Thursday, November 29, 2018

பெரிய புராணம் - பித்தனோ?

பெரிய புராணம் - பித்தனோ?



இதை படிக்கத் தொடங்கும் முன், முந்திய பிளாக்கை படித்து விடுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html

இறைவனை எப்படி வழி படலாம்?

பூக்கள் இட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, பட்டாடை சாத்தி, பன்னீர், நெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, துதிப் பாடல்களைப் பாடி வழி படலாம் என்று சொல்லுவீர்கள்.

இறைவனை எப்படியும் வழி படலாம் என்று சொல்ல வந்ததுதான் பெரிய புராணம். எனவே தான் அதற்கு பெரிய புராணம் என்று பெயர்.

இறைவனை இப்படித்தான் வழி பட வேண்டும் என்று அல்ல.

சுந்தரர் , இறைவனை பைத்தியக்காரன் என்று திட்டுகிறார். யோசித்துப் பாருங்கள், வேறு எந்த மதத்திலாவது, அந்த மதத்தின் மூலக் கடவுளை பைத்தியம் என்று சொல்ல முடியுமா ? சொன்னால் விட்டு விடுவார்களா?

சைவ சமயம் ஒன்றுதான் அந்த சுதந்திரத்தைத் தருகிறது.

நமக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒன்றும் தெரியாத கடவுளை எப்படி வழிபடுவது? எனவே தான் சைவம் நம் அறியாமையை ஏற்றுக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் வழி படு என்று சுதந்திரம் தருகிறது.

நேரில் வந்த சிவ பெருமானை, சுந்தரர் "நீ என்னை உன் அடிமை என்கிறாய். எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா. இப்படிச் சொல்கிறாயே நீ என்ன பைத்தியமா " என்று கேட்டார்.

பாடல்


மாசு இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சி யால் சிரிப்பு நீங்கி
‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?” என்றார்.


பொருள்

மாசு இலா = குற்றம் இல்லாத

மரபில் வந்த = வழியில் வந்த

வள்ளல் = வள்ளல் குணம் கொண்ட சுந்தரர்

வேதியனை நோக்கி = அங்கு வந்த வயதான வேதியனை நோக்கி

நேசம் முன் கிடந்த = முன்பு இருந்த நேசம் நீங்கி

சிந்தை நெகிழ்ச்சி யால்  = சிந்தை நெகிழ்ந்து

சிரிப்பு நீங்கி = முகத்தில் இருந்த சிரிப்பு நீங்கி

‘ஆசு இல் = குற்றம் அற்ற

அந்தணர்கள் = அந்தணர்கள்

வேறு ஓர் அந்தணர்க்கு = வேறு ஒரு அந்தணர்க்கு

அடிமை ஆதல் = அடிமை ஆவது

பேச = பேசும்படி

இன்று உன்னைக் கேட்டோம் = இன்று நீ சொல்லக் கேட்டோம்

பித்தனோ = நீ என்ன பித்தனா ?

மறையோய்?” = மறை ஓதியவனே

என்றார். = என்று கூறினார்.

இறைவன் நேரில் வந்திருக்கிறான். அடையாளம் தெரியவில்லை. நீ என்ன பைத்தியமா  என்று கேட்டார் சுந்தரர். கேட்டது போகட்டும், அப்படி சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவனை பித்தன் என்று இகழ்ந்து கூறிய சுந்தரரை நாயன்மார்களில் சிறந்த நால்வரில் ஒருவராக சைவ சமயம் போற்றுகிறது.

தோத்திரம் தந்த நால்வரில் சுந்தரர் ஒருவர்.

என்னடா இது, நாம் பெரிதாக நினைத்து வழிபடும் கடவுளை திட்டுகிறானே என்று அவரை ஒதுக்கி வைக்கவில்லை. தலையில் வைத்து கொண்டாடுகிறது சைவ சமயம்.


சைவ சமயத்தின் நீளமும் ஆழமும் புரிகிறதா?

சரி, நாம் கொண்டாடுவது இருக்கட்டும். தன்னை நிந்தனை செய்த சுந்தரரை சிவன் என்ன செய்தார் தெரியுமா ?

நாளை சிந்திப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_29.html

1 comment:

  1. “தன்னை நிந்தனை செய்த சுந்தரரை சிவன் என்ன செய்தார் தெரியுமா?”
    எழுதுங்கள்ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete