடல்மறந் தாலும் 
     கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் 
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் 
     நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் 

          நமச்சி வாயத்தை நான்மற வேனே. 

என்று உருகினார் வள்ளலார்.

பாடல்

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேல்  மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.


பொருள்

கண்டுண்ட = கண்டு + உண்ட. கண்டு என்றால் கற்கண்டு. கற்கண்டை உண்ட என்றால் அவ்வளவு இனிமையான 

சொல்லியர் = குரலை உடையவர்கள். இனிமையான சொல்லுக்கு மயங்காதவர் யார்

சீதை , இராமனிடம் மான் கேட்கிறாள். எப்படி ?

ஆயிடை, அன்னம் அன்னாள், 
     அமுது உகுத்தனைய செய்ய
வாயிடை, மழலை இன்சொல் 
     கிளியினின் குழறி, மாழ்கி, 
'நாயக! நீயே பற்றி 
     நல்கலைபோலும்' என்னா, 
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு 
     சீறிப் போனாள்.

மழலை + இன் சொல் + கிளியின் + குழறி (தட்டுத் தடுமாறி) + மாழ்கி (வருந்தி) .

இப்படி கேட்டால் எந்த கணவன் தான் மறுக்க முடியும் ? நம் பெண்களுக்கு எங்கே தெரிகிறது. எனக்கு இல்லாத உரிமையா என்று அதிகாரம் செய்ய வேண்டியது. அப்புறம் ஒன்றும் கிடைக்காமல் கண்ணை கசக்க வேண்டியது. இராமாயணம் படிக்க  வேண்டும். கணவன் மனைவி உறவு  பலப் படும்.


மெல்லியர் = மென்மையானவர்கள்

காமக் = காமம் என்ற

கலவிக் கள்ளை = கலவியில் விளைந்த கள்ளை .

மொண்டுண் டயர்கினும் = மொண்டு + உண்டு +  அயர்கினும். கொஞ்சம் குடித்தால் பரவாயில்லை. மொண்டு மொண்டு  குடித்தாராம்.குடித்த பின் அயர்ச்சி வந்து  விட்டது.வராதா பின்ன?


வேல்  மறவேன் = அந்த அயர்ச்சியிலும் வேலை மறக்கவில்லை.

முது = முதுமையான

கூளித் = பேய்

திரள் = திரண்டு வந்து.

நமக்கு வயது ஆகும். பின் இறந்து போவோம். ஆனால், பேய்களுக்கு ஏது சாவு ? அவைகளுக்கு வயது ஆகிக் கொண்டே  போகும்.முதுமையான பேய்கள், கூட்டம் கூட்டமாக வந்து

குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் = ஒரே குஷி. ஆட்டம் போடுகின்றன ? ஏன் ?

கொட்டி யாட = வெறும் ஆட்டம் அல்ல. மேள தாளம் முழங்க , கொட்டி ஆடின.

வெஞ் சூர்க் = வெம்மையான சூரனையும் அவன் அரக்க கூட்டத்தையும் 

கொன்ற = போரில் கொன்ற 

ராவுத்தனே = இராவுத்தனே

முருகன், அரக்கர்களை அக்ரோணி கணக்கில் கொன்று குவித்தார். அந்த பிணங்களை தின்ன பேய்கள் கூட்டம் கூட்டமாக வந்தன. நல்ல விருந்து கிடைத்ததால் அவைகளுக்கு ஒரே  குஷி.

கலவியிலும் கடவுளை மறவா மனம் !

திருப்புகழ் - திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே.

திருப்புகழ் - திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.


நம்ம திருப்பரங்குன்றம் !

சண்டைக்கு வந்த அசுரர்களை வேல் படையால் அழித்தவனே. திறமை மிக்கவனே. அறிவில் சிறந்தவனே. முத்துக்கள் நிரம்பிய சோலைகள் உள்ள திருப்பரங்குன்றத்தில் எழுந்து அருளிய பெருமாளே

பாடல்

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற்கொ டும்படை விடுசர வணபவ
    திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
   செழித்த தண்டலை தொறுமில கியகுட
    வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
    திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.

