Tuesday, January 14, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - ஒரு முன்னோட்டம்

வில்லி பாரதம் - சிகண்டி  - ஒரு முன்னோட்டம் 


பெண்ணின் மனதை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை.

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாததால் வரும் சிக்கல்களை வைத்துத்தான் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் பின்னப் பட்டு இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.

ஒரு கூனியை, கைகேயியை, சூர்பனகையை புரிந்து கொள்ளாமல் அவர்களின் உணர்சிகளோடு ஆண்கள் தவறாக விளையாடியதால் என்ன நிகழ்ந்தது என்று இராமாயணம் காட்டுகிறது.

பாரதமும் அப்படித்தான்.

அதில் ஒரு மிக மிக சுவாரசியமான பாத்திரம் சிகண்டி.

எனக்குத் தெரிந்து, ஒரு அலியின் மன நிலை எப்படி இருக்கும் என்று எந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லை. ஆணின் மனம் புரிகிறது. பெண்ணின் மனம், சிக்கலாக இருந்தாலும், பின்னால் ஓரளவு புரிகிறது.

இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அலியின் மனம் எப்படி வேலை செய்யும்.

சிகண்டியை அலி என்று கூட சொல்ல முடியாது. பெண்ணாய் பிறந்து, ஆணாக மாறிய ஒரு பாத்திரம். இதுவரை வேறு எந்த இலக்கியத்திலும் கேள்விப் படாத ஒரு பாத்திர படைப்பு.

காதல் - தோல்வி - பச்சாதாபம் - ஏளனம் - கோபம் - ஆங்காரம் - வன்மம் - விடா முயற்சி - என்று அந்த உணர்சிக்களின் படைப்பு  சிகண்டி.

பாரதத்தின் மிகப் பெரிய பாத்திரமான பீஷ்மரை கொன்ற பாத்திரம்.

சிகண்டி இல்லாவிட்டால், பாண்டவர்கள் போரை வென்றிருக்க முடியாது.

பார்த்ததில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய பாத்திரம் சிகண்டி.

எல்லாம் முடிந்த பின்,  சிகண்டி மேல் நமக்கு ஒரு பரிதாபம்தான் வரும். ஒரு பச்சாதாபம்   .தான் வரும். அப்படி ஒரு பாத்திரம்.

தவறு யார் மேல் என்று நம்மால் உறுதி செய்ய முடியாத கதைப் போக்கு.

பீஷ்மர் செய்ததும் சரிதான். சிகண்டி செய்ததும் சரிதான். என்று நம்மை நியாய அநியாயங்களுக்கு நடுவில் நிறுத்தி ஒரு பக்கமும் சாய முடியாமல் செய்கிறது  பாரதக் கதை இந்த சிகண்டி பாத்திரத்தின் மூலம்.

மற்றவர்களின் உணர்ச்சிகளை நாம் எவ்வளவு எச்சரிக்கையாக கையாள வேண்டும்  என்று உணர்த்தும் பாத்திரம்.

யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை அம்புப் படுக்கையில் படுக்க வைத்தது  அவரின் மெத்தனப் போக்கு.  அம்பையின் உணர்வுகளை மதிக்காமல் இருந்ததால் , உடல் எல்லாம் சல்லி சல்லியாக துளை பட்டு பீஷ்மர் கிடந்தார்.

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காததால் பீஷ்மரே அந்த பாடு பட்டார் என்றால், நாமெல்லாம் எந்த மூலை?

வர இருக்கும் நாட்களில் சிகண்டி பற்றி காண இருக்கிறோம்.

interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_14.html




1 comment:

  1. ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete