Thursday, September 26, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - சந்தேகம்

 கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - சந்தேகம் 



மனிதர்களுக்கு சந்தேகம் வரலாம். எது சரி, எது தவறு என்று குழப்பம் வரலாம். தயக்கம் வரலாம். இறைவனுக்கு வருமா?


மனிதனாக அவதாரம் செய்த இராமன், மனிதனாகவே வாழ்ந்து காட்டுகிறான். 


ஒரு மாணவனாக விஸ்வாமித்திரன் பின் செல்கிறான். வேள்வியைக் காக்க. சின்ன பையன் மாதிரி கேள்விகள் கேட்டுக் கொண்டு செல்கிறான். இறுதியில் தாடகை வந்து நிற்கிறாள். 


விஸ்வாமித்திரன் அவளை கொல் என்று கட்டளை இடுகிறான். 


இராமன் கொள்ளவில்லை. தயங்குகிறான். குழம்புகிறான். 


வசிட்டர் சொல்லித் தந்த பாடம் "மாதரையும், தூதரையும் கொல்லக் கூடாது" என்று. விச்வாமித்ரரோ பெண்ணான தாடகையை கொல் என்கிறார். 


என்ன செய்வது ?


நான் கடவுள் அவதாரம். எனக்கு எல்லாம் தெரியும் என்று முடிவு எடுக்கவில்லை. 


அவள் மேல் அம்பு போடாமல், பெண்ணிடம் எப்படி போர் செய்வது என்று நினைக்கிறான். 


பாடல் 


அண்ணல் முனிவற்கு அது

    கருத்து எனினும், ‘ஆவி

உண் ‘என வடி கணை

    தொடுக்கிலன்; உயிர்க்கே

துண் எனும் வினைத் தொழில்

    தொடங்கி உளள் ஏனும்,

பெண் என மனத்திடை

    பெரும் தகை நினைந்தான்.


பொருள் 


அண்ணல்  = பெரியவரான 


முனிவற்கு = விஸ்வாமித்ர முனிவருக்கு 


அது = தாடகையை கொல்லும் 


கருத்து எனினும் = எண்ணம் என்றாலும் 


 ‘ஆவி உண்  = உயிரைக் குடி 


‘என -= என்று 


வடி கணை  தொடுக்கிலன்; = வடிவான அம்பை தொடுக்கவில்லை 


உயிர்க்கே = உயிர்கள் எல்லாம் 


துண் எனும் = நடுங்கும் 


வினைத் தொழில் = கொலைத் தொழில் 


தொடங்கி உளள் ஏனும் = தொடங்கி நடத்துபவள் என்றாலும் 


பெண் என  = அவளும் பெண் தானே  என்று 


மனத்திடை = மனத்தில் 


பெரும் தகை = பண்புகளில் உயர்ந்த 


நினைந்தான் = இராமன் நினைத்தான் 


ஒரு அறிவான மாணவனுக்கு வரும் குழப்பம் அவனுக்கும் வருகிறது. அவனும் நம்மைப் போல் தான் என்று காட்டுவதன் நோக்கம், அவனும் உன்னைப் போல உள்ளவன் தானே, உனக்கு உள்ள குழப்பங்கள் அவனுக்கும் இருந்தது தானே, இருந்தும் அவன் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தான், அது போல் நீயும் வாழ முடியும், வாழ வேண்டும் என்று சொல்வதர்காக.


விஸ்வாமித்திரன் இராமனுக்கு எடுத்துச் சொல்லி இறுதியில் இராமன் மனம் மாறுகிறான்.


மாறிய பின் என்ன சொன்னான், செய்தான் ? 



No comments:

Post a Comment