Tuesday, November 29, 2022

திருக்குறள் - விறல்ஈனும்

         

 திருக்குறள் - விறல்ஈனும்


நமக்கு ஒரு பொருளோ அல்லது உதவியோ மற்றொருவரிடம் இருந்து வேண்டி இருந்தால், அவர் மனம் கோணாதபடி நடந்து கொள்ள வேண்டும். அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அவருக்கு பணிந்து போக வேண்டும். அவர் முட்டாள்தனமாக ஏதாவது சொன்னால் கூட, சரி சரி என்று போக வேண்டும். மாறாக, "இது சரியான முட்டாள்தனம்" என்று சொல்ல முடியாது. எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து பூட்டி வைத்து விட வேண்டும்.


நேரடியாக ஒரு உதவி வேண்டி நின்றாலே இந்தக் கதி. அவருக்குத் தெரியாமல் அவர் பொருளை கவர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தால் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டி வரும்?



மாறாக, அவரிடம் இருந்து நமக்கு ஒன்றும் வேண்டாம் என்றால், நாம், நம் மனதில் பட்டதை சொல்லலாம், செய்யலாம். தைரியமாக நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம். 


"யாமார்க்கும் குடி அல்லோம்" என்று நாவுக்கரசர் முழங்கியது மாதிரி முழங்கலாம்.


அதைத்தான் இன்றைய குறளில் கூறுகிறார். 



"இறுதியில் வரப் போகும்  துன்பத்தை அறியாமல், பிறன் பொருளை விரும்பினால் அது துன்பத்தைத் தரும். மாறாக, , வெற்றியை, பெருமையைத் தரும் அப்படி வேண்டாம் என்று சொல்லும் பெருமை"



பாடல் 


இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு


பொருள் 




(please click the above link to continue reading)


இறல் = கெடுதல், துன்பம் 


ஈனும்  = தரும். (என்பதை) 


எண்ணாது  = நினைத்துப் பார்க்காமால் 


வெஃகின் = பிறன் பொருளை விரும்பினால் .
 

விறல்ஈனும்  = வெற்றியைத் தரும் 


வேண்டாமை = பிறன் பொருள் வேண்டாம் 


என்னுஞ்  = என்று சொல்லும் 


செருக்கு = செல்வம், பெருமை 




பயந்து, பயந்து, சகித்து, பணிந்து வாழ வேண்டுமா ?

அல்லது 

தலை நிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, தன்னம்பிக்கையோடு வாழ வேண்டுமா?


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்




வேண்டற்க வெஃகியாம் 


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்


திரு சேரும் திறனறிந்து  



]


Saturday, November 26, 2022

கந்தரனுபூதி - எதிரப் படுவாய்

           

 கந்தரனுபூதி - எதிரப் படுவாய்


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


ஆழ்ந்து சிந்தித்தால் நம் வாழ்க்கை முழுவதும் பயம் என்ற ஒரு பெரிய உணர்வால் உந்தப்பட்டே சென்று கொண்டு இருக்கிறது. 


பள்ளி நாட்களில் பள்ளிக் கூடம், ஆசிரியர், பாடம், பரீட்சை என்று பயம். 

பின், வேலை, மேலதிகாரி, செய்து முடிக்க வேண்டிய வேலைகள், வேலை போய் விடுமோ என்ற பயம்...


குடும்பம் என்று வந்துவிட்டால், நமக்கு ஏதாவது ஆகி விட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்ற பயம். 


இதற்கு நடுவில் நோய், விபத்து ,பிள்ளைகள் படிக்க வேண்டுமே, அவை நல்ல படியாக வளர வேண்டும் என்று ஆயிரம் கவலை, பயம். 


பயங்களில் பெரிய பயம் மரண பயம் . அனைத்து பயங்களுக்கும் மூல பயம் மரண பயம். 


சில பேருக்கு மரணம் என்று சொன்னாலே பிடிக்காது. முகம் சுளிப்பார்கள். அவ்வளவு பயம். 


மரண பயம் இருக்கும் வரை நம்மால் வாழ்கையை தெளிவாக அணுக முடியாது. எதை எடுத்தாலும் அந்த பயம் முன் வந்து நிற்கும். நேரடியாக, மறை முகமாக அது நம்மை பயப்படுதிக் கொண்டே இருக்கும். 


அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்று நினைத்தால், ஒரு நாள் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ வீடு வர நேரம் ஆனால், போன் சுவிட்ச் ஆப் என்று வந்தால், அன்று தெரியும். 


அந்த பயத்தை நீக்கி விட்டால்? 


"என் இறுதிக் காலத்தில், நான் மரணப் படுக்கையில் இருக்கும் போது , மிகவும் பயந்து போய் இருப்பேன். அப்போது, முருகா, நீ மயில் மேல் வந்து என் பயத்தைப் போக்க வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே!


சீர் பிரித்த பின் 


கார் மாமிசை காலன் வரின் கலபத்து

ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்

 தார்மார்ப வலாரி தலாரி எனும்

சூர்மா மடியத் தொடு வேலவனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)



கார் = கரிய மேகம் போன்ற 


மாமிசை = (மா = விலங்கு, மாக்கள் = விலங்குகள்) = எருமை மேல் 


காலன் = எமன் 


வரின் = வரும் போது 


கலபத்து = கலபம் என்றால் தோகை.


