Monday, December 29, 2014

குறுந்தொகை - புது நலன் இழந்த

குறுந்தொகை - புது நலன் இழந்த 




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம். 

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு
 
பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்
 
புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை 

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.


Thursday, December 25, 2014

தேவாரம் - பலர் சிரிக்கும் முன்

தேவாரம் - பலர் சிரிக்கும் முன் 


வாழ்க்கையில் என்னென்னமோ செய்கிறோம். கொஞ்சம் நல்லது, கொஞ்சம் அல்லாதது, கொஞ்சம் பொய், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் காமம்...இப்படி அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கிறோம்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். அதை அனுபவிக்காமல் விட்டு விட்டுப் போகிறோம்.

 நம்பியவர்கள் கை விட்டு விடுகிறார்கள். நம்பியவர்களை நாம் கை விட்டிருக்கிறோம்.

கூட்டிக் கழித்தால் நம் வாழ்க்கையே ஒரு அர்த்தமற்றதாக, நகைப்புக்கு உரியதாக இருக்கும். இதற்கா இந்த பாடு....இந்த  அலைச்சல் ?

இறந்த பின், இடு காட்டில் பிணத்தை வைத்திருக்கும் போது , சுற்றி நிற்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்....

நம்மைப் பார்த்து அவர்கள் சிரிக்கும் முன் திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள் என்கிறார் நாவுக்கரசர்.

வாழ்வில் எதை எதையோ தேடி அலைகிறோம் . கிடைத்தது கொஞ்சம், கிடைக்காதது நிறைய. கலைந்த கனவுகள், கரைந்த கற்பனைகள், ஏமாந்த எண்ணங்கள்...

இவ்வளவுதானா வாழ்க்கை ?

பாடல்

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.


சீர் பிரித்த பின்

அரித்து உற்ற வினையால் அடர்பு உண்டு நீர் 
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் 
சிரித்து உற்று பல பேசப் படா முன்னம் 
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே 



பொருள்

அரித்து = அரித்து,

உற்ற வினையால் = செய்த வினையால். நாம் செய்யும் இரு வினைகள் நாளும் நம்மை அரித்து எடுக்கின்றன

அடர்பு உண்டு  = பற்றப் பட்ட

நீர் = நீங்கள்

எரி = தீ

சுற்ற கிடந்தார் என்று = சுற்றி இருக்கக் கிடந்தார் (பிணத்தைச் சுற்றி தீ எரியும் போது )

அயலவர் = மற்றவர்கள்

சிரித்து உற்று = நம்மைப் பார்த்து சிரித்து

பல பேசப் படா முன்னம் = பலவிதமாக பேசும் முன்

திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே  = திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள்.



Wednesday, December 24, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பெண்களை கண்ட இலக்குவன் நிலை

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பெண்களை கண்ட இலக்குவன் நிலை 



அழகழகான பெண்கள் புடை சூழ தாரை, இலக்குவன் முன் போய் நிற்கிறாள்.

அப்போது இலக்குவனின் நிலையை கம்பன் சொல்கிறான்.

ஒரு ஆணுக்கு இலக்கணம் வகுக்கிறான்.

முதலில் அவனுடைய கோபம் போயிற்று.

இரண்டாவது, அவர்களை பார்க்காமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான்.

பார்த்தால் தானே சலனம் வரும்...முதலில் கண்ணை அவர்களை விட்டு வேறு இடம் நோக்குகிறான்.

பின்னர், அவர்களுக்கு நேர் எதிரே நிற்காமல், ஒதுங்கி நிற்கிறான்.

பின்னர், மீண்டும் முகம் திருப்பி அவர்களை பார்க்கவும் அஞ்சினான்.

என்னடா இவன் பெண்களை பார்க்க எதற்கு அஞ்ச வேண்டும், ஒரு வேளை இவன் ஒரு கோழையோ என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்று அப்படி நின்றவன் "மலை போல் உயர்ந்த தோள்களை" கொண்டவன் என்கிறான் கம்பன்.

பாடல்


ஆர்க்கும் நூபுரங்கள் பேரி,
    அல்குலாம் தடம் தேர் சுற்ற,
வேல் கண், வில் புருவம் போர்ப்ப,
    மடந்தையர் மிடைந்த போது,
பேர்க்க அருஞ்சீற்றம் பேர,
    முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப்
பார்க்கவும் அஞ்சினான், அப்
    பருவரை அனைய தோளான்.

பொருள்

ஆர்க்கும் = விம்மி வரும்

நூபுரங்கள் = மார்பகங்கள்

பேரி = முரசு போல

அல்குலாம் தடம் = இடுப்புப் பகுதி

தேர் சுற்ற = தேர் போல அசைய 

வேல் கண் = வேல் போன்ற கண்கள்

வில் புருவம் = வில் போன்ற புருவம்

போர்ப்ப = போருக்கு வர

மடந்தையர் மிடைந்த போது = பெண்கள் வந்த போது

பேர்க்க  அருஞ்சீற்றம் = மாற்ற முடியாத கோபம்

 பேர = மாறிப் போக

முகம் பெயர்த்து = முகத்தை வேறு இடத்திற்கு மாற்றி - அதாவது பார்வையை மாற்றி

ஒதுங்கி = அவர்களிடம் இருந்து ஒதுங்கி

பின்னர்ப் = மீண்டும்

பார்க்கவும் அஞ்சினான் = பார்க்கவும் அஞ்சினான்

அப் = அந்த

பருவரை  = மலை போன்ற

அனைய தோளான் = பெரிய தோள்களை உடைய (இலக்குவன் )

பெண்களை நேராக பார்க்காமல், அவர்கள் முன்னால் நேருக்கு நேர் நில்லாமல், அவர்களை பார்ப்பது கூட தவறு என்று அஞ்சி விலகி நின்றான்.

இது போன்ற உயர்ந்த கருத்துகளை இளம் வயதில் பையன்களுக்கு சொல்லிக் கொடுத்தால்,  அவர்களுக்கு ஒழுக்கம் என்றால் என்ன, எது சரி, எது தவறு என்று  தெரியும்.

பாலியல் கொடுமைகள் குறையும்.

இராமாயணம் படிப்பது கதைக்காக அல்ல. அதில் உள்ள உயர்ந்த பாத்திரங்களின்  குணங்களை இரசித்து, அவற்றை கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி ஒரு சமுதாயம் உருவானால், மிக நன்றாக இருக்கும்.



Monday, December 22, 2014

இராமாயணம் - பெண்கள்ன் எனும் படை - தாரையின் ஆளுமை

இராமாயணம் - பெண்கள்ன் எனும் படை - தாரையின் ஆளுமை 


பல பெண்கள் மத்தியில் மாட்டிக் கொண்ட ஆண்களுக்குத் தெரியும், அது எவ்வளவு சங்கடமான விஷயம் என்று.

அதிலும், மிக மிக அழகான பெண்கள் மத்தியில் , தனி ஆளாக மாட்டிக் கொண்டால் தெரியும்....

இலக்குவன் அப்படி  மாட்டிக் கொண்டான்.

மிகுந்த கோபத்தோடு வரும் அவன் முன், ஒரு பெண்கள் பட்டாளாமே, ஒரு படையே சென்றது.

வாளும் , வேலும், கொடியும், அசைய, முரசு ஒலிக்க ஒரு பெண் படையே சென்று நின்றது.


வில் போல் வளைந்த உடல், கண்ட நொடியில் இதயத்தை அறுக்கும் கண்கள், பளபளக்கும் அணி கலன்கள் , ஒலி எழுப்பும் மேகலை, வளைந்து நெளியும் புருவங்கள்...

என்ன செய்வான் அவன்....

பாடல்

வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
பல் வகைப் புருவக் கொடி பம்பிட,
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே.

பொருள்

வில்லும் = வில்லும்

வாளும் = வாளும்

அணிதொறும் மின்னிட = ஒவ்வொரு அணிகலனிலும் மின்ன

மெல்  = மென்மையான

அரிக் குரல் = ஆரவாரிக்கும்

மேகலை ஆர்த்து எழ = மேகலை விம்மி எழ

பல் வகைப் = பலவிதமான

புருவக் கொடி = புருவங்கள், கொடி போல

பம்பிட = உயர்ந்து பறக்க

வல்லி ஆயம் = வலிமையான போர்ப் படை போல 

வலத்தினில் வந்ததே. = வலம் வந்ததே



Friday, December 19, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீரைக் கடைந்து

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீரைக் கடைந்து 


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். அமுதம் வந்தது. ஆலகால விஷமும் வந்தது. திருமால், அமுதத்தை தேவர்களுக்குக் கொடுத்தார்.

இது கதை.

நம்பும் படி இருக்கிறதா ? கடலை கடைய முடியுமா ? தண்ணீரைக் கடைந்தால் என்ன கிடைக்கும் ? அதைக் கடைய எவ்வளவு பலம் வேண்டும்....இப்படி ஒரு அர்த்தமில்லா கதையை ஏன் படைத்து இருக்கிறார்கள் ?

பாற்கடல் என்பது நம் வாழ்க்கைதான். இந்த உலகம் தான்.

இதில் உண்மை தேடி (அமுதம்) நாளும் கடைந்து கொண்டு இருக்கிறோம். இந்த உலகில் நல்லதும் இருக்கிறது. பொல்லாததும் இருக்கிறது.

