கம்ப இராமாயணம் - இன்சொலின் திருந்தினாள்
https://interestingtamilpoems.blogspot.com/2026/03/blog-post_22.html
வார்த்தைகள்.!!
வார்த்தைகள் வலிமை மிக்கவை.
அவை நம் வாழ்க்கையை மட்டும் அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்கள் வாழ்வையும் பாதிக்கும்.
அது நல்லதாகவும் இருக்கலாம். அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம்.
எவ்வளவு பெரிய துன்பத்தில் ஒருவர் இருந்தாலும், ஆறுதலான நாலு வார்த்தை போதும், அவர்கள் துன்பத்தை மாற்ற, அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையை ஊட்ட.
யோசித்துப் பாருங்கள்.
திருக்குறள், கம்ப இராமாயணம், தேவாரம், பிரபந்தம், விவிலியம் எல்லாம் வார்த்தைகளின் தொகுப்பு. நம் வாழ்க்கைக்கு அவை வழிகாட்டி நிற்கின்றன. நம்மை நல்வழிப் படுத்துகின்றன.
காலம் காலமாய், அணையா விளக்காய், கலங்கரை விளக்காய் நின்று வழி காண்பித்துக் கொண்டிருக்கின்றன.
சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். சுற்றிலும் அரக்கியர்கள். பேசக் கூட ஆள் இல்லை. தனிமை. சோகம். பயம். விரக்தி. எதிர்காலம் பற்றிய கேள்விக் குறி. இதற்கு நடுவில் சீதை.
அந்த அரக்கியர் நடுவில், திரிசடை என்று ஒரு பெண். வீடணனின் மகள்.
அவளை கம்பன் அறிமுகள் செய்கிறான்.
"இன் சொலின் திருந்தினாள்" என்று.
அவள் இனிய சொற்களை பேசுவது மட்டும் அல்ல, அவற்றையும் திருத்தமாக, தவறின்றி அழகாகப் பேசுவாளாம்.
பாடல்
இருந்தனள்;திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள்ஒழிய, மற்று இருந்த தீவினை
அருந் திறல்அரக்கியர், அல்லும் நள் உறப்
பொருந்தலும்,துயில் நறைக் களி பொருந்தினார்.
பொருள்
இருந்தனள் = அரக்கியர் நடுவில் இருந்தாள். யார்?
திரிசடை என்னும் = திரிசடை என்ற
இன் சொலின் திருந்தினாள் = இனிய சொல்லை திருத்தமாகப் பேசும் பெண்
ஒழிய = அவளைத் தவிர்த்து
மற்று இருந்த = மற்ற பெண்கள்
தீவினை = தீய வினை புரியும்
அருந் திறல்அரக்கியர் = பெரிய பலம் கொண்ட அரக்கியர்
அல்லும் = இரவு
நள் உறப் பொருந்தலும் = நடு இரவு வந்த நேரத்தில்
துயில் = தூக்கத்தோடு
நறைக் களி பொருந்தினார் = கள் உண்ட மயக்கத்தில் இருந்தார்கள்
தண்ணி அடிச்சிட்டு மட்டையாகி விட்டார்கள் என்கிறார்.
கோர தோற்றம் கொண்ட அரக்கியர். வலிமையானவர்கள். மது அருந்திவிட்டு , மயங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்கள் நடுவில் பிராட்டி.
தூங்காமல் விழித்து இருக்கிறாள்.
அவளோடு கூட திரிசடையும் விழித்து இருக்கிறாள்.
அப்போது சீதை திரிசடையிடம் சொல்லத் தொடங்குகிறாள்
No comments:
Post a Comment