Monday, November 12, 2018

காரைக்கால் அம்மையார் பாடல் - அறவா

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்  - அறவா 


இறைவன் என்பது யார்? அவர் ஒரு ஆளா? ஆணா ? பெண்ணா ? அலியா ? உயரமா? குள்ளமா ? கறுப்பா ? சிவப்பா?


முதலில் இறைவன் என்பது ஒரு "ஆள்" என்ற எண்ணத்தை விட வேண்டும். இறைவன் என்றால் ஏதோ நம்மைப் போல இரண்டு கை , இரண்டு கால், கண், மூக்கு என்று இருப்பார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. மனிதர்கள் படைத்த இறைவன் மனிதர்கள் போல இருக்கிறான். சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இறைவனை கற்பனை செய்தால் அது மிகப் பெரிய வலிமையான சிங்க ரூபத்தில் இருக்கும். எனவே, இறைவன் மனித ரூபத்தில் இருப்பான் என்று எண்ணிக் கொள்வது நமது ஆணவம் அன்றி வேறில்லை.


சரி, இறைவன் மனித வடிவில் இல்லை என்றால் பின் எப்படி இருப்பான் ?


இறைவன் எந்த வடிவிலும் இல்லை. அவனுக்கு ஒரு வடிவம் கிடையாது.


பின் இறைவன் என்றால் என்ன ? வடிவம் இல்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்?


அறம் தான் இறைவன். இயற்கை தான் இறைவன்.


அறம் என்றால் என்ன? ஒரு ஒழுங்கு, ஒரு நியதி, ஒரு உண்மை...அது தான் அறம்.


அறம் தான் நம் வாழ்வை செலுத்துவது.


நம் வாழ்வின் அடிப்படை அறம் தான்.

எனவே தான் இல்லறம், துறவறம் என்று வாழ்வை இரண்டாகப் பிரித்தார்கள்.

உலகுக்கு நீதி சொல்ல வந்த வள்ளுவர் - அறம் , பொருள் , இன்பம் என்று திருக்குறளை மூன்றாகப் பிரித்து அறத்தை முதலில் வைத்தார்.

வில்லறம் , சொல்லறம் என்று அனைத்திலும் அறத்தை கண்ட வாழ்க்கை நெறி நமது.

அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்பார் வள்ளுவர்.

Einstein said "I believe in the god of Spinoza who exists in the orderly harmony of what exists"

ஒரு ஒழுங்கு. அது தான் இறைவன்.

காரைக்கால் அம்மையார் இறைவனை "அறவா " என்று அழைக்கிறார். அறமே வடிவானவன். அறம் தான் கடவுள்.

பாடல்

இறவாத இன்ப அன்பு 
   வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் 
   பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
   வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் 
   அடியின்கீழ் இருக்க என்றார் 

பொருள்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் = நமக்குத் தோன்றும் அன்பு கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது. விழுந்து விழுந்து காதலித்தாலும், திருமணம் ஆன சில நாளில் அந்த அன்பு மறைந்து போய் விடுகிறது. இறவாத அன்பு வேண்டும் என்கிறார். இன்ப அன்பு. நினைத்துப் பாருங்கள் எத்தனை அன்பு இன்பமாக இருக்கிறது?



பின் வேண்டு கின்றார் = மேலும் வேண்டுகிறார்


பிறவாமை வேண்டும்  =  பிறவாமல் இருக்க வேண்டும்


மீண்டும்  பிறப்புண்டேல்  = ஒரு வேளை மறுபடியும் பிறந்து விட்டால்


உன்னை என்றும் மறவாமை வேண்டும் = உன்னை என்றும் மறக்காமல் இருக்க வேண்டும்


இன்னும் வேண்டும் = இன்னும் என்ன வேண்டும் என்றால்


நான் மகிழ்ந்து பாடி = நான் மகிழ்ந்து பாடி


அறவா = அறவா , அறமே வடிவானவனே


நீ ஆடும் போதுன் = நீ ஆடும் போது உன்


அடியின்கீழ் இருக்க என்றார் = உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்கிறார்.


இறைவன் அறமே உருவானவன் என்பது ஒரு செய்தி.

நம்மில் பல பேர் பக்தி என்றால் ஏதோ பெரிய இராணுவ பயிற்சி போல குளித்து முழுகி, முகத்தை ரொம்ப சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு, பய உணர்வு ஒரு பக்கம், பக்தி ஒரு பக்கம்,  என்று பக்தி செலுத்துவார்கள்.

கற்பூர ஆரத்தி காட்டுவதும், பூ அள்ளிப் போடுவதும் ஏதோ அறிவியல் செயல் கூடத்தில்  (laboratory) ஏதோ அறிவியல் கோட்பாட்டை சரி பார்க்கும் முயற்சி போல இருக்கும்.


வேண்டவே வேண்டாம்.


முதலில் சந்தோஷமாக இருக்கும் வேண்டும்.  இன்ப அன்பு வேண்டும்.


அடுத்து, மகிழ்ந்து பாடி என்கிறார். சந்தோஷமாக வாய் விட்டு பாடுங்கள்.


மூன்றாவதாக, இறைவனே ஆடிக் கொண்டு இருக்கிறான். இது ஒரு லீலை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருங்கள். பக்தி என்றால் ஏதோ surgical strike  மாதிரி இருக்கக் கூடாது.


"விளையாட்டு உடையார் அவர் , தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்பார்  கம்பர். எந்த கடவுள் விளையாட்டாக இருக்கிறாரோ, அவர் தான் எங்கள்  தலைவர் என்கிறார் கம்பர்.



வாழ்க்கையை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். விளையாட்டாக  எடுங்கள்.


ஆடுங்கள். பாடுங்கள். அன்பு செய்யுங்கள்.


அவ்வளவுதான் வாழ்க்கை. அவ்வளவுதான் இறைவன்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_12.html



2 comments:

  1. படிக்க சுவாரசியமாக உள்ளது. ஆனால் பகவானை உருவமில்லாமல் நினைத்து பார்க்கக்கூட எளிதாக இல்லை. அம்மையாரே நீ ஆட என சொல்லும்போது ஏதோ உருவகப் படுத்துகிறாரோ என தோன்றுகிறது.

    ReplyDelete
  2. காரைக்கால் அம்மையாரே வேறு பாடல்களில் இறைவனை உருவகித்துப் பாடியிருக்கிறாரா?

    அறம் என்பது அவரவர் உள்ளே இருக்கும் ஒன்றாகப் பாடினால்தான் சரி. அதை விட்டுவிட்டு, இறைவன் என்பவன் அறம் வடிவில் இருக்கிறான் என்று பாடுகிறர். ஒகே, சரி!

    ReplyDelete