Thursday, September 12, 2024

திருக்குறள் - தோற்றமும், செயலும்

திருக்குறள் - தோற்றமும், செயலும் 


நல்லவர் யார், தீயவர் யார் என்று எப்படி அடையாளம் கண்டு கொள்வது?


வெளியில் பார்த்தால் துறவிகளுக்கான உடை, நாக்கில் எப்போதும் இறைவன் நாமம், பழைய நூல்களில் இருந்து எப்போதும் மேற்கோள், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பாண்டித்தியம், புராண, இதிகாசங்களில் இருந்து மேற்கோள்...என்று ஒரு துறவிக்கு உண்டான அனைத்து இலட்சணங்களும் இருக்கும். 


ஆனால், செயலோ மிக மிக கீழ்த்தரமாக இருக்கும். 


நமக்குத் தெரிவது எல்லாம் வெளி வேடம் தானே. உள்ளுக்குள் போய் நாம் எப்படி ஒருவரை இனம் காண முடியும்?


வள்ளுவர் அதற்கும் ஒரு வழி சொல்கிறார். 


ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் வெளித் தோற்றத்தை வைத்து முடிவு செய்யாதே. அவன் செய்த செயலை வைத்து முடிவு செய், என்கிறார்.


அம்பு பார்பதற்கு நேர்த்தியாக, கூறாக அழகாக இருக்கும். ஆனால், அதன் தொழில் உயிரை பறிப்பது. 


யாழ் என்பது பார்பதற்கு வளைந்து நெளிந்து ஒரு அழகான வடிவம் இல்லாமல் இருக்கும். ஆனால் அதில் இருந்து இனிமையான நாதம் வரும். 


அழகாக இருப்பது எல்லாம் நல்லதும் அல்ல. அழகு இல்லாமல் இருப்பது எல்லாம் தீமையானதும் அல்ல. 


பாடல் 

 


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்


பொருள் 


கணை = அம்பு 


கொடிது = கொடுமையானது (உயிர்களைப் பறிப்பதால்) 


யாழ் = யாழ் என்ற இசை வாத்தியம் 


கோடு  = வளைவு உள்ளது 


செவ்விது = செம்மையானது 


ஆங்கு அன்ன - அது போல 


வினைபடு பாலால் = வினையால் விளையும் பலனால் 


கொளல் = ஏற்றுக் கொள்க 


கலர் கலரான உடையும், நளினமான சொல்லும், உடம்பு பூராவும் சமயச் சின்னங்களும்...வெளித் தோற்றத்தை வைத்து எடை போடாதே. 


கடந்த சில வருடங்களில் அவன் என்ன செய்திருக்கிறான் என்று பார். அதில் எவ்வளவு வருமானம் நோக்கி, எவ்வளவு பொது நல சேவை நோக்கி என்று பார். 


பின் முடிவு செய். 


அவன் என்ன செய்திருக்கிறான் என்று தெரியவில்லையா, அவன் நல்லவன் என்று முடிவு செய்யாதே. அப்படி ஒரு முடிவு எடுத்தால் அது புறத் தோற்றத்தை பார்த்து எடுத்த முடிவாகவே அமையும். 





No comments:

Post a Comment