ஏர் மாமிசை  = மயில் மேல் ஏறி 


வந்து = வந்து 


எதிரப் படுவாய் = என் எதிரில் வருவாய் 


தார்மார்ப = மாலை அணிந்த மார்பை உடையவனே 


வலாரி = வலன் என்ற அசுரனை கொன்ற இந்திரன் 


தலாரி = தலம் (இடம்) 


எனும் = என்ற தேவ லோகத்தை வென்ற 


சூர்மா = சூரன் என்ற அசுரன் 


மடியத் = அழியும் படி 


தொடு வேலவனே! = வேலை எடுத்தவனே 


மரண பயம் என்றால் என்ன? எதைப் பற்றி பயம்?  சிந்திப்போம். .


குடும்பத்தை தனியே விட்டு விட்டுப் போகிறோமே என்ற பயமா என்றால் இல்லை. அது கவலை. அது கூட கொஞ்ச வயது வரை. .என்பது வயதில் நம்மைச் சார்ந்து யாரும் இருப்பது இல்லை. 


சரி, அனுபவிக்காமல் விட்டு விட்டவைகள் காரணமாக இருக்குமா என்றால், என்பது தொண்ணுறு வயதில் எதை அனுபவிக்க முடியும்?


பின் எதுதான் மரண பயம் என்று கேட்டால் சரியான விடை கிடைத்தபாடில்லை. நசிகேதன் தொடங்கி இன்று வரை அந்தக் கேள்வி விடை வேண்டி நிற்கிறது. 


நாம் சேர்த்து வைத்த அனுபவங்களை விட்டு விட்டுப் போகிறோமே என்பதுதான் கவலை. தெரியாத ஒன்றை இழக்க முடியாது. அப்படியே இழந்தாலும் பயம் இருக்காது. இந்த தெரிந்த விடயங்கள்தான் கவலைக்குக் காரணம். பயத்தின் வித்து. 


அந்த பயத்தை போக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


]




Wednesday, November 9, 2022

திருக்குறள் - திரு சேரும் திறனறிந்து

        

 திருக்குறள் - திரு சேரும் திறனறிந்து  




ஒரு பெரியவர், நல்லவர், உயர் அதிகாரி வீட்டுக்குப் போவது என்றால் காலம் நேரம் அறிந்து போவோம் அல்லவா ? அவருக்கு நேரம் இருக்குமா? நல்ல மூடில் இருப்பாரா, என்பதெல்லாம் அறிந்து கொண்டுதான் போக வேண்டும். 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



நாம் எல்லாம் செல்வததை சேர்க்க மிகுந்த முயற்சி செய்கிறோம்.  நாம் செல்வத்தை தேடி அலைகிறோம். அதற்குப் பதிலாக, செல்வம் நம்மைத் தேடி வரும் என்றால் எப்படி இருக்கும்? அதற்கு வள்ளுவர் வழி சொல்கிறார். 





"அறத்தினை அறிந்து, அதன் படி பிறர் பொருளை விரும்பாதவர்களை எப்படி சென்று அடைவது என்று திருமகள் காத்துக் கிடப்பாள்"



பாடல் 



அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு



பொருள் 




(please click the above link to continue reading)


அறன்அறிந்து = அறத்தினை அறிந்து 


வெஃகா = பிறன் பொருளை அடைய விரும்பாத 


அறிவுடையார்ச்  = அறிவுடையாரைச் 


சேரும் = சென்று அடையும் 


திறனறிந்து = எப்போது செல்லலாம், எப்படிச் செல்லலாம் என்று 


ஆங்கே திரு = அங்கே, திருமகள் 




சில சமயம் நமக்கு எதிர் பார்க்காமல் சில செல்வம் வந்து சேரும். நாம் முதலீடு செய்த செல்வம் விலை ஏறி பலன் தரும், பதவி உயர்வு, ,போனஸ் போன்றவை வரும். 



நாம் எதிர் பார்த்து இருக்க மாட்டோம். 



வள்ளுவர் சொல்கிறார், திருமகள் காத்துக் கொண்டு இருப்பாளாம். எப்படி இவனைப் போய்ச் சேர்வது என்று. சரியான காலம் பார்த்து நம் வீட்டுக்கு வந்து விடுவாளாம். 



எப்போது என்றால், நாம் மற்றவர் பொருளை விரும்பால் இருக்கும் பொழுது. 




எப்போது வருவாள் என்று தெரியாது. சரியான சமயத்தில் வந்து விடுவாள் 





[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்




வேண்டற்க வெஃகியாம் 


Monday, November 7, 2022

கந்தரனுபூதி - பரிசென் றொழிவேன்

          

 கந்தரனுபூதி -  பரிசென் றொழிவேன் 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


காமம் ஆண்களை  இறுதி வரை விடுவது இல்லை. பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கிறது. உடல் தளர்ந்தாலும், உள்ளத்தில் காம உணர்வுகள் இருந்து கொண்டே இருக்கிறது. காமம் மிகும் போது அறிவு தன் நிலை இழக்கிறது. மனம் தடுமாறுகிறது. 


இந்த காமம் என்ற சிக்கல் எப்போது என்னை விட்டுப் போகும் என்று கேட்கிறார் அருணகிரி. அப்படி கேட்பது நம் பொருட்டு. நம் நிலையை அவர் தன் மேல் ஏற்றிக் கூறுகிறார் என்று கொள்ள வேண்டும். 


