Tuesday, June 30, 2020

திருக்குறள் - தீவினை அச்சம்

திருக்குறள் - தீவினை அச்சம் 

பெரிய பெரிய கட்டிடம் கட்டும் இடங்களில் பார்த்தால் தெரியும், அங்கே பலர் சாளரம் கட்டி, அந்த கம்புகளின் மேல் நின்று வேலை செய்வார்கள். ஒரே ஒரு கம்பி அல்லது கம்பு தான் இருக்கும். அதன் மேல் நின்று கொண்டு வேலை செய்வார்கள். நம்மால் முடியுமா? முடியாது. பார்க்கவே பயமாக இருக்கும். விழுந்து விடுவோமோ என்று அச்சமாக இருக்கும். 

முதன் முதலாக கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது, பயமாக இருக்கும். சுற்றிலும் வண்டிகள், நாம் யார் மேல் மோதி விடுவோமோ என்று அச்சம். யார் நம் மீது மோதி விடுவார்களோ என்று அச்சம். ஆனால், பழக்கம் ஆகி விட்டால், கார்ஓட்டிக் கொண்டே cd மாத்துவோம், கை பேசியில் பேசுவோம், தண்ணீர் குடிப்போம். என்ன ஆயிற்று? பழக்கம். 

பழக்கம் இல்லாவிட்டால் பயமாக இருக்கும். பழக்கமாகி விட்டால் பயம் போய் விடும். 

திருவள்ளுவர் செயலால் ஏற்படும் குற்றங்களை பற்றிச் சொல்ல வந்த அதிகாரத்துக்கு "தீ வினை அச்சம்" என்று பெயரிட்டார். 

"தீ வினை தவிர்த்தல்" அல்லது "தீ வினை ஒழித்தல்" என்று பெயர் இட்டு இருக்கலாமே? 

தீ வினை செய்ய அச்சப் படு என்கிறார். 

முதலில் மனதில் அச்சம் வர வேண்டும். பயம் இல்லாவிட்டால் துணிந்து செய்து விடுவோம். 

"ஐயோ, நான் மாட்டேன்பா...ரொம்ப ஆபத்தானது " என்று விலகி ஓட வேண்டும். 

எப்போது அச்சம் போகும்? ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்து பழகி விட்டால், அதில் உள்ள அச்சம் போய் விடும். 

முதலில் வண்டி ஒட்டவே பயந்தவன், இப்போது 100 அல்லது 120 கிலோ மீட்டர் வேகத்தில்  ஓட்டுகிறான். 

அது போல, களவு எடுக்க பயந்தவன், பழகிய பின், கோடிக்கணக்கில் களவு செய்யத் தலைப்படுவான். 

சின்ன தவறுகளை போனால் போகிறது என்று விட்டவர்கள், பெரிய தவறு  செய்யும் போது பிடித்து  சிறையில் போட்டு விடுகிறார்கள். 

மீண்டும் மீண்டும் செய்யும் போது, எப்போதோ ஒரு தரம் மாட்டிக் கொள்கிறான். 

எனவே, தீ வினை செய்வதில் அச்சம் வேண்டும். 

இரண்டாவது, 

அச்சம் என்பது மனதில் எழுவது. அதற்கு மனப் பயிற்சி வேண்டும். எதற்கு பயப்படுவது,  எவ்வளவு பயப்படுவது என்று மனதை பழக்க வேண்டும். இல்லை என்றால், ' பயமாகத்தான் இருக்கிறது...இருந்தாலும் செஞ்சு பார்ப்போமே" என்று மனம் விரும்பும். எனவே, தீயவை செய்யலாம் இருக்க வேண்டும் என்றால், தீயனவற்றை கண்டு அஞ்ச வேண்டும். 

மூன்றாவது, 

சிலர் ஒரு பயமும் இல்லாமல் தீயனவற்றை செய்கிறார்களே என்றால்,  முற் பிறவியில்  தீமை செய்து பழகி இருப்பார்கள் என்று சொல்கிறார் பரிமேல் அழகர். 

சில வருடங்களுக்கு முன்,  ஒரு பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்ட்டது பற்றி அறிந்தோம். அப்படி ஒரு கொடுமையை செய்ய முடியுமா? நினைத்தாலே நமக்கு மனம் நடுங்குகிறது அல்லவா? அதை ஒருவன் செய்திருக்கிறான். அவன் அது போல் முன்பே செய்திருக்க மாட்டான். பின் எப்படி செய்தான் என்றால், அது முற்பிறவி வாசனை. 

ஒருவன் குற்றங்களை எளிதாகச் செய்கிறான் என்றால் அவன் முற்பிறவியில் பழகி விட்டான் என்று பொருள். 



நான்காவது,

இப்போது தீமை செய்து பழகி விட்டால், அது இப்பிறப்பில் மட்டும் அல்ல, பின் வரும்  பிறவியிலும் தொடரும். சிலர் கேட்கிறார்கள், "அவன் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான். நல்லாத்தான் இருக்கிறான். இந்த சாத்திரம், சம்பிரதாயம், அறம் எல்லாம் பொய் தான் போலிருக்கிறது" என்று. 

அல்ல. அவன் செய்யட்டும். செய்து பழகட்டும். அந்த பழக்கம் தொடரும். 

இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்தப் பிறவியில் அதற்கான தண்டனை வரும். நீ செய்து பழகாதே என்கிறார் வள்ளுவர். 

ஐந்தாவது, 

தீ வினை செய்வதில் உள்ள அச்சம் போய் விட்டால், பின் தீ வினை செய்வதற்கு காரணங்கள் கண்டு பிடித்து  அதை ஞாயப் படுத்தத் தொடங்கி விடுவோம். அச்சம் ஒன்று தான், நம்மை அதில் இருந்து காக்கும். 


ஆறாவது, 

கொதிக்கிற எண்ணையில் கையை விடாதே என்று ஏதும் சட்டம் இருக்கிறதா?  சட்டம் இல்லாவிட்டாலும், நாம் அதைச் செய்வது இல்லை. சட்டம் போட்டு தடுத்தாலும்  தீய செயல்களை செய்கிறவன், சட்டமே இல்லாத போதும்   அந்தக் காரியத்தை செய்வது இல்லை. ஏன்? பயம். கொதிக்கிற எண்ணெய் சுடும். தோல் வெந்து விடும். வலிக்கும் என்ற பயம்.  ஒரு சமுதாயத்தில், தீ வினை செய்ய எல்லோரும் அச்சப் பட்டால், ஒரு சட்டம்,  காவல் தூரம், நீதித் துறை என்று ஒன்றும் வேண்டாம். ஒருவனும் செய்ய மாட்டான். 

ஏழாவது, 

சட்டம், நீதி மன்றம், சிறைச்சாலை எல்லாம் என்ன செய்யும்? கையில் காசு இருக்கிறது.  பாத்துருவோம் ஒரு கை என்று பயம் விட்டுப் போய் விட்டால், என்ன சட்டம் போட்டும்  பயன் இல்லை. சாட்சியை விலைக்கு வாங்குவது, அல்லது மிரட்டுவது,  அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது என்று எல்லாம் செய்து  வெளியில் வந்து விட முடியும். பயம் போய் விடும். சட்டம் போட்டு திருத்த முடியாது.  எனவே தான் சொன்னார் "தீ வினை செய்வதில் அச்சம் வேண்டும்" என்று.  நல்ல பாம்பை கையால் பிடிப்போமா? பிடிக்கக் கூடாது என்று சட்டம்இல்லை . இருந்தும் நாம் செய்வது இல்லை. காரணம், "அச்சம்"

வெறும் தலைப்புக்கு இவ்வளவு உரை. 

இனி அதிகாரத்துக்குள் போக வேண்டும். 

மலைப்பாக இருக்கிறது அல்லவா?



Monday, June 29, 2020

திருக்குறள் - மனக்கவலை

திருக்குறள் - மனக்கவலை 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது பெரிய சர்ச்சை. அவன் இருக்கிறான் என்றும் நிரூபணம் செய்ய முடியாது. இல்லை என்றும் நிரூபணம் செய்ய முடியாது. வாத பிரதி வாதங்கள் இரண்டு பக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சரி, இருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம். எதற்காக அவனை வணங்க வேண்டும்? வணங்கினால்தான் நல்லது செய்வார் என்றால் அவனுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு? இறைவன் எல்லாம் வல்லவன் என்றால், நாம் வணங்கி அவனுக்கு ஆகப் போவது என்ன அல்லது நாம் வணங்காமல் விட்டால் அவனுக்கு என்ன குறைந்து விடப் போகிறது? ஒன்றும் இல்லை.. பின் எதற்கு வேலை மெனக்கெட்டு வணங்க வேண்டும்.

இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஆண்டவன் படைப்பு என்றால், அவர்களுக்கு நல்லது செய்வது அவன் கடமை அல்லவா. என் பிள்ளை என்னை வாங்கினால்தான் அவனுக்கு நல்லது செய்வேன் என்று எந்த தகப்பனாவது சொல்வானா?

பின் எதற்கு வணங்க வேண்டும்.

வள்ளுவர் சொல்கிறார்....

"நீ வணங்கி அவனுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. நீ வாங்காவிட்டால் அவனுக்கு ஒரு நட்டமும் இல்லை. ஆனால், அவன் இருக்கிறான் என்று நம்பி அவனை  வணங்கினால், உன் மனக்கவலைகள் தீரும்.  மனக் கவலைகள் தீர வேண்டும் என்றால்   அவனை வணங்கு. வேண்டாம் என்றால் உன் இட்டம்" என்கிறார்.

பாடல்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பொருள்

தனக்குவமை  = தனக்கு உவமை (சமம்)

இல்லாதான்  = இல்லாதவன்

தாள்சேர்ந்தார்க்கு = திருவடிகளை சேர்ந்தவருக்கு

அல்லால் = மற்றவர்களுக்கு

மனக்கவலை = மனதில் உள்ள கவலைகளை

மாற்றல் அரிது = மாற்றுவது அரிது.

நமக்கு ஒரு கவலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.    நம்மால் அதை தீர்க்க முடியவில்லை.

மற்றவர்கள் உதவியை நாடுகிறோம். அவர்களாலும் முடியவில்லை.

இப்போது என்ன செய்வது?

கடவுள் நம்பிக்கை இருந்தால், "ஆண்டவா என்னை இந்த சங்கடத்தில் இருந்து காப்பாற்று"  என்று வேண்டலாம்.  காப்பாற்றுகிறானோ இல்லையோ, அப்படி   வேண்டுவதன் மூலம் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது. கவலை கொஞ்சம்  குறைகிறது.

ஒரு வேளை  காப்பாற்றாவிட்டால் கூட, அந்த கவலையின் விளைவுகளை மனம் ஏற்றுக் கொள்ள பக்குவப் பட்டு விடுகிறது.

"எல்லாம் அவன் செயல்" என்று அவன் மேல் பாரத்தைப் போட்டு விடுவதால், கவலை கொஞ்சம்  மாறுகிறது.

அப்படி ஒரு நம்பிக்கை இல்லை என்றால், மற்றவர்கள் மேல் கோபம், தன் மேல் ஒரு  தன்னிரக்கம், என்னால் ஒன்றும் முடியவில்லை என்று ஒரு சுய பச்சாதாபம், எல்லாவற்றின் மேலும் ஒரு வெறுப்பு, கோபம், என்று கவலை பன்மடங்காகி விடும்.

பெற்றவர்கள், நண்பர்கள், அரசாங்கம், இந்த மக்கள், இந்த கல்வி முறை, இந்த நாடு, என்று எல்லோர் மேலும் கோபம், வெறுப்பு, என்று வந்து மனம் மேலும்  அழுத்தப்பட்டு விடும்.

"ஐயா, நீ பார்த்து ஏதாவது செய்" என்று அவனிடம் விட்டு விட்டால், மனக் கவலை குறையும்.

அதற்காகவேனும், அவன் தாள் வணங்கு.  அதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்   வள்ளுவர்.

தாளை வணங்காவிட்டால் , மனக் கவலையோடு அலைந்து கொண்டு இருப்பாய் என்கிறார்.

மனக் கவலையை மாற்ற வேண்டுமா ? வேண்டாமா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_29.html

Sunday, June 28, 2020

பொது - பயிற்சி

பொது - பயிற்சி 


நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் மருத்துவரை சென்று பார்க்கிறோம். பொதுவாக மருத்துவர் என்ன சொல்லுவார் " நல்ல உடற் பயிற்சி செய்யுங்கள். இரத்த அழுத்தம் சரியாகும், சர்க்கரை அளவு சரியாக இருக்கும், உடல் எடை குறையும், சுவாசம் சரியாகும் " என்று உடலில் வரும் பல நோய்களுக்கு மருந்தாக உடல் பயிற்சியை சொல்லுவார்.

மேலும், உடல் பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால், அது உடல் நலத்திற்கு நல்லது. மூட்டு வலி வராது, தசைகள் வலுவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி வளரும்.

இப்போது அறிவியலில், உடல் பயிற்சி செய்தால் நினைவு ஆற்றல் வளரும் என்கிறார்கள். மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வராது என்கிறார்கள். ஞாபக மறதி, அல்ஸைமர், பார்கின்சன் போன்ற நோய்கள் வராது என்கிறார்கள்.

மாற்று கருத்து இல்லை.

ஆங்கில அறிவியல் மற்றும் சிந்தனை அந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.

நம்மவர்கள் அதற்கு மேல் எங்கேயோ போய் விட்டார்கள்.

மனிதன் என்பவன் உடல் மட்டும் அல்ல.

அவனுக்கு மனமும் இருக்கிறது.

மனப் பயிற்சி  என்று   யாரவது , எப்போதாவது சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா?

"நீங்கள் தினமும் 30 நிமிடம் மனப் பயிற்சி செய்யுங்கள்" என்று சொல்லக் கேட்டு இருக்கிறோமா?

