Monday, February 5, 2024

திருக்குறள் - மறந்து போச்சு.

 திருக்குறள் - மறந்து போச்சு.


உயிர்கள் மேல் அன்பு செய்தால், அவை நம்மிடம் அன்பு செய்யும்.  புரிந்து கொள்ள இது மிக எளிதான ஒன்று. இரண்டு அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு இடையே பகை இருக்காது, ஒருவரை ஒருவர் துன்பம் செய்யும் எண்ணம் இருக்காது, எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். 


இது தெரிந்தும் கூட ஏன் மக்கள் உயிர்கள் மேல் அன்பு செலுத்தாமல் வெறுப்பு கொள்கிறார்கள்?


அவன் வேறு மதம், அவன் வேறு இனம், பணக்காரன், ஏழை, படித்தவன், முட்டாள், அழகானவன், அழகு இல்லாதவன் என்று வேறுபாடு கொண்டு, வெறுப்பை வளர்த்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பகைமை பாராட்டுவது ஏன்?  


விலங்குகளை வேட்டையாடுகிறார்கள். ஏழைகளை, பாமர மக்களை துன்புறுத்துகிறார்கள், மெலியாரை வலியார் வதைக்கிறார்கள். ஏன் இவ்வாறு நிகழ்கிறது?


வள்ளுவர் அதற்கு விடை தருகிறார். அந்த விடையில் நமக்கும் ஒரு வழி இருக்கிறது. 


பாடல் 

 


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்துஒழுகு வார்


பொருள் 


பொருள்நீங்கிப் = பொருளை விட்டு நீங்கி 


பொச்சாந்தார் = மறந்து விட்டார் 


என்பர் = என்று கூறுவார்கள் 


அருள்நீங்கி = அருளை விட்டு நீங்கி 


அல்லவை = அது அல்லாத காரியங்களை 


செய்துஒழுகு வார் = செய்து வாழ்பவர்கள். 


என்ன இது பொருள், அருள் னு ஒண்ணும் புரியலையே.


பொருள் நீங்கி என்றால் பொருளை விட்டு நீங்கி என்று அர்த்தம். சரி, அது என்ன பொருள்?  வீடு, வாசல், நிலம், புலம் என்ற பொருளா என்றால் இல்லை. மிக உயர்ந்த பொருள், நிரந்தரமான பொருள், உறுதியான பொருள் எது என்றால் அறம் தான் சிறந்த பொருள். அழியாத பொருள். என்றும் நிலைத்து நிற்கும் பொருள். 


அந்த அறத்தில் இருந்து நீங்கி.


"பொச்சாந்தார் என்பர்". மறந்து விட்டார்கள் என்று சொல்லுவார்கள் பெரியவர்கள். 


மக்கள் ஏன் அற வழியில் நிற்க மாட்டேன் என்கிறார்கள் என்றால், அறம் அல்லாத வழியில் சென்று பட்ட துன்பங்களை மக்கள் மறந்து விடுகிறார்கள். எனவே அறம் அல்லாத வழியில் செல்கிறார்கள் என்கிறார். 


தீயில் விரலை வைக்கிறோம். சுடுகிறது. மீண்டும் வைப்போமா? மாட்டோம் என்றால் ஒரு முறை சுட்டது நினைவில் நிற்கும். 


ஆனால், அறம் தவறி நடந்ததன் மூலம் வந்த துன்பம் மறந்து போய் விடுகிறது. மீண்டும் அதே வழியில் மக்கள் செல்கிறார்கள். 


ஒவ்வொரு முறை துன்பம் வரும் போதும், அந்தத் துன்பம் ஏன் வருகிறது என்று யோசிக்க வேண்டும்.  எங்கோ தவறு செய்திருக்கிறோம் என்று தெரிய வேண்டும். மீண்டும் தவறு செய்யாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.  


இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் புரிவது கடினம். 


தவறு செய்ய நினைக்கும் போதே, முன் பட்ட துன்பங்கள் நினைவு வந்தால், தவறு செய்வோமா?  




1 comment:

  1. மனசாட்சி என்று ஒன்று இருந்தா தான் அது மாதிரி நடக்க முடியும். நிறைய பேருக்கு அது தப்புன்னே தெரியுறது இல்ல.

    ReplyDelete