"முருகா, நீ பெரிய கிரௌஞ்ச மலையை உன் வேலால் உடைத்து எறிந்தவன். பயம் இல்லாதவன். என்னை இந்த காமம் படாத பாடு படுத்துகிறது. அதில் இருந்து மீள நீ தான் உதவி செய்ய வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 



மட்டூர் குழன் மங்கையர் மையல் வலைப் 

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் 

தட்டூடற வேல் சையிலத் தெறியும் 

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே



சீர் பிரித்த பின் 



மட்டு ஊறும் குழல்  மங்கையர் மையல் வலைப் 

பட்டு ஊசல்  படும் பரிசு என்று ஒழிவேன்  

தட்டு ஊடு அற  வேல் சையிலத்து எறியும்  

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


(pl click the above link to continue reading)



மட்டு = தேன், கள் 


ஊறும் = ஊறும், சுரக்கும் 


குழல் = குழல், சிகை கொண்ட 


மங்கையர் = பெண்களின் 


மையல் வலைப் = காம வலையில் 

 

பட்டு = அகப்பட்டு 


ஊசல்  படும்  = அங்கும் இங்கும் என்று ஊசலாடும் 


பரிசு = நிலையை 


என்று ஒழிவேன்   = விட்டு என்று விடுபடுவேன் 


தட்டு = அடுக்க அடுக்காக உள்ள மலை 


ஊடு அற =அவற்றின் ஊடே சென்று அவற்றை அறுத்த, பொடி செய்த 


வேல் = வேலை 


சையிலத்து எறியும்   = மலை மேல் எறியும் 


நிட்டூர = கோபம் கொண்ட 


நிராகுல = நிர் + ஆகுலம் = துன்பம் இல்லாத 


நிர்ப்பயனே = நிர் + பயம் = பயம் இல்லாதவனே 



விரிவுரை 


மட்டு என்றால் தேன்.


"ஊறு மட்டே" என்பார் மணிவாசகர். (நீத்தல் விண்ணப்பம்).இறைவன் உள்ளத்தில் ஊறும் தேன் போன்றவன். 


மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன் மணிமலர்த்தாள்

வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தே

ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங்கைக்கரசே

நீறுபட் டேஒளி காட்டும்பொன் மேனி நெடுந்தகையே. 



தேன் சொரியும் பூக்கள் அணிந்த குழலை உடைய மங்கையர்கள் என்றாலும் சரி. 


வாயில் தேன் ஊறும் குழல் உள்ள பெண்கள் என்றாலும் சரி. 


இங்கே அவர் குறிப்பது, விலை மகளிரை. மனைவியை அல்ல என்று கொள்ள வேண்டும். "மையல் வலை" என்று குறிப்பிடுகிறார். 


காமம் மலை போல் பெரியது. அனுபவித்து எல்லாம் கடந்து விட முடியாது. இராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது காமம். இரத்த ஆறு ஓட விட்டிருக்கிறது காமம். சரித்திரத்தின் போக்கை மாற்றி இருக்கிறது காமம். 


ஞானம் ஒன்று தான் காமத்தை அழிக்கும். முருகனின் வேல் ஞானத்தின் குறியீடு. அந்த வேல் கிரௌஞ்ச மலையை அழித்தது. ஞானம் தான் ஆணவம், கன்மம், மாயை , காமம், குரோதம், மதம் மாச்சரியம் போன்ற தீய குணங்களை அழிக்கும். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html




]




Sunday, November 6, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦33 - குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே

 

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦33 - குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே


(இதன் முந்தைய பதிவுகளை இந்த வலை தளத்தின் இறுதியில் காணலாம்) 


நாம் ஒருவரை நினைக்கிறோம்  என்றால் எதை நினைப்போம்? அவருடைய உடை, உருவம் ஒரு புறம் நினைவு வந்தாலும், பெரும்பாலும் அவருடைய குணங்களே நம் நினைவில் நிற்கும். நல்லவர், பொல்லாதவர், கோபக்காரர், சிரிக்க சிரிக்க பேசுவார், அறிவாளி என்றெலாம் அவரின் குண நலன்களே பெரும்பாலும் நம் மனதில் வந்து போகும். 


உடல் தோற்றம் மாறக் கூடியது. நம் இள வயது புகைப் படத்தை பார்த்தால் நமக்கே சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். "நானா அது, அப்படியா இருந்தேன்"  என்ற எண்ணம் வரும். உடல் மாறும். குறுகிய காலத்தில் பெரிய அளவில் மாறும். 


குணம் மாறுவது இல்லை. 


நாம் இறைவன் என்று நினைப்பது அவரின் அவதாரங்களையே. நீல வண்ணம், ,கறுப்பு வண்ணம், குள்ள உருவம், சிங்கத் தலை, என்றெல்லாம் நினைக்கிறோம். 


இறை என்பது நம் சிந்தனையில் சிக்காத ஒன்று என்பது சமயக் கருத்து. 


உருவம்

அரு உருவம் 

அருவம்

பின் அதையும் தாண்டிய ஒன்று. அது என்ன என்று நம் சிற்றறிவு அறியாது. 


"சிந்தையும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர். 


இங்கே, ஆழ்வார் சொல்கிறார், 


"நீ அவனை எப்படி எல்லாம் நினைக்கிறாயோ நினை. ஒரு தவறும் இல்லை. உருவங்களைத் தாண்டி, அவன் குணம் ஒன்று இருக்கிறது. அதையும் நினை" என்கிறார். 