நல்லதை (அமுதை) எடுத்துக் கொண்டு அல்லாததை (விஷத்தை ) விட்டு விடவேண்டும்.

இதுவரை நாம் அமுதத்தை கண்டதில்லை. அதனால், அதை நேரில் வந்து யார் தந்தாலும் அது அமுதம் என்று எப்படி அறிந்து கொள்வது ?

எப்போதெல்லாம் மனித குலம் நல்லது எது , கெட்டது எது என்று அறியாமல் தவிக்கும் போது பெரியவர்கள் தோன்றி வழி காட்டி இருக்கிறார்கள்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பார் அருணகிரியார்.

எத்தனை அற நூல்கள், எத்தனை குருமார்கள்....

அமுதை அள்ளி தந்திருக்கிறார்கள்....நாம் தான் அமுதை விட்டு விட்டு வேறு எங்கோ  அலைந்து கொண்டிருக்கிறோம்.....

பாடல்

கூடிநீரைக் கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்துபோன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடு கின்ற நின்தனை
நாடும் வண்ணம்சொல்லாய் நச்சுநா கணையானே!

பொருள்

கூடி = தேவர்களும் , அசுரர்களும் ஒன்றாகக் கூடி (நல்லவர்களும் கெட்டவர்களும் )

நீரைக் கடைந்த வாறும் = கடலை கடைந்து

அமுதம் தேவர் உண்ண = அமுதை தேவர்கள் உண்ண

அசுரரை - அசுரர்களை

வீடும் வண்ணங்களே    =  விட்டுப் போகும்படி (விடுவது வீடு)


செய்துபோன வித்தகமும் = செய்த வித்தகமும்

ஊடு புக்கு = உள்ளே புகுந்து 

எனது ஆவியை உருக்கி = எனது ஆவியை உருக்கி

உண்டிடு கின்ற நின்தனை = உண்ணும் உன்னை

நாடும் வண்ணம் = நான் அடையும் வண்ணம்

சொல்லாய் = சொல்வாய் 

நச்சு நாகணையானே! = நஞ்சை கொண்ட பாம்பணையில் துயில்பவனே


இராமாயணம் - தாரையின் ஆளுமை

இராமாயணம் - தாரையின் ஆளுமை 


கோபத்தோடு வரும் இலக்குவனை சந்திக்க தாரை தன் தோழிகளோடு செல்கிறாள்.

எப்படி ?

அந்த பெண்கள் எப்படி இருந்தார்கள்.....

பாடல்


விலங்கி மெல்லியல் வெள்நகை வெள்வளை
இலங்கு நுண்ணிடை ஏந்து இள மென்முலை
குலம்கொள் தோகை மகளிர் குழாத்தினால்
வலம்கொள் வீதி நெடுவழி மாற்றினாள்.

பொருள்

விலங்கி = பார்பவரை விலங்கிட்டு, அங்கிங்கு நகர விடாத அழகு

மெல்லியல் = மென்மையானவர்கள்

வெள்நகை = வெண்மையான புன்னகை. பளிசென்ற வெண்மையான பற்கள் தெரியும்படியான புன்னகை

வெள்வளை = வெண்மையான வளையல். சங்கு வளையல்

இலங்கு நுண்ணிடை = விளங்கும் நுண்ணிய இடை

ஏந்து இள மென்முலை = ஏந்திய இளமையான மார்புகள்

குலம்கொள் = நல்ல குலத்தில்  

தோகை மகளிர் குழாத்தினால் = மயில் போன்ற பெண்களின் கூட்டத்தினால்

வலம்கொள் வீதி  = வலம் வரும் வீதியின்

நெடுவழி மாற்றினாள் = இலக்குவன் வரும் வழியை மாற்றினாள், தடுத்தாள்

ஆணின் கோபத்தை, மூர்கத்தை மாற்றும் இயல்பு பெண்மைக்கு உண்டு. அனுமனோ, அங்கதனோ சென்றிருந்தால் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும்.

இலக்குவன் பெண்ணிடம் வீரத்தை காண்பிக்க மாட்டான். அவன் கோபம் மட்டுப் படும்  என்று நினைத்து அனுமன் தாரையை அனுப்பினான்.

பின் வரும் பாடல்களில் தாரையின் பேச்சு சாதுரியத்தை, இலக்குவனின் மிக உயர்ந்த ஒழுக்கத்தை காட்டுகிறான் கம்பன்.

பார்ப்போம்.




Wednesday, December 17, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை

இராமாயணம் - தாரையின் ஆளுமை 


சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன், சொன்ன சொல்லை மறந்து, போதையில் மிதந்தான்.

அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்பினான்.

இலக்குவன் மிகுந்த கோபத்தோடு வருகிறான். கோட்டை மதிலை கற்களை கொண்டு குரங்குகள் அடைத்தன. இலக்குவன், அவற்றை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு வருகிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் திகைத்து நின்றனர்.

அப்போது, அனுமன் "தாரை அவன் முன் சென்று நின்றால், அவன் கோபம் மாறும் " என்றான்.

அதைக் கேட்ட தாரை

"நீங்க எல்லாம் விலகுங்கள். நான் போய் இலக்குவனை சந்தித்து அவன் மன நிலை என்ன என்று அறிந்து வருகிறேன் " என்று கிளம்பினாள் . அவளுக்கு வழி விட்டு எல்லோரும் விலகி நின்றனர்.

ஒரு அரசியல் திருப்பத்திற்கு , தாரை வழி வகுக்கிறாள். இத்தனை ஆண்பிள்ளைகள் இருந்தும் ஒன்றும் பயன் இல்லை என்று உணர்ந்து கொண்டாள் . தானே நேரில் சென்றால்தான், இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று முடிவு செய்து, "நீங்க எல்லோரும் தள்ளுங்கள்..நான் போகிறேன் " என்று கிளம்புகிறாள்.

ஒரு பெண்ணின் தைரியம், அவளின் தன்னம்பிக்கை, ஆளுமை வியக்க வைக்க வைக்கிறது.

பாடல்

'நீர் எலாம், அயல் நீங்குமின்;நேர்ந்து, யான்,
வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும்,
பேர நின்றனர், யாவரும்;பேர்கலாத்
தாரை சென்றனள், தாழ் குழலாரொடும்.

பொருள்

'நீர் எலாம் = நீங்கள் எல்லாம் (அனுமன், அங்கதன் எல்லோரும்)

அயல் நீங்குமின் = நீங்கிப் போங்கள்

நேர்ந்து , யான் = நான் சென்று

வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும் = வீரனாகிய இலக்குவனின் உள்ளத்தை விசாரிக்கிறேன்

பேர நின்றனர் = எல்லோரும் விலகி நின்றனர்

யாவரும் = எல்லோரும்

பேர்கலாத் = நல்ல நெறிகளில் இருந்து பெயராத, விலகாத

தாரை சென்றனள் = தாரை சென்றாள்

தாழ் குழலாரொடும் = தன் தோழியரோடு

யோசித்துப் பார்ப்போம்.

தன் கணவனை, இராமனின் துணையோடு, வஞ்சகமாக கொன்றவன் சுக்ரீவன்.

அவனுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

தாரை நினைத்திருந்தால் "நல்லா வேண்டும்...என் கணவனை கொன்றவன் இப்போது  வகையாக மாட்டிக் கொண்டான். இலக்குவன் அவனை கொல்லட்டும் , என் மகனுக்கு ஒரு வேளை ஆட்சி கிடைக்கலாம் " என்று நினைத்து இருக்கலாம்.

கணவனை கொன்றவன் மேலும் கருணை.

கணவனை கொன்றது மட்டும் அல்ல, மகனுக்கு ஆட்சி கிடைக்காமல் செய்தவன்.

அப்படிப் பட்ட சுக்ரீவன் மேலும் கருணை கொள்கிறாள் தாரை.

மேலும் உயிர் சேதம் விளைவதை அவள் விரும்பவில்லை.

குடும்பச் சண்டையில்  மற்றவர்கள் பாதிக்கப்  கூடாது என்று நினைக்கிறாள்.

பிரச்சனையை தீர்க்க தானே முனைகிறாள்.

அவளின் பெரிய மனதை நாம் கண்டு வியக்கிறோம்.

இப்படிப் பட்ட பெண்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.

வீரமும், அறிவும்,  விவேகமும்,பரந்த மனமும், கருணையும் கலந்து அற்புத பிறவிகளாக இருந்திருக்கிறார்கள்.

வருங்காலப் பெண்களுக்கு ஒரு உதாரணமாக தாரையைப் படைக்கிறான் கம்பன். 

Tuesday, December 16, 2014

தேவாரம் - கெடுவது இம் மானிடர் வாழ்க்கை

தேவாரம் - கெடுவது இம் மானிடர் வாழ்க்கை 


பெரிய பள்ளம். ரொம்பப் பெரிய பெரிய பள்ளம். எவ்வளவு போட்டாலும் நிறையாத பள்ளம்...கடலில் உள்ள நீரைக் எல்லாம் எடுத்து விட்டால் அது எவ்வளவு பெரிய பள்ளமாக இருக்குமோ அது போன்ற பள்ளம்...

அது எந்தப் பள்ளம் தெரியுமா ?

நம் வயிறுதான் .... நிறைந்த மாதிரி ..இருக்கும்.சிறிது நேரத்தில் காலியாகி விடும்...இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த பள்ளத்தை இட்டு நிரப்புவதே வேலையாக அலைகிறோம் .

உழைப்பதும், உணவு சேகரிப்பதும், அதை இட்டு வயிற்றை நிரப்புவது ஒரு வேலை.

இந்த உடலுக்குள் ஐந்து முரடர்கள் இருந்து கொண்டு இந்த உடலை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ...அதைத் தொடு , இதை சுவைத்துப் பார், இதை கேட்டுப் பார் என்று இந்த உடலை படாத பாடு படுத்துகிறார்கள்.

அவர்கள் சொன்ன படியெல்லாம் கேட்டு அலைவது இன்னொரு வேலை.

இது ஒரு வாழ்க்கையா ? போதும் இது என்று கூறுகிறார் நாவுக்கரசர்....

என்னதான் வாழ்ந்தாலும், இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும்.

கெடுவது என்றால் கேட்டுப் போவது, முடிந்து போவது...முடியும் வாழ்கை இது....

உண்பதும், புலன் இன்பம் தேடுவதும் ...இது மட்டும் தானா வாழ்க்கை .


பாடல்

படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

சீர் பிரித்த பின்

படு குழிப் பவ்வம் அன்ன  பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவது இம்  மனிதர் வாழ்க்கை காணும் தோறும் கேதுகின்றேன்
முடுகுவர்  இருந்து  அளைவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டே ஆரூர் மூலட்டனீரே.


பொருள்

படு குழிப் = பெரிய குழி

பவ்வம் அன்ன = கடல் போன்ற

பண்டியைப் = வயிற்றில்

பெய்த வாற்றால் = போட்டு நிரப்பிக் கொண்டே இருந்தால்

கெடுவது இம்  மனிதர் வாழ்க்கை = கெடுவது இந்த மனிதர் வாழ்கை 

காணும் தோறும் கேதுகின்றேன் = இதை காணும்போதெல்லாம் , அழைக்கின்றேன்

முடுகுவர் = முடுக்கி விட்டுக் கொண்டு இருப்பார்

இருந்து  அளைவர் = அங்கும் இங்கும் அலைய வைப்பார்


மூர்க்கரே = மூர்கமான

இவர்களோடும் = இவர்களோடும்

அடியனேன் வாழ மாட்டேன் = அடியேன் வாழ மாட்டேன்

ஆரூர் மூலட்டனீரே = ஆரூரில் மூலமாக இருப்பவரே

.


Sunday, December 14, 2014

தேவாரம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

தேவாரம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.


பயம்.

நமக்குத்தான் எவ்வளவு பயங்கள் ?

வேலை போய் விடுமோ என்ற பயம், உடல் நிலை குறித்து பயம், பிள்ளைகள் படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டுமே என்ற பயம், காதல் கீதல் என்று தவறான முடிவை எடுத்து விடுவார்களோ என்று பயம், நெருங்கியவர்களின் உடல் நிலை குறித்துப் பயம், வருமான வரி குறித்துப் பயம்...

பயம் இல்லாத வாழ்க்கை  இருக்க முடியுமா ?

எதைப் பற்றியும் பயம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ?

அச்சம் இல்லை, அச்சம் இல்லை , அச்சம் என்பது இல்லையே என்று மார் தட்டிய பாரதியும் பயந்து புதுச்சேரி  சென்றார்.

பிணி,  மூப்பு,மரணம் என்ற மூன்று பயமும் மனிதனை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.
 
நாவுக்கரசர் சொல்லுகிறார்...

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இப்போது மட்டும் இல்லை, இனிமேல் நம்மை பயப் படுத்துவதற்கு ஒன்றும் வராது என்றும்  சொல்கிறார்.

சொல்லுவது யார் ?

ஏதோ பெரிய பணக்காரர், சக்கரவர்த்தி, படை பலம்  உள்ளவர்,செல்வாக்கு உள்ளவர்  ...அந்த மாதிரி எதுவும் இல்லாதவர்...

இளமையில் தாய் தந்தையை இழந்தவர்.

அக்காவின் வளர்ப்பில்  வளர்ந்தவர்.

அக்காவும், கணவனை இழந்த கைம்பெண்.

சொன்னது எப்போது தெரியுமா ?

அவர் இருந்த நாட்டின் அரசனின் கோபத்திற்கு உள்ளாகி, அந்த அரசன் யானையைக் கொண்டு அவரின் தலையை மிதிக்கச் சொன்ன நேரத்தில்...

மதம் கொண்ட யானை வருகிறது...நாவுக்கரசரின் தலையை இடற...

அப்போது சொல்லுகிறார் "அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை."

எங்கிருந்து இந்த தைரியம் வந்தது ?

"மேலே பூசிய திரு வெண்ணீறும், சுடர் விடும் சந்திரனைப் போன்ற சூடாமணியும், புலித்தோல் உடையும், சிவந்த நிறமும், காளை வாகனமும், பாம்பும், கெடில நதி நீரும், கொண்ட அவர் இருக்கும் போது நாம் அஞ்சுவதும் இல்லை , நமக்கு அஞ்ச வருவதும் இல்லை...."

பாடல்

சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

பொருள்

சுண்ண = பொடியான

வெண் = வெண்மையான

சந்தனச்  சாந்தும் = சந்தன சாந்தும்

சுடர்த் = சுடர் வீசும்

திங்கள் = நிலவை

சூளாமணியும் = தலையில் சூடாமணியாக சூடியவரும்

வண்ண = வண்ண மயமான

இரிவை = புலித்தோல்

உடையும் = உடையும்

வளரும் பவள நிறமும் = நாளும் மெருகு ஏறும் பவளம் போன்ற சிவந்த நிறமும்

அண்ணல் = பெரியவன்

அரண் = மதில் போன்ற

முரண் ஏறும் = எதிரிகளை அழிக்கும் காளை வாகனமும்

அகலம் வளாய அரவும் = அகலமான படத்தைக் கொண்ட பாம்பும்

திண்ணென் கெடிலப் புனலும் = குளிர்ந்த கெடில நதியின் நீரும்

உடையார் ஒருவர் = உடையார் ஒருவர்

தமர் = நம் உறவினர்

நாம்!- = நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; = அஞ்சுவது யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதும் இல்லை. = நாம் அஞ்சும்படி வருவதும் ஒன்றும் இல்லை

ஆழ்ந்த திடமான பக்தி. அசைக்க முடியாத நம்பிக்கை.

சொல்லிப் பாருங்கள் - ஒரு தைரியம் வரும்.

"அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை."




Thursday, December 11, 2014

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 


நமக்கு வாய்த்தது மாதிரி குருமார்கள் யாருக்கு வாய்த்து இருக்கிறார்கள் ?

சம்பவாமி யுகே யுகே என்றான் கண்ணன்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு நிறைய குருமார்கள் கிடைத்திருக்கிறார்கள்.

ஏனோ நாம் தான் அவர்கள் சொல்வதை எல்லாம் அறியாமலேயே, அறிந்தாலும் சரியாக புரிந்து கொள்ளாமலும், வாதம், எதிர்வாதம், குதர்க்கம் பேசியும் அவர்கள் சொன்ன நல்லதையெல்லாம் இழந்து நிற்கிறோம்.

அவர்கள் திருவருள் பெற்றார்கள். பெற்றவரை நல்லது என்று சுயநலத்தோடு இல்லாமல், பின் வரும் சந்ததியினரும் வாழ வேண்டும் என்று அவற்றை சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.

நம் துர்பாக்கியம், அவற்றை எல்லாம் நாம் அறியாமலேயே போனது.

புதையலின் மேல் அமர்ந்து பிச்சை எடுக்கும் பிச்சைகாரானைப் போல இருக்கிறோம்.

திருநாவுக்கரசர் !

இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

வழி தவறிப் போய் இருக்கிறார்.

இளைய தலைமுறையினர் பல வழி தெரியாமல் செல்வதைப் போல அவரும் இளமையில் வழி தவறி சென்றிருக்கிறார்.

இறைவன் இல்லை, என்று நாத்திகம் பேசி இருக்கிறார். சிவ நிந்தனை செய்திருக்கிறார்.  தான் பிறந்த சைவ சமயத்தை விடுத்து சமண சமயத்தில் சேர்ந்து , சமண மத பிரச்சாரம் செய்து இருக்கிறார்.

ஏதோ கொஞ்ச காலம் இல்லை...நீண்ட காலம்.

பின் உண்மை உணர்ந்து, மீண்டும் சைவ சமயம் வந்து சேர்கிறார்.

சிவ நிந்தனை செய்த அவருக்கு "திருநாவுக்கரசர்" என்ற பட்டத்தை சிவனே

கொடுத்தான்.

அவர் பாடிய பாடல்களை தேவாரம் என்று சைவ சமயம் கொண்டாடுகிறது.

இன்று அகிம்சை என்பது ஏதோ காந்தி கண்டு பிடித்தது என்று நாம்  நினைக்கிறோம்.

அன்பால், பக்தியால் அரசனை எதிர்த்து வென்றவர் அப்பர் என்ற திருநாவுக்கரசர்.

அகிம்சை என்றால் கோழைத்தனம் இல்லை. "யாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் " என்று வீர முழக்கம் செய்தவர் அவர்.

