Tuesday, April 28, 2020

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே

இராமானுஜர் நூற்றந்தாதி - தகவெனும் சரண் கொடுத்தே 


வகுப்புக்கு ஒழுங்கா வருகிற மாணவனைத்தான் ஆசிரியர் நிறைய கேள்வி கேட்பார், பரீட்சை வைப்பார், வீட்டுப் பாடம் தருவார். போட்டு படுத்தி எடுப்பார். வகுப்புக்கு வரமால், ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருப்பவனை ஆசிரியர் கண்டு கொள்ள மாட்டார்.

ஒழுங்கா வருகிறவனைப் போட்டு படுத்துகிறார். ஊரு சுற்றுபவவனை ஒன்றும் சொல்வதில்லை. இது சரியில்லையோ என்று தோன்றும்.

ஆனால், கேள்வி, பரீட்சை, வீட்டுப் பாடம் என்று போட்டு படுத்தி எடுத்த மாணவனுக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி என்று பட்டம் கிடைக்கும்.

தகுதி இருக்கானு பாக்கணும் இல்ல.

அது  போல, இறைவனும், முக்தி தருவதற்கு முன்னால் பக்தர்களை போட்டு படுத்தி எடுத்து விடுவான்.

ஞானம், பக்தி, என்று கிடந்து அல்லாட வேண்டும். அப்புறம் தான் முக்தி தருவான்.

ஆனால், ஒரு தாய் என்பவள் அப்படி அல்ல. பிள்ளை படிச்சானா, வேலை செஞ்சானா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. ஐயோ , என் பிள்ளைக்கு பசிக்குமே என்று சோறிடுவாள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்


"ஞானம் பெற்று, நல்லது செய்து, பக்தியால் நாளும் உள்ளம் நைந்து உருகுபவர்களுக்குத்தான் திருமால் முக்தி கொடுப்பான். ஆனால், இராமானுஜரோ, அவரிடம் வந்தவர்களுக்கு, அவர்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை எல்லாம் அகற்றி, தன்னுடய கருணையினால் அவர்களுக்கு முக்தி கொடுப்பார் "

என்று.


பாடல்


ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.


பொருள்

ஞானம் கனிந்த  = ஞானத்தை முழுமையாகப் பெற்று

நலங்கொண்டு = நல்லவற்றை செய்து

நாடொரும் = ஒவ்வொரு நாளும்

-நைபவர்க்கு = பக்தியால் உருகுபவர்க்கே

வானம் கொடுப்பது = முக்தி தருவது

மாதவன் = மாதவனான திருமாலின் வழி

வல்வி னை யேன்மனத்தில் = கொடிய வினைகள் கொண்ட என் மனத்தில்

ஈனம் கடிந்த = கீழான எண்ணங்களை மாற்றி

 இராமா னுசன் = இராமானுஜன்

தன்னை எய்தினர்க்குத் = தன்னை அடைந்தவர்களுக்கு

தானம் கொடுப்பது = தானமாக கொடுப்பது

தன்தக வென்னும் = தன்னுடைய சான்றாண்மை என்ற

சரண் கொடுத்தே. = திருவடிகளை கொடுத்தே


சும்மா இருக்கிற புத்தகத்தை எல்லாம் படிச்சா போதாது. படித்து தெளிந்த ஞானம் பெற வேண்டும்.

பின், பெற்ற ஞானத்தால் பிறருக்கு  உதவ வேண்டும்.

பின், பக்தியால் மனம் தினமும் உருக வேண்டும்.

இப்படி எல்லாம் செய்தால், திருமால் முக்தி தருவார்.

விடிஞ்சிரும்.

இராமாநுஜரிடம் இப்படி எல்லாம் ஒரு கெடு பிடியும் கிடையாது.

நீயே சரண் என்று அவரை பிடித்து விட்டால் போதும், நேரே சுவர்க்கம் தான்.

point to point service மாதிரி.

எது வசதி?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_71.html

2 comments:

  1. ரொம்ப எளிதான வழி போல் இருக்கே. ஆனால் அவரிடம் சரண் அடையக் கூட மனம் பக்குவ படணும் போல் தோன்றுகிறது.அதுதான் பஸ்ஸில் ஏற டிக்கட்டு

    ReplyDelete
  2. கடவுள், தாய் என்ற இரண்டு பெரும் செய்வதை பற்றி படித்து இரசித்தேன். இனிமையான உரை.

    ReplyDelete