பாடல் 


காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற


ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப


ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட


கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/11/233.html


(Please click the above link to continue reading)



காற்றினைப் = காற்றினை 


புனலைத் = நதியை, நீரை 


தீயைக் = தீயை 


கடிமதி ளிலங்கை  = காவல் பொருந்திய மதில்களை உடைய 


இலங்கைசெற்ற = இலங்கையை போரில் வென்ற 



ஏற்றினை = ஏறு போன்றவனை 


இமயம் மேய = இமயம் போல் 


எழில்மணித் திரளை = அழகிய மணி போன்றவனை 


இன்ப ஆற்றினை = பேரின்ப வெள்ளத்தினை 


அமுதந் தன்னை = அமுதத்தை 


அவுணனா ருயிரை யுண்ட = அரக்கர்களின் அருமையான உயிரை மாய்த்த 


கூற்றினை = கூற்றுவனை 


குணங்கொண் டு  = குணங்களைக் கொண்டு 


உள்ளம் = உள்ளமே 


கூறுநீ  = நீ சொல் 


கூறு மாறே. = கூறும் + ஆறு = கூறுகின்ற வழி அதுதான் 


வழிபடும், நினைக்கும் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியில் வழிபடு என்கிறார். 


இந்த பாசுரத்தை விரித்து பொருள் சொல்லுவார்கள்.


சீதை என்ற ஜீவ ஆத்மா பிறவி என்ற பெருங்கடலால் சூழப் பட்டு ஞானேந்த்ரியங்கள், கன்மேந்த்ரியங்கள் என்ற பத்துத் தலை அரக்கனால் சிறை வைக்கப் பட்டு இருந்தது. இராம நாமத்தின் மூலம் அது விடுபட்டு இறைவனை அடைந்தது என்று விரித்தும் பொருள் சொல்லுவார்கள். 



ஆத்மா எவ்வளவுதான் முயன்றாலும், குரு/ஆச்சாரியன் (அனுமன்) அருள் இன்றியும், இறை நாமம் இன்றியும், அவன் அருள் இன்றியும் கடைந்தேற முடியாது என்றும் விரித்துச் சொல்லலாம். 


நம் அறிவும், அனுபவமும் விரிய விரிய இவற்றின் உட் பொருளும் விரிந்து கொண்டே போகும். 





 








2032 - நெறிமையால் நினைய வல்லார்



https://interestingtamilpoems.blogspot.com/2022/11/232.html








Saturday, November 5, 2022

தேவாரம் - திரு ஆனைக்காவில் - சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

 தேவாரம் - திரு ஆனைக்காவில் - சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்


ஒரு மனிதனுக்கு வரும் மிகப் பெரிய ஏமாற்றம் எது என்று கேட்டால் வயதான காலத்தில் யாரும் துணைக்கு இல்லாமல் இருப்பது. 


பிள்ளைகள், கணவன், மனைவி, சுற்றம், நட்பு எல்லாம் ஏதோ கொஞ்ச நாள் வரும் போகும். எந்நேரமும் நம் கூடவே இருக்க முடியுமா. 


காது சரியா கேட்காது, கண் பார்வை மங்கும், ஞாபகம் தப்பும், உடல் வலி குன்றும், உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாது. மிக மிக தனிமையாக உணர்வோம் 


அப்படி எல்லாம், என் பிள்ளை என் கூடவே இருப்பான், என் மனைவி என்னை அன்போடு பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை உள்ளவர்கள், சுத்தி  முத்தி பார்க்க வேண்டும். எது எதார்த்தம் என்று புரியும். 


திருநாவுக்கரசர் சொல்கிறார்: 


"தாய், தந்தை, சுற்றம், செல்வம் இதில் எது நமக்கு நல்லது செய்யும்? நாம் இறந்த பின் நமக்கு யார் உதவுவார்கள்?  ஒருவரும் இல்லை. இடுகாட்டில் நம் உடலை தீ மூட்டி விட்டு, அது முழுவதும் எரிந்து முடிவதற்கு முன்பே வீட்டுக்குப் போய் விடுவார்கள். திரு ஆனைக்காவில் உள்ள சிவ பெருமானே,  உன் திருவடிகளைப் பற்றினால், நான் துன்பம் அற்ற நிலையை அடைவேன்" 


என்கிறார். 


பாடல் 


எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்

எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்


செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்


சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்

திருவானைக் காவுடைய செல்வா என்றன்


அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_5.html


(Pl click the above link to continue reading)



எத்தாயர் = எப்படிப்பட்ட உயர்ந்த தாயார் 


எத்தந்தை = எப்பேற்பட்ட தந்தை 


எச்சுற்றத்தார்  = எவ்வளவு உயர்ந்த சுற்றத்தார் 


எம்மாடு = எத்தனை செல்வங்கள் 


சும்மாடாம் = இவை எல்லாம் நம்மைத் தாங்குமா ?