இறைவன் நேரில் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது " எதுவும் வேண்டி  பக்தி செய்யவில்லை..." என்று இறைவனிடமே சொன்னவர் அவர்.

காதலையும், ஏன் காமத்தையும்  போற்றினார். ஆண் பெண் இன்பத்தின் உயர்வை சிறப்பித்துப் பாடினார்.

வாருங்கள், அவரின் வாழ்க்கையை அறிவோம்.

அவர் சொன்னவற்றை கேட்போம்.

கொட்டிக் கிடக்கிறது செல்வம். அள்ளிக் கொண்டு போங்கள். அள்ள அள்ள குறையாத செல்வம் இது.

திருநாவுகரசைப் பற்றிப் சொல்ல வந்த சேக்கிழார் இப்படி ஆரம்பிக்கிறார்.

உலகில் ஒரு நாவாலும் (ஒருவராலும்) சொல்ல முடியாத புகழ் உடைய அவரைப் பற்றி நான் சொல்ல நினைக்கிறேன் என்று அடக்கத்தோடு ஆரம்பிக்கிறார்.

பாடல்

திருநாவுக் கரசு, வளர் திருத்தொண்டி னெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர், வாய்மைதிகழ்
பெரு நாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகி
லொருநாவுக் குரைசெய்ய வொண்ணாமை யுணராதேன்.

சீர் பிரித்த பின்

திரு நாவுக்கரசு, வளர் திருத் தொண்டின் நெறி வாழ 
வரு ஞானத் தவ முனிவர் வாகீசர், வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  பேருலகில் 
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 

பொருள்

திரு நாவுக்கரசு, = திரு நாவுக்கரசு

வளர் = வளர்ந்த, வளர்கின்ற, வளரும். இந்த உலகம் அறியாமை, ஆணவம், என்ற சேற்றில் அமிழ்ந்து கிடைக்கிறது. அதில் இருந்து முளைத்து வளர என்பது பொருள். துன்பத்தில், அறியாமையில் கிடந்து மக்கிப் போய் விடாமல், வளரும் படி என்று கொள்க.

திருத் தொண்டின் = சிறந்த திருத் தொண்டின்

நெறி வாழ = வழி முறைகள் வாழ

வரு = வந்த . நெறிகள் வாழ என்று பொருள். இன்னொரு பொருள், அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டிய ஞான தவ முனிவர் என்பது இன்னொரு பொருள். சொல்லுவது எளிது. செய்வது கடினம். அப்பர் அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டினார்.

ஞானத் = ஞானமும்

தவ  = தவமும்

முனிவர் = கொண்ட முனிவர்

வாகீசர், = வாகீசர் (வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் முந்திய பிறப்புப்  பெயர்)

வாய்மை திகழ் = வாய்மை திகழ

பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  = அவருடைய பெருமையை எல்லோரிடமும் பரப்ப நினைக்கின்றேன்

பேருலகில் = பெரிய உலகில்

ஒரு நாவுக்கு உரை செய்ய = ஒரு நாவாலும் உரை செய்ய

ஒண்ணாமை உணராதேன் = முடியாமையை உணராத நான்





Wednesday, December 10, 2014

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல்

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல் 


எதுதான் நிலையாக இருக்கிறது நம் வாழ்வில்.

நேற்று இருந்தது போல இன்று எது இருக்கிறது.

மனம், அது நொடிக்கு ஒரு தரம் மாறிக் கொண்டிருக்கிறது.

 சுற்றமும்,உறவும்  அப்படியே.

செல்வம் - வரும்,  போகும்.

ஆரோக்கியம் - இன்றிருக்கும், நாளை போகும்.

வாலிபம், இளமை எல்லாம் அப்படித்தான்.

அப்படியென்றால், எது தான் நிலைத்து நிற்கும் ?

நிலையான ஒன்றை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் அப்பர்.



நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
        வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, 
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
             பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, 
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
                     சய! போற்றி போற்றி!” என்றும், 
“அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!”

    என்றும், “ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.

Tuesday, December 9, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு - பாகம் 2

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு  - பாகம் 2 



மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.


இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

---------------------------பாகம் 2 ----------------------------------------------------------------------------------------------

ஏன் ஒவ்வொரு செயலையும் இரண்டு இரண்டு தரம் சொல்கிறார்  ? ஒரு வேளை அவற்றிற்கு  ஒரு அழுத்தம் தர நினைத்து அப்படி சொல்லி இருப்பாரா ? அப்படி என்றால் ஒவ்வொரு  வார்த்தைக்கும் அழுத்தம் தர நினைத்து இருப்பாரா ? அல்லது வேறு ஏதாவது காரணம்  இருக்குமா ?

சிந்தித்துப் பார்ப்போம்.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நினைந்து நினைந்து = முதலில் எதை நினைக்க வேண்டும் ? பின் எதை நினைக்க வேண்டும் ? 

முதலில் நம் சிறுமையை நினைக்க வேண்டும். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் யார், நம் நிலை என்ன , நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று நினைக்க வேண்டும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு நூறு வயது வரை வாழ்வோம். அதற்குள் எவ்வளாவு ஆணவம், அகந்தை, சண்டை , சச்சரவு, பொறாமை, கோபம்....நம் உண்மை நிலையை நினைந்து பார்க்கும் போது ஆணவம் போகும். அடக்கம் வரும். சலனம் மறையும்.

இரண்டாவது, இந்த பிரபஞ்சம், இதன் சிருஷ்டி, அதன் தாளம் தவறாத கதி இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். உலகின் லயம் புரியும். ஒரு வேளை,  அதில் இருந்து இறைவனும் புரியலாம். 


உணர்ந்து உணர்ந்து 

உணரத் தலைப் படும் போது முதலில் ஆராய்ச்சி வெளி நோக்கியே இருக்கும். உலகம், அதில் உள்ள மக்கள், அவர்கள் செய்யும் செயல், படைப்பு, இயற்கை, பொருள்கள், அவை தரும்  இன்பம் என்று உணரத் தலைப் படுவோம்.

நாளடைவில் இந்த உணர்தல் உள் நோக்கி செல்லத் தொடங்கும். நான் யார் என்ற கேள்வி நிற்கும். தன்னை உணர வேண்டும். 


நெகிழ்ந்து நெகிழ்ந்து = முதலில் நமக்கு கிடைத்த நல்லவற்றை நினைத்து மனம் நெகிழ வேண்டும். நாம் என்ன செய்து விட்டோம் , நமக்கு இவ்வளவு கிடைத்து இருக்கிறதே என்று மனம் நெகிழ வேண்டும். 

நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று  வித்து என்பார் மணிவாசகர். 

நாயிற் கிடையாய் கிடைந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயவான தத்துவனே என்பதும் அவர் வாக்கே. 

அடுத்து, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று மனம் நெகிழ வேண்டும். ஏழைகள் மேல் கருணை பிறக்க வேண்டும், துன்பப் படுபவர்களுக்கு இரங்க வேண்டும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி நாதர். 

உடல் நெகிழ வேண்டும். பின் மனம் நெகிழ வேண்டும். 


நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால்

முதலில் துன்பக் கண்ணீர். என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை, நமக்கு ஏன் இதுவெல்லாம் நிகழ்கிறது என்று வருத்தம், எப்படி கரை ஏறப் போகிறோம் என்ற ஏக்கம். பயம், கவலை, ஏக்கம் இதனால் வரும் கண்ணீர். 

இறை அருள் கிடைத்த பின், வரும் ஆனந்தக் கண்ணீர். உண்மை உணர்ந்த பின், தன்னைத் தான் அறிந்த பின் வரும் ஆனந்தக் கண்ணீர். அதனால் உடல் நனைய வேண்டும். 

காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பது தேவாரம். காதலில், அன்பில், பக்தியிலும் கண்ணீர் வரும். 


உடம்பு நனைந்து நனைந்து= அந்தக் கண்ணீரால் உடம்பு நனைய வேண்டும். உடம்பு நனைந்தால் உடல் குளிரும். உள்ளமும் குளிர வேண்டும். உள்ளத்தில் காமமும், கோபமும் கொந்தளித்துக் கொண்டிருந்தால் உடல் குளிர்ந்தாலும் உள்ளம் குளிராது. கண்ணீரால் உடலும் குளிர வேண்டும். உள்ளமும் குளிர வேண்டும். 

மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி சொல்லுகிறார் வள்ளலார்.

Thursday, December 4, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு 


மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.




Wednesday, December 3, 2014

நாலடியார் - நல்ல வழி இல்லை

நாலடியார் - நல்ல வழி இல்லை 


முதுமை நமக்கில்லை என்று நாம் இருக்கிறோம்.

அப்படியே வரும் என்று நினைத்தாலும், அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

வேலை எல்லாம் முடித்துவிட்டு, பிள்ளைகளுக்கு ஒரு வழி பண்ணி வைத்து விட்டு, அப்புறம் அதையெல்லாம் செய்யலாம் என்று நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அந்த நேரத்தில் இப்படியேவா இருக்கப் போகிறோம் ?

படிக்க வேண்டும் என்று நினைத்தால் - கண் சரியாக இருக்காது.

யாரிடமாவது பேசலாம் என்றால் பேச்சு குழறும்.