சீர் பிரித்த பின்

திடத்து எதிர்த்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற் கொடும் படை விடும் சரவணபவ
    திறல் குகன் குருபரன் என வரும் ஒரு முருகோனே
   செழித்த தண்டலை தோறும் இலகிய  குட
    வளைக் குலம் தரு தரளமும்  மிகு உயர் 
    திருப்பரங் கிரி வளநகர் மருவிய பெருமாளே.


பொருள்

திடத்து = உறுதியுடன்

எதிர்த்திடும் = எதிர்த்து நிற்கும்

அசுரர்கள் பொடிபட = அசுரர்கள் பொடிப் பொடியாகும் படி 

அயிற் = வேல்

கொடும் படை = சக்தி வாயிந்த படையை

விடும் = விடும்

சரவணபவ = சரவண பொய்கையில் அவதரித்தவனே  (பவ என்றால் பிறப்பு. "என் பவம் தீர்பவனே" என்பார் மணிவாசகர் )

 திறல் குகன் = திறமையான குகப் பெருமாளே

குருபரன் = அனைவர்க்கும் ஞான குருவானவனே

என வரும் = என்று வரும்

ஒரு முருகோனே = முருகப் பெருமானே

செழித்த= செழித்து

தண்டலை தோறும் = குளிர்ந்த சோலைகள் தோறும்

 இலகிய = விளங்கும்

 குட வளைக் = வளைந்த 

 குலம் தரு தரளமும் = சங்குகள் தரும் முத்துகள்

மிகு = மிகுந்த

உயர் = உயர்வான

திருப்பரங் கிரி = திருபரங்குன்றம் என்ற மலையில்

வளநகர் =  வளமையான நகரில்

மருவிய பெருமாளே = இருக்கும் பெருமாளே

அடுத்த முறை திருபரங்குன்றம் பக்கம் போகும் போது, அருண கிரி நாதர் அங்கு நடந்திருக்கிறார் என்று நினைத்துப் பாருங்கள்.




Tuesday, March 4, 2014

நீத்தல் விண்ணப்பம் - இன்னும் காட்டு

நீத்தல் விண்ணப்பம் - இன்னும் காட்டு 


நம்மிடம் பல வேண்டாத கொள்கைகள், செயல்கள், பழக்கங்கள் இருக்கின்றன. வேண்டாத என்றால் நம் இன்பத்திற்கு இடையுரான, நம் முன்னேற்றத்திற்கு தடையானவை.

இவற்றை எப்படி விடுவது, எப்படி நலனவற்றை ஏற்பது ?

நல்லன அல்லாதவற்றை விட்டு நல்லவற்றை எப்படி கைக் கொள்வது ?


வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கல் இது.

மாணிக்க வாசகர் வழி காட்டுகிறார்.

முதலில் தவறுகள் செய்யும் இடத்தை விட்டு விலக வேண்டும். கள்ளுக் கடையில் நின்று கொண்டு சாராயத்தை எப்படி விடுவது என்று யோசித்தால் நடக்குமா ?

சரி, தவறான சூழ்நிலையை விட்டு விலகி ஆயிற்று....அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

நல்லவர்கள் மத்தியில் போய் இருக்க வேண்டும். அவர்களோடு பழக வேண்டும். அவர்கள் செய்யும் செயல்களை, சொல்லுவதை கேட்க வேண்டும்.

நாள் ஆக நாள் ஆக நம்மை அறியாமலேயே கெட்டவை விலகி, நல்லன நிகழத் தொடங்கும்.


பாடல்

கொழு மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய்? மெய்ம் முழுதும் கம்பித்து,
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக்
கழு மணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

பொருள் 

கொழு மணி = சிறந்த மணிகள் போன்ற 

ஏர் நகையார் = அழகிய சிரிப்பை கொண்ட பெண்கள் . ஏர் என்பதற்கு கூரிமையான, ஆழமாக மனதை உழும் என்று பொருள் கொள்ளலாமோ?


(மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் 
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் 
நாராயணனே நமக்கே பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்)

கொங்கைக் = மார்புகள் என்ற 

குன்றிடைச் சென்று = இரண்டு குன்றுகள் இடையே சென்று

குன்றி = துவண்டு (பலம் குன்றி )

விழும் அடியேனை  = விழும் அடியவனாகிய என்னை

விடுதி கண்டாய்?  = விட்டு விடுவாயா

மெய்ம் முழுதும் கம்பித்து = உடல் முழுதும் நடுங்கி

அழும் = கண்ணில் நீர் ஆறாக பெருக்கெடுக்கும்

அடியாரிடை = அடியவர்கள் மத்தியில்

ஆர்த்து வைத்து = என்னை வைத்து

ஆட்கொண்டருளி என்னை = என்னை ஆட் கொண்டு அருளி

கழு மணியே = தூய்மையான மணி போன்றவனே 

இன்னும் காட்டு = மேலும் காட்டுவாய்

கண்டாய் நின் புலன் கழலே = நான் முன்பு கண்ட உன் திருவடிகளை

இறைவன், மாணிக்க வாசகருக்கு தன் திருவடிகளை முதலில் காட்டி அருளினார். அதை மீண்டும் காட்டு என்கிறார்.

பெண் சுகம் என்ற சிற்றின்பத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடியை அடைய  அடியார்கள் மத்தியில் இருக்க வேண்டும். 

நீங்கள் இறைவனை நம்புகிறீர்களோ இல்லையோ. 

நீங்கள் அடியவர்களை நம்புகிறீர்களோ இல்லையோ.

ஒரு புறம் பெண் சுகம் என்ற சிற்றின்பம். மறு புறம் இறைவன் திருவடி என்ற பேரின்பம். 

இரண்டையும் இணைப்பது நல்லவர்களின் கூட்டு.

அல்லனவற்றை தாண்டி நல்லனவற்றை அடைய நல்லவர்களின் கூட்டு உதவும்  என்ற வரையில் நீங்கள் இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளலாம். 

தவறு செய்து பின் தன் காலைப் பிடித்த சந்திரனை இறைவன் தன் தலை மேல் தூக்கி  வைத்தான். 

யார் அறிவார், நீங்கள் பற்றித் தொடரும் நல்லவர்கள் உங்களை , நீங்களே எண்ணிப் பார்க்காத  இடத்திற்கு உங்களை கொண்டு ஏற்றி விடக் கூடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை என்பார் வள்ளுவர். 


Monday, March 3, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி



குடத்தை வென்றிடு கிரியென எழில்தள
    தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
    குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு வடிவேலா
   குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
    அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
    குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி  மருகோனே

சீர் பிரித்த பின் 

குடத்தை வென்றிடும் கிரியென எழில் தள தளத்த 
கொங்கைகள் மணி வடம் அணி சிறு குறத்தி 
கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடிவேலா 
குரை கருங்கடல் திரு அணை என முன்னம் 
அடைத்து இலங்கையின் அதிபதி நிசி சரர் 
குலத்தோடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே 


வள்ளியை அணைக்கும் போது முருகனுக்கு அவன் தோள்கள் துவளுகிறது. 

அந்த வள்ளி எப்படி இருக்கிறாள் ?

குடத்தை வென்றிடும் மலை போன்ற மார்புகள். அதில் மணிகள் கோர்த்த சங்கிலியை  அணிந்து இருக்கிறாள். அவளின் சொல் கரும்பைப் போல இனிக்கிறது. அவளை அணைக்கும் போது தோள்கள் வலுவிழந்து துவளும்  அந்த முருகன் யார் ?

அன்று அலை கடலை அணைகட்டி கடந்த திருமாலின் மருமகனே.

குடத்தை வென்றிடும் = குடத்தை விட எடுப்பாக அழகாக 

கிரியென = மலையை போல 

எழில் = அழகுடன் 

தள தளத்த = தள தள என்று இருக்கும் 
 
கொங்கைகள் = மார்புகள் 

மணி = மணிகள் சேர்ந்த 

வடம் = மாலை 

 அணி = அணியும் 

சிறு குறத்தி = சிறிய குற மகள்
  
கரும்பின் = கரும்பை விட 

மெய் துவள் = மெய் துவள 

புயன் = புயங்களை கொண்ட 

என வரு வடிவேலா = என்று வருகின்ற வடி வேலனே 

குரை = அலை பாயும் 

கருங்கடல் = கடலை 

திரு அணை = பெரிய அணைகட்டி 

என முன்னம் = முன்பு 
 
அடைத்து = அடைந்து 

இலங்கையின் அதிபதி = இராவணனை 

நிசி சரர் = அரக்கர்   (?)
 