தியானம், மெடிடேஷன் என்பதெல்லாம் நம்மவர்கள் கண்டுபிடிப்பு.

தியானம் கூட மனதை ஒருமுகப் படுத்துவதுதானே அன்றி பொதுவான பயிற்சி என்று சொல்ல முடியாது.

தமிழ் இலக்கியம், மனப் பயிற்சி பற்றி மிக அடிப்படையாக பேசுகிறது.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

அறம் செய்ய விரும்பு. 

அறம் செய் என்று சொல்லி விட்டுப் போய் இருக்கலாமே? அது என்ன விரும்பு?

விரும்பதல் என்பது மனத்தால் செய்வது. முதலில் மனப் பயிற்சி. மனம் பழகி விட்டால்  பின் செய்வது எளிது.

மனத்திற்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் 
ஆகுல நீர பிற 

மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதுதான் அறம் என்கிறார் வள்ளுவர்.

மனதில் ஆயிரம் குற்றங்கள் நிகழ்கின்றன.

கோபம் - காமம் - பொறாமை - புறம் கூறுவது - பொய்மை ...

இந்த மனக் குற்றங்களினால், பல புற குற்றங்கள் விழைகின்றன.

மனதை சரி படுத்த வேண்டும் என்றால், அதை பழக்க வேண்டும்.

அதற்கு பயிற்சி வேண்டும்.

புலனடக்கம் என்பது எப்படி வரும்? மனதை அடக்கினால் புலன் அடங்கும்.

மனதை எப்படி அடக்குவது? அதை பழக்க வேண்டும்.

மனப் பயிற்சி பற்றி சிந்தியுங்கள்.

இது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கின்றது.

வருகின்ற நாட்களில் இது பற்றி நிறைய சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_28.html

Saturday, June 27, 2020

தேவாரம் - சொல்லாய் கழிகின்றது

தேவாரம் - சொல்லாய் கழிகின்றது 



பெரும்பாலானோர் வாழ்க்கை என்பது என்ன ?

பிறந்தார் - வளர்ந்தார் - மூப்பு அடைந்தார் - இறந்தார்

என்ற இந்த நான்கு செயல்களில் அடங்கி விடுகிறது. கல்யாணம் கட்டி, பிள்ளைகள் பெற்று, வேலை பார்த்து, சம்பளம் பெற்று என்று கொஞ்சம் நீட்டிக்கலாம். அவ்வளவுதான்.

பிறந்தார் - படித்தார் - வேலை பார்த்தார் - மணந்தார் - பிள்ளைகள் பெற்றார் - மூப்பு அடைந்தார் - இறந்தார்.

அவ்வளவுதான். 7 சொற்கள். வாழ்க்கை முடிந்து விட்டது.

வேறு ஏதாவது நடக்கிறதா?

நம் வாழ்க்கை எல்லாம் இந்த சொற்களாய் போய் விட்டது. வேறு ஒன்றும் இல்லை.

இப்படி என் வாழ்வும் போய் விடக் கூடாது. நான் இந்த சூழலில் இருந்து தப்பிக்க வழி சொல் என்று இறைவனை வேண்டுகிறார் சுந்தரர்.

"மலையில் இருந்து அகிலும், ஒளி வீசும் மணிகளையும் கலந்து வரும் ஆற்றின் கரையில் இருக்கும் நெல் வாய் என்ற ஊரில் உறைபவனே, இந்த பிறவியில் பிறந்து, வளர்ந்து, மூப்பு அடைந்து, இறந்து போகும் இந்த சூழலில் இருந்து நான் உய்ய வழி சொல்வாய்"

என்கிறார்.

பாடல்


கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
  கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
  நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
  நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
  தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.  

பொருள்


கல்வாய் = மலை

அகிலுங்  = அகில் (மணம் வீசும் மரம்)

கதிர்மா மணியுங் = கதிர் ஒளி வீசும் மணிகளை

கலந்துந் தி = கலந்து + உந்தி = கலந்து வேகமாக

வருந் = வரும்

நிவவின்  = நிவா நதியின்

கரைமேல் = கரையில்

நெல்வா யில் = நெல் வாய் என்ற திருத்தலத்தில்

அரத் துறை = அரத்துறையில்

நீ டுறையும் =நீடு + உறையும் = நீண்ட நாள் இருக்கும்

நிலவெண் மதிசூ டிய = வெண்மையான நிலவை சூடிய

நின் மலனே = நிர்மலமானவனே

நல்வாயில் = நல்ல வீட்டினை

செய்தார் = கட்டினார்

நடந்தார் = நடந்தார்

உடுத்தார் = உடுத்தார்

நரைத்தார் = நரைத்தார்

இறந்தா ரென்று = இறந்தார் என்று

நா னிலத்திற் = இந்த உலகில்

சொல்லாய்க் = வெறும் சொல்லாய்

கழிகின் றதறிந் = கழிகின்றது அறிந்து

தடியேன் = அடியேன்

தொடர்ந்தே = தொடர்ந்து

னுய் யப் = உய்ய

போவ தோர் = போவது ஓர்

சூழல் சொல்லே.   = வழி சொல்லேன்



இதற்கு கி வா ஜா உரை சொல்லுவார்

ஒருவன் ரொம்ப கஷ்டப் பட்டு ஒரு வீடு கட்டினான். சிறுக சிறுக சேர்த்து கட்டிய வீடு.  பார்த்து பார்த்து கட்டினான்.

வீடு அருமையாக வந்து விட்டது. அவனுக்கு பெருமை தாளவில்லை. தன் வீட்டைப் பார்த்து  பார்த்து பெருமிதம் கொள்கிறான்.

காலையிலும் மாலையிலும் வீட்டின் முன் புறம் நடப்பான். வருகிற போகிற ஆட்களை பார்ப்பான். முற்றத்தில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பான்.

நல்ல உடை உடுத்திக் கொண்டு  வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பான்.


கொஞ்ச நாள் கழித்து வயதாகிப் போனது. அடிக்கடி வெளியே வர முடியவில்லை. படுத்த படுக்கையாகி விட்டான்.

அப்புறம் சில வருடங்களில் இறந்தும் போனான்.

இப்போது தேவாரத்தைப் படியுங்கள்.

"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
  நரைத்தார் இறந்தா ரென்று"

வீட்டைக் கட்டி - வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து - உடை உடுத்தி - நரை பருவம் எய்தி  - இறந்து போனான்.

வீடு என்பது இங்கே ஒரு உபமானம்.

வீடுதான் நம் உடம்பு. வீட்டைக் கட்டி,

நடத்தல் - படித்தல், வேலையை செய்தல் போன்றவை

உடுத்தார் - அனுபவித்தல்,மனைவி, மக்கள், சுற்றம், செல்வம் என்று கொஞ்ச நாள் அனுபவித்து

நரைத்தல் - வயதாகிப் போதல்

இறத்தல் - முடிவு

இப்படியா நம் வாழ்க்கையும் செக்கு மாடு  போல இந்த வட்டத்துக்குள்  சுத்தி சுத்தி வர வேண்டும்.

இதைத் தானே எல்லோரும் செய்கிறார்கள்.

பத்தோடு பதினொன்றாக நாமும் அப்படியே போக வேண்டியதுதானா .

பிறந்தான், வளர்ந்தான், இறந்தான் என்று ஒரு முக்கியத்துவம் இல்லாமல், பயனின்றி  இந்த வாழ்க்கை முடிய வேண்டுமா?

நான் உய்ய வழி சொல் என்று சுந்தரர் வேண்டுகிறார்.

நாம எப்படி?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_27.html

Friday, June 26, 2020

அபிராமி அந்தாதி - எழுதா மறை

அபிராமி அந்தாதி - எழுதா மறை 


தமிழை தாய் மொழியாகக் கொண்ட யாரிடமாவது அவர்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டால் சண்டைக்கு வருவார்கள். "என் தாய் மொழி தமிழ். எனக்குத் தமிழ் தெரியாதா?" என்பார்கள்.

தமிழ் மொழி மூன்று பிரிவுகள் உடையது.

இயல், இசை மற்றும் நாடகம்.

மூன்றும் தெரிந்தால் தான் தமிழ் தெரிந்ததாக அர்த்தம்.

இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்டுப் பாருங்கள். "வந்து, அது என்னன்னா ..." என்று இழுப்பார்கள்.

ஏன் இசையும், நாடகமும் தெரிந்து இருக்க வேண்டும்? அது ஏன் மொழியின் ஒரு கூறாக இருக்கிறது?

சொல்லுகின்ற தொனியிலும், சொல்லும் போது காட்டும் முக பாவத்திலும் சொல்லின் பொருள் மாறிப் போய் விடும்.

"உடம்பு எப்படி இருக்கிறது" என்ற கேள்வியை கேட்கும் விதத்திலும், காட்டும் முக பாவத்திலும் இருக்கிறது அதன் உண்மையான அர்த்தம். உண்டா ? இல்லையா?

எனவே, உச்சரிப்பும், பாவமும் முக்கியம் என்று வரையறை செய்தார்கள்.

சில ஆழ்ந்த அர்த்தங்களை எழுத்தில் கொண்டு வரவே முடியாது.

அவனும் அவளும் காதலிக்கிறார்கள்.  அவர்கள் பார்வையில் ஆயிரம் அர்த்தம். அதை எழுதிக் காட்ட முடியுமா?

கண்ணோடு கண்ணினை நோக்கின் வாய் சொற்கள் என்ன பயத்ததோ சால்பு.

தாய்க்கு பிள்ளை மேல் உள்ள பரிவு...அதை வார்த்தையில் வடிக்க முடியுமா?

உணர்ச்சிகளை  எழுத்தில் கொண்டு வர முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும்  அது தவறாகிப் போய் விடும்.

சொல்லிக் காட்டலாம். சொல்லும் போது முகம்  அந்த உணர்ச்சியை பிரதி பலிக்கும்.  அதில் ஆயிரம் அர்த்தங்கள் தோன்றும்.

I Love you என்று எழுதி காண்பிப்பதற்கும் , காதலியின் கையை பிடித்துக் கொண்டு , அவள் கண்களை பார்த்து சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?

அது போல்,  ஆழ்ந்த உண்மைகளை ஒருவன் ஆசிரியரிடம் இருந்து நேரடியாக கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது  என்று நம்பினார்கள் நம் முன்னவர்கள்.

வேதத்தை எழுதக் கூடாது. அதன் அர்த்தம் அதன் உச்சரிப்பில் இருக்கிறது என்பதனால்  கேட்டு பெற வேண்டும் என்று வைத்தார்கள்.

நாம் பல பாடல்களை படிக்கும் போது, அவற்றின் சொற்கள் எளிமையாக இருந்தால்,  "இது தான் எனக்குத் தெரியுமே" என்று சொல்லி விட்டு மேலே போய் விடுகிறோம்.

அதன் ஆழ்ந்த அர்த்தங்களை நாம் அறிந்து கொள்ள சில நேரம் தவறி விடுகிறோம்.

பாடல்



நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

பொருள்



நின்றும் = நின்றும்

இருந்தும் = ஓரிடத்தில் இருந்தும்

கிடந்தும் = கிடந்தும்

நடந்தும் = தேடி நடந்தும்

 நினைப்பது உன்னை = நினைப்பது உன்னை

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் = நான் எப்போதும் வணங்குவது உன் மலர் போன்ற பாதங்களை .

எழுதாமறையின் = எழுதப் படாத மறையின் (வேதத்தின், மறை பொருளின்)

ஒன்றும் அரும்பொருளே = அறிய ஒரு பொருளே

அருளே = அருளே வடிவானவளே

உமையே = ஒளி வடிவானவளே

இமயத்து அன்றும் பிறந்தவளே = என்று என்று அறியமுடியாத அன்று தோன்றியவளே

 அழியா முத்தி ஆனந்தமே = அழியாத முத்தியும், ஆனந்தமும் தருபவளே

உமா என்றால் ஒளி  என்று பொருள். ஒளி  அநாதியானது. என்று பிறந்தவள் என்று அறிய முடியாத அன்று பிறந்தவள் அவள்..

அது என்ன "எழுதா மறை" ?

வேதத்திற்கு இன்னொரு பெயர் "எழுதா மறை"

எழுத்துக்கும் சொல்லுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கும். உண்மையான அர்த்தம்  அதன் உச்சரிப்பில் இருக்கிறது. எனவே தான் அதை "எழுதா மறை  " என்றார்கள்.

பின்னால் வந்தவர்கள், "அது உயர் குலத்தவர் செய்த சதி. மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று எழுதாமல் வைத்தார்கள் " என்று கூறினார்கள்.

எழுதாமல் இருந்ததற்கு காரணம், எழுதினால் பொருள் பழுது பட்டுவிடும்  என்பதால்.

"எழுதா மறையின் அரும் பொருள்"  அவள்.

ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்து , புதைந்து கிடக்கின்றன.

என்று, எப்படி வெளிப்படுமோ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_26.html

Thursday, June 25, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வணங்கும் துறைகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வணங்கும் துறைகள்


ஆற்றில் இறங்கி குளித்து இருக்கிறீர்களா ? சிலு சிலு என்று நீர் ஓடிக் கொண்டிருக்கும். கரையில் இருந்து, முதலில் காலை நனைத்து, பின் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கி குளிப்பது ஒரு இனிய அனுபவம்.

எவ்வளவுதான் தெளிந்த, ஜில் என்ற நீராக இருந்தாலும், முழு ஆற்றையும் இரண்டு கைகளால் மறித்து கையில் ஏந்தி குளிக்க முடியுமா?

ஏதோ ஒரு படித்துறையில் இறங்கித் குளிக்க முடியும் அல்லவா?

படி இருக்கும் , பிடித்துக் கொள்ள கை பிடி இருக்கும், ஆற்று நீர் வேகமாக இழுக்காது, ஆழம் அதிகம் இருக்காது. தைரியமாக நீராடலாம்.