எல்லாம்  ஏவர் நல்லார் = எதில் யாரெல்லாம் நல்லவர்கள் 


செத்தால் = நாம் இறந்தால் 


வந்து உதவுவார் ஒருவ ரில்லை  = வந்து உதவி செய்பவர் ஒருவரும் இல்லை 


சிறுவிறகால்= சிறு சிறு விறகுகளால் 


தீமூட்டிச் = நம் உடலுக்கு தீ மூட்டி 


செல்லா நிற்பர் = சென்று விடுவர் 




சித்தாய வேடத்தாய் = ஞானமே வடிவானவனே 


நீடு பொன்னித் = நீண்ட பொன்னி நதிக் கரையில் உள்ள 


திருவானைக் காவுடைய  = திரு ஆனைக்கா என்ற தலத்தில் உறைபவனே 


செல்வா = செல்வா 


என்றன் = என் 


அத்தா = தலைவனே 


உன் = உன் 


பொற்பாதம் அடையப் பெற்றால்  = திருவடிகளை அடையப் பெற்றால் 


அல்லகண்டங் கொண்ட = அல்லல் (துன்பம்) தரும் அந்த நிலையினை விட்டு அகல 


அடியேன் என்செய் கேனே. = நான் என்ன செய்வேன். ஒன்றும் செய்ய மாட்டேன்.


யார் இருந்து, என்ன இருந்து என்ன பயன். இறைவா உன் திருவடிகள் ஒன்றே துணை என்கிறார். 


"சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர்"  என்ற வரி விளங்க கொஞ்சம் இலக்கணம் வேண்டும். 


செல்லா நிற்பர் என்றால் செல்லாமல் நிற்பார்கள் என்று அர்த்தம் தோன்றும். சிதைக்கு நெருப்பு மூட்டிவிட்டு வீட்டுக்குப் போகாமல் அங்கேயே நிற்பார்கள் என்ற அர்த்தம் தொனிக்கிறது. அப்படி ஒன்றும் நடப்பது இல்லை. 


"செல்லா" என்பது செய்யா எனும் வாய்பாடு. 


வாய்பாடு என்றால் template 


சொற்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். 


பெயர்ச் சொல், வினைச் சொல் என்று. 


வினைச் சொல் என்றால் செயலை குறிக்கும் சொல். 


ஒரு வினைச் சொல்லுக்கு மூன்று பெரும் பகுதிகள் உண்டு. 


பகுதி + இடை நிலை + விகுதி என்பன அவை. 


முதலில் வருவது பகுதி. இது எந்த செயல் என்று காட்டும். 


நடுவில் வரும் இடை நிலை அந்த செயல் நிகழ்ந்த காலத்தைக் காட்டும் 


இறுதியில் வரும் விகுதி யார் அந்த செயலை செய்தார்கள் என்று சொல்லும். 


உதாரணமாக:


வந்தான் என்ற வினைச் சொல்லை 


வா + த் + ஆன் 

என்று பிரிக்கலாம். 


வா என்பது வருகின்ற செயலை குறிக்கும். அது வ என குறுகியது விகாரம். 


த் இறந்த காலம் காட்டும் இடைநிலை 


ஆன் = ஆண் பால், படர்கை, விகுதி 


தமிழில் சிறப்பு என்ன என்றால் இந்த மூன்று பகுதிகளையும் தனித் தனியாக நாம் மாற்றலாம். 


உதாரணமாக

வா + த் + ஆள் என்று விகுதியை மட்டும் மாற்றினால் அது வந்தாள் என்று பெண் பாலாகிவிடும் 


வா + த் + ஆர் = என்று விகுதியை மீண்டும் மாற்றினால் அது வந்தார் என்று பலர் பாலாகிவிடும். 


வா + த் + அது = வந்தது என்றால் ஒன்றன் பாலாகிவிடும்.


இங்கே நாம் கவனிக்க வேண்டியது காலம் காட்டும் இடை நிலை. 


நிகழ் காலத்தை காட்டுவதற்கு மூன்று இடை நிலைகள் உள்ளது. 


கிறு 

கின்று 

ஆநின்று 


அது என்ன கிறு, கின்று 


வருகிறான் = வா + கிரு + ஆன் எனப் பிரியும். நடுவில் உள்ள கிரு நிகழ் காலத்தை குறிக்கும். 


வருகின்றான் = வா + கின்று + ஆன் 


இந்த இரண்டு இடை நிலைகளையும் நாம் இப்போதும் பயன் படுத்துகிறோம். 


அந்த "ஆநின்று" என்ற ஒரு இடை நிலை இருக்கிறது. 


அதை நாம் இப்போது பயன் படுத்துவது இல்லை. 


முன்பு பயன் படுத்தினார்கள். 


வருகிறான் 

வருகின்றான் 

வாராநின்றான்  = வா + ஆநின்று + ஆன் 


வராநின்றான் என்றால் வராமல் நின்றான் என்று பொருள் அல்ல. வருகிறான் என்றுதான் பொருள். கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் அதை நாம் இப்போது தவிர்த்து வருகிறோம். 


சிறுவிறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் 


என்பதில் உள்ள செல்லா என்ற சொல் செல்வர் என்று குறிக்கும். 


உடல் முழுவதும் எரியும் வரை கூட இருக்க மாட்டார்களாம். அவரவர் வேலையை பார்க்க போய் விடுவார்கள். 


அவ்வளவுதான் சொந்தம். பாசம். எல்லாம். 


இதற்கா இந்தப் பாடு. ஓடி ஓடி உழைத்து, இரவு பகல் கண் விழித்து...யோசிக்க வேண்டும். 


 




Thursday, November 3, 2022

திருக்குறள் - அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்

       

 திருக்குறள் - அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்



செல்வம் - நிறைய வேண்டும். எவ்வளவு வந்தாலும் போதாது என்று தோன்றுகிறது. 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?


முதலில் இருக்கின்ற செல்வத்தை பாதுகாக்க வேண்டும்.

