Monday, October 21, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - மகன்

 கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - மகன்  

https://interestingtamilpoems.blogspot.com/2024/10/blog-post_21.html



பல பணக்காரர்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகள் அங்கு வேலை செய்யும் ஆட்களை எப்படி நடுத்துகிறார்கள் என்று நாம் கண்டும் கேட்டும் இருக்கிறோம். தன் தந்தையின், தாத்தாவின் வயது ஒப்ப வேலையாளை வா போ என்று ஒருமையில் அழைப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது என்றெல்லாம் செய்கிறார்கள். காரணம், அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் பெரிய பணக்காரர்கள், அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பதால். 


வீட்டின் செல்வமும், அதிகாரமும் அந்த இளம் பிஞ்சுகளின் மனதில் ஏறி விடுகிறது. அதை பெற்றோரும் கண்டிப்பது இல்லை. 


இராமனை அழைத்து வரும்படி முதல் அமைச்சனான சுமந்தரனிடம் தசரதன் கூறுகிறான். சுமந்திரனும் இராமன் இருக்கும் இடம் செல்கிறான். 


"அப்பா வரச் சொன்னார் .. ஒரு வேலை இருக்கு...என் கூட வா" என்று சுமந்திரன் இராமனை அழைக்கிறான். என்ன வேலை என்று சொல்லவில்லை.  


"சரி சரி வெளியே காத்து இரு, வர்றேன்" என்று இராமன் சொல்லி இருக்கலாம். சொன்னாலும் யாரும் குறை காணப் போவது இல்லை. 


அல்லது, என்ன வேலை, இப்பவே வரணுமா, நாளைக்கு பாத்துக்க முடியாதா, என்று ஆயிரம் கேள்விகள் கேட்டு இருக்கலாம். 


அல்லது, "ஆமா, இந்த அப்பாவுக்கு ஒரு வேலை இல்லை. சும்மா பொழுது போகலைனா என்னைய கூப்பிட்டு உக்கார வச்சு பழம் கதைகள் பேசி 


அதெல்லாம் இராமன் செய்யவில்லை. 


சுமந்திரன் சொன்னதுதான் தாமதம், "இதோ வர்றேன் என்று உடனே கிளம்பி விட்டான்...மேகம் மிதந்து வருவது போல் வந்தான் " என்கிறான் கம்பன். 


உள்ளே போய் உடை மாற்றி, முகம் கழுவி, தலை கிலை சீவி, கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கலாம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அப்பா கூப்பிடுகிறார், சுமந்திரன் வந்திருக்கிறான்  என்றால் எதாவது முக்கியமான வேலையாகத்தான் இருக்கும் என்று உடனே கிளம்பி விட்டான். 


பாடல் 


கண்டு கை தொழுது “ஐய! இக்    கடல் இடைக் கிழவோன்

‘உண்டு ஒர் காரியம், வருக ‘என     உரைத்தனன்“ எனலும்

புண்டரீகக் கண் புரவலன்     பொருக்கென எழுந்து, ஓர்

கொண்டல் போல் அவன் கொடி நெடும்     தேர் மிசைக் கொண்டான்.


பொருள் 


கண்டு = சுமந்திரன், இராமனைக் கண்டு 


கை தொழுது = கை கூப்பி 


“ஐய! = ஐயனே 


இக் = இந்த 

    

கடல் இடைக் = கடல்களுக்கு நடுவில் உள்ள உலகின் 


கிழவோன் = தலைவன் (தயரதன்) 


‘உண்டு ஒர் காரியம், வருக ‘ = ஒரு வேலை இருக்கிறது, வா 


என = என்று 


உரைத்தனன்“ = கூறினான் 


எனலும் = என்று சொன்னவுடன் 


புண்டரீகக் = தாமரை போன்ற 


கண் = கண்களை உடைய 


புரவலன் = காப்பவனான இராமன் 


பொருக்கென = சட்டென்று 


எழுந்து = எழுந்து 


ஓர் = ஒரு 


கொண்டல் = மழை மேகம்  


 போல் = போல 


அவன் = சுமந்தரனின் 


கொடி நெடும் = நீண்ட கொடியை உடைய 


தேர் மிசைக் கொண்டான் = தேர் மேல் ஏறிக் கொண்டான் 


அப்பா மேல் அவ்வளவு மரியாதை. அப்பா வா ன்னு சொன்னா உடனே கிளம்பி வருகிறான் இராமன். 


இன்றுள்ள தலைமுறையை நினைத்துப் பார்த்தால்...


என்ன சொன்னாலும் ஆயிரம் கேள்வி, முடியாது, இப்ப முடியாது, என்னால் முடியாது, வேற வேலை இ இருக்கு, வேற வேலை வெட்டி இல்லையா....என்று ஆயிரம் பதில்கள் வரும். 


இந்தப் பாடல்களையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுக்கணும்.  

No comments:

Post a Comment