ஆற்றில் அங்கங்கே படித்துறைகள் செய்து வைத்து இருப்பார்கள்.

இறைவனைத் தேடி அடையும் வழி என்பது ஆறு போல. அது நீண்டும் அகன்றும் ஆழமாகவும் இருக்கும். நம்மால் அது முழுவதையும் அறிந்து கொள்ள முடியாது.

ஏதோ ஒரு படித்துறையில் இறங்கி கொஞ்சம் நீராடலாம். அவ்வளவுதான் முடியும்.

ஒவ்வொரு சமயமும் ஒரு படித்ததுறை.

சைவம், வைணவம், பௌத்தம், இஸ்லாமியம், கிறித்துவம் என்று பல படித்துறைகள்.

இதில்  என் படித்துறைதான் சிறந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நினைப்பே நகைப்புக்கு  இடமானது.

ஆறு ஒன்று, அது சேரும் கடல் ஒன்று. படித்துறைகள் வேறு அவ்வளவுதான்.

எல்லா படித்துறையிலும் ஒரே நீர் தான்.

நம்பவாழ்வார் சொல்கிறார்,

"இறைவனை வணங்கும் துறைகள் பல ஆகி, மக்களுடைய புத்தி வேறுபாட்டால் பல சமயங்கள் ஆகி, அவர்கள் வணங்கும் கடவுள்களும் பல ஆகி, அவற்றிற்குள் வேறுபாடுகள் பல ஆகி இருந்தாலும், எல்லாவற்றையும் நீயே உண்டாக்கி வைத்தாய், உனக்கு இணை யாரும் இல்லை, உன் பால் என் ஆசையை உண்டாக்கி வைப்பேன் " என்கிறார்.

பாடல்


வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96


பொருள்

வணங்கும் துறைகள் = வணங்குகின்ற துறைகள்

 பலபல ஆக்கி = பலவிதமாக உருவாக்கி

மதிவிகற்பால் = புத்தி வேறுபாட்டால்

பிணங்கும் = ஒன்றோடு ஒன்று மாறுபடும்

சமயம் பலபல ஆக்கி = பலவிதமான சமயங்களை உண்டாக்கி

அவையவைதோறு = அவற்றினுள்

அணங்கும் = தெய்வங்களும்

பலபல ஆக்கி  = பலவாக உண்டாக்கி

நின் மூர்த்தி  = உன் அம்சத்தை

பரப்பிவைத்தாய் = பரப்பி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய் = உனக்கு இணையாக யாரும் இல்லாமல் இருந்தாய்

நின்கண்  = உன்மேல்

வேட்கை = ஆவல், காதல், பக்தி

எழுவிப்பனே = நான் உண்டாகுவேனே


யார், எதை எப்படி வழி பட்டாலும் அது நாராயணனையே சாரும் என்பது அவர் முடிவு.

"யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்பது சைவர்களின் கருத்து.

எல்லா சமயங்களும் சொல்லுவது ஒன்றே...வழி வேறானாலும், போய்ச் சேரும் இடம் ஒன்றுதான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_25.html

Wednesday, June 24, 2020

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி - பாகம் 2

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி  - பாகம் 2


என்னமோ இந்த பாடல் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. எழுதிய அர்த்தம் சரிதானா என்று என்ற கேள்வி விடை காணாமல் நடுவில் நிற்கிறது.

"பயந்த தனி வழி"

என்று மட்டும் தான் அருணகிரிநாதர் சொல்லி இருக்கிறார்.

அந்த வழி ஏன், உயிர் பிரிந்த பின், ஆன்மா செல்லும் வழியாக இருக்க வேண்டும்? அவர் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே. நானாக அப்படி ஒரு அர்த்தத்தை வலிந்து கொண்டு வந்த மாதிரி இருக்கிறது.

சரி, அது இல்லை என்றால், பின் எது "பயந்த தனி வழி"?

உண்மையை தேடும் எல்லா வழியும் தனி வழிதான். அந்த உண்மையை கடவுள் என்று சொல்லலாம், சத்யம் என்று சொல்லலாம், இயற்கை என்று சொல்லலாம்...எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

அதை தேடி கண்டடையும் வழி தனி வழிதான். அங்கே கும்பல் கும்பலாக போக முடியாது.

பின் எல்லோரும் பெரிய கும்பலாக கோவிலுக்குப் போகிறார்களே, இரத யாத்திரை, கும்பாபிஷேகம்,  போன்ற விசேடங்களுக்கு பெரும் திரளாக போகிறார்களே அது தவறா என்றால், இல்லை.

பாதையின் தொடக்கத்தில் எல்லோரும் இருப்பார்கள். அது நீண்ட வழி என்பதால், முடிவு வரை எல்லோரும் வரமாட்டார்கள்.

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்தில் பார்த்தால் பெரிய கும்பல் இருக்கும். முடிவில் ஓரிரண்டு பேர்கள் இருப்பார்கள்.

இறைவன் ஒருவன் தானே? எல்லோரும் போய் சேரும் இடம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். பின் ஏன் தனி வழி என்றால்...சேரும் இடம் ஒன்றுதான், புறப்படும் இடங்கள் வேறு வேறு.

எனவே, வழிகள் தனியாகத்தான் இருக்க முடியும்.

தனியாக இருப்பதால் பயம்.

அந்த பயத்தைப் போக்க வேலும் மயிலும் துணை.

சரி, இந்த விளக்கம் சரியாக இருக்குமா ? அருணகிரி நாதர் சொன்னது இறப்புக்குப் பின் உள்ள  வழியை அல்ல, வாழும் போதே இறைவனை தேடி அடையும் வழியை என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். அவனை வணங்கவும் அவன் அருள் இல்லாமல் முடியாது.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பார் அருணகிரி. அவன் அருளினால்தான் உண்டு.

முருகன் தனிவேல் முநிநம் குருவென்
   றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
      உருவன் றருவன் றுளதன் றிலதன்
         திருளன் றொளியன் றெனநின் றதுவே!

"அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ" என்பதும் அவர் வாக்கு.

எனவே, பயந்த தனி வழி என்பது இறைவனை இந்தப் பிறவியிலேயே தேடிச் செல்லும் வழி என்று கொள்ளுவதே சாலச் சிறந்தது.

அது அப்படி என்றால், நீங்கள் இறைவனைத் தனியாகத்தான் போய் சந்திக்க வேண்டி இருக்கும்.  மற்றவர்களோடு, சேர்ந்து பயணம் ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு இடத்தில், நீங்கள் உங்களுக்கு என்று ஒரு பாதையை தேர்ந்து எடுக்கத்தான் வேண்டும். பயமாக இருக்கிறது என்று கும்பலோடு சேர்ந்து போனால், போய் சேர வேண்டிய இடம் வராது.

உங்கள் பாதை, உங்கள் ஆத்ம பக்குவத்தைப் பொறுத்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி.

"தனி வழி" என்பதால் அதில் இதற்கு முன் போனவர்கள் யாரும் இல்லை.  போகிற வழியிலும் யாரிடமும்   வழி கேட்க முடியாது. map , கைகாட்டி, பெயர் பலகை ஒன்றும் இருக்காது.  எனவே அது "பயந்த தனி வழி".

யாரோ சொன்ன பாதையில் போக முடியாது...அது அவர் கண்ட வழி. அவருக்கு அந்த  வழி. நீங்கள் புத்தகங்கள், சொற்பொழிவு இவற்றைக் கேட்டு விட்டு நான் அந்த   வழியில் சென்று இறைவனை அடைவேன் என்றால் முடியாது.

எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு, உங்கள் வழியை நீங்கள் தேர்ந்து எடுங்கள்.

அதுவே இறை தரிசனம் காண வழி வகுக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/2.html


இந்த முதல் பாகத்தை கீழே காணலாம்


பாகம் 1


கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி

இந்தப் பாடலை முன்பே ஒரு தரம் சிந்தித்தோம்.

இன்னும் ஒரு முறை சிந்தித்தால் என்ன.

அந்த சோறு, சாம்பார், இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி, சப்பாத்தி என்று எத்தனை தரம் சாப்பிடுகிறோம். கேட்ட சினிமா பாட்டையே எத்தனை தரம் கேட்கிறோம். பார்த்த நகைச்சுவை காட்சிகளை எத்தனை தரம் பார்க்கிறோம். சலித்தா போகிறது?

நல்ல விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு தரம் படித்தால் என்ன ஆகி விடும்.

இல்லை, முன்னமே ஒரு தரம் படித்து விட்டேன், மீண்டும் ஒரு முறை படிக்க முடியாது என்று நினைத்தால், விட்டு விடலாம்.  இதை மூடி வைத்து விட்டு இது வரை செய்யாத ஒன்றை செய்ய முற்படலாம்.

மேலும், ஒவ்வொரு பாடல் பற்றி எழுதும் போதும் ஏதோ ஒரு சிந்தனை மேலோங்கி நிற்கும். அப்போது, பாடலில் உள்ள மற்ற விடயங்கள் சரியாக எடுத்துச் சொல்லாமல் விடுபட்டுப் போய் இருக்கலாம். அதை மீண்டும் கொண்டு வரவே இந்த முயற்சி.

அது ஒரு முன்ன பின்ன தெரியாத ஒரு ஊர். நேரமோ இரவு நேரம். சாலையில் ஒரு ஆள் அரவம் இல்லை. போகும் இடம் உங்களுக்கு சரியாகத் தெரியாது. விலாசம் தொலைந்து போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தனியே நடந்து போகிறீர்கள். பயமாக இருக்குமா இல்லையா?

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. எதுக்காக முன்ன பின்ன தெரியாத ஊருக்குப் போகப் போகிறோம்? வேற வேலை இல்லையா?  என்று நீங்கள் நினைக்கலாம்.

அப்படி ஒரு  நேரம் எல்லோருக்கும் கட்டாயம் வரும். யாரும் இல்லாத தனி வழியில், போகும் இடம் தெரியாமல் போக வேண்டி வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும்.

எவ்வளவுதான் அன்பு செலுத்தும் நட்பும் உறவும் இருந்தாலும், யாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது.   யார் வருவார்கள் கூட?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை.

கொட்டி முழக்கி அழுதிடுவார், மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே  என்று ஓலமிடுவார் பட்டினத்தடிகள்.

மனைவி, மகன், மகள் , அம்மா, அப்பா, அண்ணன் , தம்பி, தங்கை, பேரன் , பேத்தி ஒருத்தரும் கூட வர மாட்டார்கள்.

தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது.  அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார்.


பாடல்


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

பொருள்

விழிக்குத் துணை  = விழிக்குத் துணை

திரு மென்மலர்ப் பாதங்கள் = உயர்ந்த மென்மையான மலர் போன்ற பாதங்கள்

மெய்ம்மை குன்றா = உண்மை குறையாத

மொழிக்குத் துணை = மொழிக்குத் துணை

முரு காவெனு நாமங்கள் = முருகா, முருகா, முருகா என்ற நாமங்கள்

 முன்புசெய்த = முற்பிறவியில் செய்த

பழிக்குத் துணை  = பழிகளுக்கு துணை

யவன் பன்னிரு தோளும் = அவன் பன்னிரு தோள்களும்

பயந்த தனி வழிக்குத் துணை = பயந்த தனி வழிக்குத் துணை

வடி வேலுஞ் = வடிவான வேலும்

செங் கோடன் மயூரமுமே. = செங்கோடன் மயிலும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_22.html

Monday, June 22, 2020

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி 


இந்தப் பாடலை முன்பே ஒரு தரம் சிந்தித்தோம்.

இன்னும் ஒரு முறை சிந்தித்தால் என்ன.

அந்த சோறு, சாம்பார், இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி, சப்பாத்தி என்று எத்தனை தரம் சாப்பிடுகிறோம். கேட்ட சினிமா பாட்டையே எத்தனை தரம் கேட்கிறோம். பார்த்த நகைச்சுவை காட்சிகளை எத்தனை தரம் பார்க்கிறோம். சலித்தா போகிறது?

நல்ல விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு தரம் படித்தால் என்ன ஆகி விடும்.

இல்லை, முன்னமே ஒரு தரம் படித்து விட்டேன், மீண்டும் ஒரு முறை படிக்க முடியாது என்று நினைத்தால், விட்டு விடலாம்.  இதை மூடி வைத்து விட்டு இது வரை செய்யாத ஒன்றை செய்ய முற்படலாம்.

மேலும், ஒவ்வொரு பாடல் பற்றி எழுதும் போதும் ஏதோ ஒரு சிந்தனை மேலோங்கி நிற்கும். அப்போது, பாடலில் உள்ள மற்ற விடயங்கள் சரியாக எடுத்துச் சொல்லாமல் விடுபட்டுப் போய் இருக்கலாம். அதை மீண்டும் கொண்டு வரவே இந்த முயற்சி.

அது ஒரு முன்ன பின்ன தெரியாத ஒரு ஊர். நேரமோ இரவு நேரம். சாலையில் ஒரு ஆள் அரவம் இல்லை. போகும் இடம் உங்களுக்கு சரியாகத் தெரியாது. விலாசம் தொலைந்து போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தனியே நடந்து போகிறீர்கள். பயமாக இருக்குமா இல்லையா?

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. எதுக்காக முன்ன பின்ன தெரியாத ஊருக்குப் போகப் போகிறோம்? வேற வேலை இல்லையா?  என்று நீங்கள் நினைக்கலாம்.

அப்படி ஒரு  நேரம் எல்லோருக்கும் கட்டாயம் வரும். யாரும் இல்லாத தனி வழியில், போகும் இடம் தெரியாமல் போக வேண்டி வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும்.

எவ்வளவுதான் அன்பு செலுத்தும் நட்பும் உறவும் இருந்தாலும், யாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது.   யார் வருவார்கள் கூட?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை.

கொட்டி முழக்கி அழுதிடுவார், மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே  என்று ஓலமிடுவார் பட்டினத்தடிகள்.

