Tuesday, August 27, 2024

திருக்குறள் - குன்றிமணி போல

 திருக்குறள் - குன்றிமணி போல 


யாரையும் அவர்கள் தோற்றத்தை வைத்து எடை போடக் கூடாது. 


சில துறவிகள் பார்க்க துறவிகள் போல் இருப்பார்கள். துறவிகளுக்கு ஏற்ற உடை, நீண்ட தாடி, பேச்சில் ஒரு மென்மை, நடை, உடை, பாவனை எல்லாம் துறவிகள் போலவே இருக்கும். ஆனால், உள்ளுக்குள் பல கபட எண்ணங்கள் ஓடும். 


எங்கேயிருந்து எவ்வளவு பணம் வரும், யாரிடம் இருந்து பணம் பறிக்கலாம், எந்த சொத்தை அபகரிக்கலாம், எந்தப் பெண்ணை கவிழ்க்கலாம் என்றெல்லாம் மனம் ஓடும். 


அது போன்ற போலித் துறவிகளுக்கு வள்ளுவர் ஒரு உதாரணம் தருகிறார். 


குன்றி மணி இருக்கிறதே, அது ஒரு புறம் சிவப்பாக இருக்கும், மறு புறம் கருப்பாக இருக்கும். 


சிவந்த பக்கத்தை மட்டும் பார்த்தவர்கள், அது முழுவதும் சிவப்புத்தான் என்று அடித்துச் சொல்லுவார்கள். அவர்கள் அந்தக் குன்றிமணியை சற்றே திருப்பிப் பார்த்தால் தெரிந்திருக்கும் அதற்கு ஒரு கரிய பகுதியும் உண்டு என்று. 


பாடல் 


புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி

மூக்கின் கரியார் உடைத்து


பொருள் 


புறம் = வெளியே 


குன்றி = kகுன்றி மணியைப் போல 


கண்டனைய ரேனும் = பார்க்கும் படி இருந்தாலும், சிவப்பாக, அழகாக இருந்தாலும் (புறத் தோற்றம் அழகாக இருக்கும்) 


அகம்குன்றி =  அகம், மனம், குறை பட்டு, குற்றங்களுடன் 


மூக்கின் கரியார் = குன்றின் மணியின் மூக்கு கருப்பாக உள்ளது போல 


 உடைத்து = உடையவர்களைக் கொண்டது இந்த உலகம் 


நன்றாக பேசுவார், பெரிய பெரிய நூல்களில் இருந்து மேற் கோள் காட்டுவார், உடம்பெல்லாம் சமயச்  சின்னங்கள் இருக்கும். அவற்றைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது என்கிறார். 


உலகம் ஏமாற்றத் தயாராக இருக்கும். 


நாம் தான் எச்சரிக்கையாக, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 


போலிச் சாமியார்கள் பணம் பறிக்கிறார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி பலர் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள். அதைச் செய், இதைச் செய், என்று பரிகாரம் எல்லாம் சொல்லி, இருக்கின்ற கொஞ்ச நாளையும் வீணடிப்பார்கள். 


பணம் போனால் போய் விட்டுப் போகட்டும், சம்பாதித்துக் கொள்ளலாம். 


நேர விரயம் இருக்கிறதே, அது சகிக்க முடியாத ஒன்று.  


No comments:

Post a Comment