சரி, படித்தவர்கள் சொல்லிக் கேட்கலாம் என்றால் காது கேட்டால் தானே.

எனவே, இளமையிலேயே இது பற்றியெல்லாம் சிந்தித்து இப்போதே முடிவு எடுங்கள்.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள்

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தைகள் கோர்வையாய் வராது. வார்த்தைகளோடு எச்சிலும் வரும். பல் போன பின், சொல் தளரும். குரல் கம்மும்.

கோல்ஊன்றிச் = ஒரு இடத்திற்கு போக முடியாது. நடை எனபது பெரிய விஷயமாகப் போகும்.  கோல் துணையின்றி நடக்க முடியாது

சோர்ந்த நடையினராய்ப் = கொஞ்ச தூரம் நடந்தாலும் சோர்வு வரும்.

பல்கழன்று = பல் விழுந்து

பண்டம் பழிகாறும் = இந்த உடல் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமாகும். "கிழத்துக்கு காது கேட்க்காது...நம்ம உயிரை வாங்குது..."

இல்செறிந்து = இல்லத்தில் இருந்து

காம நெறிபடருங் = காம, ஆசையின் வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே. கண் போன திசை எல்லாம் போனவர்களுக்கு 

ஏம நெறிபடரு மாறு.= மெய் வழியில் செல்லும் வகை

உடலில் வலிமை இருக்கும் போதே நல்லதை நினைத்து, நல்லதைச் செய்வோம்



Monday, December 1, 2014

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது 


 இந்தப் பிறவி இன்பமானதா ? துன்பமானதா ?

ஒட்டகம் முள் மரத்தின் இலைகளை  தின்னும்.அப்படி தின்னும் போது , அந்த முள்  மரத்தில் உள்ள முள் தைத்து , ஒட்டகத்தின் உதட்டில் இருந்து இரத்தம் வழியும். அப்படி வழிந்த இரத்தம் ஒட்டகத்தின் வாயில்  சென்று  சேரும். தன் இரத்தத்தை தான் அறியாத ஒட்டகம், இந்த முள் மரத்தின் இலைகள் மிக சுவையாக இருக்கின்றன என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் உதடு கிழிபட தின்னும்.

துன்பத்தை இன்பமாக நினைத்தது அந்த முட்டாள் ஒட்டகம்.

இந்தப் பிறவிக்குத்தான் எத்தனை துன்பம் ? நோயால் துன்பம், நம் மீது அன்பு கொண்டவர்கள் நம்மை பிரிந்தால் துன்பம், வறுமை வந்தால் துன்பம், பழி வந்தால் துன்பம், நினைத்தது கிடைக்கவில்லை என்றால் துன்பம்..இப்படி துன்பத்திற்கு இருப்பிடமாகும் இந்தப் பிறவி.


இந்தப் பிறவி, துன்பத்தின் இருப்பிடம் என்று அறிந்த பெரியவர்களோடு மிக மிக நெருங்கி  பழக வேண்டும்.

பாடல்


அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.


சீர் பிரித்த பின்

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை

உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.

பொருள்

அடைந்தார்ப் பிரிவும் = நம்மை அடைந்தவர்களின் பிரிவும். பெற்றோரை வெட்டு பிரிவது, காதலன் / காதலி பிரிவது, பிள்ளைகளை பிரிவது, நண்பர்களைப் பிரிவது, என்று பலவிதமான பிரிவு

அரும்பிணியும் = கொடுமையான நோயும்

 கேடும் = மற்ற பலவிதமான துன்பங்களும்

உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் = இந்த உடம்பை கொண்டவர்களுக்கு வருவதால்

தொடங்கிப் = தொடக்கம் முதல்

பிறப்பு இன்னாது என்று உணரும் = இந்த பிறப்பு துன்பம் தருவது என்று உணரும்

பேரறிவினாரை = பெரிய அறிவை கொண்டவர்களை


உறப் புணர்க அம்மா என் நெஞ்சு = மிக நெருங்கிப்  பழகுக, என் நெஞ்சே

கண்டு பிடியுங்கள்...அப்படி யாராவது இருக்கிறார்களா என்று. இருந்தால் அவர்களோடு சேர்ந்து இருங்கள்.

 .


தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்

தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்


இளையராஜாவின் இனிமையான இசையை கேட்டு மெய் மறக்கிறோம். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்த்தானி சங்கீதம், என்று பலவிதமான இசைகளை கேட்கிறோம்.

இந்த இசையின்  பயன் என்ன ?

இந்த இசைகளை கேட்பதால் நமக்கு என்ன கிடைக்கிறது ?

சுந்தரர் சொல்கிறார், இசையும் அதன் பயனும் இறைவனே  என்கிறார்.

அது மட்டும் அல்ல, அவன் இனிய அமுதமாய் இருக்கிறான்.

இறைவனை, நண்பனாகக் கண்டவர் சுந்தரர்.

சுந்தரருக்கு ஏதோ ஒன்று அறியக் கிடைத்து இருக்கிறது. அதை நினைத்து நினைத்து உருகுகிறார். அது வாழ் நாள் பூராவும் இன்பம் தரக் கூடியது என்கிறார்.

பாடல்

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய 
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை 
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந் 
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே. 

பொருள்

ஏழிசையாய் =  ஏழிசையாய்

இசைப்பயனாய் = இசையின் பயனாய்

இன்னமுதாய் = இனிய அமுதமாய்

என்னுடைய தோழனுமாய் = என்னுடைய நண்பனுமாய்

என்று = என்று

முன் நீ சொன்ன = முன்பு நீ சொன்ன 

பெருஞ் சொற்பொருளை = பெரிய சொல்லின் பொருளை

ஆழ நினைத்திடில் = ஆழமாக யோசித்தால்

அடியேன் = என்

அருங்கரணம் = அருமையான பொறிகள் எல்லாம்

கரைந்துகரைந் = கரைந்து கரைந்து

தூழியல் = ஊழிக் காலம் வரை

இன்புறுவது காண் = இன்பம் அடைவது காண்

உயர்கருணைப் பெருந்தகையே = உயர்ந்த கருணை கொண்ட பெரியவனே

அவர் அறிந்த அது என்னவாக இருக்கும் ?





Sunday, November 30, 2014

திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?

திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?


எவ்வளவோ படிக்கிறோம் ? எதை  எதையோ   அறிந்து கொள்கிறோம். ? படித்து அறிவது. அனுபவத்தில் அறிவது என்று பல விதங்களில் அறிகிறோம்.

இவையெல்லாம் எதற்காக என்று வள்ளுவர் கேட்கிறார்.

படித்து என்ன செய்யப் போகிறாய் என்பது அவர் கேள்வி.

ஒன்றைச் செய்கிறோம் என்றால் அதற்கு ஒரு பயன் இருக்க வேண்டும். கல்வியின் பயன் என்ன ?

பாடல்

கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவ

னற்றா டொழாஅ ரெனின்.

சீர் பிரித்த பின்

கற்றதனால் ஆய  பயன் என் கொல், வாலறிவன் 
நற்றாள் தொழார் எனின் 

பொருள்

கற்றதனால் = படித்ததனால்

ஆய  பயன் என் கொல் = கிடைக்கும் பயன் என்ன ?

வாலறிவன் = இறைவன் 

நற்றாள் = நன்மை பயக்கும் திருவடிகளை

தொழார் எனின் = தொழவில்லை என்றால்

வள்ளுவர் இறைவனை  தொழுங்கள் என்று சொல்லவில்லை.

இறைவனை தொழவில்லை என்றால், கற்றதனால் ஆய பயன் என்ன என்ற கேள்வியை  நம் முன் வைக்கிறார்.

அதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதா ?

வாசிப்பதால் என்று சொல்லவில்லை. கற்றதனால் என்கிறார்.

இறைவன் திருவடிகளை தொழுவது என்பது கற்றதனால் வரும் ஒரு பயன்.

அது இல்லை என்றால், வேறு என்ன பயன் இருக்கிறது என்கிறார் ?

ஆணவங்களில் முதலாவது நிற்பது கல்வியினால் வரும் ஆணவம். வித்யா கர்வம் என்று   சொல்வார்கள்.

நாம் எல்லாம் அறிந்து விட்டோம். என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் இந்த உலகில் . எனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்ற கர்வம் வரும்.

அந்த கர்வம் அழிவுக்கு வழி வகுக்கும்.

இறைவனை தொழுவது ஆணவத்தை அழிக்கும்.

நம் அறிவை, ஏதோ மார்கத்தில் தூண்டிச் செலுத்துவது எது ? அந்தத் துறையில் நாம் வெற்றி பெறச் செய்வது எது ?

சிந்திக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் ?

சிந்திப்போம்.



 


Saturday, November 29, 2014

தேவாரம் - சிலையாளி மலையாளி

தேவாரம் - சிலையாளி மலையாளி 


ஞான சம்பந்தர் திருவையாறு என்ற தலத்திற்குப் போகிறார்.

அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.

ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.

அங்குள்ள கரும்புகளில் கணுக்கள் இருக்கின்றன. அவற்றை கண் என்றும் சொல்லுவார்கள்.

கண் என்ன செய்யும் ?

பார்க்கும், அல்லது மூடித் தூங்கும்.

