Monday, March 9, 2026

இன்னா செய்யாமை - ஒரு முன்னுரை

 இன்னா செய்யாமை - ஒரு முன்னுரை 




இனியது என்பதின் எதிர்மறை இன்னாதது. இன்னா செய்யாமை என்றால் துன்பம் செய்யாமை. பிறருக்கு துன்பம் செய்யாமல் இருத்தல். 


நாம் ஏன் பிறருக்கு துன்பம் செய்கிறோம்?


பிறருக்கு துன்பம் செய்வதில் பெரிதாக விருப்பம் இருப்பது இல்லை. இருந்தும் துன்பம் செய்கிறோம். சில சமயம் தெரிந்து செய்கிறோம். சில சமயம் தெரியாமல் செய்கிறோம். 


முதலாவது, கோபத்தில், நம்மையும் அறியாமல் பிறருக்கு துன்பம் செய்து விடுகிறோம். வார்த்தையால் துன்பம் செய்கிறோம். சில சமயம் உடல் வலிமையால் கை நீட்டியும் விடுகிறோம். இது பெரும்பாலும் நிகழக் கூடிய ஒன்று. கோபம் மிகுந்து, யோசனை அற்றுப் போய், பிறருக்குத் துன்பம் செய்து விடுகிறோம். 


எனவே தான், இந்த இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தை வெகுளாமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து வைத்தார். 


சில சமயம் நமக்கு ஒரு இலாபம், நன்மை வேண்டி பிறருக்கு துன்பம் செய்து விடுவோம். இலஞ்சம் கொடுத்து வேலையை செய்து கொள்வது இந்த வகையில் அடங்கும். என்னிடம் பணம் இருக்கிறது. அதைக் கொடுத்து எனக்கு ஒரு நன்மை செய்து கொள்கிறேன். இதனால் மற்றவர்கள் பாதிக்கப்படலாம். பணம் இல்லாத அவர்களுக்கு அது துன்பம். பணம் இல்லாத ஏழைகள், கோவிலில் நீண்ட நேரம் நின்று துன்பப் படவேண்டும். பணம் இருப்பவர்கள் சிறப்பு வழி வழியாக ஒரு துன்பமும் இல்லாமல் தரிசனம் செய்து கொள்கிறார்கள்.  இது இலாபம் பற்றி செய்யும் துன்பம். 


சில சமயம் மறதியால், பிறருக்கு துன்பம் செய்து விடுவோம். தெரியாமல் நிகழும் செயல்களால் துன்பம் நிகழலாம். கொடுக்க வேண்டிய பணத்தை சரியான நேரத்தில் கொடுக்க மறந்திருப்போம். அது அவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கலாம். வேண்டும் என்று செய்வது அல்ல. மறதியால். 


சில சமயம் பகைமையால் துன்பம் செய்யலாம். முன்பு செய்த தீமையை மனதில் வைத்துக் கொண்டு, சரியான சமயம் பார்த்து, பழி தீர்க்க , மற்றவர்களுக்கு துன்பம் செய்யலாம். 


இவற்றைப் பற்றி எல்லாம் மிக ஆழமாக வள்ளுவர் சிந்தித்து எழுதி இருக்கிறார். 


காலம் இருப்பின் அவற்றை ஒவ்வொன்றாக சிந்திப்போம். 



 

No comments:

Post a Comment