Tuesday, September 17, 2024

திரிகடுகம் - துயரம் வரும் வழி

 திரிகடுகம் - துயரம் வரும் வழி 


திரிகடுகம் என்ற நூலில், ஒவ்வொரு பாடலும் மூன்று கருத்துகளை கொண்டு இருக்கும். 


துயரம் வரும் வழி எது? மூன்று விடயங்கள் துயரம் தரும் என்கிறது. 


ஏதோ ஒரு புது ஊருக்குப் போய் இருப்போம். சுற்றுலா என்று வைத்துக் கொள்ளுங்களேன். போன இடத்தில் ஒரு அருமையான நீர் ஓடும் ஒரு இடம். அது ஓடையாக இருக்கலாம், ஆறாக இருக்கலாம், செயற்கை நீரோட்டமாக இருக்கலாம். நமக்கு பழக்கம் இல்லாத நீரோட்டம். அதில் சென்று மட மட என்று இறங்குவது துயர் தரும். ஆழம் தெரியாது, நீரின் வேகம் தெரியாது. அதில் சுழல் இருக்குமா, உள்ளே இழுக்குமா என்று தெரியாது. அதில் இறங்குவது துன்பம் தரும். 


அன்பு இல்லாத பெண்களைச் சேர்வது. பொதுவாக விலை மகளிரை குறித்தாலும், கட்டிய மனைவியாகவே இருந்தாலும், அன்பு இல்லாத பெண்ணிடம் சேர்ந்து வாழ்வது துன்பம் தரும். 


சில பேர் ஏதோ ஒரு காரணத்துக்காக வேறு ஊர் செல்வார்கள். வேலை நிமித்தம், அல்லது திருமணம் போன்ற சடங்குகளை காண என்று ஏதோ ஒரு காரணம் இருக்கும்.  அந்த ஊரில் எங்கே தங்குவது என்ற கேள்வி வரும். நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, அவர்கள் வீட்டில் அழையா விருந்தாளியாக போய் தங்குவது. அவர்களின் சங்கடம், வீட்டுச் சிக்கல்கள் இது பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவர்கள் வீட்டுக்குப் போய் தங்குவது துயரம் தரும் என்கிறது திரிகடுகம். 


பாடல்   



வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப

வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்

அருந் துயரம் காட்டும் நெறி. . . . 


பொருள்


வழங்காத் = போய் வந்து பழக்க வழக்கம் இல்லாத 


துறை = நீர் துறை, ஆற்றங்கரை 


இழிந்து = இறங்கி 


நீர்ப் போக்கும் = நீர் ஓடும் இடமும் , 


ஒப்ப = ஒன்றாக, ஒரு மனதாக 


விழைவு = விருப்பம், அன்பு 


இலாப் பெண்டிர்  = இல்லாத பெண்கள் 


தோள் சேர்வும் = அவர்கள் தோளைச் சேர்வதும், கட்டி அணைப்பதும், 


உழந்து = கஷ்டப்பட்டு 


விருந்தினனாய்  = விருந்தினனாய் 


வேற்றூர் புகலும் = வெளி ஊரில் ஒருவர் வீட்டுக்குச் செல்வதும் 


இம் மூன்றும் = இந்த மூன்றும் 


அருந் துயரம் = பெரிய துன்பத்தைக் 


காட்டும் நெறி = கொடுக்கும் வழிகளாகும் 


 


1 comment: