Monday, September 23, 2024

திருக்குறள் - உலகம் பழித்தது ஒழித்து விடின்

 திருக்குறள் - உலகம் பழித்தது ஒழித்து விடின் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/09/blog-post_23.html


துறவறம் என்பது வேடத்தைப் பொறுத்து அல்ல. சாமியார் என்றால் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் உடை அணிய வேண்டும் என்று ஆகி விட்டது. ஒவ்வொரு மதமும் ஒரு நிறத்தை வைத்து இருக்கிறது. 


இந்த புற வேடங்களை வள்ளுவர் கண்டிக்கிறார். 


மொட்டை அடிப்பது, தாடி வளர்ப்பது போன்ற எதுவும் வேண்டாம், எப்போது என்றால் இந்த உலகம் தவறு என்று எதைச் சொல்கிறதோ அதை விட்டு விட்டால்.


பாடல் 


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்


பொருள் 


மழித்தலும் = தலையில் உள்ள முடியை நீக்குவதும் (மொட்டை போடுவதும்) 


நீட்டலும் = தாடியை நீளமாக வளர்ப்பதும் 


வேண்டா  = தேவை இல்லை 


உலகம் = உலகம் என்றால் நல்லோர், சான்றோர். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது தொல்காப்பியம் 


பழித்தது = தவறு என்று சான்றோர் சொன்னவை 


ஒழித்து விடின் = விட்டு விட்டால் 


சாத்திரம், வேதம், ஆகமம், பூஜை, புனஸ்காரம்...எதுவும் தேவை இல்லை. அவற்றை எல்லாம் படிக்கக் கூட வேண்டாம். பெரியவர்கள் எதைச் செய்யக் கூடாது என்று கூறினார்களோ, அவற்றை விட்டு விட்டால் போதும். 


ஒரு சந்தேகம் வரும். 


இந்த தாடி வளர்ப்பது , மொட்டை அடிப்பது எல்லாம் ஆண்களுகுத்தானே பொருந்தும், பெண்களுக்கு பொருந்தாதே என்று. 


இந்து மதத்தில் பெண்கள் துறவிகளாகப் போக அனுமதி இல்லை. அவர்கள் திருமணம் செய்து க்கொண்டு இல்லறத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. 


மணிமேகலை இருந்தாள், அவள் சமண மதத்தைச் சேர்ந்தவள். 


வள்ளுவர் காலத்திலேயே இந்த மாதிரி மொட்டை அடித்து, தாடி வளர்த்து ஊரை ஏமாற்றும் பேர்வழிகள் இருந்திருக்கிறார்கள். அப்படி என்றால் இப்போது கேட்கவா வேண்டும். 


இதோடு கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


துறவிகளுக்கு காமம் பற்றிய எண்ணங்கள் வரக் கூடாது. அப்படி வந்தால் துறவை துறந்து விட வேண்டும். மாறாக, துறவி வேடத்தில் காமச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டிக்கிறது இந்த அதிகாரம். 


துறவிகள் காமத்தைத் தவிர்க்கச் சொன்னார். 


அதை அடுத்து என்னவாக இருக்கும்?


No comments:

Post a Comment