அவர் பார்க்கும் போது அந்த கரும்பின் கண்கள் எல்லாம் தூங்குவது போலத் தோன்றிற்று.

ஏன் தூங்க வேண்டும் ?

குளிர்ந்த , வாசமான தென்றல் காற்று சிலு சிலுவென வீசுகிறது.

அது மட்டும் அல்ல, அங்குள்ள சோலைகளில் உள்ள குயில்கள் இனிமையாக குரல் எழுப்புகின்றன. அது தாலாட்டு மாதிரி இருக்கிறது.

தென்றல் வருட, குயில் பாட...தூக்கத்திற்கு கேட்பானேன்.

அந்த மாதிரி கரும்பின் கண் வளரும் திருவையாற்றில் யார் இருக்கிறார் தெரியுமா ?

வானில் பறக்கும் மூன்று உலகங்களைச் செய்து அவற்றின் மூலம் மற்றவர்களுக்குத் துன்பம் தந்ததால் அவற்றை அழிக்க அம்பு தொடுத்த, கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.

பாடலைப் பாருங்கள்

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு 
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

சீர் பிரித்த பின்

நின்று உலாவும் நெடு விசும்பு நெருக்கி வரு புர மூன்று நீள்வாய் அம்பு  
சென்று உலாம் படி தொட்ட சிலையாளி மலையாளி சேருங் கோயில்
குன்றெல்லாம்  குயில் கூவக் கொழும் பிரச மலர் பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடி வருடச்  செழுங் கரும்பு கண் வளரும்  திருவையாறே.


பொருள்

நின்று உலாவும் = ஒரு இடத்தில் நில்லாமல் எங்கும் பறந்து திரியும்

நெடு விசும்பு = நீண்ட வானத்தில்

நெருக்கி வரு = ஒன்றாகச் சேர

புர மூன்று = மூன்று உலகங்களையும்

நீள்வாய் = நீண்ட

அம்பு சென்று உலாம் படி = அம்பு சென்று தைக்கும் படி

தொட்ட = விட்ட

சிலையாளி = வில்லைக் கொண்டவன்

மலையாளி  = கைலாய மலையில் இருக்கும் சிவன்

சேருங் கோயில் = வந்து அடையும் கோயில்

குன்றெல்லாம்  = எல்லா குன்றுகளிலும்

குயில் கூவக் = குயில்கள் கூவ

கொழும் = சிறந்த

பிரச = தென்

மலர் பாய்ந்து = மலரின் மேல் சென்று

வாசமல்கு = வாசத்தைப் பெற்றுக் கொண்டு

தென்றலார் = தென்றல் காற்றானது

அடி வருடச் = பாதத்தை வருட

செழுங் கரும்பு = வளர்ந்த கரும்பு

கண் வளரும் = கண்கள் தூங்கும்

திருவையாறே = திருவையாறே

ஏதோ கோவிலுக்குப் போனோம்,  அர்ச்சனை பண்ணினோம், பிரகாரத்தை நாலு முறை  வலம் வந்தோம் , பஸ்ஸைப் பிடித்து ஊர் வந்தோம் என்று இல்லாமல், அங்குள்ள இயற்கையை  இரசிக்கிறார்.

இறைவன் என்பவன் கோவிலுக்கு உள்ளே மட்டும் இருப்பவன் அல்ல.  எங்கும் நீக்கமற  நிறைந்து இருப்பவன்.

எங்கோ உள்ள குன்று, அதில் கண்ணுக்குத் தெரியாத குயில், அது பாடும் இசை,  தலை வருடும் பூங்காற்று, அதில் தவழ்ந்து வரும் இசை, அது கேட்டு கண் வளரும்  கரும்பு....இது எல்லாம் சேர்ந்ததுதான் இறைவன்.

இந்த பிரமாண்டமான இயற்கைதான் இறைவன்.

இறைவனை கோவிலுக்குள் மட்டும் தேடாதீர்கள். கோவிலுக்கு வெளியேயும் அவன்  தான்.

தேவாரம் ,  இப்படி எத்தனையோ அருமையான பாடல்களைக் கொண்டது.

நேரம் இருப்பின் மூலத்தைப் படித்துப் பாருங்கள்.

கொட்டி கிடக்கிறது. அள்ளிக் கொள்ளுங்கள்.

   .

Friday, November 28, 2014

தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.


திருவையாறு !

திரு ஞான சம்பந்தர் காலத்து திருவையாறு !

பச்சை பசேலென்ற வயல் பரப்புகள்.

வயல் எங்கும் நெல். வயலில் நீர் நிறைந்திருக்கிறது. எவ்வளவு நீர் என்றால் , அந்த வயல்களில் தாமரை மலர் பூத்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு நீர் என்று.

பசுமையான நெற் பயிர்களின் ஊடே சிவந்த தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன.

வயல் வெளியில் ஊடாடும் தென்றல்.

அதன் அருகே கொஞ்சம் வீடுகள். வீட்டின் முற்றத்தில்  சில பல தென்னை மரங்கள். மரத்தடியில் தடி தடியாக சில எருமைகள். அதன் அருகே அந்த எருமையின் கன்றுகள்.

நெல்லின் தலை கோதிய காற்று தென்னை மரத்தின் மேலும் படர்ந்தது. அப்போது, அந்த தென்னை மரத்தில் இருந்த சில காய்ந்த தென்னக் குருளைகள் உதிர்ந்து விழுந்தன.

அந்த சத்தத்தில் , எருமை கன்றுகள் துள்ளி எழுந்து , தாமரை மலர்கள் சூழ்ந்த வயல் வெளியில் ஓடின.


இது தேவாரப் பாட்டில் வருகிறது சொன்னால் நம்ப முடிகிறதா ?


பாடல்

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

சீர் பிரித்த பின்

அஞ்சாதே கயிலாய மலை எடுத்த  அரக்கர் கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடும் தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள் புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாய இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி  இருந்து அங்கு ஓடி 
செஞ்சாலிக் கதிர் உழக்கி செழுங்கமல வயல் படியுந் திருவையாறே.

பொருள்

அஞ்சாதே = அஞ்சாமல்

கயிலாய மலை = கயிலாய மலையை

எடுத்த = எடுத்த

 அரக்கர் கோன் = அரக்கர்களின் அரசன்

தலைகள் பத்தும் = தலைகள் பத்தும்

மஞ்சாடும் = வலிமை பொருந்திய

தோள் நெரிய = தோள்களும் நெரியும் படி

அடர்த்து = சண்டையிட்டு (இங்கே அழுத்தி )

அவனுக்கு = அந்த இராவணனுக்கு

அருள் புரிந்த  = அருள் புரிந்த

மைந்தர் கோயில் = காப்பவனின் கோயில்

இஞ்சாய = இஞ்சி போல உலர்ந்த

இளம் தெங்கின் பழம் வீழ = சிறிய தென்னையின் குருளை விழ

இள மேதி = எருமைக் கன்றுக் குட்டி

இருந்து அங்கு ஓடி  = அங்கிருந்து ஓடி

செஞ்சாலிக் = செந் நெல்

கதிர் = கதிர்களை

உழக்கி = மிதித்துக் கொண்டு

செழுங்கமல = சிவந்த தாமரைகள் உள்ள

வயல் = வயல்கள்

படியுந் = உள்ள

திருவையாறே.= திருவையாறே

என்ன ஒரு அழகான பாட்டு...இல்லையா ?

பாட்டு அழகாக இருந்தாலும்...

வயல் வெளியில் தாமரை பூத்தது, தென்னை மரத்தில் இருந்து குருளை விழுந்தது, எருமைக் கன்று ஓடியது, இராவணனுக்கு அருள் புரிந்த சிவன் அமரும்  கோயில்....என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறதே ?

சிலருக்கு எதைப் பார்த்தாலும் தனக்கு அது வேண்டும் என்று நினைப்பார்கள்.

நல்ல வீட்டைப் பார்த்தால், நமக்கு இந்த மாதிரி ஒரு வீடு இருந்தால் தேவலை என்று நினைப்பார்கள்..

அழகான பெண்ணை பார்த்தால் , தனக்கு வேண்டும்.

காண்பதெல்லாம் வேண்டும்.

அது ஒரு வகை.

இன்னொரு வகை, அடைய வேண்டும் என்ற ஆசை இல்லாமல், அது அது அங்கங்கே இருக்கட்டும் என்று அவற்றை அப்படியே பார்த்து இரசிப்பதோடு நிற்பது.

இராவணன் என்ன நினைத்தான் ....?

கைலாய மலையே தனக்கு வேண்டும் என்று நினைத்தான். மலையை தூக்கிக் கொண்டு போய் விட நினைத்தான். அவன் வலிமைக்கு மலையை தூக்க நினைத்தான்.

நம் வலிமைக்கு நாம் எதை எதையோ தூக்க நினைக்கிறோம்.

எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பது ஆணவம். ஆணவம் அழியும் இடத்தில்  அருள் கிடைக்கும்.

பக்தி என்றால் எல்லா பற்றையும் விட்டு விட்டு இறைவன் மேல் அன்பு செலுத்துவது  ஒன்று மட்டும் தான் என்று ஒரு எண்ணம் பலருக்கு உண்டு.

உலக இன்பங்களை வெறுத்து ஒதுக்க வேண்டும். இறைவன் ஒருவனையே நேசிக்க வேண்டும் என்று பலர் நினைப்பது உண்டு.