அடுத்தது அதை மேலும் பெருக்க வேண்டும். 

அடுத்தது மேலும் செல்வத்தை சம்பாதிக்க வேண்டும். 


எவ்வளவுதான் சம்பாதித்தாலும், சம்பாதித்த பணத்தை பாதுகாக்க முடியாவிட்டால் என்ன பயன்?


யோசித்துப் பாருங்கள் - கஷ்டப்பட்டு, முயற்சி செய்து பணம் சேர்த்து ஒரு இடம் வாங்குறீர்கள். பின்னால் வீடு கட்டலாம் என்று. அந்த இடத்தில் ஒருவன் குடிசை போட்டுக்கொண்டு தன் இடம் என்கிறான். என்ன செய்வது?


அறிவு, திறமை, உழைப்பு எல்லாம் இருக்கிறது. சம்பாதித்த பணத்தை பாதுகாக்க முடியாவிட்டால் என்ன செய்வது? 

எல்லாம் வீண்தானே ?

இருக்கின்ற செல்வத்தை எப்படி பாதுகாப்பது என்று வள்ளுவர் சொல்கிறார். 



"உன்னிடம் இருக்கின்ற செல்வத்தை பாதுகாக்க வேண்டுமா? மற்றவன் பொருள் மேல் ஆசைப் படாமல் இரு"


பாடல் 



அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்



பொருள் 



(please click the above link to continue reading)



அஃகாமை = குறையாமல் இருக்கும் தன்மை 



செல்வத்திற்கு  = செல்வத்துக்கு 


யாதெனின் = எது என்றால் 


வெஃகாமை = பிறன் பொருளை தவறான முறையில் அடைய 


வேண்டும் = (நினைக்காமல்  இருக்க) வேண்டும் 


பிறன்கைப் பொருள் = மற்றவரின் செல்வம் 



மற்றவன் பொருளை அபகரிக்க நினைக்காமல் இருந்தால் எப்படி நம் செல்வம் குறையாமல் இருக்கும்? 

அது பற்றி வள்ளுவர் சொல்லவில்லை. பரிமேலழகரும் கூறவில்லை. 


நாம் தான் சிந்திக்க வேண்டும். 


முதலாவது, நம் உழைப்பால் செல்வம் சேர்க்க வேண்டுமே அல்லாமால் மற்றவன் பொருளை அபகரிக்க நினைத்தால், நம் உழைப்பு கெடும். மற்றவன் பொருளை அபகரிக்க முடியாமலும் போகலாம். 


இரண்டாவது, மற்றவன் பொருளை அபகரித்தால் என்றாவத் ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டி இருக்கும். அப்போது அபகரித்த பொருள் மட்டும் அல்ல, முன்பு இருந்த பொருளும் போய் விடும். 


மூன்றாவது, பிறன் பொருளை அபகரிக்க சில தீயவர்களோடு சேர வேண்டி வரும். அது பல தீமைகளுக்கு வழி வகுக்கும்.  இருக்கிற பொருளும் போகும். 


நான்காவது, நாம் மற்றவர் பொருளை அபகரித்தால், பறி கொடுத்தவன் சும்மா இருப்பானா?  அவன் நம் பொருளை அபகரிக்க நினைப்பான். நமக்கு தொல்லை தந்து கொண்டே இருப்பான். அதை சமாளிக்க நீதிமன்றம், காவல் நிலையம் என்று அலைய வேண்டி வரும்.  பொருள் விரயம் ஆகும். 


ஐந்தாவது, தவறான வழியில் பொருள் சேர்த்தால், நிம்மதி போகும். பயம் வரும். மன அழுத்தம் வரும். உடல் நிலை கெடும். மருந்து, மாத்திரை என்று நோயோடு போராட வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அந்த குறைவற்ற செல்வம் குறைந்து போகும். 


இப்படி பல விதங்களில் அது இருக்கின்ற பொருளையும் அழித்து விடும். 


"கைப் பொருள்" என்று ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. ஏதாவது காரணம் இருக்கும். ஆராய வேண்டும். 


எப்படி ஆயினும், தவறான வழியில் பொருள் சேர்க்க நினைக்காமல் இருப்பதே இருக்கின்ற செல்வத்தை காக்கும் வழி என்கிறார். 


எவ்வளவு ஆழமான அறிவுரை. 





[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்



Wednesday, November 2, 2022

கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா

         

 கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நீங்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்கள் என்று கேட்டால் "என் சொந்த ஊர் இன்னது" என்று சொல்லுவார்கள். 


சொந்த வீடு இருக்கலாம், சொந்த கார் இருக்கலாம், சொந்த ஊர்? ஊரை வாங்கி வாங்க முடியுமா? 


ஊரின் மேல் அவ்வளவு பற்று. அது சொந்த ஊராகி விடுகிறது. 


அது போல், என் மனைவி, என் கணவன், என் பிள்ளை, என் சுற்றம் என்று நாம் சொந்தம் கொண்டாடுகிறோம்.  அவை நமதா?  நம் சொல்படி கேட்குமா? நம் விருப்பப்படி நடக்குமா? பாதியில் வந்த உறவுகள். போகிற வழியில் விட்டு விட்டுப் போய் விடும். அதை எல்லாம் நம் சொந்தம், நமது என்று நாம் நினைத்து துன்பப் படுகிறோம். 


இவை எல்லாம் நமது என்று நினைப்பதற்கு காரணம் ஒரு பிரமை. ஒரு தோற்றம். அவ்வளவுதான். 


