Thursday, June 25, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வணங்கும் துறைகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வணங்கும் துறைகள்


ஆற்றில் இறங்கி குளித்து இருக்கிறீர்களா ? சிலு சிலு என்று நீர் ஓடிக் கொண்டிருக்கும். கரையில் இருந்து, முதலில் காலை நனைத்து, பின் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கி குளிப்பது ஒரு இனிய அனுபவம்.

எவ்வளவுதான் தெளிந்த, ஜில் என்ற நீராக இருந்தாலும், முழு ஆற்றையும் இரண்டு கைகளால் மறித்து கையில் ஏந்தி குளிக்க முடியுமா?

ஏதோ ஒரு படித்துறையில் இறங்கித் குளிக்க முடியும் அல்லவா?

படி இருக்கும் , பிடித்துக் கொள்ள கை பிடி இருக்கும், ஆற்று நீர் வேகமாக இழுக்காது, ஆழம் அதிகம் இருக்காது. தைரியமாக நீராடலாம்.

ஆற்றில் அங்கங்கே படித்துறைகள் செய்து வைத்து இருப்பார்கள்.

இறைவனைத் தேடி அடையும் வழி என்பது ஆறு போல. அது நீண்டும் அகன்றும் ஆழமாகவும் இருக்கும். நம்மால் அது முழுவதையும் அறிந்து கொள்ள முடியாது.

ஏதோ ஒரு படித்துறையில் இறங்கி கொஞ்சம் நீராடலாம். அவ்வளவுதான் முடியும்.

ஒவ்வொரு சமயமும் ஒரு படித்ததுறை.

சைவம், வைணவம், பௌத்தம், இஸ்லாமியம், கிறித்துவம் என்று பல படித்துறைகள்.

இதில்  என் படித்துறைதான் சிறந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நினைப்பே நகைப்புக்கு  இடமானது.

ஆறு ஒன்று, அது சேரும் கடல் ஒன்று. படித்துறைகள் வேறு அவ்வளவுதான்.

எல்லா படித்துறையிலும் ஒரே நீர் தான்.

நம்பவாழ்வார் சொல்கிறார்,

"இறைவனை வணங்கும் துறைகள் பல ஆகி, மக்களுடைய புத்தி வேறுபாட்டால் பல சமயங்கள் ஆகி, அவர்கள் வணங்கும் கடவுள்களும் பல ஆகி, அவற்றிற்குள் வேறுபாடுகள் பல ஆகி இருந்தாலும், எல்லாவற்றையும் நீயே உண்டாக்கி வைத்தாய், உனக்கு இணை யாரும் இல்லை, உன் பால் என் ஆசையை உண்டாக்கி வைப்பேன் " என்கிறார்.

பாடல்


வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96


பொருள்

வணங்கும் துறைகள் = வணங்குகின்ற துறைகள்

 பலபல ஆக்கி = பலவிதமாக உருவாக்கி

மதிவிகற்பால் = புத்தி வேறுபாட்டால்

பிணங்கும் = ஒன்றோடு ஒன்று மாறுபடும்

சமயம் பலபல ஆக்கி = பலவிதமான சமயங்களை உண்டாக்கி

அவையவைதோறு = அவற்றினுள்

அணங்கும் = தெய்வங்களும்

பலபல ஆக்கி  = பலவாக உண்டாக்கி

நின் மூர்த்தி  = உன் அம்சத்தை

பரப்பிவைத்தாய் = பரப்பி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய் = உனக்கு இணையாக யாரும் இல்லாமல் இருந்தாய்

நின்கண்  = உன்மேல்

வேட்கை = ஆவல், காதல், பக்தி

எழுவிப்பனே = நான் உண்டாகுவேனே


யார், எதை எப்படி வழி பட்டாலும் அது நாராயணனையே சாரும் என்பது அவர் முடிவு.

"யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்பது சைவர்களின் கருத்து.

எல்லா சமயங்களும் சொல்லுவது ஒன்றே...வழி வேறானாலும், போய்ச் சேரும் இடம் ஒன்றுதான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_25.html

1 comment:

  1. The issue you we included above is certainly regard proficient for anyone to work out. the possibility of your article is substantial and It will realize a positive way. literature

    ReplyDelete