அது அல்ல பக்தி,

பக்தி என்பது உலகை, இயற்கையை இரசிப்பது, அதன் ஆச்சரியங்களில் மூழ்குவது,

இறைவன் வேறு இயற்கை வேறு என்பது அல்ல.

தென்னை மரம், அதன் அடியில் எருமைக் கன்று, வயல் வெளி, அதில் பூத்த தாமரை என்று  இயற்கையோடு ஒன்றுகிறார் ஞான சம்பந்தர்.

நாம் செல்லும் வழியில் நிற்கும் மரங்களை  நாம் எத்தனை முறை இரசித்து இருக்கிறோம் ?

மழையில் நனைந்த மரங்களை, ஜன்னலோரம் பறந்து செல்லும் அந்த பெயர் தெரியாத  பறவையை, தாயின் தோளில் நிம்மதியாகக் தூங்கிக் கொண்டு வரும் குழந்தையை, நிலவோடு கட்டிப் பிடித்து விளையாடும் மேகங்களை, இப்படி நம் வாழ்க்கையில் அன்றாடம் ஆயிரம் அதிசயங்கள்  நம் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. நாம் தான் கண் மூடிச் செல்கிறோம்.

பணம் ஒன்றே குறியாக  அலைகிறோம். அது வேண்டும், இது வேண்டும் , அதுவும்  வேண்டும், இதுவும் வேண்டும் என்று ஆலாய் பறக்கிறோம்....இராவணன் மாதிரி

மலையைப் பார்த்தால் தனக்கு வேண்டும்.

மற்றவன் மனைவியைப் பார்த்தால் தனக்கு வேண்டும்

சற்று நேரம் அடையும் ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு இயற்கையை இரசியுங்கள்....

மனைவியின் வெட்கப் புன்னகையை, பிள்ளையின் மலர்ந்த முகத்தை, சில்லென்று  முகத்தில் படும் நீரை...

இத்தனை சந்தோஷங்களும் உங்கள் முன்னால் கொட்டிக் கிடக்கிறது. அனுபவியுங்கள்.

பக்தி பின்னால் வரும்.....


Thursday, November 27, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?


இராமனுக்குத் தந்த வாக்குறுதியை சுக்ரீவன் மறந்தான். அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை சுக்ரீவனிடம்  அனுப்பினான். இலக்குவனும் மிகுந்த சினத்துடன் வருகிறான்.

குரங்குகள் என்ன செய்வது என்று அறியாமல் தாரையிடம் சென்று யோசனை கேட்டன. தாரை அவர்களை பலவாறு ஏசுகிறாள்.

அந்த சமயத்தில் இலக்குவன் கோட்டையை நெருங்கி விட்டான். குரங்குகள் சென்று கோட்டை கதவை அடைத்தன . இலக்குவன் அதை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு வேகமாக வருகிறான்.

குரங்குகள் மீண்டும் தாரையிடம் ஓடி வருகின்றன..

"இப்ப என்ன செய்வது " என்று கேட்க்கின்றன ....

பாடல்


அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர்.

பொருள் 

அன்ன காலையின் = அந்த நேரத்தில் (காலத்தில் )

ஆண் தகை ஆளியும் = ஆண்களில் சிங்கம் போன்ற அவனும் 

பொன்னின் = பொன் போன்ற சிறந்த உயர்ந்த

நல்நகர் = அந்த நல்ல நகரின் (கிட்கிந்தையின் )

வீதியிற் புக்கனன்; = வீதியில் புகுந்தான்

சொன்ன தாரையைச்  = முன்னால் சொன்ன தாரையை

சுற்றினர் நின்றவர் = மீண்டும் வந்து சூழ்ந்து கொண்டனர்

“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர். = என்ன செய்வது இப்போது என்று வந்தோம்  என்றனர்.



Tuesday, November 25, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர்

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர் 


தன் முன்னால் நிற்கும் குரங்குக் கூட்டத்தை பார்த்து மேலும் தாரை சொல்கிறாள்.

"மனைவியை பிரிந்த அந்த தேவர்களின் மேலோன், உயிர் பிரிந்த மாதிரி சோர்வடைவான். அதை நீங்கள் நினைத்துப் பார்க்காமல், கருங்குவளை மலர் போன்ற கண்களை கொண்ட உங்கள் மனைவியருடன் காதல் நீரைப் பருகிக் கொண்டு இருக்கிறீர்கள்"

பாடல்

தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்

காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர்.

பொருள்

தேவி நீங்க = சீதை நீங்க

அத் தேவரின் சீரியொன் = தேவர்களை விட சிறந்தவனான அவன்

ஆவி நீங்கினன்போல் = உயிர் பிரிந்ததைப் போல

அயர்வான் = சோர்வடைவான்

அது பாவியாது = அந்தி நினைத்துப் பார்க்காமல்

பருகுதிர் போலும் = சுவைப்பீர்கள் போலும்

நும் = உங்கள்

காவி நாள்மலர்க்  = அன்று பூத்த குவளை மலர் போன்ற

கண்ணியர் = கண்களை கொண்டவர்களின்

காதல் நீர் = காதல் நீர்

காதல் நீர் என்பதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை உங்களிடமே விட்டு விடுகிறேன்....:)

ஒரு பெண், முன்னால் நிற்கும் பெரிய ஆண்கள் கூட்டத்தைப் பார்த்து இவ்வளவு  உரிமையோடு கண்டித்து திட்டுகிறாள் என்றால் அவளின் ஆளுமை எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும்.

முன்ன பின்ன தெரியாத ஒரு கூட்டத்தைப் பார்த்து ஒரு பெண் இப்படி பேச முடியுமா .....

அது மட்டும் அல்ல, இந்தப் பகுதியை கம்பன் ஏன் வைத்து இருக்கிறான் ?

சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு சொன்ன வாக்கை மறந்து விட்டான். இலக்குவன்  கோபித்து வந்தான். தாரை சமாதானப் படுத்தினாள். எல்லாம் சரியாகி விட்டது.

இந்த பகுதி இல்லாவிட்டால் , காப்பியம் என்ன ஆகி இருக்கும் ? ஒன்றும் ஆகி இருக்காது.  கதையின் ஓட்டத்திற்கு இந்த பகுதி தேவை இல்லை தான்.

குறித்த காலத்தில் சுக்ரீவன் வந்தான் என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.

மாறாக, இவ்வளவு நீட்டி கம்பன் சொல்லக் காரணம் என்ன....?

காரணம் இருக்கிறது.

முதலாவது, ஒரு தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவன் அமைச்சர்களும், குடிகளும் ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.  சுக்ரீவன் இன்பத்தில் மூழ்கி சொன்ன சொல்லை மறந்தான். அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி  என்று மற்றவர்களும் அப்படியே இருந்து விட்டார்கள்.

இது ஒரு முதல் பாடம் - தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவனுக்கு கீழே உள்ளவர்களும்  ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.

அதை விட முக்கியமான பாடம் என்ன என்றால், மனிதன் ஏன் கடமை தவறுகிறான் ?

முதல் காரணம் போதை. போதைக்கு அடிமையானதால் சுக்ரீவன் தன் நிலை மறந்தான்.

இரண்டாவது, காமம். கண்ணியர் காதல் நீர் பருகிக் கிடந்ததால் மற்றவர்களும் சொன்ன சொல்லை காக்கத் தவறினார்கள்.

மதுவும் மாதுவும் மனிதனை தடம் புரளச் செய்யும்.

மேலும் சிந்திப்போம்.



Monday, November 24, 2014

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே


இத்தனை ஆட்டமும் பாட்டமும் ஓட்டமும் எதற்கு ?  எதை அடைய இத்தனை முயற்சிகள் ?

படித்து, மணம் முடித்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, அவர்களை திருமணம் செய்து கொடுத்து....பின் என்ன ?

ஒன்றும் இல்லை ! ஒன்றும்  இல்லாமல் போவதற்கா இத்தனை பாடு ?

நாவுக்கரசர் சொல்கிறார்

"பூவைக் கையில் கொண்டு அவன் பொன் போன்ற அடிகளை போற்றுவதில்லை. நாக்கினால் அவன் நாமம் சொல்வதில்லை. இந்த உடம்புக்கே நாளும் இரை தேடி அலைந்து, முடிவில் காக்கைக்கு இரையாக இந்த உடலை விட்டு, வாழ்நாட்களை கழிப்பார்களே"

பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

பொருள்

பூக் = பூவைக்

கைக் கொண்டு = கையில் கொண்டு

அரன் = சிவனின்

பொன்னடி= பொன் போன்ற திருவடிகளை

போற்றிலார் = போற்ற மாட்டார்கள்

நாக்கைக் = நாக்கினைக்

கொண்டரன் = கொண்டு + அரன்

நாமம் நவில்கிலார் = பெயரைச் சொல்ல மாட்டார்கள்

ஆக்கைக் கேயிரை தேடி = ஆக்கைக்கே + இரை + தேடி = இந்த உடம்புக்கு தீனி தேடி

அலமந்து = அலமந்து (அலைந்து)

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே = காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே

இந்த உடல் எப்படியும் மடிந்து போகப் போகிறது.  மடிந்த உடன் மக்கிப் போகும்.