அதெப்படி பிரமை ஆகும்? என் பிள்ளை என் சொந்தம் இல்லையா? என் கணவன் என் உரிமை இல்லையா? என்று கேட்கத் தோன்றும். இல்லை, இவை உனது இல்லை என்று யார் சொன்னாலும் புரியாது.  அதற்கு இறை அருள் இருந்தால்தான் முடியும். 


அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த பிரமை விலகும்படி முருகன் அவருக்கு உபதேசம் செய்தான் என்று. 


"ஊர், உறவு, இந்த உடம்பு என்ற இவை என்னது என்ற பிரமை போயகல எனக்கு உண்மையை விளக்கியவன் முருகன். அவன் யார் தெரியுமா, மலை அரசனின் மகளான பார்வதியின் மகன். எதிரிகளை போரில் வென்றவன்"



பாடல் 


அமரும் பதிகேள் அகமாமெனுமிப் 

பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா  

குமரன் கிரிராச குமாரி மகன் 

சமரம் பொரு தானவ நாசகனே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


(pl click the above link to continue reading)



அமரும் பதி = இருக்கின்ற ஊர். 


கேள்  = உறவினர் 


அகமாமெனுமிப்  = அகம் ஆம் எனும் = இந்த உடல் என்ற இவை 


பிமரம் = பிரமை 


கெட = அழிய 


மெய்ப் பொருள் = உண்மையான,நிலையான பொருளை 


பேசியவா   = உபேதேசம் செய்தவன் 


குமரன் = இளைஞன் 


கிரி = மலை 


ராச = அரசன் 


குமாரி  = மகள் 


மகன்  = மகன் 


சமரம் = சண்டை, போர் 


பொரு = புரிந்து 


தானவ நாசகனே .  = தானவர்கள் என்றால் அசுரர்கள். அவர்களை நாசம் செய்தவன். 


விரிவுரை 


பதி = பதி என்றால் ஊர். "பதி எழு அறியா பழங்குடி" என்று பேசும் சிலப்பதிகாரம்.  மக்கள் இருக்கின்ற ஊரை விட்டு அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். காரணம் அங்கே நல்ல வேலை வாய்ப்பு, சம்பளம், நல்ல வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால். பூம்புகார் மக்கள் வேறு ஊருக்கு குடி பெயர்ந்து போக மாட்டார்களாம். காரணம், அந்த ஊர் அவ்வளவு சிறப்பான ஊர். 


கேள் = உறவினர். 


இராமன், குகனிடம் இருந்து விடை பெறும் போது சொல்லுவான், "அன்புள்ளவனே, இனி நாம் ஐவரானோம்" என்றான். 


இராமன் அதோடு நின்றிருந்தால் ஏதோ சமாதனம் சொல்கிறான் என்று ஆகி இருக்கும்.  இன்னும் ஒரு படி மேலே போகிறான். இந்த இலக்குவன் உனக்கு இளைய தம்பி என்கிறான். அது கூட பெரிய விடயம் இல்லை. 


"இந்த சீதை இருக்கிறாளே அவள் உன் உறவு" என்கிறான். 


"நன்னுதல் அவள் நின் கேள்" - அழகான நெற்றியை உடைய இவள் உன் உறவுக் காரி என்கிறான். அந்த அளவுக்கு அந்த சகோதர வாஞ்சையை அழுத்தமாகச் சொல்கிறான் இராமன். 


‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;

முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 


அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்

என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்

நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்


மெய்ப் பொருள் = மெய் பொருள் என்றால் உண்மையான பொருள். நிலையான பொருள். என்றும் நிலைத்து இருக்கும் பொருள். அப்படி என்றால் இந்த ஊர், உறவு, உடம்பு என்பதெல்லாம் நிலையானவை அல்ல, உண்மையானவை அல்ல என்று புரிந்து கொள்ளல்லாம். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி 

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே"


என்பார் மணிவாசகர். 


இறைவன் தான் மெய் ஞானம். 


கிரிராச குமாரி மகன் = முருகன் பார்வதி வயிற்றில் பிறக்கவில்லை. பின் எப்படி கிரிராச குமாரி மகன் என்று சொல்கிறார். ஆண் எவ்வளவுதான் பலம் பொருந்தியவனாக இருந்தாலும், அவனை செயலாற்றும் சக்தி பெண்ணிடம்தான் உள்ளது என்பதை உணர்த்த பார்வதி மகன் என்றார். 


சமரம் பொரு தானவ நாசகனே = தானவர்கள் என்றால் அரக்கர்கள். 


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,

சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே

பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே


என்பார் அபிராமி பட்டர். 


"வானவர் தானவர்" என்றால் தேவர்களும், அசுரர்களும். 


அசுரர்களோடு சண்டை போட்டதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?  


நமக்குத் துன்பம் தரும் பல அசுரர்கள் உண்டு. எல்லாம் ஏதோ பெரிய உருவமாய், கறுப்பாய், மண்டை ஓட்டு மாலை அணிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். 


ஆணவம், பாசம், பற்று, பொறாமை, பேராசை, அதீத காமம், களவு, பொய் பேசுதல், என்று நமக்குள் ஆயிரம் அசுரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விடாமல் துன்பம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்லது செய்வது போலத் தெரியும். அந்த இனிப்பைச் சாப்பிடு, இந்த காப்பியைக் குடி, ஐந்து மணி நேரம் டிவி பார், மதியம் உறங்கு, அரட்டை அடி, என்று நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் அசுரர்கள் ஆயிரம். அவர்களோடு நாம் தனித்துப் போரிட முடியாது. 


