திருக்குறள் - கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்
https://interestingtamilpoems.blogspot.com/2026/03/blog-post_28.html
இந்த அதிகாரத்தின் முதல் குறளில், எவ்வளவு பெரிய நன்மை கிடைத்தாலும், அதற்காக இன்னொரு உயிருக்கு கெடுதல் செய்யக் கூடாது என்றார்.
சரி, பலன் வேண்டி இன்னா செய்யாமல் இருக்கலாம்.
நமக்கு ஒருவர் தீங்கு செய்தால்? அதுவும், நாம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாமல் இருந்த போதும், அவர் நமக்கு ஒரு தீங்கு செய்தால், சும்மா இருக்க முடியுமா?
உடலால் முடிந்தால் செய்வோம். இல்லை என்றால் அவன் நாசமாக போக வேண்டும் என்று மனதிலாவது நினைப்போம் அல்லவா?
வள்ளுவர் கூறுகிறார், நாம் ஒன்றும் செய்யாமல் இருந்த போதும், நமக்கு ஒருவர் தீங்கு செய்தாலும், அவருக்கு பதிலுக்கு ஒரு தீமை செய்யாமல் விடுவதே சிறந்தது என்று.
பாடல்
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்
பொருள்
கறுத்து = நம் மேல் கோபம் கொண்டு, பகை கொண்டு
இன்னா செய்தவக் கண்ணும் = நமக்கு துன்பம் செய்தவர்களுக்கும்
மறுத்து = அதற்கு பதிலாக
இன்னா செய்யாமை = அவர்களுக்கு கெடுதல் செய்யாமல் இருப்பது
மாசற்றார் கோள் = குற்றமற்ற தூயவர்கள் சொல்லும் நெறி
இது துறவிகளுக்கு சொல்லப்பட்ட குறள்.
இல்லறத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
நடைமுறையில் சாத்தியமா? ஒருவன் நமக்கு துன்பம் செய்தால், அவனுக்கு திருப்பி துன்பம் செய்யாவிட்டால் அவன் நம்மை ஒரு கையால் ஆகாதவன், கோழை என்று எண்ணி மீண்டும் மீண்டும் நமக்கு துன்பம் செய்யமாட்டானா? அவனைப் பார்த்து மற்றவர்களும் நமக்கு துன்பம் செய்யமாட்டார்களா?
இதை இப்படி யோசித்துப் பார்ப்போம்.
ஒருவன் நமக்கு தீங்கு செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக் தீங்கு தீங்கு செய்கிறோம். அதற்கு அவன் நமக்கு இன்னொரு தீமை செய்கிறான், நாம் அவனுக்கு மேலும் ஒரு தீமை செய்கிறோம்.
இது எங்கே போய் முடியும்? வெட்டு, குத்து, கொலை, சிறை, தூக்கு என்று போய் நிற்கும்.
இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்டான். அவனுக்கு பதிலுக்கு தீமை செய்திருக்கலாம். "இன்று போய் நாளை வா" என்று கருணை செய்தான் இராமன். அவன் திருந்தவில்லை. மீண்டும் போருக்கு வந்து அடிபட்டு இறந்தான்.
தனக்கு இவ்வளவு துன்பங்களைத் தந்த கைகேயியை மன்னித்தான் இராமன்.
மனைவியின் துகிலை சபையில் உரித்தவனை, பதினமூன்று வருடம் காட்டுக்கு அனுப்பியவனை மன்னித்து, ஐந்து வீடாவது கொடு என்று கேட்டான் தர்மன்.
"துரியோதனன் கொடுமைக்கு அல்ல, உன் அருளுக்கு அஞ்சினேன்" என்றான் பீமன்.
இறுதியில் அழிந்தது யார்? பொறுத்தவர்களா அல்லது தீங்கு செய்தவர்களா?
பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே என்றார் பாரதி.
தனக்கு பிறர் செய்த துன்பங்களை மனதில் கொள்ளாமல் தாண்டிச் செல்வது ஒரு வழி.
அதை மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி, புரையோட விடுவது இன்னொரு வழி.
எது சிறந்த வழி ?
No comments:
Post a Comment