Sunday, June 28, 2020

பொது - பயிற்சி

பொது - பயிற்சி 


நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் மருத்துவரை சென்று பார்க்கிறோம். பொதுவாக மருத்துவர் என்ன சொல்லுவார் " நல்ல உடற் பயிற்சி செய்யுங்கள். இரத்த அழுத்தம் சரியாகும், சர்க்கரை அளவு சரியாக இருக்கும், உடல் எடை குறையும், சுவாசம் சரியாகும் " என்று உடலில் வரும் பல நோய்களுக்கு மருந்தாக உடல் பயிற்சியை சொல்லுவார்.

மேலும், உடல் பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால், அது உடல் நலத்திற்கு நல்லது. மூட்டு வலி வராது, தசைகள் வலுவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி வளரும்.

இப்போது அறிவியலில், உடல் பயிற்சி செய்தால் நினைவு ஆற்றல் வளரும் என்கிறார்கள். மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வராது என்கிறார்கள். ஞாபக மறதி, அல்ஸைமர், பார்கின்சன் போன்ற நோய்கள் வராது என்கிறார்கள்.

மாற்று கருத்து இல்லை.

ஆங்கில அறிவியல் மற்றும் சிந்தனை அந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.

நம்மவர்கள் அதற்கு மேல் எங்கேயோ போய் விட்டார்கள்.

மனிதன் என்பவன் உடல் மட்டும் அல்ல.

அவனுக்கு மனமும் இருக்கிறது.

மனப் பயிற்சி  என்று   யாரவது , எப்போதாவது சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா?

"நீங்கள் தினமும் 30 நிமிடம் மனப் பயிற்சி செய்யுங்கள்" என்று சொல்லக் கேட்டு இருக்கிறோமா?

தியானம், மெடிடேஷன் என்பதெல்லாம் நம்மவர்கள் கண்டுபிடிப்பு.

தியானம் கூட மனதை ஒருமுகப் படுத்துவதுதானே அன்றி பொதுவான பயிற்சி என்று சொல்ல முடியாது.

தமிழ் இலக்கியம், மனப் பயிற்சி பற்றி மிக அடிப்படையாக பேசுகிறது.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

அறம் செய்ய விரும்பு. 

அறம் செய் என்று சொல்லி விட்டுப் போய் இருக்கலாமே? அது என்ன விரும்பு?

விரும்பதல் என்பது மனத்தால் செய்வது. முதலில் மனப் பயிற்சி. மனம் பழகி விட்டால்  பின் செய்வது எளிது.

மனத்திற்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் 
ஆகுல நீர பிற 

மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதுதான் அறம் என்கிறார் வள்ளுவர்.

மனதில் ஆயிரம் குற்றங்கள் நிகழ்கின்றன.

கோபம் - காமம் - பொறாமை - புறம் கூறுவது - பொய்மை ...

இந்த மனக் குற்றங்களினால், பல புற குற்றங்கள் விழைகின்றன.

மனதை சரி படுத்த வேண்டும் என்றால், அதை பழக்க வேண்டும்.

அதற்கு பயிற்சி வேண்டும்.

புலனடக்கம் என்பது எப்படி வரும்? மனதை அடக்கினால் புலன் அடங்கும்.

மனதை எப்படி அடக்குவது? அதை பழக்க வேண்டும்.

மனப் பயிற்சி பற்றி சிந்தியுங்கள்.

இது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கின்றது.

வருகின்ற நாட்களில் இது பற்றி நிறைய சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_28.html

No comments:

Post a Comment