Friday, September 20, 2024

திரு மந்திரம் - களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி

திரு மந்திரம் - களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி 



நோய் வந்தால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் அந்த நோயைப் போக்க மருந்து தருகிறார். நோய் நீங்கி சுகம் பெறுகிறோம். 


அந்த நோய் மீண்டும் வராது என்று சொல்ல முடியுமா? அல்லது, வேறு எந்த நோயுமே இனி வராது என்று எந்த மருத்துவராவது சொல்ல முடியுமா?  


நோய் வரும், குணமாகும், மீண்டும் ஒரு நோய் வரும், அது குணமாகும் என்று போய்க் கொண்டே இருந்தால் என்ன பலன். 


முந்தைய மந்திரத்தில் இறைவன் ஆன்மாக்களை ஒட்டி இருக்கும் களிம்பை (மலங்களை) நீக்கி அருள் புரிந்தான் என்று பார்த்தோம். அந்த குற்றங்கள், மலங்கள், களிம்புகள் மீண்டும் வந்து விட்டால்?


திருமூலர் சொல்கிறார், அவன் குற்றங்களை நீக்கியது மட்டும் அல்ல, அந்தக் குற்றங்கள் மீண்டும் வராமல் தடுப்பான் என்று. 



பாடல் 


களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பனிங்கிற் பவழம்3 பதித்தான் பதியே.


பொருள் 


களிம்பறுத் தான் = ஆன்மாக்களை பற்றியுள்ள அழுக்குகளை நீக்கினான்  


எங்கள் = எங்கள் 


கண்ணுதல் = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் உள்ள 


நந்தி = சிவனை நந்தி என்று குறிப்பிடுகிறார் திருமூலர் 


களிம்பறுத் தான் = களிம்பை நீக்கிய அவன் 


அருட் கண் = அருள் கண்ணை 


விழிப் பித்துக் = விழிக்கச் செய்து 


களிம்பணு காத = மீண்டும் களிம்பு அணுகாத 


கதிரொளி  காட்டிப் = ஞானமாகிய ஒளியைக் காட்டி 


பனிங்கிற் பவழம் = பளிங்கு போன்ற உள்ளத்தில் பவழம் போன்ற தன் திருவடிகளைப் 


பதித்தான் = பதியச் செய்தான் 


பதியே = தலைவனாகிய அவன்.


நம் கண்களால் உலகைக் காண்கிறோம். 


உலகில் உள்ள எல்லாவற்றையும் காண முடியுமா?


பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை சாதாரண கண்ணால் பார்க்க முடியாது. அதற்கு நுண்ணோக்கி (microscope ) வேண்டும். 


தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்க தொலை நோக்கி (telescope ) வேண்டும். 


அது போல உண்மையை காண இந்தக் கண்கள் போதாது. அருட் கண்கள் வேண்டும். 


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ 


என்பார் அருணகிரிநாதர்.


அருள் இல்லாமல் அறிய முடியாது. அந்த அருள் கண்ணை திறந்து, மலங்களை கழுவி, அது மீண்டும் வரா வண்ணம் தன் திருவடிகளை நம் மனதில் பதித்து அருள் புரிவான் என்பது கருத்து. 


எங்கெல்லாம் திருவடிகள் என்று வருகிறதோ, அங்கெல்லாம் அதை ஞானம் என்று கொள்ளலாம். 


திருவடிகளை மனதில் பதித்தான் என்றால், உண்மையான ஞானத்தை தந்து அருளினான் என்று பொருள் கொள்ள வேண்டும். 




1 comment:

  1. இது அறிவியல் அணுகுமுறை விளக்கம். ஆன்மிக விளக்கமாயின் களிம்பு என்பது வினைப்பயன். அறிவியல் விளக்கமே பயனுள்ளது.

    ReplyDelete