மனைவி, மகன், மகள் , அம்மா, அப்பா, அண்ணன் , தம்பி, தங்கை, பேரன் , பேத்தி ஒருத்தரும் கூட வர மாட்டார்கள்.

தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது.  அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார்.


பாடல்


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

பொருள்

விழிக்குத் துணை  = விழிக்குத் துணை

திரு மென்மலர்ப் பாதங்கள் = உயர்ந்த மென்மையான மலர் போன்ற பாதங்கள்

மெய்ம்மை குன்றா = உண்மை குறையாத

மொழிக்குத் துணை = மொழிக்குத் துணை

முரு காவெனு நாமங்கள் = முருகா, முருகா, முருகா என்ற நாமங்கள்

 முன்புசெய்த = முற்பிறவியில் செய்த

பழிக்குத் துணை  = பழிகளுக்கு துணை

யவன் பன்னிரு தோளும் = அவன் பன்னிரு தோள்களும்

பயந்த தனி வழிக்குத் துணை = பயந்த தனி வழிக்குத் துணை

வடி வேலுஞ் = வடிவான வேலும்

செங் கோடன் மயூரமுமே. = செங்கோடன் மயிலும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_22.html

Saturday, June 20, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய 


பெரிய பெரிய நிறுவனங்களில் ஏதாவது ஒரு வருடம் இலாபம் எதிர்பார்த்தபடி வரவில்லை அல்லது நட்டம் வந்து விட்டது என்றால், எப்படியும் நட்டம் வந்தது வந்து விட்டது, அது கொஞ்சமாக இருந்தால் என்ன, நிறைய இருந்தால் என்ன என்று இதுவரை கழித்துக் கட்டாத செலவினங்கள் அனைத்தையும் அந்த ஒரு வருடத்தில் காட்டி இனி வருடங்கள் நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். அதற்கு big bath என்று பெயர். வராத கடன்கள், வருமா வராதா என்ற கடன்கள், பழைய இயந்திரங்கள், என்று அனைத்தையும் செலவில் கழித்து இனி வரும் வருடங்கள் இலாபரமானதாக செய்து கொள்வார்கள்.

அவ்வளவு ஏன், வீட்டில் சேட்டை செய்யும் பையன் ஒருவன் இருந்தால், யார் என்ன தப்பு செய்தாலும் சந்தேகம் அவன் மேல் தான் வரும்.

அது போல, இராமன் மிக நல்லவன். நேர்மையானவன். ஏக பத்னி விரதன். அப்பா அம்மா சொல் கேட்க்கும் பிள்ளை. ஆனாலும், அவன் வாழ்விலும் ஒரு சின்ன நெருடல். அவன் சின்ன பிள்ளையாக இருக்கும் போது அம்பில் களி மண் உருண்டையை சொருகி கூனியின் கூன் முதுகில் அடித்து விளையாடி இருக்கிறான்.

சின்ன பிள்ளைதான். இருந்தும் ஒரு உடல் ஊனமுற்ற, வயதான , பெண் மேல் அம்பு எய்து விளையாடியது தவறு தானே.

அந்தத் தவறை செய்தவன் இராமன் என்றாலும், நம்மாழ்வார் அந்த குற்றத்தை இராமனின் மேல் ஏற்றாமல் கண்ணன் மேல் ஏற்றிக் கூறுகிறார்.  கூனி மேல்  உண்டை வில்லை அடித்த போது கண்ணன் பிறக்கவே இல்லை. அது அடுத்த  அவதாரம். இருந்தும், கண்ணன் மேல் நிறைய விளையாட்டான குற்றங்கள்  இருக்கின்றன, அத்தோடு இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று   இராம அவதாரத்தில் நடந்த ஒன்றை கிருஷ்ணா அவதாரத்திற்கு மாற்றி விடுகிறார்.

பாடல்



மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே. 1.5.5

பொருள் 


மானேய்  = மான் போன்ற

நோக்கி = கண்ணினை உடைய

மடவாளை = பெண்ணை (திருமகளை)

மார்வில் = மார்பில்

கொண்டாய் = கொண்டாய்

மாதவா = மாதவா

கூனே சிதைய  = கூன் சிதையும் படி

உண்டைவில் = உண்டை வில்

நிறத்தில் தெறித்தாய் = அடித்தாய்

கோவிந்தா. = கோவிந்தா, கண்ணா

வானார் சோதி மணிவண்ணா. = வானவர்களுக்கு சோதி வடிவான மணிவண்ணனே

மதுசூதா = மது என்ற அரக்கனை கொன்றதால் மது சூதனன் என்ற பெயர் பெற்றவனே

நீ அருளாய் = நீ அருள் செய்வாய்

உன் = உன்னுடைய

தேனே மலரும் திருப்பாதம் = மலர் போன்ற திரு பாதங்கள்

சேருமாறு = வந்து அடையுமாறு

வினையேனே = வினை கொண்டவனான என்னை


கடவுளாகவே இருக்கட்டும், அவதாரமாகவே இருக்கட்டும், வயதான பெண், அதுவும் உடல் ஊனமுற்றவள் அவள் மேல் அம்பு விடுவது சரியான செயல்தானா.

இராசா வீட்டுப்  பிள்ளை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? அடக்கம் வேண்டாமா? குடிகளை காப்பது அவன் பொறுப்பு இல்லையா?

நாளை, இராமனே செய்தான் என்று மற்றவர்கள் செய்யத் தொடங்கினால் என்ன பதில் சொல்வது?

இராமன் தவறு செய்வானா?


ஆழ்வார் தெரிந்து எடுத்து ஒரு சொல் போடுகிறார். அவன் தெரிந்து போட்டாரா அல்லது  அப்படி வந்து விழுந்ததா தெரியாது.

இராமன் கூனி மேல் பாணம் போட்டது நையாண்டி செய்ய அல்லவாம், அவள் கூன் சிதைந்து  அவள் நிமிர்ந்து எல்லோரையும் போல நடக்க வேண்டும் என்று  நினைத்து போட்டானாம்.

"கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய்"

என்கிறார்.

கூன் சிதைந்தால், முதுகு நேராகி விடும். அப்படி நினைத்து பாணம் போட்டான்  என்கிறார்.

இதெல்லாம் இலக்கிய நயம். படிக்க படிக்க மனம் விரியும்.

படிக்க படிக்க....


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_20.html

Wednesday, June 17, 2020

திருக்குறள் - ஆற்றில் பாய்பவரைப் போல

திருக்குறள் - ஆற்றில் பாய்பவரைப் போல 


ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. தெளிந்த நீர். சில் என்று இருக்கும். குதித்து குளிக்கலாம் ஆனால் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டால்?

அடித்துக் கொண்டு போகும் என்று தெரிந்தே நீரில் குதிக்கிறார்கள். ஏன் ?


சிலர் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதை பார்க்கிறோம்.

யார் அவர்கள்?

ஒன்று , நன்றாக நீச்சல் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

அல்லது

நீரில் விழுந்தால் காப்பாற்ற யாரவது அருகில் இருக்க வேண்டும். அந்த தைரியத்தில் நீரில் பாய்ந்து நீந்துவார்கள்.

அவன் வெளியூர் சென்றுவிட்டு பல நாட்கள் கழித்து வருகிறான். அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனை பார்க்க வேண்டும், கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தவிக்கிறாள்.

இன்னொரு புறம், இப்படி தவிக்க விட்டு சென்ற அவன் மேல் கோபம். வரட்டும், இன்னிக்கு நல்லா சண்டை பிடிக்கணும் என்று நினைக்கிறாள்.

மனதுக்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது. எப்படி சண்டை போட வேண்டும் என்று. ஆனாலும், சீவி, சிங்காரித்து, பூ வாங்கி தலையில் வைத்து, நல்ல உடையாக  உடுத்திக் கொண்டு...அவளுக்கே அவளை நினைத்து சிரிப்பு வருகிறது.

இவ்வளவும் பண்ணிக்கிட்டு சண்டை போட போறேனாக்கும் ...போட்ட மாதிரிதான் என்று நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறாள்.

இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும் ஆற்றில் பாய்பவர்களைப் போல, என் காமமும் காதலும் என்னை இழுத்துக் கொண்டு போகும் என்று அறிந்தே  ஊடல் செய்ய நினைக்கிறேனே என்று அவள் மனம் சந்தோஷத்தில் தள்ளாடுகிறது.

ஏன் ஊடல் செய்ய நினைக்கிறாள்?

என்ன ஊடல் செய்தாலும், எப்படியும் கொஞ்ச நேரத்தில் தானே சமாதானம் ஆகிவிடுவோம் என்ற  நம்பிக்கை ஒரு புறம்.

இல்லை என்றால் என்ன, எவ்வளவு சண்டை போட்டாலும், என்னை கெஞ்சி, கொஞ்சி  அவன் சமாதானப் படுத்தி விடுவான் என்ற நம்பிக்கை.



பாடல்

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து

பொருள்

உய்த்தல் = அடித்துக் கொண்டு போதல்

அறிந்து = அறிந்தும்

புனல் = ஆற்றில்

பாய் பவரேபோல் = குதிப்பவர்களைப் போல

பொய்த்தல் = தான் செய்யப் போகும் ஊடல் பலன் இன்றி போகப் போகிறது என்று

அறிந்தென் புலந்து = அறிந்த பின் , எதற்காக ஊடல் செய்ய வேண்டும்? (புலத்து = ஊடி)

ஊடலின், கூடலின் நுணுக்கத்தை இதை விட அழகாக சொல்ல முடியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_17.html

Tuesday, June 16, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எனக்கினிக் கதியென் சொல்லாய்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எனக்கினிக் கதியென் சொல்லாய்


இறைவன் மேல் பக்தி கொண்டவர்களை, "வாழக்கையில் உங்கள் நோக்கம் என்ன" என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

"இறைவனை அடைவது"

"பரம பதம் அடைவது"

"சுவர்க்கம் போவது"

என்று இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்வார்கள்.

சரி. எப்படி போவது? அதற்கு என்ன வழி?

பூஜை செய்தால் போய் விடலாமா? தான தர்மம் செய்தால் போய் விடலாமா? நிறைய பாசுரங்கள் பாராயணம் பண்ணினால் போய்விடலாமா? ஆச்சாரமாக இருந்தால் போதுமா? மூணு வேளை குளிப்பது, நாளும் கிழமை என்றால் விரதம் இருப்பது, வெளியில் எங்கும் உண்ணாமல் இருப்பது, கடல் கடந்து போகாமல் இருப்பது என்று இருத்தால் போதுமா?

இதெல்லாம் வழி இல்லை என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார். பின் என்ன தான் வழி?

பாசுரத்தைப் பார்ப்போம்


பாடல்

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்  தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே”


பொருள்

மனத்திலோர் தூய்மை யில்லை  = மனதில் ஒரு தூய்மை இல்லை

வாயிலோர் இன்சொ லில்லை = வாயில் ஒரு இன் சொல் இல்லை

சினத்தினால் = கோபத்தால்

செற்றம்  நோக்கித்  = பகைவர்களை பார்த்து

தீவிளி விளிவன் = தீ போல விழிப்பேன். அதாவது கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவேன்

வாளா = வேலை வெட்டி இல்லாமல்

புனத்துழாய் மாலை யானே = துளசி மாலை அணிந்தவனே

பொன்னிசூழ் = பொன்னி நதி சூழ்ந்த

திருவ ரங்கா = திருவரங்கத்தில் இருப்பவனே

எனக்கினிக்  = எனக்கு இனி

கதியென்  = கதி (வழி) என்ன

சொல்லாய் = சொல்லுவாய்

என்னையா ளுடைய = என்னை ஆட்சி செய்யும்

கோவே = தலைவனே

பாசுரத்தின் அர்த்தம் புரிகிறது. இதில் இறைவனை அடைய வழி எங்கே சொல்லி இருக்கிறது?

இருக்கிது. மறைமுகமாக இருக்கிறது.

மனதில் தூய்மையும், வாயில் இன் சொல்லும், கண்ணில் கருணையும் இல்லாத எனக்கு  என்ன வழி என்று கேட்கிறார் ஆழ்வார்.

அப்படி என்றால், தூய்மையான மனமும், இனிமையான சொல்லும், கருணை கொண்ட  விழிகளும் இருந்தால் வழி திறந்து விட்டது என்று தானே அர்த்தம்.

இறைவனை அடைய  தடையாய் இருப்பது என்ன?

தூய்மை இல்லாத மனம், இனிமை இல்லாத சொல், கருணை இல்லாத கண்கள்.

இந்த அறிவு, செல்வம், பூஜை, புனஸ்காரம், ஆச்சாரம், அனுஷ்டானம் இதெல்லாம் இல்லாத எனக்கினி என் கதி என்று கேட்கவில்லை.

மனதை தூய்மை படுத்துவது கடினமான காரியம்.

மனம் தூய்மை ஆகாமல் கண்ணில் கருணை வராது.

இனிய சொல்? கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும், மற்றவற்றை விட எளிது.

முயன்று பார்ப்போமா?  எந்த கடினமான சொல்லையும் சொல்லுவதில்லை என்று  சங்கல்பம் செய்து கொள்வோம்.

யாரையும் வைவது இல்லை,  மட்டம் தட்டி பேசுவது இல்லை, கோபித்து  மனம் புண் படி பேசுவது இல்லை என்று முடிவு செய்து கொள்வோம்.

அடுத்தது, அன்பான சொல் பேசுவது, ஆறுதலான சொல் பேசுவது, மனதுக்கு சுகம்   தரும் சொற்களை பேசுவது என்று முடிவு செய்து கொள்வோம்.

எவ்வளவோ படிக்கிறோம். ஒன்றிரண்டை நடை முறை வாழ்க்கையில் செயல் படுத்திப் பார்த்தால் என்ன ?

