Wednesday, October 9, 2019

கந்தர் அலங்காரம் - நீரில் பொறி என்று அறியாத நெஞ்சே

கந்தர் அலங்காரம் - நீரில் பொறி என்று அறியாத நெஞ்சே 


எவ்வளவு செல்வம் இருந்தால் போதும் நமக்கு? அதற்கு ஒரு அளவு இல்லை. எத்தனை ஆயிரம் கோடி சேர்த்தாலும் போதாது போல் இருக்கிறது.

எதற்கு இவ்வளவு செல்வம்?

நிறைய செல்வம் இருந்தால் மரணத்தை வென்று விட முடியுமா? நோயில் இருந்து தப்ப முடியுமா ? முதுமை வராது போய் விடுமா?

அப்படித்தான் நினைத்தார்கள் பல அரசர்கள். பல அரக்கர்கள். உலகம் அனைத்தையும் தங்கள் அதிகாரத்தில் கொண்டு வந்து விட்டால், பகை என்பதே இல்லாமல் ஒழித்து விட்டால், பெரிய பெரிய தவம் செய்து, வலிமையான வரங்களைப் பெற்று, சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பெற்று விட்டால், பின் நம்மை யாரும் அசைக்க முடியாது என்று நினைத்தார்கள்.

என்ன ஆயிற்று?

ஒருவரும் தப்ப முடியவில்லை.

அதை எல்லாம் பார்த்த பின்னும், இன்னும் மனிதர்கள் பொருளை தேடி குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏதோ பொருள் இருந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில்.....

பாடல்


சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.

சீர் பிரித்த பின் 

சூரில் கிரியில் கதிர் வேல் எறிந்தவன் தொண்டர் குழாம் 
சாரில் கதியின்றி வேறு இல்லை காண் தண்டு தாவடி போய் 
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் 
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே 


பொருள் 


சூரில் = சூர பத்மன் என்ற அரக்கன் 

கிரியில் = கிரௌஞ்ச மலை 

கதிர் வேல் = ஒளி வீசும் வேலை 

எறிந்தவன் = எறிந்தவன் 

தொண்டர் குழாம் = அவனுடைய அடியார்கள் கூட்டத்தை 
சாரில் = சார்ந்து இருப்பதைத் தவிர 

கதியின்றி = வழி இன்றி 

வேறு இல்லை = வேறு வழி இல்லை 

காண் = கண்டு கொள்  (மனமே) 

தண்டு = தண்டாயுதம் 

தாவடி = தாவுகின்ற அடி (காலாட் படை) 

போய் = அவற்றோடு போய் 

தேரில் = தேர் படை 

கரியில் =  யானைப் படை 

பரியில் = குதிரைப் படை 

திரிபவர் = இவற்றில் எல்லாம் திரிபவர் 

செல்வம் எல்லாம்  = செல்வம் எல்லாம் 

நீரில் = நீர் மேல் எழுதிய 

பொறி என்று = எழுத்து என்று 

அறியாத பாவி நெடு நெஞ்சமே  = அறியாத பாவி நெடு நெஞ்சமே 

எவ்வளவு பெரிய படை, ஆள், அம்பு, சேனை, எல்லாம் வைத்துக் கொண்டு திரிந்தவர்களின் செல்வம் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய் விட்டது. 

அப்படி என்றால் நம் செல்வம் எந்த மூலைக்கு ?

இதை சேர்க்கவா வாழ் நாள் எல்லாம் செலவழித்தோம் என்று எண்ண வேண்டும்.

செல்வம் என்ற சொல்லை தமிழர்கள் தெரிந்து எடுத்து இருக்கிறார்கள். 

செல்வோம் என்றதால் அது செல்வம் என்று ஆயிற்று. ஒரு இடத்தில் நிலைத்து நிற்காது. சென்று கொண்டே இருக்கும். எனவே, அது செல்வம். 

ஒரு பக்கம், அளவுக்கு அதிகமான செல்வம், படை, பதவி, அதிகாரம். 

இன்னொரு பக்கம் ஒன்றும் இல்லாத பக்தர்கள் கூட்டம். 

பக்தர்கள் கூட்டத்தை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். 

நினைத்துப் பார்க்க முடியுமா நம்மால்?  

பெரிய ஆட்கள் நட்பு இருந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாம், சில காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்ளலாம். அப்படித்தானே நாம் நினைப்போம். அருணகிரிநாதர் சொல்கிறார், அடியார்களை சென்று சேருங்கள் என்று. 

அதற்கு ஆழமான காரணம் இருக்கிறது. 

அதை நான் சொல்வதை விட நீங்கள் சிந்தித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைக்கும். 

தேடுதல் தானே வாழ்க்கை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_58.html


No comments:

Post a Comment