Thursday, November 1, 2018

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள்

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள் 


படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களை செய்வது மூன்று மூர்த்திகள் என்று நாம் அறிவோம். பிரமன்,  திருமால்,அரன் என்று சொல்ல கேட்டிருக்கிறோம்.

இந்த மூன்று பேருக்கும் மேலே ஒரு கடவுள் இருக்கிறான் என்று நம் இலக்கியங்கள் பேசுகின்றன.

யார் அது ?

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்வார் ,

"மூவரும் அறிகிலர் யாவர் மாற்று அறிவார்"

அந்த பரம்பொருளை அந்த மும்மூர்த்திகளும் அறிய மாட்டார்கள் என்றால் பின் வேறு யார் தான் அறிவார்கள் என்கிறார்.

மும்மூர்த்திகளுக்கும் எட்டாத ஒருவன் அவன்.

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

வில்லி புத்தூர் ஆழ்வார் சொல்கிறார்


"பிரமன் படைக்கிறான், திருமால் காக்கிறான், அரன் அழிக்கிறான். அப்படி அழித்த பின், மீண்டும் அனைத்தையும் எவன் உண்டாக்குகிறானோ அவன் பொன்னடி போற்றி" என்கிறார்.

அதாவது, இந்த மூவர் அல்லாத இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார். அவன் தான் முதல்வன் என்கிறார்.

பாடல்


ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம்
காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம்
வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப்
பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி.

சீர் பிரித்த பின்

ஆக்குமாறு அயன் முதல் ஆக்கிய உலகம் 
காக்குமாறு செங் கண் நிறை கருணை அம் கடலாம் 
வீக்குமாறு அரன் அவை வீந்த நாள் மீளப் 
பூக்குமா(று ) முதல்வன் எவன் பொன்னடி போற்றி 



பொருள்


ஆக்குமாறு அயன் = படைத்தல் செய்பவன் பிரமன்

முதல் = முதலில்

ஆக்கிய உலகம்  = படைத்த உலகத்தை

காக்குமாறு = காக்கும் தொழிலை செய்பவன்

செங் கண் = சிவந்த கண்களை உடைய

நிறை கருணை = கருணை நிறைந்த

அம் கடலாம் = கடல் போன்ற  (கடல் போன்ற கருணை நிறைந்த)

வீக்குமாறு = வீழுமாறு

அரன் = அரன்

அவை வீந்த நாள் = அவை அவ்வாறு வீழ்ந்த இந்த

மீளப் = மீண்டும்

பூக்குமா(று ) = தோன்றும்படி

முதல்வன் = செய்யும் முதல்வன்

எவன் = யார் ?

பொன்னடி போற்றி  = அவன் பொன்னடி போற்றி

இவைகளை கடந்து செல்ல வேண்டும். உருவம், அந்த உருவங்கள் செய்யும் தொழில் , இதில் யார் பெரியவர் என்ற சண்டைகள் என்று இவற்றை எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post.html

No comments:

Post a Comment