செய்யலாம் தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_16.html


Saturday, June 13, 2020

திருக்குறள் - வற்றல் மரம்

திருக்குறள் - வற்றல் மரம் 


ஒரு மரம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? நன்றாக வளர்ந்து, கிளை பிடித்து பெரிதாக இருக்க வேண்டும். அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி வாழ வேண்டும். அதன் நிழலில் வெயிலின் கொடுமை தாங்காத உயிர்கள் வந்து இளைப்பாற வேண்டும். அந்த மரம் கனி தர வேண்டும். பூக்க வேண்டும். பூக்களைத் தேடி வண்டுகள் வர வேண்டும். அது பசியாற்ற வேண்டும். இப்படி பல விதங்களிலும் பயனோடு இருப்பதுதான் ஒரு நல்ல மரம்.

அதை விடுத்து, இலை, தளிர், பூ எதுவும் இல்லாமல், மொட்டையாக நின்றால் எப்படி இருக்கும்? அதை வெட்டி விறகுக்கு வேண்டுமானால் பயன் படுத்தலாம்.

வள்ளுவர் சொல்கிறார், மனதில் அன்பு இல்லாதவன் வாழ்க்கை பாலை நிலத்தில் மரம் துளிர் விட்டது போல என்கிறார். எப்படி பாலையில் மரம் துளிர் விடாதோ அது போல அவன் வாழ்வும் துளிர்க்காது என்பது கருத்து.

பாடல்


அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று


பொருள்

அன்பு = அன்பானது

அகத்து இல்லா  = உள்ளே இல்லாத ஒரு

உயிர்வாழ்க்கை  = உயிர் வாழ்க்கை என்பது

வன் = வல்லிய

 பாற்கண் = பாலையின் கண் அல்லது பாறையின் கண்

வற்றல் = காய்ந்து வற்றிப் போன

மரந் = மரம்

தளிர்த் தற்று = தளிர்தது போல

மரம் நன்றாக செழிக்க வேண்டுமென்றால் நிலம் நன்றாக இருக்க வேண்டும், நீர் வேண்டும், சூரிய ஒளி வேண்டும்.

அது போல ஒரு வாழ்வு செழித்து வளர வேண்டும் என்றால் அன்பு மனதில் இருக்க வேண்டும்.

அன்புதான் இல்லறம் என்ற மரம் வளர ஊற்ற வேண்டிய நீர். அன்பு செலுத்த செலுத்த  அந்த இல்லறமான மரம் நன்கு வளர்ந்து பயன் தரும், பலன் தரும்.

வீட்டிலே எதற்கு எடுத்தாலும் கோபம். எரிச்சல். மனத்தாங்கல் என்று இருந்தால், அன்பு எங்கே இருக்கும். அன்பு இல்லாத இல்லறம்செழிக்காது.

இல்லறத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவர் மேல் அன்பு செலுத்த வேண்டும்.

கணவன், மனைவி , பிள்ளைகள் இவர்கள் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்திக் கொண்டே இருத்தால் தான், அந்த இல்லற மரம் வளரும்.

இந்த வருடம் வேண்டாம், அடுத்த வருடம் இதற்கும் சேர்த்து நீர் வார்க்கிறேன் என்று சொன்னால், அதற்குள் மரம் பட்டுப் போய் விடும். தள்ளிப் போடவே கூடாது. அனுதினம் நீர் வார்க்க வேண்டும். இல்லை என்றால் வற்றல் மரமாகி விடும். மரம் பட்டுப் போனால் பின் எவ்வளவு நீர் வார்த்தாலும் அது துளிர் விடாது.

வேலை, தொழில், டிவி சீரியல், பக்கத்து வீட்டு அரட்டை, social மீடியா என்று நேரத்தை செலவழித்து விட்டு, ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தாமல் இருந்தால், நாளடைவில் இல்லறமான மரம் பட்டுப் போகும். அப்புறம் அம்மா என்றாலும் வராது, ஐயா என்றாலும் வராது.

அந்த மரம் பட்டுப் போகாமல் பாது காக்க வேண்டியது இல்லறத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு.

என்ன வேலை இருந்தாலும், எவ்வளவு படிக்க வேண்டி இருந்தாலும், எவ்வளவு சோர்வாக இருந்தாலும்,  குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அவர்களோடு  கொஞ்ச நேரம் பேசுங்கள். கொஞ்சிப் பேசுங்கள்.

என்ன படிச்ச, அலுவலகத்தில் எப்படி இருந்தது, நீ சாப்பிட்டாயா என்று அக்கறையோடு  விசாரியுங்கள்.

தள்ளிப் போடாதீர்கள். பட்டுப் போனால் பின் வராது.

வற்றல் மரம் தளிர்க்காது.

அதை  ஏன் வாட விட வேண்டும்?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_13.html



Friday, June 12, 2020

கம்ப இராமாயணம் - கடலை கடத்தல்

கம்ப இராமாயணம் - கடலை கடத்தல் 


எதையாவது விட முடிகிறதா ?

நல்லதை விடுங்கள், கெட்ட பழக்கத்தைக் கூட விட முடிவதில்லை.

மருத்துவர் சொல்கிறார், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே என்று, சரி என்று நாமும் தலையை ஆட்டி விட்டு வருகிறோம்...சிறிது நாள் கழித்து எதை சாப்பிடக் கூடாது என்று சொன்னாரோ அதைக் கண்டால் உடனே சாப்பிட்டு விடுகிறோம்.

இந்த whatsapp , youtube , facebook, எதையாவது விட முடிகிறதா?

பிறந்தது முதல் சாப்பிடும் சில உணவு வகைகள்...அதை இன்றும் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறதா இல்லையா?

இன்னும் ஒரு படி மேலே போவோம்...உறவுகள். விட முடிகிறதா? சங்கிலி போல் கட்டிப் போடுகிறதா இல்லையா?

இன்னும் கொஞ்சம் மேலே போவோம்...பொதுவாகவே எந்த அனுபவத்தையும் நம்மால் விட முடிவதில்லை.

ஏன்?

எதையும் நாம் முழுவதுமாக அனுபவிப்பது கிடையாது. அரைகுறையாக அனுபவிக்கிறோம். அனுபவம் நிகழும் போது மனம் அங்கே இருப்பது இல்லை.

காப்பி குடிக்கும் போது செய்தித் தாள் வாசிப்பது; மனம் செய்தியில் போகிறது.

சிற்றுண்டி சாப்பிடும் போது , மனம் அலுவலகம், போக்குவரத்து நெரிச்சல் என்று  அலை பாய்கிறது.

அலுவகம் போனால், வீட்டு நினைப்பு.

மனமும், புத்தியும், உடம்பும் ஒன்றாக இருப்பதே இல்லை.

ஒன்றை முழுவதுமாக அனுபவித்து விட்டால், பின் மனம் அதற்காக ஏங்காது. பின்னும் கிடைத்தால்  அனுபவிக்கலாம். ஆனால், அது இல்லையே என்று மனம்  ஏங்காது. அதை எண்ணி அதிலியே மனம் செல்லாது.

இலயிக்க வேண்டும். மனம் ஒன்ற வேண்டும். அனுபவம் முழுமையாக வேண்டும்.

அப்படி நிகழ்ந்தால், அந்த அனுபவத்தை நாம் கடந்து மேலே போய் விடலாம். இல்லை என்றால், மீண்டும் மீண்டும் செக்கு மாடு போல அதையே சுற்றி சுற்றி வர வேண்டி இருக்கும்.

கம்பன் சொல்கிறான்,  தசரதன் அனுபவித்தே கடந்து விட்டான் என்று. அதைத் தாண்டி போய் விட்டான்.

எவற்றை தாண்டிப் போனான்?

"தானம் கொடுத்து கொடுத்தே தன்னிடம் உதவி என்று வந்தவர்களின் கூட்டத்தை கடந்தான். நாம் ஒரு உரூபாய் , அல்லது ஐந்து உரூபாய் பிச்சை போடுவோம். அது அவனுக்கு எத்தனை நாள் வரும்? மீண்டும் பிச்சை கேட்டு வருவான். தசரன் கொடுத்தால், அந்த பிச்சைக் காரனின் வறுமையே தீர்ந்து விடும். அவன் மீண்டும் உதவி கேட்டு வரமாட்டான். இப்படி தன்னிடம் உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து கொடுத்து இனி அப்படி ஒரு வர வழி இல்லாமல் செய்து விட்டான்....ஈகை என்ற கடலை தர்மம் செய்தே கடந்தான்.

அது மட்டும் அல்ல

எதைப் படித்தாலும் அரைகுறையாக குறையாக படிப்பது இல்லை. முழுவதுமாக, ஆராய்ந்து , அதன் ஆழம் வரை சென்று, இனி இதில் படிக்க மேலும் ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு படிப்பான்.  அறிவு என்ற கடலை படித்தே கடந்து விட்டான்.

அது மட்டும் அல்ல

பகைவர்கள் என்ற கடலை தன் வாளால் கடந்தான். என்ன அர்த்தம்? பகைவர்களே இல்லை. பகையை சுத்தமாக ஒழித்து விடுவான்.

அது மட்டும் அல்ல

பிறவி என்ற கடலை முழுவதும் அனுபவித்தே கடந்து விட்டான். ஒன்றும் மிச்சம் வைக்கவில்லை. ஒரு அனுபவமும் பாக்கி இல்லை.

"

பாடல்

ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல்;எண்  இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும்  அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை;     கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம்.


பொருள்

ஈய்ந்தே கடந்தான்  = கொடுத்தே கடந்தான்

இரப்போர் கடல் = உதவி என்று கடல் போல் வந்த கூட்டத்தை

எண்  இல் = கணக்கில் இல்லாத

நுண் நூல் = நுண்மையான நூல்களை

ஆய்ந்தே கடந்தான் = ஆராய்ச்சி செய்தே கடந்தான்

அறிவு என்னும் அளக்கர்; = அறிவு என்ற கடலை

வாளால் = வாளால்

காய்ந்தே  கடந்தான்  = சண்டை இட்டே கடந்தான்

பகை வேலை = பகைவர்கள் என்ற கடலை

கருத்து முற்றத் = மனம் முழுவதும்

தோய்ந்தே கடந்தான்  = தோய்ந்து அனுபவித்தே கடந்தான்

திருவின் = செல்வத்தின்

தொடர் போக பௌவம். = தொடர்ந்து வரும் பிறவி என்ற கடலை

அளக்கர் , வேலை, பௌவம் என்றால் கடல் என்று அர்த்தம்.

எதை எடுத்தாலும், அதன் உச்சி தொட்டு அதை தாண்டி போய் விட வேண்டும்.  சிக்கிக் கொண்டு உழன்று கொண்டே இருக்கக் கூடாது.

எல்லாவற்றையும் அனுபவித்து விட்டால், மரண பயம் ஏன் வருகிறது.

இதையெல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமே என்ற ஏக்கமும் பயமும் ஏன் வருகிறது. அனுபவம் இன்னும் மிச்சம் இருப்பதால்.

கணவனோ/மனைவியோ/ பிள்ளைகளோ/ உடன் பிறப்போ/ நட்போ...மூச்சு முட்ட   அன்பு செய்யுங்கள். நாளையே அவர்களை விட்டு விட்டு போவது என்றாலும்  ஒரு ஏக்கம் இருக்கக் கூடாது.

கிராமத்துப் பக்கம் இன்றும் சொல்வார்கள் "அவருக்கு என்ன மகராசன், ஆண்டு அனுபவிச்சிட்டு போய் சேர்ந்துட்டாருனு"

நாளைக்கு என்று மிச்சம் வைக்காமல் அனுபவிக்க வேண்டும்.

ஒவ்வொன்றை அனுபவிக்கும் போதும், இதுவே கடைசி என்று நினைத்து அனுபவித்துப் பாருங்கள். என்று ஒரு நாள் அது கடைசி அனுபவமாகத்தத்தான் போகிறது.

யோசியுங்கள்.

சரி அது ஒரு புறம் இருக்கட்டும்.

இன்னொன்றை கவனித்தீர்களா?


"எண்  இல் நுண் நூல் ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும்     அளக்கர்"

அளக்கர் என்றால் கடல்.

அது அல்ல நான் சொல்ல வந்தது.

கணக்கில் அடங்காத நுண்மையான  நூல்களை ஆய்ந்து கடந்தான் என்கிறான் கம்பன்.

என்ன அர்த்தம்.

தசரதன் காலத்திலேயே,  கணக்கில் அடங்காத நுண்மையான நூல்கள் இருந்திருக்கின்றன.  நுண்மையில்லாத நூல்கள் எத்தனையோ.

அதாவது, ஆராய்ச்சி செய்யத் தக்க நூல்கள் கணக்கில் அடங்காத அளவு இருந்ததாம்.

அவ்வளவு நூல்கள் இருந்தது என்றால், நம் முன்னவர்கள் அறிவின் முதிர்ச்சி  எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.

நுண் நூல் எழுதும் அளவுக்கு அறிவு இருந்தது என்றால், நம் மொழி எவ்வளவு தொன்மையானதாக இருந்திருக்க வேண்டும்?

மொழி தோன்றி, அறிவு தோன்றி, ஆராய்ச்சிகள் செய்து, நுண் நூல் எழுதி இருக்கிறார்கள்.

எப்பேர்ப்பட்ட ஒரு பெரிய பாரம்பரியத்தின் வாரிசுதாரர்கள் நாம்.

நடுவில் எங்கேயோ தடம் புரண்டு விட்டோம் .வழி கண்டு பிடித்து மீண்டும் வந்து சேர வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_12.html


Thursday, June 11, 2020

திரு மந்திரம் - ஆய்ந்தறி வாரில்லை

திரு மந்திரம் - ஆய்ந்தறி வாரில்லை


நமக்கு முடி திருத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? முடி திருத்தும் இடத்துக்குப் போக வேண்டும்.