அதற்கு முன் இந்த உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம் ....

 காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு.

என்பார் பட்டினத்தார்.

கடைசி காலம் வருமுன்னே குற்றாலத்தானையே கூறு என்றார்.


Saturday, November 22, 2014

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

வாழ்க்கையில் பல துன்பங்களுக்குக் காரணம் மெய் எது பொய் எது என்று அறியாமல் குழம்புவதுதான்.

சரி எது, தவறு எது ?
நல்லது எது, கெட்டது எது ?
நல்லவர் யார் , கெட்டவர் யார் ?
எது சரியான பாதை, எது தவறான பாதை ?

என்று தெரியாமல் பல தவறான முடிவுகளை எடுத்து விட்டு தவிக்கிறோம்.

பொய்யானவற்றை விட்டு உண்மையானவற்றை அடைய வேண்டும்.


பொய் என்பது பொய் அறிவு, பொய் உணர்வு.
மெய் என்பது மெய் அறிவு, மெய் உணர்வு.


எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் , அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு  என்பார் வள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மையத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு  என்பதும் அவர் வாக்கே.

இறைவனை அறியும் போது பொய் விலகும், உண்மை புரியும்.



Thursday, November 20, 2014

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார்

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார் 


பெண்மை, மென்மை படுத்துகிறது. தாய், சகோதரி, காதலி, மனைவி, நண்பி என்று பெண்கள் எங்கெங்கும் ஆண்களை மென்மை படுத்துகிறார்கள்.

பெண் தொடர்பு இல்லாதவர்கள் கொஞ்சம் ஈரம் குறைந்தவர்களாக இருப்பார்களோ என்னவோ.

"தாயினும் சாலப் பரிந்து " என்பார் மணிவாசகர்.

"தாயினும் நல்லான் " என்று குகனை சொல்வார்  கம்பர்.

நந்தியின் ஊரில் வாழும் ஒரு பெண். அவளுக்கு நந்திவர்மன் மேல் காதல். ஒரு தலைக் காதல்.

அவளுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் என்றால், அது இந்த மாலைப் பொழுதின் மேல்தான்.

அது எப்ப வருமோ என்று பயந்து கொண்டே இருப்பாள்.

அவள் பயத்தை இன்னும் அதிகரிக்கும் படி, அந்த நிலவும், சீக்கிரம் சீக்கிரம் வந்து விடுகிறது.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல், வேகமாக வந்து விடுகிறது.

"பெண்கள் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மாதிரி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்  இப்படி வருகிறாயே நிலவே " என்று அந்த நிலவின் மேல் கோபம் கொள்ளுகிறாள்.


பாடல்

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
                தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
                வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.



Wednesday, November 19, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?


இராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்ததால், சுக்ரீவன் மீது கோபம் கொண்டு இலக்குவன் அவனோடு சண்டை பிடிக்க மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

வானரங்கள் எல்லாம் தாரையிடம் வந்து அவளிடம் யோசனை கேட்டு நின்றன.

ஒரு பெண். ஒரு அரசை எப்படி செலுத்தி இருக்கிறாள் என்று கம்பன்  காட்டுகிறான்.

தன் முன்னால் பயந்து நடுங்கி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து தாரை சொல்லுகிறாள்

"வாலியின் உயிரை காலனுக்குக் கொடுத்து, வற்றாத செல்வத்தை உங்களுக்குக் கொடுத்த இராமனும் இலக்குவனும் ஊருக்கு வெளியே சும்மா உட்கார்ந்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்களா ? இப்படி உதவி செய்தவர்களை புறக்கணிப்பது உங்களுக்கு தகுமா ?"

என்று அவர்களை கடிந்து கூறுகிறாள் .

பாடல்

'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்
கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால், உம் புறத்து இருப்பார்! இது
சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.

பொருள்

'வாலி ஆர் உயிர்  = வாலியின் உயிரை

காலனும் வாங்க = காலன் வாங்க

விற் கோலி = வில்லை வளைத்து 

வாலிய செல்வம் கொடுத்தவர் = வற்றாத செல்வம் கொடுத்தவர் (அல்லது வாலியின் அந்த செல்வத்தை கொடுத்தவர் )

போலுமால் = அவர்கள்

உம் புறத்து = உங்கள் ஊருக்கு வெளியே

இருப்பார்! = (சும்மா) இருப்பார்கள் என்று (நினைத்து அவர்களை புறக்கணிப்பது )

இது சாலுமால் = இது சரியா ?

உங்கள் தன்மையினோர்க்கு எலாம் =உங்களைப் போன்றோருக்கு எல்லாம்

நன்றி மறப்பது நன்றன்று என்பார் வள்ளுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்பதும் அவர் வாக்கு.

நன்றி மறவாமையை அறமாகச் சொன்னவர்கள் நம் முன்னவர்கள்.

மேலும் சிந்திப்போம். 



திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !


மிக மிக ஆழமான வரிகள்.

இதில் முதல் வரியைப் பார்ப்போம்.

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்

"வெவ்வேறு விதமாக மாறும் இந்த உடம்பினுள் கிடக்க என்னால் முடியாது "

உங்கள் உடம்பைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன ?

உங்கள் உடம்பை உங்களுக்கு பிடிக்குமா ?

தங்கள் உடலை பிடிக்காதவர்கள் யார் இருப்பார்கள் ? அந்த உடலைத் தான் எப்படி எல்லாம் பாதுகாக்கிறோம் ?

சோப்பு, பவுடர், உதட்டுச் சாயம், முடி திருத்தம், உடற் பயிற்சி, என்று இந்த உடலை எப்படி எல்லாம் மெருகு ஏற்ற முடியுமோ அப்படியெல்லாம் அழகு படுத்துகிறோம்.

இந்த உடல் மூலம்தானே நாம் அத்தனை அனுபவங்களையும் பெறுகிறோம்.

புலன் இன்பங்களை அனுபவிக்கத்தானே இந்த பாடு படுகிறோம்.

ஆனால், சற்று ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இந்த உடலால் சுகமா ? இந்த சுகம் நிரந்தரமா ? இன்பம் போல் தோன்றும் இந்த இந்த இன்பம் எவ்வளவு நாள் கூட வரும் ? இதன் முடிவு என்ன ?

வயதாகும். உடல் தளரும். நினைவு தப்பிப் போகும். இருமலும் சளியும் வந்து சேரும். கண் பார்வை மங்கும். தோல் சுருங்கும். எலும்பு வளையும். காது கேட்காது. படுக்கையை விட்டு எழுந்திருப்பதே பெரிய வேலையாகிப் போகும்.

மறதி வந்து, சேர்த்து வைத்த அனுபவம் எல்லாம் செல்லாக் காசாகிப் போகும்.

மனைவி யார், கணவன் யார், பிள்ளை யார், பெற்றோர் யார் என்று தெரியாமல் மலங்க மலங்க விழிக்க  வேண்டி இருக்கும்.

அருகில் நிற்பவர்கள் எல்லாம், "கால காலத்தில் போய் சேர்ந்தால் நல்லது ..." என்று சொல்லும் நாள் வரும்.

இந்த உடம்பு சுகமா ?

இந்த உடம்பு மாறிக் கொண்டே இருக்கிறது. குழந்தையாக, சிறுவன்/சிறுமியாக, குமரன்/குமரியாக, வயதாகி, கிழவன்/கிழவியாக....நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில், நோய் நொடி வந்து படுத்து விடுகிறது.

நாளும் வயதாகிக் கொண்டே இருக்கும் இந்த உடலுக்கா இந்த பாடு ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்

வேறு வேறு விதமாக மாறிக் கொண்டே இருக்கும் இந்த உடம்பினுள் அடை பட்டு கிடக்க என்னால் முடியாது என்கிறார் மணிவாசகர். இந்த உடலை சிறையாக நினைக்கிறார். நம் உயிரை, எண்ணங்களை, நான் என்ற என்னை அடைத்து வைக்கும் சிறை இந்த உடல். நான் என்பது இந்த உடல் அல்ல என்று நினைத்தால் இந்த உடலின் பாரம் தெரியும் ?

"இங்கு யார் சுமந்து இருப்பார் இச்சரக்கை" என்பார் காளமேகம்.



முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே


முதுகைப் பிடித்துக் கொண்டு, கையால் தடவி தடவி , முன்னால் ஒரு கோலை ஊன்றிக் கொண்டு , உடல் நடுங்கி, கண் சுழன்று, இருமலோடு, இவர் எங்க அப்பா,  பெரிசு, என்று இளையவர் திட்டுமுன் , பத்ரிநாதனை வணங்குங்கள்  என்றார் ஆழ்வார். 

உடலினுள் அடை பட்டுக் கிடக்க முடியாது  என்கிறார்.

எது அடை பட்டுக் கிடக்கிறது ? உயிரா ? ஆன்மாவா ? நினைவுகளா ?

மாறும் உடலில் மாறாமால் இருக்கும் நான் யார் ?

சின்ன பிள்ளையாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

இளைஞனாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

கிழவனாக மாறும் போதும் நான் என்று சொல்வேன்.

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது...நான் என்பது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.

அது எது ?

உடலில் அடை பட்டு கிடைக்கவில்லை என்றால் அது எங்கு போகும் ?

அடைத்தது யார் ? விடுவிப்பது யார் ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்