குலத்தோடும் பட = குலத்தோடு அழிய 

ஒரு கணை விடும் = ஒரு அம்பை விடும்  

அரி = ஹரி, திருமாலின்  

மருகோனே = மருமகனே 


நாலாயிர திவ்ய பிரபந்தம் - அறிவென்னும் தாழ் கொளுவி

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அறிவென்னும் தாழ் கொளுவி 


இறைவன் காண்பதற்கு அரியவன். அவனை கண்டவர் யாரும் இல்லை. அப்படியே அவனை அறிந்தாலும், அறிந்ததை சொல்லுவது ஒன்றும் அவ்வளவு எளிது அல்ல என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இப்படி பயமுறுத்தினால் யார் அந்த இறைவனைத் தேடித் போவார்கள் ?

நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. வேலை, பிள்ளைகளின் படிப்பு, தொழில்,  ஆரோக்கியம்,பணம், உறவுகளின் நெருக்கடி என்று பலப் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு  தவிக்கிறோம்.

இதில், இப்படி ஒரு சிக்கலான கடவுளை யார் தேடித் போவார்கள் ?

பேயாழ்வார் சொல்கிறார்...

அவனை காண்பது அப்படி ஒன்றும் கடினமான செயல் அல்ல.

நம் புலன்கள் நாளும் நம் கட்டுப்பாட்டை விட்டு தறி கெட்டு ஓடுகின்றன.

அதை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.

எப்படி ?

இரண்டு கருவிகளைச் சொல்கிறார்.

ஒன்று அடக்கம். இரண்டாவது அறிவு.

அடக்கம் என்ற கதவைச் சாத்தி, அறிவு என்ற தாழ்பாழை போட்டு விட்டால் புலன்கள் எப்படி  ஓடும்  ?

புலன்களை அப்படி கட்டுப் படுத்திய பின், வேதங்களை ன்று கற்று உணர்ந்தால் அவனை நாள் தோறும் காணலாம்  என்கிறார்.

புலன்களை கட்டுப் படுத்தாமல் வேதங்களை கற்று புண்ணியம் இல்லை.

பாடல்

அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி.

பொருள்

அறிவென்னும் = அறிவு என்கின்ற

தாள் = தாழ்பாழை

கொளுவி = மாட்டி.  கொளுவுதல் என்பது ஒரு அருமையான தமிழ் சொல். ஆடு மாடுகளுக்கு இல்லை பறிப்பவர்கள் கையில் ஒரு நீண்ட குச்சியும், அதன் முனையில் வளைந்த ஒரு சிறிய கத்தியும் இருக்கும். சிறு கிளைகளில் அவற்றை மாட்டி இழுத்தால், கிளை உடைந்து விழும். அந்த பொருளுக்குப் பெயர் "கொளு".  மாட்டுதல், அடைத்தல் .

ஐம்புலனும் தம்மில், = ஐந்து புலன்களையும் தனக்குள்

செறிவென்னும்= அடக்கம் என்ற

திண் கதவம் செம்மி = வலுவான கதவை அடைத்து

மறையென்றும் = மறை என்றும். வேதங்களை தினமும்

நன்கோதி = நன்கு ஓதி

நன்குணர்வார் = நன்றாக உணர்வார்

காண்பரே = காண்பார்களே

நாடோறும் = நாள் தோறும்

பைங்கோத வண்ணன் படி = அழகிய கடலின் நிறம் கொண்ட அவனை


போகும் ஊருக்கு வழி சொல்லியாகி விட்டது. 

போவதும் , போகாமல் மேலும் மேலும் வழி கேட்டுக் கொண்டிருப்பதும் உங்கள்  கையில் இருக்கிறது. 


திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி 


விலை மகளைப் பற்றி கூறும் அதே பாடலில் இறைவனையும் வணங்கும் கலை அருணகிரி நாதருக்கு கை வந்தது.




விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
    மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மையல்
    விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
   விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
    மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
    விரைப்பதந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான்

சீர் பிரித்த பின் :

விடத்தை வென்றிடும் படை விழி கொண்டு உளம் 
மருட்டி வண் பொருள் கவர் பொழுதில் மையல் 
விருப்பு எனும் படி மடி மிசையினில் விழு தொழில் தானே 
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் 
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை 
விரைப் பதம் தனில் அருள் பெற நினைக்குவது உளதோ தான் 

அப்பாட, கொஞ்சம் மூச்சு  வருகிறது.

பொருள் 

விடத்தை  = விஷத்தை 

வென்றிடும் = வெற்றி கொண்டிடும் 

படை விழி  கொண்டு = படை போன்ற விழிகளை கொண்டு 

உளம் மருட்டி = (நம்) உள்ளத்தை மயக்கி 

வண் பொருள் கவர் பொழுதில் = நம்மிடமுள்ள பொருள்களை கவர்ந்து கொள்ளும் பொழுதில் 

மையல் = ஆசை, காமம் 

விருப்பு = விருப்பம் 

எனும் படி = என்றவற்றில் 

மடி = சோம்பிக் கிடத்தல் 

மிசையினில் விழு தொழில் தானே = கிடந்து அழுந்தி கிடப்பதே வாடிக்கையாய் கொண்ட 
 
விளைத்திடும் = அவற்றை விளைவிக்கும் 

பல கணிகையர் = பல விலை மகளிர் 

தமது பொய் மனத்தை = அவர்களின் பொய்யான மனதை 

நம்பிய = உண்மை என்று நம்பிய 

சிறியனை = அறிவில் சிறியவனை 

வெறியனை = சரி எது தவறு என்று அறியாத வெறி கொண்டவனை 

விரைப் பதம் தனில் = உன்னுடைய திருவடிகளில் 

அருள் பெற நினைக்குவது உளதோ தான் = அருளைப் பெற நினைப்பது எங்கே நடக்கிறது ?


Sunday, March 2, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி 


விலை மகளைப் பற்றி கூறும் அதே பாடலில் இறைவனையும் வணங்கும் கலை அருணகிரி நாதருக்கு கை வந்தது.



வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
    தன்னைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
    மயக்கி ஐங்கணை மதனனை ஒருமையினாலேஅரு
   வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
    நகைத்து நண்பொடு வருமிரும் எனவுரை
    வழுத்தி அங்கவரொடுசரு வியுமுடல் தொடுபோதே

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
    மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மையல்
    விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
   விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
    மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
    விரைப்பதந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான்

குடத்தை வென்றிடு கிரியென எழில்தள
    தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
    குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு வடிவேலா
   குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
    அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
    குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி  மருகோனே

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற்கொ டும்படை விடுசர வணபவ
    திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
   செழித்த தண்டலை தொறுமில கியகுட
    வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
    திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.

கொஞ்சம் பெரிய பாடல் தான்....ஒவ்வொரு பகுதியாக பார்க்கலாம்.

பொருள்

வடத்தை = வடம் என்றால் கயறு. வடம் போல் தடித்த முத்து, பவளம், மலர்களால் ஆன மாலை இவற்றை அணிந்து

மிஞ்சிய = அதையும் மிஞ்சிய

புளகித = ஆண்களை கண்டவுடன் மகிழ்ச்சியால் இன்பம் அடைந்த

வனமுலை = அழாகான, வனப்பான முலைகள்

தன்னைத் = தன்னை (அந்த விலை மகளிரை)

