Thursday, October 10, 2024

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்த கதை

 திருவிளையாடற் புராணம் - மண் சுமந்த கதை 


மக்களுக்கும், கடவுளுக்கும் உள்ள தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?


ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்.


கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?  கணவன் வீட்டை நடத்துபவனாகவும், மனைவி அவனுக்கு உதவி செய்பவளாகவும் இருக்கலாம். இருவரும் சேர்ந்து நடத்தலாம். இருவரும் ஒரு நல்ல நண்பர்கள் போல் இருக்கலாம், மனைவி எல்லாவற்றையும் எடுத்துச் செய்யலாம், கணவன் எனக்கு என்ன என்று பொறுப்பு இல்லாமல் இருக்கலாம். 


இப்படி எத்தனையோ வகைகள் இருக்கின்றன. 


அப்பா மகன் உறவு, அப்பா மகள் உறவு? அம்மா மகன்/மகள் உறவு?  


ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.


அது போல பக்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் அணுகுகின்றன. 


நம் இந்து மதம் அணுகும் முறையே அலாதி. 


நம் கடவுள்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். விளையாட்டு புத்தி உள்ளவர்கள். நம்மோடு வந்து விளையாடுவார்கள். அடி வாங்குவார்கள். விறகு சுமப்பார்கள். பெண் வேடம் போட்டு வருவார்கள். காதல் கடிதம் கொண்டு போய் கொடுப்பார்கள். பன்றியாக வருவார்கள். இப்படி பல விதங்களில் நம்மோடு, நம் வீட்டில் ஒரு ஆள் போல் இருப்பார்கள். 


அல்லது அப்படித்தான் நாம் நினைக்கிறோம். 


கடவுள் என்றால் ஏதோ மலை மேல் அமர்ந்து கொண்டு, கடு கடு வென்று, கோபமாக, தவறுகளை கண்டு பிடித்து தண்டனை தரும் ஒரு போலீஸ் மாதிரி இல்லாமல், ரொம்பவும் நட்பாக நாம் சித்தரிக்கிறோம். 


"அலகிலா விளையாட்டு உடையார் அவர்" என்பார் கம்பர். 


எந்நேரமும் விளையாட்டுத்தான். 


கடவுளின் விளையாட்டை லீலை என்கிறோம். 


உலகைப் படைத்த கடவுளே அதை பெரிதாக, சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. நாம் ஏன் வாழ்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது?


ஏன் இவ்வளவு சண்டை, கோபம்,  சச்சரவு, எரிச்சல், பொறாமை...வெற்றி கண்டு களியாட்டம், தோல்வியில் துவண்டு விடுவது...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு போ என்கிறது நம் சமய இலக்கியம்.


திருவிளையாடல் புராணம் முழுக்க முழுக்க சிவனின் விளையாடல்கள் தான். 


அந்த புராணத்தில் இருந்து சில பாடல்களை பற்றி சிந்திப்போம். 


முதலில் மண் சுமந்த விளையாடல். 


சிந்தித்துப் பாருங்கள், 


இந்த அண்ட சராசரங்களைப் படைத்த இறைவன், கூடை மண் சுமந்து, புட்டு தின்று, அடி வாங்கி...எவ்வளவு இனிமையான விடயம்.


வாருங்கள் கதையோடு, கவிதையையும், அந்தக் கால வாழ்க்கை நடைமுறைகைளையும் சேர்த்து அனுபவிப்போம்.


  

No comments:

Post a Comment