Sunday, September 11, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2

 

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



உலகில் நிரந்தரமானவை, தோற்றமும், அழிவும் இல்லாதவை மூன்று என்று பார்த்தோம்.  (https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html)


அவை பதி,பசு, பாசம் என்பன. 


பதி - இறைவன். 

பசு - உயிர்கள் 

பாசம் - கயிறு 


ஆச்சரியமான விடயம் என்ன என்றால், உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்பதுதான். இறைவன் என்று உண்டோ, உயிர்களும் அன்றே உண்டு. 


"என்று நீ அன்று நான்" என்பார் தாயுமானவர். 


உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றால், பின் யார் படைத்தார்கள் என்றால், யாரும் படைக்கவில்லை என்பதுதான் பதில். அது என்றும் உள்ளது. சீரணிக்க சற்று கடினம்தான். இப்போதைக்கு அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

(pl click the above link to continue reading)


இந்த மூன்றில் பதியும், பசுவும் அறிவு உள்ளவை. பாசம் அறிவு இல்லாதது. 


இறைவன் - பேரறிவாளன்

உயிர்கள் - சிற்றறிவு உள்ளவை 


இதுவரை விளங்கி விட்டது அல்லவா? 


இனி அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம். 


இந்த உயிர்கள், நியாமாகப் பார்த்தால், இறைவனை நோக்கித்தான் நகர வேண்டும். அறிவு, அறிவோடு சேர்வதுதானே இயற்கை. 


மாறாக, இந்த உயிர்கள் இறைவனை விடுத்து பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன. ஆணவம் என்ற பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன.நான், எனது என்ற ஆணவத்தில் உயிர்கள் சிக்கி விடுகின்றன. 


சிக்கிவிட்டால் அவற்றால் அதில் இருந்து வெளிவர முடிவதில்லை. அறியாமை என்ற இருளில் மூழ்கிப் போய், திக்கு திசை தெரியாமல் மாட்டிக் கொள்கின்றன. சுற்றிலும் இருட்டு. பாதை எது என்று தெரியவில்லை. எந்தப் பக்கம் அடுத்த அடியை எடுத்து வைப்பது என்று தெரியாமல் திகைத்து உறைந்து போய் நிற்கின்றன. 


இப்படி கொஞ்ச காலம் போன பின்னால், இந்த அறியாமை இருளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. 


இந்த ஆசைதான் மூல கன்மம் (கர்மம்) என்கிறார்கள். 


கர்மா கொள்கையை படிப்பவர்கள், ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகிறது என்றால் முதன் முதலில் தோன்றிய கர்மம் எதனால் தோன்றியது என்று கேட்பார்கள். அதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு, மூல கன்மம் என்பது உயிர்களின் ஆசை. அறியாமையில் இருந்து வெளிப்பட்டு அறிவை அடைய வேண்டும் என்ற ஆசை. அதில் இருந்து வந்ததுதான் எல்லாம். அது ஏன் வந்தது என்று பார்த்தோம். 


சரி, உயிர்களுக்கு ஆசை வந்துவிட்டது. ஆசை மட்டும் போதுமா? எப்படி அதை அடைவது?


அவை தானே வெளிவர முடியாது. 


உயிர்களின் துன்பத்தைக் கண்டு இறைவன் அவற்றின் மேல் இரக்கம் கொண்டு உதவி செய்ய நினைக்கறான். 


அவன் அப்படி செய்ய நினைத்த உதவியின் வெளிப்பாடுதான் இந்த 36 தத்துவங்களும். 


நான் முன்பே சொன்னது போல, இது எல்லாம் நான் அறிந்து, புரிந்து, அனுபவத்தில் தெளிந்து சொல்லவில்லை.இது என்ன என்ற ஆர்வத்தில், நான் வாசித்ததை, ,கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இவை நான் கண்டு பிடித்ததோ அல்லது நான் புரிந்து கொண்டதோ அல்ல. 



உங்களுக்கு பல சந்தேகங்கள் வரலாம். உங்கள் தேடலை தொடங்குங்கள். அதுதான் உண்மையான ஞானத்தின் அடிப்படை. 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


]


No comments:

Post a Comment