Wednesday, August 28, 2024

கம்ப இராமாயணம் - குழந்தை இராமன்

 கம்ப இராமாயணம் - குழந்தை இராமன் 


இராமன் கானகம் சென்ற போது துக்கத்தில் தசரதன் மாண்டான். கைகேயியோ, கோசலையை மாளவில்லை. ஏன்? அவர்களுக்கு அவன் மேல் அன்பு இல்லையா?


தசரதன் இராமன் மேல் கொண்ட அதை என்ன என்று சொல்லுவது?  


அப்பாக்களுக்கு மகன்கள் மேல் உள்ள காதல் சொல்லி மாளாது. மகள் மேல் உள்ள பாசத்தை அப்பாக்கள் கொட்டி தீர்த்து விடுகிறார்கள். ஆனால், மகன்கள் மேல் உள்ள பாசத்தை வெளியில் சொல்லுவது இல்லை. 


அது ஏனோ அப்படி ஆகி விடுகிறது. 


இராமன் சிறு குழந்தையாக தொட்டிலில் கிடக்கிறான். 


தசரதன் தன் மகனைப் பார்த்து உருகுகிறான். 


"என் இராசா, என் உசிரு, என் தங்கம், என் செல்லம்",...என்றெல்லாம் பிள்ளைகளை கொஞ்சுவதைக் கேட்டிருக்கிறோம். 


தசரதன் நினைக்கிறான் , 'இவன் தான் உயிர்" என்று. அதோடு நிறுத்தி இருந்தால் பெரிய விடயம் இல்லை. அவன் ஒரு படி மேலே போகிறான். "இவன் தான் என் உடலும்" என்கிறான். 


அதாவது அவனை தவிர்த்து தனக்கு எதுவும் இல்லை என்கிறான். உயிர் மட்டும் என்றால், உடல் தனது என்று ஆகி விடும். 


உயிரும், உடலும் என்றால் எல்லாம் அவனே. தசதரன் இராமனில் கரைகிறான். 


பாடல் 


காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே

ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர்

ஆவியும் உடலமும் இலது என அருளின்

மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்.



பொருள்


காவியும் = நீலோற்ப மலரும் 


ஒளிர்தரு = ஒளி வீசும் 


கமலமும் = தாமரை மலரும் 


எனவே = போல 


ஓவிய = ஓவியத்தில் எழுதி வைத்த 


எழில் உடை = அழகைக் கொண்ட 


 ஒருவனை  = சிறந்த ஒருவனை 


அலது ஓர் = அவனைத் தவிர்த்து 


ஆவியும் = உயிரும் 


உடலமும் இலது = உடம்பும் இல்லை 


என = என்று 


அருளின் மேவினன் = கருணை மேலிட 


 உலகு உடை வேந்தர் தம் வேந்தன் = உலகத்தை ஆளுகின்ற வேந்தர்களுகெல்லாம் வேந்தனான தசரதன் 


சாதாரண அழகு என்றால் வயதாக வயதாக அது குன்றும். ஓவியத்தில் எழுதிய அழகு என்றால் எத்தனை யுகம் ஆனாலும் அப்படியே இருக்கும். இராமனின் அழகு அழியாத அழகு என்பதற்கு அதை உதாரணமாகச் சொன்னார்.


அளவுக்கு மீறிய அன்பு.


அதனால் தான் பின்னாளில் பிரிவைத் தாங்க முடியவில்லை. 




No comments:

Post a Comment