Monday, October 7, 2019

பெரிய புராணம் - நீளு மாநிதி

பெரிய புராணம் - நீளு மாநிதி 


வீட்டுக்கு வர்றவங்களுக்கு எல்லாம் நாலு வித உணவை, ஆறுவித சுவையில் தினமும் விருந்து கொடுத்தால், கட்டுப்படியாகுமா? எவ்வளவு செலவு ஆகும்? ஏதோ நாள் கிழமை னா பரவாயில்லை. எப்போதும் செய்வது என்பது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எழும் அல்லவா?

சேக்கிழார் சொல்கிறார்...

"சிவ பெருமானின் அன்பர்கள் உள்ளம் மகிழ நாளும் நாளும் விருந்து அளித்ததால், அவருடைய செல்வம் மேலும் மேலும் பெருகி குபேரனின் தோழன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார் "

என்கிறார்.

பாடல்


ஆளு நாயகர் அன்பர் ஆனவர் அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய தோழ னாரென வாழுநாள்.

பொருள்

ஆளு நாயகர் = அடியவர்களை ஆளும் நாயகர் (சிவன்)

அன்பர் ஆனவர் = அவரிடத்தில் அன்பு கொண்டவர்கள்

அளவி லார் = எண்ணிக்கையில் அடங்காத

உளம் மகிழவே = உள்ளம் மகிழவே

நாளு நாளும் = ஒவ்வொரு நாளும்

நி றைந்து வந்து = நிறைந்து வந்து

நுகர்ந்த = விருந்தை உண்ட

தன்மையின் = தன்மையின்

நன்மையால் = அதனால் விளைந்த நன்மையால்

நீளு மாநிதி யின் = நீண்டு கொண்டே, அல்லது பெருகிக் கொண்டே சென்ற பெரிய நிதியின்

பரப்பு = அளவு

நெருங்கு செல்வ = குவிந்த செல்வத்தின்

நிலாவி = பொருந்தி

யெண்தோளி னார் = எட்டு தோள்களை உடைய  (சிவன்)

அளகைக்கி ருத்திய =  அழகாபுரி என்ற இடத்தில் இருக்கப் பண்ணிய (குபேரன்)

 தோழனாரென = தோழனார் என

வாழுநாள். = வாழும் நாளில்

அடியவர்களுக்கு அமுது படைத்ததால், இளையான் குடி நாயனாரின் செல்வம் குபேரனுக்கு இணையாக  வளர்ந்ததாம்.

இதெல்லாம் நம்புகிற படியா இருக்கு?

செலவு செய்தால், செல்வம் வளருமா ?

நான் சொல்வது தவறாக இருக்கலாம்.

தெய்வப் புலவர் சேக்கிழார் பொய் சொல்லுவாரா ? தவறான ஒன்றை செய்யச் சொல்லுவாரா ?

அவர் மட்டும் அல்ல, வள்ளுவரும் சொல்லுகிறார்.

"நீ மற்றவர்களுக்கு உதவி செய். உன் வீட்டுக்கு செல்வம் தானே வரும் " என்று.

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்

விருந்தினர் உண்ட பின் மிச்சம் இருப்பதை உண்பவன் நிலத்தில் விதை விதைக்காமலே  பயிர் விளையும் என்கிறார்.  அதவாது, அவன் வேறு ஒன்றும் செய்யாவிட்டாலும், செல்வம் அவனைத் தேடி வரும் என்கிறார்.

விவேகானந்தர் , தன்னுடைய குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் ஒரு மடம்  நிறுவி, ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அப்படி அவர் அந்த மடத்தை நிறுவியபோது அவரிடம் கையில் காலணா காசில்லை.

இன்று அந்த நிறுவனம் உலகெங்கும் கிளை பரப்பி தொண்டாற்றி வருகிறது.  செல்வம்  தானே வருகிறது.

என்னுடைய சிற்றறிவிற்கும், தர்க ரீதியான சிந்தனைகளுக்கும் அப்பால் சில விஷயங்கள் நடக்கின்றன என்பதை நான் அனுபவ பூர்வமாக  உணர்ந்து இருக்கிறேன்.  அது எப்படி நிகழ்கிறது என்று தெரியாது.  ஆனால் நிகழ்கிறது.

அப்படிப்பட்ட  விஷயங்களில் இதுவும் ஒன்று.

பலன் எதிர் பாராமல் உதவி செய்து பாருங்கள், ஒன்றுக்கு பத்தாக அது உங்களுக்கு திரும்பி வரும்.

வந்தே தீரும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_7.html

2 comments:

  1. முற்றிலும் சரியே

    ReplyDelete
  2. இங்கு விருந்தினர் தகுதியை பரிமேலழகர் இவ்வாறு கூறுகிறார்- ஞானத்தினாலும், ஆச்சாரத்தினால் ( ஒழுக்கம்) மேம்பட்டவர் என்று.

    ReplyDelete