நீச்சல் அடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நீச்சல் குளமோ, அல்லது வேறு ஏதாவது நீர் நிலைக்கோ போக வேண்டும் அல்லவா?

வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு, நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?  வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டப் பழக முடியுமா?

அற்ப காரியங்களான முடி திருத்துவது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றிற்கே அந்தந்த இடத்துக்குப் போக வேண்டி இருக்கிறது.

நாம் வீட்டில் இருந்து கொண்டே இறைவனை அறிய வேண்டும், முக்தி , வீடு பேறு, பர லோகம், உண்மை, மறு பிறப்பு, ஆத்மா என்று எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறோம்.

முடியுமா?

அததற்கு அங்கங்கே போனால் தானே முடியும்.

கொங்கு நாட்டில் வாணிபம் செய்வார்கள். அவர்கள் எப்படி செய்கிறார்கள், எப்படி பேரம் பேசுகிறார்கள், எப்படி கொள் முதல் செய்கிறார்கள் என்று அறிய வேண்டும் என்றால் அங்கே போனால்தான் முடியும். இங்கு இருந்து கொண்டே அதை அறிய முடியாது.

வெளிச்சம் என்றால் எப்படி இருக்கும் என்று இருளில் அமர்ந்து கொண்டு யோசித்தால், எவ்வளவு யோசித்தாலும் அது பிடிபடாது. ஆனால், நிலவு வந்துவிட்டால், அப்புறம் வெளிச்சம் என்றால் என்ன என்று யோசிக்க என்ன இருக்கிறது. அது தான் தெரிகிறதே. யோசனை என்ன வேண்டி இருக்கிறது. உண்மை அறியும் வரைதான் வாதம், பிரதிவாதம் எல்லாம். உண்மை தெரிந்து விட்டால்  பேச்சு நின்று விடும்.

ஞானிகள் இருக்கும் போய் விட்டால், ஞானம் தானே வந்து விடும். நிலவு இருக்கும் இடத்தில் இருள் இல்லாமல் போவது போல, ஞானிகள் இருக்கும் இடத்தில் அறியாமை இருக்காது.


பாடல்



கொங்குபுக் காரொடு வாணிபஞ் செய்ததுஅங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லைதிங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமன்றே




பொருள்


கொங்கு = கொங்கு தேசம்

புக் காரொடு = அங்கு உள்ளவர்களோடு

வாணிபஞ் செய்தது = எப்படி வாணிபம் செய்வது என்று

அங்குபுக் காலன்றி  = அங்கு சென்று புகுந்தால் அன்றி

ஆய்ந்தறி வாரில்லை = இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஆராய்ந்து அறிய முடியாது

திங்கள்புக் கால் = நிலவு புகுந்து விட்டால்

இரு ளாவ தறிந்திலர் = இருள் என்றால் என்ன என்று தெரியாது

தங்குபுக் கார்சிலர் = தன்னுளே சென்ற சிலர்

தாபதர் தாமன்றே. = தாபதர் என்றால் முனிவர்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_11.html

Wednesday, June 10, 2020

திருக்குறள் - தூதொடு வந்த கனவினுக்கு

திருக்குறள் - தூதொடு வந்த கனவினுக்கு


அறத்துப் பால், பொருட்பால் இரண்டிலும் மிக ஆழமாக, நுண்ணியமாக எழுதிய வள்ளுவர் காமத்துப்பாலிலும் அதே அளவு நுணுக்கத்தோடு எழுதி இருக்கிறார் என்பதை பார்க்கும் போது நமக்கு வியப்பாக இருக்கிறது.

ஆண் பெண் உறவு, நட்பு, காதல், கூடல், ஊடல், பிரிவு, தவிப்பு, அவர்களை பற்றி ஊர் பேசுவது, என்று அனைத்தையும் எழுதி இருக்கிறார்.

காமத்துப் பால் எழுதுவது என்பது கத்திமேல் நடக்கும் வேலை. கொஞ்சம் எல்லை தாண்டினாலும் விரசமாகிவிடும் ஆபத்து உண்டு. எல்லை தாண்டாமல், சுவை குன்றாமல் செய்ய வேண்டும்.

செய்திருக்கிறார்.

பாடல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

பொருள்

காதலர் = காதலர்

தூதொடு  = தூதொடு

வந்த = வந்த

கனவினுக்கு = கனவினுக்கு

யாதுசெய் வேன் = என்ன செய்வேன்

கொல் = அசைச் சொல்

விருந்து = விருந்து


இதில் என்ன பெரிய நுணுக்கம், ஆழம் இருக்கிறது? எல்லாம் தான் கண் முன்னால் தெரிகிறதே.

சிந்திப்போம்.

தூதொடு வந்த கனவினுக்கு

தூதாக வந்த கனவினுக்கு என்று சொல்லி இருந்தால், அந்த கனவு தூதாக வந்து இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். தூதோடு என்று சொன்னால்?
கனவோடு வேறு ஏதோ வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

அண்ணனோடு தம்பியும் வந்தான். அப்பாவோடு அம்மாவும் வந்தாள். ஓடு என்பது  துணையாக இன்னொன்றும் வந்திருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

அங்குதான் வள்ளுவர் நிற்கிறார்.

காதலர் அனுப்பிய தூதாக கனவு வந்தது. அந்த கனவில் காதலரும் வந்து விட்டார்.  தூது அனுப்பிய காதலரை அந்த கனவு கொண்டு வந்து விட்டது.

வந்தது இரண்டு. கனவு + கனவில் உள்ள காதலர்.

இப்ப முதல் அடியை படித்துப் பாருங்கள்.


"காதலர் தூதொடு வந்த கனவினுக்கு"

காதலர்தான் கனவை தூதாக அனுப்பினார். ஆனால், அந்த கனவோ காதலரையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டது.

விருந்து என்றால் விருந்தினரை குறிக்கும். விருந்து படைக்கும் சாப்பாட்டையும் குறிக்கும். விருந்து தடபுடலாக இருந்தது என்கிறோம் அல்லவா.

பொண்ணும் மாப்பிள்ளையும் வந்து இருந்தார்கள். நல்லா விருந்து சமைச்சு போட்டு  அனுப்பி வைத்தேன் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?



"யாதுசெய் வேன்கொல் விருந்து"

என்ன விருந்து செய்வேன் ? என்று கேட்கிறாள்.

முதலாவது, அவனுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாது. அதனால் என்ன விருந்து செய்வது  என்று தெரியவில்லை.

இரண்டாவது, விருந்து செய்யலாம் என்று எழுந்து பார்த்தால், அவனும் போய்விட்டான் , கனவும் போய் விட்டது. என்ன விருந்து செய்ய ? யாருக்குச் செய்ய  என்ற குழப்பம்.


மூன்றாவது, கனவு சும்மா வந்துட்டு போயிருக்கலாம். அவனையும் கூட்டிக் கொண்டு வந்ததில் அவளுக்கு ரொம்ப சந்தோஷம். அந்த சந்தோஷத்தில் , அந்த  கனவுக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியாமல் திகைக்கிறாள். "ஐயோ, என் கனவே நீ எனக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கிறாய்...உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே ...என்ன செய்றதுன்னே தெரியலையே...கையும் ஓடலை காலும் ஓடலை " என்று தவிக்கிறாள்.

நான்காவது, அவர்களுக்குள் திருமணம் ஆகவில்லை. அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள். பேசுவார்கள். அன்பு முற்றி, காதல் மலர்ந்தது. திடீரென்று சொல்லாமல்  கொள்ளாமல், இராத்திரி நேரத்தில் வந்து நின்றால் , பாவம் அவள் என்ன செய்வாள். அந்தப் பக்கம் பெற்றோர் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வந்த காதலனுக்கு ஏதாவது செய்து தர வேண்டும் என்று ஆசை. முதல் முறையாக வீட்டுக்கு வந்து இருக்கிறான். பெரிய விருந்தே செய்து  போட வேண்டும். எப்படி முடியும் ?

நான் என்ன செய்வேன் என்று கையை பிசைகிறாள்.

"என் செய்வேன் கொல் விருந்து"

எவ்வளவு சுகமான குறள்.

படிக்க படிக்க மனதில் ஒரு இனிமை, சுகம் வந்து ஒட்டிக் கொள்கிறதா இல்லையா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_10.html

Monday, June 8, 2020

திருக்குறள் - ஊறிய நீர்

திருக்குறள் - ஊறிய நீர் 


சோடியம் என்று ஒரு தனிமம் உண்டு. மிகவும் வீரியம் வாய்ந்தது. தண்ணீரில் பட்டால் வெடிக்கும் குணம் உடையது.

குளோரின் என்று ஒரு தனிமம் உண்டு. நச்சுத் தன்மை கொண்டது. லேசாக முகர்ந்து பார்த்தால் மயக்கம் வந்து விடும். அறுவை கிகிச்சை பண்ணுவதற்கு முன் குளிரோபோர்ம் தருவார்கள். அதை லேசாக முகர வைப்பார்கள். முகர்ந்த பின் பத்து எண்ணுவதற்குள் நினைவு தப்பிவிடும். மயக்கம் வந்து விடும்.

இப்படி இரண்டு ஆபத்தான தனிமங்களை சேர்த்தால் கிடைப்பது சோடியம் குளோரைட் என்ற சேர்மம். வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு.

அந்த உப்பு இல்லாவிட்டால் சாப்பாடு வாயில் வைக்க முடியாது. உணவின் சுவையை தருவது, கூட்டுவது இந்த சோடியம் குளோரைடு என்ற உப்பு.

இந்த இரண்டு பொருளும் கலந்தால், இப்படி ஒரு சுவையான பொருள் கிடைக்கும் என்று தெரியுமா? இந்த உப்பு நமக்கு இயற்கையாக கிடைக்கிறது. நாம் ஒன்றும் சோடியத்தையும் , குளோரினையும் சேர்க்க வேண்டியது இல்லை. மேலும், உப்பின் சுவை எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். கரிப்புச் சுவை.

பால் இருக்கிறது. சுவையாக இருக்கும். தேன் இருக்கிறது. அதுவும் சுவையானதுதான்.

இரண்டையும் கலந்தால் அதன் சுவை எப்படி இருக்கும்?

கலந்து பார்த்தால்தான் தெரியும். அப்படி ஒரு கலவை இயற்கையில் கிடையாது. ஒவ்வொரு முறையும் கலந்து எப்படி இருக்கும் என்று சுவைத்துப் பார்க்க வேண்டும். ஒரு நாள் பால் திடமாக இருக்கும், இன்னொரு நாள் பால் தண்ணியாக இருக்கும், ஒரு நாள் பால் கூடி தேன் குறைவாக இருக்கும், இன்னொரு  நாள் தேன் கூடி பால் குறைவாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அது மாறிக் கொண்டே இருக்கும். பாலை அதிகம் காய்ச்சினால் ஒரு சுவை, குறைவாக காய்ச்சினால் இன்னொரு சுவை .

வள்ளுவர் சொல்கிறார், "என் காதலியின் வாயில் ஊரும் நீர் இந்த தேனும் பாலும்  கலந்தது போன்ற சுவையாக இருக்கிறது" என்று.

பாடல்


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்


பொருள்


பாலொடு = பாலுடன்

தேன்கலந் தற்றே  = தேன் கலந்த மாதிரி

பணிமொழி = மென்மையான மொழி பேசும்

வாலெயிறு = தூய்மையான வெண்மையான பல்லில்

ஊறிய நீர் = தோன்றிய நீர்


அவளுடைய முத்தம் அவ்வளவு சுவையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

சரி, அது எல்லாருக்கும் தெரிந்தது தானே. காதலியின் முத்தம் சுவையாக இருக்கிறது பாலும், தேனும் கலந்தது மாதிரி சுவையாக இருக்கிறது என்று சொல்லி விட்டுப் போக வேண்டியது தானே.

அப்படி சொல்லி விட்டுப் போயிருந்தால், அவர் வள்ளுவர் இல்லை.

என்னதான் காதலியாக இருந்தாலும், முரட்டுத் தனமாக பேசுவது, குரலை உயர்த்திப் பேசுவது,  கத்திப் பேசுவது என்று இருந்தால், அவளை போய் அன்புடன் முத்தம் குடுக்கத் தோன்றுமா?  எப்ப என்ன கத்துவாளோ என்ற பயம் இருக்கும் தானே?

முத்தம் என்பது உடல் சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. அது உணர்வு சார்ந்ததும்.

"பணி மொழி" என்கிறார்.

பணிவான மொழி. மென்மையாக பேசுபவள். சாந்தமாக பேசுபவள். அவளின் குரலை பற்றிக் கூறுகிறார். மேன்மை இல்லாத பெண்ணின் முத்தம் இனிக்குமா?

சரி, மென்மைதான் . காதலி தான். குளித்து நாலஞ்சு நாள் ஆச்சு. முடி எல்லாம் சிக்கல் பிடித்து இருக்கிறது. பல் விளக்கி இரண்டு நாள் ஆச்சு. கண்டதையும் சாப்பிட்டு சரியாக  வாய் கழுவாமல் கொஞ்சம் வாடை அடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்....முத்தம் இனிக்குமா?

"வாலெயிறு ஊறிய நீர்" என்கிறார்.

வால் என்றால் தூய்மையான, வெண்மையான. எயிறு என்றால் பல்.

"இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை" , என்பது திருமந்திரம்.

வெண்மையான, தூய்மையான பல்.

பல்லில் இருந்து எப்படி நீர் சுரக்கும்? மலையில் இருந்து அருவி விழுகிறது. அது  அந்தப் பாறையில் இருந்து வருவது போலத்தான் இருக்கும். பல் வெண்மையாக சுத்தமாக இருந்தால், ஈறும் சுத்தமாக இருக்கும், முகமும் சுத்தமாக இருக்கும்,  உடலும் சுத்தமாக இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது மனம் (மென்மையான மொழி) மற்றும் உடல் இரண்டும் இனிமையாக இருக்கும் காதலியின் முத்தம்  தேனும் பாலும் கலந்தது போல இருக்கும் என்கிறார்.

ஒவ்வொரு நாளும், இருவரின் உணர்ச்சிகளும் மாறுபடும். எப்போதும் ஒரே மாதிரியா இருக்கும்?

எப்படி தேன் மற்றும் பாலின் கலப்பு விகிதம் மாறும் போது அந்த கலவையின்  சுவை மாறுகிறதோ அது போல ஒவ்வொரு நாளும் அந்த முத்தத்தின் சுவை மாறிக் கொண்டே இருக்கும் என்கிறார்.

இது இன்ன சுவை என்று கூற முடியாது.

இதெல்லாம் சொல்லுவது - நான் அல்ல - வள்ளுவர். அதை மறந்து விடக் கூடாது.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_8.html

Sunday, June 7, 2020

கம்ப இராமாயணம் - யாரை நம்பி நான் பொறந்தேன்

கம்ப இராமாயணம் - யாரை நம்பி நான் பொறந்தேன் 


எப்பவாவது நமக்கு ஒரு சிக்கல் வந்தால், துன்பம் வந்தால், உதவி நாடி நமக்கு நெருக்கமானவர்களிடம் சென்று உதவி கேட்போம்.

சில சமயம் ஏதோ சில பல காரணங்களால் நாம் நாடிச் சென்ற ஒருவருமே நமக்கு உதவி செய்ய இயலாமல் கை விரித்து இருப்பார்கள்.

அந்த சமயம் நமக்கு, ஒரு பக்கம் அவர்கள் மேல் கோபம் வரும். அவர்களுக்கு எவ்வளவு உதவி செய்தோம்...நமக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டால் கையை விரித்து விட்டார்களே என்று. இன்னொரு பக்கம், ஒரு வைராக்கியம் வரும்.  யார் உதவி செய்யாவிட்டால் என்ன, இந்த பிரச்சனையை நானே சமாளிக்கிறேனா இல்லையா பார் என்று.

இராவணனும் அந்த நிலையில் நிற்கிறான்.

இந்திரசித்து எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்...இராவணன் கேட்பதாய் இல்லை. பின் சொல்வான்

"இந்திரசித்து, இதற்கு முன்னால் போருக்கு சென்று இறந்தவர்கள், அல்லது பின்னால் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் அல்லது நீ இந்த பகையை முடிப்பாய் என்று நான் இந்த பகையை தேடிக் கொள்ளவில்லை. என் மேல் உள்ள நம்பிக்கையில் நான் இந்த பகையை தேடிக் கொண்டேன்...நீங்கள் யார் இல்லாவிட்டாலு பரவாயில்லை...நானே இந்த பகையை முடிக்கிறேன்"

என்று.

பாடல்


முன்னையோர், இறந்தார் எல்லாம், இப் பகை முடிப்பர்
                                        என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்றனர் பெயர்வர் 
                                        என்றும்,
உன்னை, “நீ அவரை வென்று தருதி“ என்று உணர்ந்தும்,
                                       அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும் பகை தேடிக் 
                                    கொண்டேன்.


பொருள்


‘முன்னையோர்,  = இதற்கு முன்னால் போருக்கு போனவர்கள்

இறந்தார் = போரில் இறந்தவர்கள்

எல்லாம் = அவர்கள் எல்லாம்

இப் பகை முடிப்பர் என்றும் = இந்தப் பகையை வெல்வார்கள் என்றும்

பின்னையோர் = பின்னும் இருப்பவர்கள்

 நின்றோர் எல்லாம் = உயிரோடு நின்றவர்கள் எல்லாம்

வென்றனர் பெயர்வர்  என்றும், = வெற்றி பெற்றுத் தருவார்கள் என்றும்

உன்னை, = உன்னை

“நீ அவரை வென்று தருதி“ என்று உணர்ந்தும், = நீ அவர்களை வெல்வாய் என்றும்

அன்றால்; = அல்ல

என்னையே நோக்கி,  = என்னை மட்டுமே நம்பி

யான் = நான்

இந் = இந்த

நெடும் பகை  = பெரிய பகையை

தேடிக்  கொண்டேன். = தேடிக் கொண்டேன்


இராவணனின் வீரமும் தன்னம்பிக்கையும் கொப்பளிக்கிறது.

உங்களை எல்லாம் நம்பியா நான் சீதையை தூக்கி வந்தேன். தள்ளுங்க, இதை நானே பார்த்துக் கொள்கிறேன்

என்றான்.

வீரத்தில், கம்பீரத்தில் ஒரு துளி கூட குறைவு இல்லாதவன் இராவணன்.

என்ன ஒரே ஒரு குறை,  சீதையை தூக்கி வந்து விட்டான். இல்லை என்றால், அவனில் ஒரு  குறை காண முடியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_7.html



Saturday, June 6, 2020

கம்ப இராமாயணம் - சயம் கொடு தருவென்

கம்ப இராமாயணம் - சயம் கொடு தருவென்


சீதையை விட்டு விடு என்று இராவணனிடம் இந்திரசித்து கூறினான்.

இராவணன் அதைக் கேட்கவில்லை.

இராவணன், இந்திரசித்திடம் கூறுகிறான்

"இனி போருக்கு போக வேண்டாம். உனக்கு பயம் வந்து விட்டது. தோற்று விடுவோமோ என்று அஞ்சுகிறாய். நீ ஒண்ணும் கவலைப் படாதே. என்னுடைய இந்த வில்லால் அந்த மனிதர்களை வென்று நான் வெற்றியைக் கொண்டு வருகிறேன்"

என்றான்.

பாடல்



இயம்பலும், இலங்கை வேந்தன், எயிற்று இள நிலவு 
                                         தோன்ற,
புயங்களும் குலுங்க நக்கு, ‘போர்க்கு இனி ஒழிதி போலாம்;
மயங்கினை; மனிசன்தன்னை அஞ்சினை; வருந்தல்; ஐய!
சயம் கொடு தருவென், இன்றே, மனிசரைத் தனு ஒன்றாலே.


பொருள்

இயம்பலும் = இந்திரசித்து அவ்வாறு சொன்னவுடன்

இலங்கை வேந்தன் = இலங்கை அரசன்

எயிற்று  = பற்கள்

இள நிலவு  = பிறை சந்திரனைப் போல

தோன்ற, = சற்றே வெளியே தோன்ற

புயங்களும் குலுங்க = தன்னுடைய தோள்கள் குலுங்க

நக்கு = சிரித்து

‘போர்க்கு இனி ஒழிதி போலாம்; = போருக்கு நீ இனி போக மாட்டாய் போல இருக்கிறது

மயங்கினை = அறிவு தெளிவு இல்லாமல் மயக்கம் கொண்டிருக்கிறாய்

மனிசன்தன்னை அஞ்சினை = மனிதர்களை கண்டு அச்சப் படுகிறாய்

வருந்தல்; ஐய! = கவலைப் படாதே

சயம் கொடு தருவென் = வெற்றியைக் கொண்டு வந்து தருவேன்


இன்றே = இன்றே

மனிசரைத் தனு ஒன்றாலே. - மனிதர்களை இந்த வில் ஒன்றினான்


இராவணனின் வீரம் வீறு கொண்டு எழுகிறது.

நீ பயந்தாங்கொள்ளி. விலகிப் போ.  அந்த மனிதர்களை நான் வெல்கிறேன்


என்று கூறுகிறான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_6.html


Friday, June 5, 2020

கந்தர் அநுபூதி - பேசா அநுபூதி

கந்தர் அநுபூதி - பேசா அநுபூதி 


நாம் ஒன்று நினைத்து சொல்கிறோம். எழுதுகிறோம்.

ஆனால் கேட்பவர்கள், படிப்பவர்கள் அவர்களுக்கு தோன்றிய விதத்தில் அதை எடுத்துக் கொள்கிறார்கள்.  நாம் சொன்னது ஒன்றாகவும், அவர்கள் அதில் இருந்து அறிந்து கொண்டது வேறாகவும் இருக்கும்.

இது ஏதோ, எப்போதோ நிகழ்வது அல்ல. எப்பவுமே அப்படித்தான் நிகழ்கிறது.

ஒன்று சரியாக கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும், சரியாக புரிந்து கொள்வதில்லை. மாறாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். அல்லது, ஏதாவது வாதம் பண்ணுகிறார்கள், தங்கள் மேதா விலாசத்தைக் காட்ட. அப்படியே சரியாக  புரிந்து கொண்டாலும், அதன் படி நடப்பதும் இல்லை.

ஏன் இத்தனை முயற்சி? நாம் சொல்லி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்ற உணர்வு வரும் போது, மெளனமாக இருந்து விடுவதே நல்லது என்று தோன்றும் - ஞானியர்களுக்கு.

அதைத்தான் அநுபூதி என்கிறார்கள்.

அந்த பேசா நிலை எப்போதும் நிகழும்?

ஆசைகள் விட்டு விட்டால், மௌனம் வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

ஆசைகள் எப்படி வருகின்றன?

ஆசைகள் சங்கிலித் தொடர் போல், ஒன்றைப் பற்றிக் கொண்டு இன்னொன்று வரும்  என்கிறார்.

பெண்ணாசை - அதில் இருந்து திருமணம் - அதில் இருந்து பிள்ளைகள் - இந்த அவர்களின்  தேவைகள் ஆசைகள் - அவற்றை பூர்த்தி செய்ய ஆசை - எனவே மேலும் பணம் சம்பாதிக்க ஆசை ...இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்று.

வீடு வாங்க ஆசை - பின் அதில் நல்ல பீரோ, கட்டில்,  மின் விளக்கு, குளிர் சாதனை பெட்டி,  தொலைக் காட்சி, கார் என்று ஒன்றில் இருந்து ஒன்றாக ஆசைகள்  முளைத்து எழுகின்றன.

இந்த சங்கிலித் தொடரை வெட்ட வேண்டும். அப்போது தான் அது வளர்வது நிற்கும்.

ஏதோ ஒரு ஆசை வரும் போது, "போதும், அது வேண்டாம்" என்று நிறுத்தினால், அந்த ஒரு ஆசை மட்டும் அல்ல, அதைத் தொடர்ந்து வரும் அத்தனை  ஆசைகளும்  அற்றுப் போய் விடும்.

ஆசை குறையும் போது, மனம் அடங்கும். அலை பாயாது.

சலனம் இல்லாத மனதில் மௌனம் பிறக்கும். அலை அடித்தால் அல்லவா சத்தம் வரும்.

பாடல்

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.


பொருள்

தூசா மணியும் = தூய்மையான மணியும்

துகிலும் = நல்ல உடைகளும்

புனைவாள் = புனைபவள். வள்ளியோ, தெய்வ யானையோ

நேசா = அவள் மேல் நேசம் கொண்ட

முருகா =முருகா

நினது = உன்னுடைய

அன்பு = அன்பு

அருளால் = அருளால்

ஆசா  = ஆசை என்ற

நிகளம் = சங்கிலி

துகளாயின பின் = தூள் தூளான பின்

பேசா  = பேசாமல் இருக்கும், மெளனமாக இருக்கும்

அநுபூதி பிறந்ததுவே. = அநுபூதி நிலை தோன்றியது

சிறு வயதில் என் தாத்தா, பாட்டி ஆகியோர் இந்தப் பாடலை மனப்பாடமாக  ஒப்பிப்பதை  கேட்டு இருக்கிறேன்.

அதற்கு என்ன அர்த்தம் என்று தேடும் ஆவல் இருந்தது இல்லை.

இப்போது தோன்றுகிறது.


என் அனுபவத்தில் இன்னொன்றும் தோன்றுகிறது. சரியா தவறா என்று தெரியவில்லை.

ஆசை சங்கிலி அறுந்து போனால் மௌனம் பிறக்கும் என்கிறார் அருணகிரி.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மௌனம் பிறந்தால் ஆசை அடங்கும் என்று.

மௌன விரதம் இருந்தால் ஆசை அடங்கும் என்று தோன்றுகிறது.

பேசுவதால், மற்றவர்களிடம் மட்டும் அல்ல, நமக்கு நாமே பேசிக் கொள்வதால், நாம் ஆசைக்கு தீனி போடுகிறோம்.

"அந்த கார் இருந்தால்   எப்படி இருக்கும், அது எவ்வளவு விலை இருக்கும், அதை விட   மற்ற கார் நல்லதா, வாங்கினால் நம்ம வீட்டில் நிறுத்தி வைக்க முடியுமா "

என்றெல்லாம் நாம் நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சை நிறுத்தினால், ஆசை அறும்.

எப்படி உண்ணா விரதம் இருந்தால் உடல் சலனம் அடங்குகிறதோ, அது போல  பேசா விரதம் இருந்தால் மனச் சலனம் அடங்கும் என்று நினைக்கிறேன்.

பேசா அனுபூதி

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_5.html


Thursday, June 4, 2020

கம்ப இராமாயணம் - கொடும் பகை தேடிக் கொண்டாய்

கம்ப இராமாயணம் - கொடும் பகை தேடிக் கொண்டாய்


இராவணனிடம் இந்திரசித்து கூறுகிறான்..."அப்பா, சீதையை விட்டுவிடு. அப்படி விட்டுவிட்டால் இராம இலக்குவனர்கள் அமைதி அடைவார்கள். நம் மீது உள்ள கோபத்தை விடுவார்கள். பயத்தினால் அல்ல உன் மேல் உள்ள காதலினால் கூறுகிறேன் அவளை விட்டு விடு" என்றான்.

மேலும்,

"நான் (இந்திரசித்து) இலக்குவன் மேல் திருமாலின் அஸ்திரங்களை விடுத்தேன். அது மேல் உலகம்,  நில உலகம் எல்லாம் கலக்கி பின் இலக்குவனிடம் வந்து, அவனை வலம் வந்து பின் சென்று விட்டது. அதை விட வலிமையான படைகள் நம்மிடம் இல்லை. நம் குலம் செய்த பாவத்தால் பெரிய பழியை தேடிக் கொண்டாய். கோபம் வந்தால், அந்த இலக்குவன் ஒருவனே இந்த மூன்று உலகத்தையம் அழித்து விடுவான்"

என்று.

