Saturday, June 20, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய 


பெரிய பெரிய நிறுவனங்களில் ஏதாவது ஒரு வருடம் இலாபம் எதிர்பார்த்தபடி வரவில்லை அல்லது நட்டம் வந்து விட்டது என்றால், எப்படியும் நட்டம் வந்தது வந்து விட்டது, அது கொஞ்சமாக இருந்தால் என்ன, நிறைய இருந்தால் என்ன என்று இதுவரை கழித்துக் கட்டாத செலவினங்கள் அனைத்தையும் அந்த ஒரு வருடத்தில் காட்டி இனி வருடங்கள் நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். அதற்கு big bath என்று பெயர். வராத கடன்கள், வருமா வராதா என்ற கடன்கள், பழைய இயந்திரங்கள், என்று அனைத்தையும் செலவில் கழித்து இனி வரும் வருடங்கள் இலாபரமானதாக செய்து கொள்வார்கள்.

அவ்வளவு ஏன், வீட்டில் சேட்டை செய்யும் பையன் ஒருவன் இருந்தால், யார் என்ன தப்பு செய்தாலும் சந்தேகம் அவன் மேல் தான் வரும்.

அது போல, இராமன் மிக நல்லவன். நேர்மையானவன். ஏக பத்னி விரதன். அப்பா அம்மா சொல் கேட்க்கும் பிள்ளை. ஆனாலும், அவன் வாழ்விலும் ஒரு சின்ன நெருடல். அவன் சின்ன பிள்ளையாக இருக்கும் போது அம்பில் களி மண் உருண்டையை சொருகி கூனியின் கூன் முதுகில் அடித்து விளையாடி இருக்கிறான்.

சின்ன பிள்ளைதான். இருந்தும் ஒரு உடல் ஊனமுற்ற, வயதான , பெண் மேல் அம்பு எய்து விளையாடியது தவறு தானே.

அந்தத் தவறை செய்தவன் இராமன் என்றாலும், நம்மாழ்வார் அந்த குற்றத்தை இராமனின் மேல் ஏற்றாமல் கண்ணன் மேல் ஏற்றிக் கூறுகிறார்.  கூனி மேல்  உண்டை வில்லை அடித்த போது கண்ணன் பிறக்கவே இல்லை. அது அடுத்த  அவதாரம். இருந்தும், கண்ணன் மேல் நிறைய விளையாட்டான குற்றங்கள்  இருக்கின்றன, அத்தோடு இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று   இராம அவதாரத்தில் நடந்த ஒன்றை கிருஷ்ணா அவதாரத்திற்கு மாற்றி விடுகிறார்.

பாடல்



மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே. 1.5.5

பொருள் 


மானேய்  = மான் போன்ற

நோக்கி = கண்ணினை உடைய

மடவாளை = பெண்ணை (திருமகளை)

மார்வில் = மார்பில்

கொண்டாய் = கொண்டாய்

மாதவா = மாதவா

கூனே சிதைய  = கூன் சிதையும் படி

உண்டைவில் = உண்டை வில்

நிறத்தில் தெறித்தாய் = அடித்தாய்

கோவிந்தா. = கோவிந்தா, கண்ணா

வானார் சோதி மணிவண்ணா. = வானவர்களுக்கு சோதி வடிவான மணிவண்ணனே

மதுசூதா = மது என்ற அரக்கனை கொன்றதால் மது சூதனன் என்ற பெயர் பெற்றவனே

நீ அருளாய் = நீ அருள் செய்வாய்

உன் = உன்னுடைய

தேனே மலரும் திருப்பாதம் = மலர் போன்ற திரு பாதங்கள்

சேருமாறு = வந்து அடையுமாறு

வினையேனே = வினை கொண்டவனான என்னை


கடவுளாகவே இருக்கட்டும், அவதாரமாகவே இருக்கட்டும், வயதான பெண், அதுவும் உடல் ஊனமுற்றவள் அவள் மேல் அம்பு விடுவது சரியான செயல்தானா.

இராசா வீட்டுப்  பிள்ளை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? அடக்கம் வேண்டாமா? குடிகளை காப்பது அவன் பொறுப்பு இல்லையா?

நாளை, இராமனே செய்தான் என்று மற்றவர்கள் செய்யத் தொடங்கினால் என்ன பதில் சொல்வது?

இராமன் தவறு செய்வானா?


ஆழ்வார் தெரிந்து எடுத்து ஒரு சொல் போடுகிறார். அவன் தெரிந்து போட்டாரா அல்லது  அப்படி வந்து விழுந்ததா தெரியாது.

இராமன் கூனி மேல் பாணம் போட்டது நையாண்டி செய்ய அல்லவாம், அவள் கூன் சிதைந்து  அவள் நிமிர்ந்து எல்லோரையும் போல நடக்க வேண்டும் என்று  நினைத்து போட்டானாம்.

"கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய்"

என்கிறார்.

கூன் சிதைந்தால், முதுகு நேராகி விடும். அப்படி நினைத்து பாணம் போட்டான்  என்கிறார்.

இதெல்லாம் இலக்கிய நயம். படிக்க படிக்க மனம் விரியும்.

படிக்க படிக்க....


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_20.html

1 comment:

  1. இதற்குப் பெயர்தான் சப்பைக்கட்டு.

    ReplyDelete