Showing posts with label காரைக்கால் அம்மையார். Show all posts
Showing posts with label காரைக்கால் அம்மையார். Show all posts

Monday, November 12, 2018

காரைக்கால் அம்மையார் பாடல் - அறவா

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்  - அறவா 


இறைவன் என்பது யார்? அவர் ஒரு ஆளா? ஆணா ? பெண்ணா ? அலியா ? உயரமா? குள்ளமா ? கறுப்பா ? சிவப்பா?


முதலில் இறைவன் என்பது ஒரு "ஆள்" என்ற எண்ணத்தை விட வேண்டும். இறைவன் என்றால் ஏதோ நம்மைப் போல இரண்டு கை , இரண்டு கால், கண், மூக்கு என்று இருப்பார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. மனிதர்கள் படைத்த இறைவன் மனிதர்கள் போல இருக்கிறான். சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இறைவனை கற்பனை செய்தால் அது மிகப் பெரிய வலிமையான சிங்க ரூபத்தில் இருக்கும். எனவே, இறைவன் மனித ரூபத்தில் இருப்பான் என்று எண்ணிக் கொள்வது நமது ஆணவம் அன்றி வேறில்லை.


சரி, இறைவன் மனித வடிவில் இல்லை என்றால் பின் எப்படி இருப்பான் ?


இறைவன் எந்த வடிவிலும் இல்லை. அவனுக்கு ஒரு வடிவம் கிடையாது.


பின் இறைவன் என்றால் என்ன ? வடிவம் இல்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்?


அறம் தான் இறைவன். இயற்கை தான் இறைவன்.


அறம் என்றால் என்ன? ஒரு ஒழுங்கு, ஒரு நியதி, ஒரு உண்மை...அது தான் அறம்.


அறம் தான் நம் வாழ்வை செலுத்துவது.


நம் வாழ்வின் அடிப்படை அறம் தான்.

எனவே தான் இல்லறம், துறவறம் என்று வாழ்வை இரண்டாகப் பிரித்தார்கள்.

உலகுக்கு நீதி சொல்ல வந்த வள்ளுவர் - அறம் , பொருள் , இன்பம் என்று திருக்குறளை மூன்றாகப் பிரித்து அறத்தை முதலில் வைத்தார்.

வில்லறம் , சொல்லறம் என்று அனைத்திலும் அறத்தை கண்ட வாழ்க்கை நெறி நமது.

அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்பார் வள்ளுவர்.

Einstein said "I believe in the god of Spinoza who exists in the orderly harmony of what exists"

ஒரு ஒழுங்கு. அது தான் இறைவன்.

காரைக்கால் அம்மையார் இறைவனை "அறவா " என்று அழைக்கிறார். அறமே வடிவானவன். அறம் தான் கடவுள்.

பாடல்

இறவாத இன்ப அன்பு 
   வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் 
   பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
   வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் 
   அடியின்கீழ் இருக்க என்றார் 

பொருள்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் = நமக்குத் தோன்றும் அன்பு கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது. விழுந்து விழுந்து காதலித்தாலும், திருமணம் ஆன சில நாளில் அந்த அன்பு மறைந்து போய் விடுகிறது. இறவாத அன்பு வேண்டும் என்கிறார். இன்ப அன்பு. நினைத்துப் பாருங்கள் எத்தனை அன்பு இன்பமாக இருக்கிறது?



பின் வேண்டு கின்றார் = மேலும் வேண்டுகிறார்


பிறவாமை வேண்டும்  =  பிறவாமல் இருக்க வேண்டும்


மீண்டும்  பிறப்புண்டேல்  = ஒரு வேளை மறுபடியும் பிறந்து விட்டால்


உன்னை என்றும் மறவாமை வேண்டும் = உன்னை என்றும் மறக்காமல் இருக்க வேண்டும்


இன்னும் வேண்டும் = இன்னும் என்ன வேண்டும் என்றால்


நான் மகிழ்ந்து பாடி = நான் மகிழ்ந்து பாடி


அறவா = அறவா , அறமே வடிவானவனே


நீ ஆடும் போதுன் = நீ ஆடும் போது உன்


அடியின்கீழ் இருக்க என்றார் = உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்கிறார்.


இறைவன் அறமே உருவானவன் என்பது ஒரு செய்தி.

நம்மில் பல பேர் பக்தி என்றால் ஏதோ பெரிய இராணுவ பயிற்சி போல குளித்து முழுகி, முகத்தை ரொம்ப சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு, பய உணர்வு ஒரு பக்கம், பக்தி ஒரு பக்கம்,  என்று பக்தி செலுத்துவார்கள்.

கற்பூர ஆரத்தி காட்டுவதும், பூ அள்ளிப் போடுவதும் ஏதோ அறிவியல் செயல் கூடத்தில்  (laboratory) ஏதோ அறிவியல் கோட்பாட்டை சரி பார்க்கும் முயற்சி போல இருக்கும்.


வேண்டவே வேண்டாம்.


முதலில் சந்தோஷமாக இருக்கும் வேண்டும்.  இன்ப அன்பு வேண்டும்.


அடுத்து, மகிழ்ந்து பாடி என்கிறார். சந்தோஷமாக வாய் விட்டு பாடுங்கள்.


மூன்றாவதாக, இறைவனே ஆடிக் கொண்டு இருக்கிறான். இது ஒரு லீலை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருங்கள். பக்தி என்றால் ஏதோ surgical strike  மாதிரி இருக்கக் கூடாது.


"விளையாட்டு உடையார் அவர் , தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்பார்  கம்பர். எந்த கடவுள் விளையாட்டாக இருக்கிறாரோ, அவர் தான் எங்கள்  தலைவர் என்கிறார் கம்பர்.



வாழ்க்கையை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். விளையாட்டாக  எடுங்கள்.


ஆடுங்கள். பாடுங்கள். அன்பு செய்யுங்கள்.


அவ்வளவுதான் வாழ்க்கை. அவ்வளவுதான் இறைவன்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_12.html



Saturday, May 5, 2012

அற்புத திருவந்தாதி - சுடுகாட்டுப் பேய்


அற்புத திருவந்தாதி - சுடுகாட்டுப் பேய்


சுடுகாட்டிலே ஒரு பேய்.

அது முதலில் சும்மா காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு இருந்தது.

சும்மா இருக்க வேண்டியது தானே? 
அதுவோ பேய். 

பக்கத்தில் எரிந்து கொண்டு இருந்த ஒரு பிணத்தின் சிதையில் இருந்து ஒரு கொள்ளியை உருவியது.

அதில் இருந்த கரியை எடுத்து நசுக்கி, பொடியாக்கி முகத்தில் பூசிக் கொண்டது. 

எரிந்து கொண்டு இருந்த தணல் அல்லவா ? எங்கோ சூடு பட்டுக் கொண்டது.

சூடு தாங்கவில்லை. அதற்க்கு கோவம் வருகிறது. தலையை அங்கும் இங்கும் ஆட்டி கத்துகிறது. சிரிக்கிறது

அங்கும் இங்கும் துள்ளுகிறது. தீயை அணைக்க முயல்கிறது. 

அந்த சுடுகாட்டில் ஆடுகிறான், என் அப்பன் சிவன் என்கிறார் காரைக்கால் அம்மையார். 

யார் அந்த பேய் ?

நாம் தான் அந்தப் பேய். 

இந்த உலகம் தான் சுடுகாடு.

எங்கே சும்மா இருக்கிறோம் ? 

ஒவ்வொரு ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. 

அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையா இருக்கும். 

அப்புறம், சூடு தாங்காமல் எரியும்.

எல்லோரையும் கோவிக்கிறோம், கத்துகிறோம், 

எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

இத்தனயும் பார்த்து கொண்டு ஆனந்த நடனம் ஆடுகிறான் அவன்.

அர்த்தம் செறிந்த அந்த காரைக்கால் அம்மையாரின் பாடல் இதோ...

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டி
கடைக் கொள்ளி வாங்கி மசித்து மையைவிள்ள 
எழுதி வெடுவெடென்னநக்கு வெருண்டு விலங்கு
பார்த்துத்துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 
முற்றுஞ் சுளிந்து பூழ்திஅள்ளி அவிக்க நின்றாடும்
 எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

கள்ளிக் கவட்டிடைக் = கள்ளிக் செடி புதருக்குள்



காலை நீட்டி = காலை நீட்டி



கடைக் கொள்ளி வாங்கி = கடைசியாக நீட்டி கொண்டு இருந்த கொள்ளியை எடுத்து


மசித்து மையை = அதை நசுக்கி, அதில் இருந்த கரியை எடுத்து



விள்ள எழுதி = விள்ள என்றால் எழுதும் மை. அந்த கரியால் எழுதி



வெடுவெடென்ன = பெரிய சிரிப்பு. அல்லது சூட்டில் உடல் வெடு வெடுவென நடுங்குதல்



நக்கு = உறுமி, ஆங்காரமாக சப்தமிட்டு



வெருண்டு = பயந்து



விலங்கு பார்த்துத் = குறுகிப் பார்த்து (தலையை ஆட்டி, கண்ணை சுருக்கிப் பார்த்து)



துள்ளிச் = அங்கும் இங்கும் துள்ளி, ஆட்டம் போட்டு, சூடு தாங்காமல் குதித்து



சுடலைச் = சுடுகாட்டில்



சுடுபிணத்தீச் = பிணத்தை எரிக்கின்ற தீயை



சுட்டிட முற்றுஞ் சுளிந்து = முழுவதும் அணைக்க

பூழ்தி அள்ளி அவிக்க = புழுதியை அள்ளி அந்த தீயின் மேல் போட்டு அதை அணைக்க


நின்றாடும் = அந்த சுடுகாட்டில் நின்று ஆடும்



எங்கள் அப்பனிடந் திரு ஆலங்காடே = எங்கள் தந்தை இருக்கும் திரு ஆலங்காடே


Sunday, April 29, 2012

அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.

நமக்கு வரப் போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கும். 

பார்பதற்கு முன்னாலேயே நாம் அவர்கள் வசம் காதல் வயப் படுகிறோம். 

ஒரு வேளை அவர்களை நேரில் பார்த்து விட்டால், "அட, இந்த பொண்ணுக்காகத்தான் / ஆணுக்காகத்தான் இத்தனை நாளாய் கனவு கண்டு கொண்டு இருந்தேன்" என்று சட்டென்று காதல் பூ மலரும்.

இங்கே அப்படி இறைவன் மேல் காதல் கொண்ட காரைக் கால் அம்மையார் சொல்கிறார்

Saturday, April 28, 2012

அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு


அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு

நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் காரைக்கால் அம்மையார். இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

இந்து மதம் பெண்களுக்கு துறவை அனுமதிக்கவில்லை. மணிமேகலை துறவு பூண்டாள், அவள் சமண சமயத்தை சார்ந்தவள்.

ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

அவர் எழுதிய பாடல்கள் பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. அதில், அற்புத திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்....