Saturday, October 26, 2019

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை 


என்ன எப்பப் பார்த்தாலும், தேவாரம், திருவாசகம், திருக்குறள் என்று ஒரு பக்தி, ஒழுக்கம், அறம் என்று தமிழ் இலக்கியம் என்றால் இவ்வளவுதானா என்று சிலர் நினைக்கலாம்.

இல்லை. தமிழ் இலக்கியம் மனித உறவின் நுணுக்கங்களை, அதன் சிக்கல்களை, அதன் நெளிவு சுளிவுகளை, யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்கிறது.

அது ஒரு சிறிய வீடு. கணவன், மனைவி அவர்களின் சிறிய மகன் மூவர் மட்டும் இருக்கிறார்கள். ஒரே ஒரு படுக்கை அறை தான்.

ஒரு நாள் இரவு, கணவனும் மனைவியும் சற்று இன்பமாக இருக்கலாம் என்று நினைத்து ஆவலோடு படுக்கை அறையில் நுழைகிறார்கள். அவர்கள் படுத்ததுதான் தாமதம், எங்கிருந்தோ அந்த பையன் ஓடி வந்து அவர்கள் இருவருக்கும் நடுவில் படுத்துக் கொள்கிறான்.  அவள் , அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பிள்ளையின் தலை கோதி இருப்பாள்.

அவர்கள் தவிப்பு அவனுக்கு எங்கே தெரிகிறது.


இருந்தும், அவர்களுக்கு பிள்ளை மேல் கோபம் இல்லை. சந்தோஷமாக அவனை கட்டி அணைத்துக் கொண்டு உறங்கிப் போனார்கள்.

அது எப்படி இருக்கிறது என்றால், மான் ஜோடிகளுக்கு நடுவில் படுத்துக் கிடக்கும் மான் குட்டியைப் போல இருக்கிறதாம்.

இல்லறத்தின் நுணுக்கமான உணர்வுகளை விளக்கும் பாடல்.

பாடல்

"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"


பொருள்

"மறி  = மான் குட்டி

இடைப் படுத்த = இடையில் படுத்து இருந்த

மான் பிணை  = ஜோடி மான்களைப்

போலப் = போல

புதல்வன் = மகன்

நடுவணனாக = நடுவில் இருக்க

நன்றும் = நல்லது

இனிது  மன்ற =  இனிது என்று

அவர் கிடக்கை = அவர்கள் (கணவனும் மனைவியும்) படுத்துக் கிடந்தது

முனிவு இன்றி = கோபம் இன்றி

நீல் நிற வியல் = நீல நிறம் கொண்ட ஆகாயத்தின் கீழ்

அகம் = உள்ள உலகம்

கவைஇய = சூழ்ந்து உள்ள

ஈனும் = இன்றும் , இங்கும்

உம்பரும் = தேவர்களும் , மறு உலகிலும்

பெறலரும் = பெறுவதற்கு அரிதான

குரைத்தே" = உரைத்தல், சொல்லுதல்

அருகில், அன்பான மனைவி (/கணவன்) , பிள்ளை இவர்களை கட்டிக் கொண்டு கிடப்பது எவ்வளவு சுகம்  என்கிறது பாடல்.

இங்கு மட்டும் அல்ல, ஸ்வர்கத்திலும் இது போன்ற சுகம் கிடைக்காது என்கிறது பாடல்.

உண்மைதானே ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_26.html

3 comments:

  1. என்ன ஒரு யதார்த்தமான பாடல்! அன்று முதல் இன்று வரை பொருந்தும். அற்புதம்!

    நன்றி.

    ReplyDelete
  2. இந்த மாதிரி மனித உணர்வைத் தொடும் பாடல்கள் இன்னும் எழுதவும்.

    ReplyDelete