அசுரர்களை அழித்தது ஒரு குறியீடு. 

 

நம் மன மாசுக்கள்தான் அசுரர்கள். நம் போர் அவற்றோடுதான். வெல்ல முடியாமல் தவிக்கிறோம். முருகா, அருள் புரி என்று வேண்டுகிறார். 


மேலும் சிந்திப்போம். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html




]




Tuesday, November 1, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦32 - நெறிமையால் நினைய வல்லார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦32 - நெறிமையால் நினைய வல்லார்


தாண்டகம் என்று ஒரு செய்யுள் வடிவம். அது பற்றிய சர்ச்சைகள் நிறைய இருக்கின்றன. அது எத்தனை சீர், எத்தனை எழுத்து என்றெல்லாம் விவாதங்கள் நடந்தபடி இருக்கின்றன. 


தாண்டுதல் என்பதால் தாண்டகம் என்று பெயர் வந்தது என்று ஒரு ஒரு குறிப்பு உண்டு. பாடல், முடியாமல் தொடர்ந்து கொண்டே போய், இறுதிச் சொல்லில் முடியும். 


திருமங்கையாழ்வார் இருபது பாடல்கள் அருளி இருக்கிறார். 


அவற்றைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


கற்கண்டு பற்றி எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் அது புரியாது. ஒரு கட்டியை எடுத்து வாயில் போட்டால் பின் விளக்கம் ஒன்றும் தேவையில்லை. எல்லாம் தானே விளங்கி விடும்.


அது போல, முதலில் பாசுரத்தைப் படித்து விடுவோம். பின் சிந்திப்போம். .



பாடல் 


 நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,

மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,

விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/232.html


(Please click the above link to continue reading)


நிதியினைப் = செல்வத்தை 


பவளத் தூணை = பவள பாறையால் ஆன தூணை 


நெறிமையால் = ஒழுக்க நெறியில் நின்று 


நினைய வல்லார், = நினைக்க முடிந்தவர்களின் 


கதியினைக் = விதியினை 


கஞ்சன் = கம்சன் 


மாளக் கண்டு = இறந்த பின் 


முன் ஆண்ட மாளும், = அண்டத்தை ஆளும் 


மதியினை  = நிலவு போன்றவனை 


மாலை = திருமாலை 


வாழ்த்தி = வாழ்த்தி 


வணங்கி = வணங்கி 


யென் = என்னுடைய 


மனத்து வந்த = மனதில் வந்து அமர்ந்த 


விதியினைக் = விதியினை 


கண்டு கொண்ட  = கண்டு கொண்ட 


தொண்டனேன் = தொண்டனாகிய நான் 


விடுகி லேனே! = விட மாட்டேன் 


பாசுரம் எப்படி போகிறது என்று பாருங்கள். 


 நிதியினை

பவளத் தூணை

நெறிமையால் நினைய வல்லார், கதியினைக் 

ஆண்ட மாளும் மதியினை

மாலை 

மனத்து வந்த  விதியினைக்


என்று நீண்டு கொண்டே போய், இறுதியில் விடுகிலேனே என்று முடிகிறது. 



இரண்டாவது, 


"நிதியினைப்" - நிதியை என்ன செய்வோம்? முன்பெல்லாம் புதைத்து வைப்பார்கள். அது போல இறை நினைவை மனதுக்குள் புதைத்து வைக்க வேண்டும். வெளியே தெரியும்படி காட்டிக் கொண்டு திரியக் கூடாது. மனதின் ஆழத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தி செய்வதே பெரிய விளம்பரமாகப் போய் விட்டது. 


"பவளத் தூணை": தூண் என்ன செய்யும். பெரிய பாரத்தை தான் தாங்கிக் கொண்டு, தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு நிழல் தரும், பாதுகாப்பு தரும். அது போல இறைவன் தன்னை அண்டியவர்களை காப்பான். 


"நெறிமையால் நினைய வல்லார்" =  சும்மா நினைய வல்லார் என்று சொல்லி இருக்கலாம். நெறிமையால் என்றால் ஒரு வழி, முறைப் படி வழிபட வேண்டும் என்கிறார். மனம் ஒப்பி, மனம் ஒன்றி நினைக்க வேண்டும். அது கடினம் என்பதால், "வல்லார்" என்றார். 



கதியினைக் = கதி என்றால் வழி. அவன் தான் சென்று சேரும் இடம். சேர்க்கும் வழியும் அவன் தான். 



மனத்து வந்த விதியினைக் = அவன் மனதுக்குள் வர வேண்டும் என்பது விதி. நெறிமையால் நினைக்க வல்லார் மனத்துள் அவன் வந்தே தீர்வான். சந்தேகம் வேண்டாம். அதுதான் விதி. 


 கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே! = கண்டு கொண்டேன், விட மாட்டேன் என்கிறார். நல்ல விடயங்களைக் கூட, நாம் விட்டு விடுகிறோம். முதலில் தொடங்குவோம். பின் விட்டு விடுவோம். "விட மாட்டேன்" என்கிறார் ஆழ்வார். அப்படி ஒரு உறுதி வேண்டும். வைராக்கியம் வேண்டும் 


மேலும் சிந்திப்போம்.