பாடல்

'நிலம் செய்து, விசும்பும் செய்து, நெடிய மால் படை, நின்றானை
வலம் செய்து போயிற்றுஎன்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் கொண்டாய்;
சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே 

பொருள்


'நிலம் செய்து = இந்த உலகம் பூராவும் சுற்றி

விசும்பும் செய்து = விண்ணுலகையும் சுற்றி

நெடிய மால் படை = உயர்ந்த திருமாலின் படை (ஆயுதங்கள்)

நின்றானை = (எதிரில்) நின்றவனை (இலக்குவனை)

வலம் செய்து போயிற்று என்றால் = சுற்றி வந்து வணங்கி விட்டு போயிற்று என்றால்

மற்று இனி வலியது உண்டோ? = அதை விட வலிய படை நம்மிடம் உண்டோ ? (இல்லை)

குலம் செய்த பாவத்தாலே = நம் குலம் செய்த பாவத்தால்

கொடும் பகை தேடிக் கொண்டாய்; = கொடிய பகையை தேடிக்  கொண்டாய்

சலம் செயின் = கோபம் வந்தால்

உலகம் மூன்றும் = மூன்று உலகங்களையும்

இலக்குவன் முடிப்பன், தானே  = தனி ஒருவனே அழித்து விடுவான்

எதிரியை துல்லியமாக எடை போட்டு இருக்கிறான் இந்திரசித்து.

அது மட்டும் அல்ல,  "இராவணா , நீ செய்கின்ற இந்த பழியால் நீ மட்டும் அல்ல, உன் குலமே  அழியப் போகிறது" என்றான்.

நாம் செய்யும் பாவங்கள் நம்மை மட்டும் அல்ல, நம் குடும்பத்தையே, குலத்தையே அழிக்கும்.

"ஐயோ, நான் ஒரு பாவமும் செய்ய வில்லையே...யாருக்கும் மனசு அறிந்து ஒரு  துன்பமும் செய்ய வில்லையே, எனக்கு ஏன் இந்தத் துன்பம்" என்று புலம்பும் போது , நினைக்க வேண்டும்....பெற்றோர் செய்த பாவம், குல முன்னோர் செய்த  பாவம், நம்மை வந்து  தாக்கும்.

இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்ட பலர் புலம்புகிறார்கள்.  முன்னோர் செய்த  வினை. இங்கு வந்து, இன்று வந்து மூள்கிறது.

தெய்வம் நின்று கொல்லும். அவசரப் படாது.

தவறு செய்யும் போது நினைக்க வேண்டும்.   நாம் இன்று தப்பி விடலாம். பணம் இருக்கிறது, செல்வாக்கு இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எங்கு வந்து யாரைப் பிடிக்குமோ  தெரியாது.

என்றோ யாரோ செய்த வினை, பட்டினத்தாரை கழு மரத்தில் ஏற்றியது.

"முன்பு செய்த வினைதான் இங்கு வந்து மூண்டதுவே" என்பார் பட்டினத்தார்.

யார் செய்த பிழையோ, இராமனை பதினான்கு ஆண்டு காட்டுக்கு அனுப்பியது.

"மைந்த, விதி செய்த பிழை" என்பான் இராமன்.


வருங்கால சந்ததிக்கு நல்லது செய்ய வேண்டுமா? இன்று நல்லது செய்யுங்கள்.

இன்று மாங்கன்றை நட்டால் இருபது வருடம் கழித்து பழம் தரும், பலன் தரும்.

வினை மட்டும் விட்டு விட்டா போய்விடும்?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_4.html


Wednesday, June 3, 2020

கம்ப இராமாயணம் - காதலால் உரைத்தேன்

 கம்ப இராமாயணம் - காதலால் உரைத்தேன் 


நம்மிடம் உள்ள ஒரு குறை, உணர்ச்சிகளை பொதுவாக வெளிப்படுத்தாமல் இருப்பது.

ஒருவர் மேல் அன்பு, நன்றி, காதல், அருள் என்று இருந்தால் அதை வெளிப்படையாக சொல்வது கிடையாது. கோபம் வந்தால் காட்டி விடுகிறோம். வெறுப்பு வந்தால் பேசாமல் இருந்து அதையும் காட்டுகிறோம். எதிர்மறை உணர்வுகளை காட்டும் அளவுக்கு நேர்மறை உணர்வுகளை காட்டுவதில்லை.

எத்தனை மனைவி அல்லது கணவனுக்கு நன்றி சொல்லி இருக்கிறோம். மனதுக்குள் இருக்கும். வெளியே சொல்வது இல்லை.

"எனக்கும் இந்த குடும்பத்துக்கும் நீ எவ்வளவு பாடு படுகிறாய்...நீ இல்லாமல் நான் என்ன செய்து விட முடியும்..."

என்று சொல்லி இருக்கிறோமா?



எத்தனை பேர் பெற்றோருக்கு நன்றி சொல்லி இருக்கிறோம்? மனதில் நன்றி உணர்வு இல்லாவிட்டால் அது வேறு விடயம். மனம் முழுவதும் அன்பும் நன்றியும் இருக்கும். இருந்தும் சொல்வது கிடையாது.


எவ்வளவோ செய்யும் அம்மா, கடினமான உழைப்பைத் தரும் அப்பா...ஒரு நாளாவது  அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறோமா?

அலுவலகத்தில், நமது கை குட்டை கீழே விழுந்து விட்டால் அதை செல்பவருக்கு  நன்றி சொல்கிறோம். நம் கை குட்டை, அது கீழே விழுந்து விட்டது. அதை எடுத்துக்  கூட தரவில்லை....கீழே விழுந்து கிடக்கிறது என்று சுட்டி காட்டியவருக்கு  நன்றி சொல்கிறோம்.

வீட்டில், அடுப்பில் வெந்து சமைக்கும் அம்மாவுக்கு, மனைவிக்கு ஒரு நன்றி கிடையாது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்திரசித்து செய்த இருந்த யாகத்தை இலக்குவன் அழிதது விட்டான். அடி பட்டு இராவணனிடம் வந்த இந்திரா சித்து சொல்கிறான்


"சீதை மேல் உள்ள ஆசையை விட்டு விடு. அப்படி ஆசையை விட்டு, சீதையை நீ விடுதலை செய்தால், இராம இலக்குவனர்களுக்கு உன் மேல்  உள்ள கோபம் தணியும். போர் செய்யும் எண்ணத்தை கை விடுவார்கள்.  இலக்குவன் ஆற்றல் மேல் உள்ள பயத்தால் இதை நான் கூறவில்லை. உன் மேல் உள்ள காதலால் கூறுகிறேன் " என்றான்.

தந்தையின் மேல் "காதல்".

பெண்ணின் மேல் காதல் வரும். கடவுள் மேல் கூட காதல் வரும்.

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் ஞானசம்பந்தர்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

ஆனால், தந்தை மேல் காதல்?

எவ்வளவு இனிமையான விஷயம்?

"அப்பா , உன் மேல் உள்ள காதலால் சொல்கிறேன், சீதையை விட்டு விடு"

பாடல்

ஆதலால், “அஞ்சினேன்“ என்று அருளலை; ஆசைதான் 
                                           அச்
சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்; 
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன்’ என்றான்-உலகு எலாம் கலக்கி 
                                      வென்றான்.


பொருள்


‘ஆதலால்,  = எனவே

“அஞ்சினேன்“ என்று அருளலை = அச்சத்தினால் சொல்லவில்லை


ஆசைதான்  = நீ கொண்ட அந்த ஆசை

அச் சீதைபால்  = அந்த சீதையின் மேல்

விடுதிஆயின்  = விட்டு விடுவாய் என்றால்

அனையவர் = அவர்கள், இராம இலக்குவனர்கள்

சீற்றம் தீர்வர் = கோபம் இல்லாமல் மாறுவார்கள்

போதலும் புரிவர் = உன்னை விட்டு விட்டு போய் விடுவார்கள்

செய்த தீமையும் பொறுப்பர் = நீ செய்த தீமைகளையும் பொறுத்துக் கொள்வார்கள்

உன்மேல் = உன்மேல்

காதலால் உரைத்தேன் = உள்ள காதலால் சொல்லுகின்றேன்

என்றான்- = எண்டான்

உலகு எலாம் கலக்கி  = உலகம் அனைத்தையும் கலக்கி

வென்றான். = வெற்றி பெற்ற இந்திரசித்து

உணர்ச்சிகளை மென்மையாக, அழகாக வெளிப்படுத்திப் பாருங்கள்.

வாழ்க்கை அவ்வளவு அழகாக, இனிமையாக இருக்கும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_3.html


Tuesday, June 2, 2020

கம்ப இராமாயணம் - தொடுத்தனென்; தடுத்து விட்டான்

கம்ப இராமாயணம் - தொடுத்தனென்; தடுத்து விட்டான்


நிகும்பலை என்று ஒரு யாகம் செய்து, சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்று விட்டால் இந்திரசித்தை யாராலும் வெல்ல முடியாது.

அந்த யாகத்தை அவன் தொடங்கியவுடன், அதைப் பற்றி வீடணன், இலக்குவனிடம் சொல்லி விடுகிறான். இலக்குவன் அந்த யாகம் நடக்கும் இடத்துக்கு வந்து, அந்த யாகத்தை அழித்து விடுகிறான். அங்கு நடந்தப் போரில், இந்திரசித்து அடிபட்டு இராவணனனை காண வருகிறான்.

வந்தவன் சொல்கிறான்

"நாம் செய்த மாயம் எல்லாவற்றையும் உன் தம்பி வீடணன் காட்டிக் கொடுத்து விட்டான். அதனால் இலக்குவன் வந்து என்னோடு போர் புரிந்தான். யாராலும் வெல்ல முடியாத மூன்று படைகளை அவன் மேல் செலுத்தினேன். அவற்றை அவன் தடுத்து விட்டான்"

பாடல்

‘சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி,
வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல்தன்னால் அமர்த் தொழில்  தொடங்கி
                                       யார்க்கும்
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்து
                                       விட்டான்.


பொருள்


‘சூழ் வினை  = சூழ்கின்ற வினை

மாயம் = மாயம்

எல்லாம் = அனைத்தையும்

உம்பியே  = உன் தம்பியாகிய  வீடணனே

துடைக்க = சொல்லிக் கொடுக்க

சுற்றி = சுற்றி சூழ்ந்து


வேள்வியைச் சிதைய நூறி = வேள்வியை முற்றுகையிட்டு  சிதைத்து ,

வெகுளியால் = கோபத்தால்

எழுந்து வீங்கி = வெகுண்டு எழுந்து, ஆரவாரம் இட்டு

ஆள்வினை ஆற்றல்தன்னால்  = என்னுடைய முயற்சியால் ஆற்றலால்

அமர்த் தொழில்  தொடங்கி = போரைத் தொடங்கி

யார்க்கும் = யாராலும்

தாழ்வு இலாப் = வெல்ல முடியாத

படைகள் மூன்றும் தொடுத்தனென் = மூன்று படைகளை தொடுத்தேன்

தடுத்து விட்டான். = (இலக்குவன்) தடுத்து விட்டான்

அதர்ம வழியில் போகிறவனுக்கு, அழிவு வெளியில் இருந்து வர வேண்டியது இல்லை.  அவனிடம் இருந்தே அவன் அழிவு பிறகும்.

இராவணனை அழிக்கவா இராமன் கானகம் வந்தான் ?

அவன் வீட்டில் என்னவோ குடும்பப் பிரச்சனை. மாற்றான் தாய் வரம் வேண்டி, அவனை காட்டுக்கு அனுப்பினாள். இராவணன் யார் என்றே தெரியாது.

இராவணன் செய்த அதர்மங்கள்...சூர்ப்பனகை, வீடணன் என்று கூட இருந்தே  அழித்தது.

அறம் அல்லாத வழியில் போகிறவன் எல்லோரும் என்ன நினைக்கிறான் ? என்ன  மிஞ்சி மிஞ்சி போனால் சில வருடம் சிறை தண்டனை, அதுவும் காசு இருந்தால்  நல்ல வக்கீலைப் பிடித்து, சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் புகுந்து  வெளியே   வந்து விடலாம் என்று நினைக்கிறான்.

அவன் செய்த தவறு அவனை மட்டும் பாதித்தால் அவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அவன் மனைவியை, பிள்ளைகளை, பேரன் பேத்திகளை, உடன் பிறப்புகளை  வாட்டும்.

கும்ப கர்ணன் மாண்டான், இந்திர சித்து மாண்டான், மண்டோதரி இறந்தாள்...அரக்கர் குலம் அனைத்தையும் வேரறுத்தது.

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் எனும் ஏமப் புணையை சுடும்

என்பார் வள்ளுவர்.

சினம் மட்டும் அல்ல, காமமும் அப்படித்தான்.

அறம் அல்லாத செயல் அனைத்துமே குலத்தையே வேரறுக்கும்.

ஒருவன் செய்த தவறுக்கு அவனுக்கு அடி விழுந்தால் வலி அவ்வளவாக இருக்காது.

அவன் பிள்ளை, அவன் கண் முன்னாடியே,  அடி படும் போது தெரியும் வலி.

இந்திர சித்ததன் இறந்த பின், இராவணன் புலம்புவான். கல்லும் கரையும் அந்த புலம்பலைக் கேட்டால்.

இராவணனை அடித்து இருந்தால், அந்த வலி தெரியாது.

அவன் கண் முன், அவன் பிள்ளை, தலை இல்லாமல் கிடந்தான்.

அதுதான் விதி. அதுதான் அறம்.

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post.html