திறந்து = தெரிந்து எடுத்து

எதிர் வரும் = எதிரில் வரும்

 இளைஞர் = இளைய வாலிபர்களின்

உயிர் = உயிரை

மயக்கி = மயக்கி

ஐங்கணை = ஐந்து விதமான மலர்களை கொண்ட அம்பினை எய்யும்

மதனனை = மன்மதனை

ஒருமையினாலேஅரு ருத்தி = ஒப்பற்ற அவனை வரச் செய்து 

வஞ்சக நினைவொடு = வஞ்சக நினைவோடு

மெலமெல = மெல்ல மெல்ல
   
நகைத்து = புன்னகை புரிந்து

நண்பொடு = நட்பு உணர்வோடு

வருமிரும் = வரும், இரும்

எனவுரை வழுத்தி = என்று உரை  செய்து வாழ்த்தி 

அங்கவரொடு = அங்கு அவரோடு

சரு வியுமுடல் தொடுபோதே = பழகி உடல் தொடும் போது


Saturday, March 1, 2014

இராமாயணம் - ஏசுவான் இயம்பலுற்றான்

இராமாயணம் - ஏசுவான் இயம்பலுற்றான்


சில சமயம் மருத்துவர் நமக்கு மருத்துவம் செய்யும் போது, நமக்கு வலி தோன்றும். பல் பிடுங்கும் போது, எலும்பை சரி செய்யும் போது, அறுவை சிகிச்சை செய்யும் போது நமக்கு வலி இருக்கும். ஊசி குத்தும் போது வலிக்கும். வலிக்கும் போது மருத்துவர் மேல் கோபம் வரும். இருந்தாலும், அவர் நம் நன்மைக்கு செய்கிறார் என்ற நினைக்கும் போது அவர் மேல் அன்பும் பிறக்கும்.

வாளால் அறுத்து சுடினும் மருந்த்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் என்று பிரபந்தம் பேசுமே அது போல.

இராமன், வாலியை மறைந்து நின்று கொன்றான். இராமன் எய்த அம்பை வெளியே இழுத்து, அதில் "இராமன்"  என்ற பெயர் இருக்கக் கண்டான்.

நேரில் பார்க்கிறான். இராமன் நடந்து வருகிறான். அப்படி வந்தவனை " எண்ணுற்றாய்! என் செய்தாய்" என்று கேள்வி மேல் கேட்க ஆரம்பிக்கிறான்.

அந்த ஆரம்பத்தை கம்பன் சொல்லுகிறான்...."ஏசுவான் இயம்பலுற்றான்" என்றான்.

ஏசுதல் என்றால் திட்டுதல்.

அது என்ன இயம்புதல் ? ஏசுவான் , இயம்புவான் என்று இரண்டு சொல் போடுவானேன் ?

இயம்புதல் என்றால் பாராட்டுதல், போற்றுதல்,துதித்தல் என்று அர்த்தம்.

ஒரு புறம் போற்றுதல், மறு புறம் திட்டுகிறான்.

"ஐயோ, வலிக்குதே, உயிர் போகுதே " என்று ஒரு நோயாளி கத்துவதை பார்க்கும் போது என்னவோ மருத்துவர் அந்த நோயாளியை துன்பப் படுத்துவது போலத் தெரியும். அங்கு என்ன நடக்கிறது என்று முழுவதுமாக தெரிந்தவர்களுக்குத் தான் உண்மை புரியும்.  சிகிச்சை நடக்கிறது என்று தெரியாதவர்களுக்கு, ஏதோ தவறு நடப்பது மாதிரித்தான் தெரியும்.

பாடல்

கண்ணுற்றான் வாலி, நீலக் கார்
      முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில்
      ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனையசோரி
      பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்!'
      என்று ஏசுவான் இயம்பலுற்றான்:

பொருள்

கண்ணுற்றான் வாலி = மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை கண்டான் வாலி

நீலக் = நீல நிற வானத்தில்  

கார் முகில் = கரிய மேகம் 

கமலம் பூத்து = தாமரை பூத்து

மண் உற்று = மண்ணில் வந்து

வரி வில் ஏந்தி = வில் ஏந்தி

வருவதே போலும் = வந்ததைப் போல

மாலை = திருமாலை

புண் உற்றது அனைய = உடம்பில் புண் ஏற்பட்டதைப் போல 

 சோரி = இரத்தம் பொங்கி வழிந்து

பொறியொடும் பொடிப்ப = கண்ணில் இருந்து பொறி பறக்க

நோக்கி = நோக்கி

'எண்ணுற்றாய்! = எண்ணத்தில் + உற்றாய் = எண்ணத்தில் நிறைந்தவனே 

என் செய்தாய்! = என்ன செய்து விட்டாய்

என்று = என்று

ஏசுவான் = திட்டுவான்

இயம்பலுற்றான் = போற்றி, துதித்து, சொல்லத் தொடங்கினான்.