Saturday, September 28, 2024

திருக்குறள் - கள்ளாமை - கள்ளாமை காக்க

 திருக்குறள் - கள்ளாமை - கள்ளாமை காக்க 

https://interestingtamilpoems.blogspot.com/2024/09/blog-post_28.html



முந்தைய அதிகாரம் கூடா ஒழுக்கம். 


அதாவது, தவறான வழியில் உடல் இன்பத்தைப் பெறுவது துறவிகளுக்கு சரியான ஒழுக்க முறை அல்ல என்று கூறியது. 


உடல் இன்பத்தைத் அடுத்து, பொருள் இன்பம் பற்றி கூற இருக்கிறார் அடுத்த அதிகாரமான கள்ளாமை என்ற அதிகாரத்தில். 


பல துறவிகள் ஏன் பொய்யாக வேடம் போடுகிறார்கள்?


நிறைய காணிக்கை, தட்சணை கிடைக்கும், அதன் மூலம் பொருள் இன்பங்களை அனுபவிக்கலாம் என்ற எண்ணத்தில் துறவி, சாமியார் வேடம் போடுகிறார்கள். 


துறவு எண்ணம் இல்லாமல், துறவி போல் வேடம் இட்டு பொருள் பெறுவது என்பது களவாணித்தனம் தானே. ஏமாற்றி பொருள் கொள்வது. அது கூடாது என்று இந்த அதிகாரத்தில் கூறுகிறார். 


அதில், முதலாவது குறளில் 


பாடல் 


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு


பொருள் 


எள்ளாமை = இகழப்படாமை 


வேண்டுவான் = விரும்புபவன் 


என்பான் = என்று சொல்லப்படுபவன் 


எனைத்தொன்றும் = எது ஒன்றையும் 


கள்ளாமை = களவின் மூலம் பெற்றுக்  கொள்ளலாம் என்ற எண்ணம் வராமல் 


காக்க = காத்துக் கொள்ள வேண்டும் 


தன் நெஞ்சு = தன் மனதை 


மேலோட்டமாக பார்த்தால், யாராலும் பழி சொல்லப்படாமல் நல்லவன் என்று பெயர் எடுக்க வேண்டும் என்றால், பிறர் பொருளை தவறான வழியில் எடுத்துக் கொள்ள நினைக்கக் கூடாது என்று அர்த்தம் தோன்றும். 


ஒரு துறவி திருடக் கூடாது என்று சொல்ல வள்ளுவர் வேண்டுமா?  


இதற்கு பரிமேலழகர் அற்புதமான உரை செய்திருக்கிறார். 



சில பேருக்கு இந்த சாமி, கோவில், சொர்க்கம், நரகம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. 


சாமி என்று ஒன்று இருக்கிறதா?  காமி. எங்க இருக்கு என்று கேட்பார்கள். அது மட்டும் அல்ல, இதெல்லாம் எப்படித்தான் நம்புராங்ஞலோ என்று மற்றவர்களை ஏளனம் செய்வார்கள். 


அவர்களுக்கு எல்லாவற்றிற்கும் நிரூபணம் வேண்டும். பார்த்து, தொட்டு உணர்ந்து, சுவைத்து, கேட்டு அறிந்தால்தான் ஒன்றை ஏற்றுக் கொள்ளவார்கள். இல்லை என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 


நிரூபிக்க முடியாதது எல்லாம் பொய் , பித்தலாட்டம் என்று ஏளனம் செய்வார்கள். 


அப்படி ஏளனம் செய்யாமல், இகழாமல் அவற்றின் மேல் உண்மையிலேயே நம்பிக்கை உள்ளவன் என்று சான்றோரால் ஒருவன் சொல்லப்பட விரும்பினால் என்று "எள்ளாமை வேண்டுவான் என்பான்" என்ற சொற்களுக்கு பரிமேலழகர் உரை செய்கிறார். 


"அவன் நல்லவன். சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவன். இறை நம்பிக்கை உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு பயந்தவன்" என்று சொல்லப்பட வேண்டினால் 


"எனைத்தொன்றும் கள்ளாமை காக்க தன் நெஞ்சு"

 


"எனைத்தொன்றும் கள்ளாமை காக்க" என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். அது எதற்கு "தன் நெஞ்சு" என்ற தொடரை சேர்த்தார்?


நெஞ்சு, மனம் என்றால் நினைப்பது. பிறர் பொருளை ஏமாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்று மனதாலும் நினைக்கக் கூடாது என்பதற்காக தன் நெஞ்சு என்ற தொடரைச் சேர்த்தார். 


அது என்ன "எனைத்தொன்றும்" எப்பொருளும் என்று போட்டு இருக்கலாமே?


சில பேர் மற்றவர்களின் எழுத்தை,  அவர்கள் அறியாமல் எடுத்து தங்கள் பெயரில், ஏதோ தாங்களே கண்டு பிடித்ததைப் போல் போட்டுக் கொள்வார்கள். அதுவும் ஒரு வகையில் திருட்டுதான். 


அலுவலகத்தில், முழுமையான திறமையை வெளிப்படுத்தி, முழு நேரமும் வேலை செய்யாமல், டீ குடிக்கப் போவது, அரட்டை அடிப்பது, whatsapp இல் நேரம் செலவிடுவது என்று குறைவான நேரத்தை செலவிட்டு முழு சம்பளம் பெற்றுக் கொல்வதும் ஒரு விதத்தில் திருட்டுத்தான். 


வீட்டில் கூட கணவன் மனைவி இருவரின் பங்களிப்பும் ஏறக்குறைய சமமாக இருக்க வேண்டும். 


ஆசிரியரிடம் வித்தை கற்றுக் கொண்டு, அவருக்கு உரிய தொகையை கொடுக்காமல் இருப்பதும் களவு என்கிறார் பரிமேலழகர். 


எனவே, "எனைத் தொன்றும்" என்றார். எந்த விதத்திலும் களவு என்ற எண்ணமே வரக் கூடாது. 


எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இப்படி கொடுப்பதை விட பெறுவது அதிகம் களவு என்று ஆகிவிட்டால், களவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், எப்போதும் நிறைய செய்ய வேண்டும், குறைவாக பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு துறவி என்பவன் சேவை மனப்பான்மை உள்ளவனாக இருக்க இது ஒரு சிறந்த வழி. சும்மா மூன்று வேளையும் பிச்சை பெற்று உண்பதால் ஒருவன் துறவி என்று ஆகிவிட முடியாது. 


பொதுவாகவே, துறவிகளுக்கு சொல்லப்படும் அறம் மிகக் கடுமையானதாக இருக்கும். இல்லறத்தில் உள்ளவர்கள் அந்த அளவு கடுமை காட்ட முடியாது. அதற்காக, ரொம்பவும் கீழே போகவும் வேண்டாம். முடிந்த வரை, எங்கெல்லாம் முடியுமோ, எப்போதெல்லாம் முடியுமோ நிறைய கொடுப்போம், குறைவாக எடுத்துக் கொள்வோம். 


ஏன் என்றால், இல்லறம் என்பது, துறவறத்தின் முதல் படி. ஒரு பயிற்சி முகாம். இங்கே பழகினால்தான் அங்கே சிறப்பாக இருக்க முடியும். 



No comments:

Post a Comment